உனைநினைந் தனுதின மருகியுருகி மெய்வாய்
தேகமுதிர்த்து சீவன்பிரித்துனை நாடித்தேடி ஓடிவருகையில்
நாசிசெவி விழிவழி வழியுதென் ஆவிஆவி...
வானவெளியும் காற்றுந்தீயும் சலமுநிலமும் நீயலையோ?
ஊணுளொளிந்து உணர்வுமழிந்து உழலுயானும் நீயலையோ?
தேகமுதிர்த்து சீவன்பிரித்துனை நாடித்தேடி ஓடிவருகையில்
வேகங்கெடுத்து மாயங்காட்டி கூடிமறைதலு முறையோ?தகுமோ?
சுயமிழிபட அகம்பொடிபட விதியில்மிதிபடு மெனக்கிரங்கிலையோ?
தயையுமருளு முனதுகுணமெனு மறையின்வரியெலாம் வெறும்பிழையோ?
சிந்தைசிதறி மனநொந்துகதறி மரிக்கையில் கண்டுபதறி அணைத்திடாதுயிர்
வெந்துசரிய நகைத்துக்கொல்லு முன்விந்தையன்பையும் வெறுத்தலறிகிலேன்.
-பிரகாஷ் சங்கரன்.
ஹரிப்ரசாத் சௌராஸியாவின் இந்த சந்த்ரகௌன்ஸ் ராக ஆலாபனையைக் கேட்டு உணர்வு தூண்டப்பட்டு எழுதியது.
No comments:
Post a Comment
உங்கள் எண்ணங்கள், விமர்சனங்களைப் பகிர்ந்துகொள்ள...