Monday, December 12, 2011

ஃப்ளோரன்ஸ் - ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தொட்டில் - (பகுதி 4)


மைக்கேலேஞ்சலோ (1475 – 1564)


ஃப்ளோரன்ஸுக்கு அருகிலுள்ள ஊரில் பிறந்தவர் மைக்கேலேஞ்சலோ. மிக இளம் வயதிலேயே அவரது கலைத்திறன் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது. ஃப்ளோரன்ஸ் வந்து டொமினிகோ கிர்லாண்டயோ என்னும் ஓவியரின் கீழ் பயின்றார். அவரால் அறிமுகப்படுத்தப்பட்டு, செல்வாக்கு மிக்க மெடிஷி குடும்பத்தின் தத்துப் பிள்ளையாக ஆனார். பொறியியல், ஓவியம், சிற்பம், கட்டிட வடிவமைப்பு, கவிதை என்னும் பல்வேறு துறைகளிலும் தனிச்சிறப்புடன் விளங்கினார். லோரென்சோ மெடிஷி இளம் மைக்கேலேஞ்சலோவின் திறமை மேல் அபார நம்பிக்கையும், அன்பும் கொண்டிருந்தார். அவரின் முதல் கலைப்படைப்புகளுக்கு ஆனையும், பொருளுதவியும் கொடுத்தவரும் மெடிஷி தான்.

பிற்காலத்தில் வளர்ந்து புகழ்பெற்று பெரும் கலைஞனாக வெனிஸ், ரோம், பொலோன்யா என்று பல இடங்களிலும் வேலை செய்து, பொக்கிஷங்களாக புகழப்படும் கலைப்படைப்புக்களை உலகில் அவரின் கலை, கற்பனை மற்றும் அறிவுத்திறனின் சாட்சியமாக நிறுவிவிட்டிருந்தார். போப் உட்பட ரோமின் முக்கியமானவர்களின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவராயிருந்தார். ரோமின் புகழ்பெற்ற புனித பீட்டர் தேவாலயக் கட்டுமானத்தில் தலைமை சிற்பி, வடிவமைப்பாளராக இருந்தார். அவர் உயிருடன் இருந்த போதே அவரின் வாழ்க்கை வரலாறு எழுதி வெளியிடப்பட்டது. ஒரு கலைஞனுக்கு அவன் வாழ்நாளில் கிடைக்கக்கூடிய அதிகபட்ச அங்கீராம் அனைத்தும் குறைவிலாது கிடைத்தது.

ஆனாலும் மைக்கேலேஞ்சலோ எப்போதும் தனித்து, உள்முகமாக ஒடுங்கியவராக, சோகம் ததும்பும் முகத்துடன் இருந்தார். பணமிருந்தும் ஏழை போல தோற்றமளித்தார். தன்னுடைய 57வது வயதில் தொமாஸோ டி காவிலியெரி என்னும் 23 வயது இளைஞன் மேல் மிகுந்த காதல் கொண்டார். அந்த இளைஞனைக் குறித்து முன்னூறுக்கும் மேற்பட்ட காதல் கவிதைகளை எழுதியுள்ளார். அந்த உறவு ஓரினச்சேர்க்கை என்று சொல்லப்பட்டாலும், மைக்கேலேஞ்சலோவைப் பொருத்தவரை ஒரு சிற்பியாக, ஓவியராக அவரது படைப்பூக்கத்தைப் பெருக்கும் - அழகான உடலை ஆராதிக்கும், தூய பிளாட்டோனிய (பாலுணர்ச்சியை மீறிய) காதல் என்றார். இறப்பதற்கு முன் அவர் வரைந்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான சிற்ப, கட்டிட மாதிரிகளை எரித்தார்.

இத்தனைக்கும் மீறி இன்றும் மறுமலர்ச்சிக் காலத்தின் அசல் முன்மாதிரியாக மைக்கேல்லேஞ்சலோவும், அவரது சம காலத்திய இன்னொரு மாமேதையான லியானோர்டோ டாவின்சியும் போற்றப்படுகிறார்கள். டேவிட், தி பியதா (The Pieta), இறுதித் தீர்ப்பு நாள் (the last Judgement), the creation of Adam, Adam and Eve in Eden garden, சிஸ்டின் சாப்பலின் மேற்கூரை ஓவியம் (முன்னூறுக்கும் மேற்பட்ட உருவங்கள் அடங்கியது – 4 ஆண்டுகள் ஆனது வரைந்து முடிக்க) என் இன்னும் எண்ணற்ற அவருடைய புகழ் பெற்ற சிற்பங்களும், ஓவியங்களும் உலகின் முக்கியமான தேவாலயங்களையும், அருங்காட்சியகங்களையும் அலங்கரிக்கிறது. மிகுந்த தெய்வபக்தியும், தீவிர கத்தோலிக்க கிறித்தவ நம்பிக்கையும் உடையவரான மைக்கேலேஞ்சலோ இரண்டு முறை கடுமையாக நோய்வாய்ப்படு ம்ரணத்தின் விளிம்பிலிருந்து உயிர் பிழைத்தார். “நான் மிகச்சாதாரனமானவன், கலையின் மூலமாக கடவுளுக்கு ஊழியம் செய்வதற்காக எனக்கு ஆயுளை நீட்டித்தந்துள்ளார்” என்றார். எண்பத்தி எட்டாவது வயதில் ரோமில் உயிரிழந்தார். அவரது இறுதி விருப்பப்படி உடல் ஃப்ளோரன்ஸுக்கு கொண்டுவரப்பட்டு, சாண்டா கிராஸ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

யாருடனும் அதிகம் பழகாத, வாழ்நாள் முழுதும் தனித்து ஒதுங்கி வாழ்ந்து மறைந்த அந்த உன்னதக் கலைஞனின் கல்லறையில் நின்ற போது எனக்குள் எழுந்த கேள்வி, எது மனிதனை உள்ளொடுங்கி, தனக்கான ஒரு உலகைக் கற்பனையில் கட்டி, அதை ஓவியமாகவும், சிலையாகவும் கலைவடிவமாக வெளிப்படுத்த வைக்கிறது? கடவுளா, தனி மனித இயல்பா, அவன் அகம் மட்டும் அறியும் இன்ப துன்பங்களின் உச்சகட்டங்களா, அவன்  விரும்பிய ஆனால் இழந்த உறவுகளா, வெளித்தெரியாத வேறு ஏதாவதா... எது கலையாகிறது?

உயர்ந்த தூண்களின் உச்சியில் வளைந்த கூம்பு விதானங்கள், அப்பால் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த வண்ணக் கண்ணாடி ஓவியத்துக்கு சூரியன் உயிர் கொடுக்க, நீண்ட பிரார்த்தனைக் கூடத்தில் சுற்றுலாப் பயணிகளின் கிசுகிசுவென பேச்சு சப்தத்துகிடையே கேமராக்கள் கண்சிமிட்ட, கல்லறையின் முன்னால் நெடு நேரம் நின்று கொண்டிருந்தேன்.   பளிங்குச் சமாதியில் குளிர்ந்த வெண் பளிங்குச் சிலையாக மூன்று பெண்கள் சோகமாகத் தலை குணிந்து அமர்ந்திருக்க உள்ளே மௌனமாக மைக்கேலேஞ்சலோ அவருக்குப் பிடித்த தனிமையில் இருப்பது போலத் தோன்றியது.
மைக்கேலேஞ்சலோவின் கல்லறை

கலிலியோ கலிலி (1564 -1642)

பிஸா நகரத்தில் பிறந்து ஃப்ளோரன்ஸ் நகரத்தில் வளர்ந்தவர் கலிலியோ. கணிதம், இயற்பியல், வானவியல், தொழில்நுட்பம், தத்துவம் என்று பல அறிவுசார் துறைகளில் மேதையாகத் திகழ்ந்து பல புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். மறுமலர்ச்சியின் அறிவியல் புரட்சிக்கு வித்திட்டவர். ஐன்ஸ்டீனால் நவீன அறிவியலின் தந்தை எனப் புகழப்பட்டவர். கோபர்நிகஸின் சூரியமையக் கோட்பாட்டை ஆதரித்ததால் கிறித்தவ மத அதிகாரபீடங்களின் எதிர்ப்புக்கு ஆளானார். பைபிளில் சொல்லப்பட்டுள்ள புவிமையவாதம் பொய், சூரியன் அசையாமல் மையத்தில் இருக்க பூமி தான் சூரியனைச் சுற்றி வருகின்றது என்றார். மதவிசாரனைக்கு உட்படுத்தபட்ட போதும் தன் கருத்துக்களில் பின் வாங்காததால் “மத நம்பிக்கைகளுக்கு எதிரான கடுமையான சந்தேகவாதி” என முத்திரை குத்தப்பட்டார். அதன்பின் வாழ்நாளின் இறுதி வரை ஃப்ளோரன்ஸுக்கு அருகிலுள்ள அவருடைய வீட்டில் சிறை வைக்கப்பட்டார். மூன்று வருடங்கள் தொடர்ந்து வாரம் ஒருமுறை பைபிளின் ஏழு பாவ மன்னிப்பு பகுதிகளையும் படிக்க வேண்டும் என தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்தக் காலத்தில் தனது அறிவியல் கண்டுபிடிப்புக்களை விளக்கி நூல்கள் எழுதினார்.  தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு 77 ஆம் வயதில் மரணமடைந்தார். முதலில் வெளியில் புதைக்கப்பட்ட அவரது உடல் பின்னர், மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு சாண்டா கிராஸ் தேவாலயத்தின் உள்ளே அடக்கம் செய்யப்பட்டு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.
கலிலியோவின் கல்லறை

கலிலியோவுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வானவியலின் பல உண்மைகளைக் கண்டுபிடித்துவிட்ட இந்தியாவின் பாஸ்கரர், இன்றும் பாஸ்கராச்சாரியர் என்று ஞானியாக, ஆசிரியராகப் போற்றப்படும் நமது பண்பாடு நினைத்து பெருமைப்படாமல் இருக்க நான் “பகுத்தறிவு” பாசறையைச் சேர்ந்த புத்திசாலிமூடனா என்ன?? தான் கண்டடைந்த உண்மையை துணிச்சலாக முன்வைத்து மதக்குருடர்களை எதிர்த்து நின்ற அறிவியல் அறிஞனுக்கு மனதார வணக்கம் செய்துவிட்டு நகர்ந்தேன்.

மக்யாவெல்லி (1469 – 1527)

ஃப்ளோரன்ஸில் பிறந்த அரசியல் தத்துவ சிந்தனையாளர். மெடிஷி குடும்பத்தை விரட்டிவிட்டு குடியரசு மலர்ந்த போது, 29 வயதில்  ஃப்ளோரன்ஸின் நிர்வாக சபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மீண்டும் மெடிஷி குடும்பம் ஃப்ளோரன்ஸைக் கைப்பற்றியபோது சிறையில் கொடுமைகள் அனுபவித்து, பின்னர் குறுகிய காலத்தில் விடுவிக்கப்பட்டார். மீண்டும் அரசியலில் தீவிரமாக ஈடுபட வாய்ப்பில்லாமல் எழுத்தில் கவனம் செலுத்தினார். அவ்வப்போது நெருங்கிய அரசியல் நண்பர்களுடன் தொடர்பில் இருந்தார். தனது புகழ்பெற்ற அரசியல் சிந்தாந்த நூலான ‘தி பிரின்ஸ்’ ஐ எழுதினார். உன்னத அரசியலுக்கும், நடைமுறைக்குச் சாத்தியமான அரசியலுக்கும் உள்ள அடிப்படையான முரனை முன்வைத்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் வழிமுறைகளைப் பேசினார். தனிப்பட்ட ஒழுக்கம், பொது ஒழுக்கம் இரண்டையும் குழப்பாமல் பிரித்துக்கொள்ள வேண்டும், எந்தப் பிண்ணனியும் இல்லாமல் ஒரு முற்றிலும் புதிய அரசனாக அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்புபவன் சில ஒழுக்க/நேர்மை மீறல்களைச் செய்தாக வேண்டும் என்றார். கற்பணையான உன்னதச் சமூகம் ஒருபோதும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் அரசனுக்கு முன் மாதிரியாக இருக்காது என்பது அவர் கொள்கை. 58 ஆவது வயதில் ஃப்ளோரன்ஸில் மரணமடைந்தார். சாண்டா கிராஸில் அடக்கம் செய்யப்பட்டு, நினைவுச் சின்னத்தில் “புகழ்ச்சிக்கு இன்னொரு சொல் ஈடில்லாத பெயருடையவர்” என்று இத்தாலியனில் பொறித்து வைத்துள்ளார்கள்.
மக்யாவெல்லியின் கல்லறை

இன்னும் ஃப்ளோரன்ஸைச் சேர்ந்த பல சிற்பிகள், ஓவியர்கள், மதகுருமார்கள், இலக்கியவாதிகள் போன்றோரின் கல்லறையும் நினைவுச் சின்னங்களும் இங்கே இருக்கிறது. தேவாலயத்தின் வெளியே உயர்ந்த பீடத்தில் பெரிய பளிங்குச் சிலை வைத்திருக்கிறார்கள் தாந்தேவுக்கு. சாகும் வரை பிரியமான ஊருக்குள் வரவிடாமல் செய்த ஃப்ளோரன்ஸ் நகரின் குற்ற உணர்வு, பாவமன்னிப்புக் கேட்டு வைத்திருப்பது போல இருந்தது. பஸிலிக்காவின் உள்ளும் புறமும் பெரும்பாலும் வெள்ளைப் பளிங்கும் பிற வண்ணப் பளிங்குக் கற்களையும் கொண்டு இழைத்திருக்கிறார்கள். உட்புறச் சுவர்களில் இருபதுக்கு இருபது அடி அளவில் எல்லாப் பக்கமும் பைபிள் காட்சிகள், ஃப்ளோரன்ஸ் வரலாற்று நிகழ்வுகள், ரோமத் தொண்மங்களை நிஜ அளவுள்ள ஓவியங்களாக வரைந்து வைத்துள்ளனர். ஒவ்வொரு தூணிலும், சிறிய ‘ஆல்டர்’களிலும் பளிங்குச் சிலைகள். இண்டு இடுக்களில் எல்லாம் ஓவியங்கள், சிற்பங்கள், போதாததற்கு மாபெரும் ஜன்னல்களில் கண்ணாடி ஓவியங்கள். வழிப்பாட்டுத் தலமாக இல்லாமலிருந்தால் இதுவும் ஒரு அருங்காட்சியகம் தான்.
சுவர் ஓவியங்கள், சாண்டா கிராஸ் பசிலிக்காவின் உள்புறம்...
சுவர் ஓவியங்கள், சாண்டா கிராஸ் பசிலிக்கா
சந்தேகத் தாமஸ்.. சாண்டா கிராஸ் பசிலிக்கா


இதமான குளிர், மரவேலைப்பாடுகள் மிகுந்த உயர்ந்த மேற்கூரை, ஒவ்வொரு படத்தின் முன்பும் ஆடாமல் நின்றெரியும் மெழுகுவர்த்திகள், அதன் முன் மண்டியிட்டு வணங்கும் வெள்ளை முகங்கள், குறிப்பாக கண்மூடி அசையாமல் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் முகம் பொண்ணாக மினுங்க, பிரார்த்தனை மரப்பெஞ்சில் உட்கார்ந்து உற்று ரசித்தேன்.

மிதமான விளக்கு வெளிச்சம் ஆரஞ்சு வண்ணத்தில் பரவிக் கிடக்க, தங்க முலாம் பூசப்பட்டுள்ள ஆல்டரும், அலங்கார வளைவுகளும், பூ வேலைப்பாடுகளும், ஓவியங்களும் ஜொலித்தது. மொத்த தேவாலயமுமே ஒரு பெரிய முப்பரிணாம ஓவியம் போலவும், அதனுள் ஒரு ஓவியக் கதாபாத்திரமாக நானும் இருப்பது போல பிரமை வந்தது.

ஒருபுறம் அதி நுணுக்கமாக செதுக்கப்பட்டு, ஆடை மடிப்புகள், பறக்கும் கூந்தல், நீட்டிய கைகள், எடுத்த பாதம் என உயிர்-நிகர் உடல் அசைவின் கனங்கள், முக பாவனைகள் என்று பளிங்குச் சிலைகள் உயிருடன் எழுந்து வருவது போலிருக்க, மறுபுறம் முகத்தில் ஏதேதோ உணர்ச்சிகள் உறைந்த பாவனையில், மூடிய இமைகளுக்குள் மெல்ல உருளும் விழிகள், சிற்பம் போல் அசையாமல் கண்மூடி பிரார்த்திக்கும் சிவந்த இதழுள்ள பெண்கள் உயிரற்ற சிலைகள் போலத் தோன்றும் முரனை எண்ணி நகைத்தபடி வெளியேறினேன்.
பெயர் மறந்து போன ஏதோ பளிங்கு தேவதை..
ஒரு பெரிய சதுக்கத்தின் முன் வானைத் துளாவும் கூம்பு வடிவ கோபுரங்களுடன் நிற்கிறது சாண்டா கிராஸ் தேவாலயம். சதுக்கத்தில் ஒரு பெண் தெருக்கலைஞர் தனியளாக நின்று வயலின் வாசித்தபடி கீச்சுக் குரலில் ஏதோ பாடிக் கொண்டிருந்தாள், நெளிந்து நெளிந்து மேலேறி குரல் உச்ச சுருதியில் எங்கோ உயரத்தைத் தொட்டபோது எதுவோ கைதவறி விழுந்து உடையப் போவது போல் எனக்குப் பதட்டமாக இருந்தது. வயலின் கம்பியின் நாதம் எது, அவள் குரல் எது என்று பிரித்தறிய முடியவில்லை. அவள் அப்படியே குரலை நீட்டிப் பிடித்து கொஞ்சம் மேலேயே தங்கிவிட்டு பின் அழகாக வழுக்கிக் கொண்டு இறங்கி வந்து இயல்பான குரலில் பாடினாள். பாடி முடித்ததும் கூடி இருந்தவர்கள் பலத்த கைதட்டலில் உற்சாகப் படுத்தினார்கள். சுற்றிலும் இருந்த பெரிய கட்டிடங்களில் குரல் எதிரொலித்து அவள் பாடுவதை வெட்டவெளியிலும் நன்றாகக் கேட்கக் கூடிய ஒலியமைப்பை உண்டாக்கியது.

சுற்றிலும் சிறிதும், பெரிதுமான பரிசுப்பொருட்கள் விற்கும் கடைகள், காபிக் கடைகள். பளீரென்ற வெளிச்சம், நீல வானம். சுற்றுலாப் பயனிகளுக்கேற்ற காலநிலை. மக்கள் உற்சாகமாகக் கூட்டம் கூட்டமாக பேசிச் சிரித்தபடி நகர்ந்து கொண்டிருந்தார்கள். எனக்கு சட்டென்று ஐநூறு ஆண்டுகள் முன்னால் வந்து குதித்தது போலிருந்தது. ஒரு கோகோ–கோலா வாங்கிக் குடித்து 2011 க்கு வந்தேன்.


பகுதி-3                                                            பகுதி-5

Sunday, December 11, 2011

ஃப்ளோரன்ஸ் - ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தொட்டில் - (பகுதி 3)


சாண்டா கிராஸ் தேவாலயம்
சாண்டா கிராஸ் பசிலிக்கா, ஃப்ளோரென்ஸ்
ஐரோப்பிய கிறிஸ்தவ மதவரலாற்றில் மிகமுக்கியமான ஆளுமையாகப் போற்றப்படும் புனித ஃபிரான்ஸிஸ் (12-13ஆம் நூற்றாண்டு) தோற்றுவித்ததாகச் சொல்லப்படும் சாண்டா கிராஸ் பசிலிக்கா, பதிமூன்றாம் நூற்றாண்டில் இறுதியில் மீண்டும் முழுவதும் வெள்ளைப் பளிங்கினால் கட்டப்பட்டு, படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டு பொ.வ.1442ல்  போப் நாலாம் யூஜீனால் திறந்து வைக்கப்பட்டது.  ஃப்ளோரன்ஸ் நகரின் முக்கியமான வரலாற்றுச் சின்னம் இந்த தேவாலயம். இங்கு தான் மறுமலர்ச்சிக் காலத்தைக் கட்டியெழுப்பிய மைக்கேல் ஏஞ்சலோ, மாக்கியவில்லி, கலிலியோ உட்பட பலரின் பூத உடல் புதைக்கப்பட்டுள்ளது.

Interior - Santa Cross Basillica, Florence
இவர்கள் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் இந்நகரத்தின் வரலாற்றிலிருந்தும், கலாச்சாரப் புரட்சிக்கான அவர்களின் பங்களிப்பிலிருந்தும் பிரிக்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொருவரும் மிகுந்த நுண்ணுணர்வும், மிக மெல்லிய இதயமும் கொண்ட படைப்பாளிகள். அவர்களின் சொந்த இன்ப துன்பங்களின் தாக்கம் தான் அவர்களது கலை வெளிப்பாடு. அது தான் மறுமலர்ச்சியின் வேர். இவர்கள் ஃப்ளோரன்ஸில் வாழவும், வெளியேறவும் காரணமாயிருந்த நிகழ்வுகள் ஒருவகையில் மறுமலர்ச்சி வெளியில் பரவவும் காரணமாயிருந்தது. இவர்களின் வாழ்க்கைக் குறிப்பை அறிந்து கொள்வதே ஃப்ளோரன்ஸ் நகரை, அதன் பொக்கிஷங்களைத் தங்கள் அகத்திலிருந்து உருவாக்கி அளித்த கலைஞர்களின் ஆத்மாவோடு சேர்த்து முழுமையாக அறிந்து கொள்வதாகும்.

தாந்தே (1265 – 1321)

தாந்தேயின் சிலை....
ஐரோப்பாவின் மகாகவியாகப் போற்றப்படும் தாந்தே அலிகியெரி பிறந்தது ஃப்ளோரென்ஸில். அப்போது ஐரோப்பாவில், குறிப்பாக இத்தாலியில் உச்சத்திலிருந்த போப்பரசர் ஆதரவாளர்கள் மற்றும் புனிதரோமாபுரிப் பேரரசரின் ஆதரவாளர்களுக்கு இடையில் தொடர்ந்து அதிகார மோதல்கள் ஏற்பட்டது. போப்பின் ஆதரவாளர்கள் ‘கெல்ஃப்’ என்றும், ரோமப் பேரரசரின் ஆதரவாளர்கள் ‘கிப்பெல்லைன்’கள் என்றும் அழைக்கப்பட்டனர். தாந்தே கெல்ஃப்களின் சார்பாகப் போர்களில் பங்கு பெற்றார். 


போப்பின் ஆதரவாளர்களான கெல்ஃப்கள் வென்றனர், பின்னர் அவர்களுக்குள்ளேயே பிளவு ஏற்பட்டது. ஃப்ளோரன்ஸ் நகரத்தின் நிர்வாகத்தில் போப்பின் முழுத்தலையீடும் வேண்டும் என்று நினைத்தவர்கள் ‘கருப்பு கெல்ஃப்கள்’ என்றும், ரோமின் அதிக தலையீடில்லாத சுதந்திரமான ஃப்ளோரன்ஸை ஆதரித்தவர்கள் ‘வெள்ளை கெல்ஃப்கள்’ என்றும் பிரிந்து மோதிக்கொண்டனர். இப்போது தாந்தே வெள்ளை கெல்ஃப்கள் பக்கம் இருந்தார். முதலில் ஜெயித்த வெள்ளை கெல்ஃபுகளை பின்னர் ரோமிலிருந்து வந்த போப்பின் படை வென்று துரத்தியது. அந்தச் சமயம் அமைதி உடன்படிக்கைக்காக ரோமில் போப்பைச் சந்திக்கச் சென்றிருந்த தாந்தேவை ஃப்ளோரன்ஸில் இருந்து இரண்டு வருடங்களுக்கு நாடு கடத்தப்பட்டதாக அறிவித்து, பெரிய தொகையையும் அபராதமாக விதித்தனர் புதிய ஆட்சியர்கள். மீறி ஃப்ளோரன்ஸ் நகரத்தில் கால் வைத்தால் உயிருடன் கொளுத்தப்படுவார் என்றூம் எச்சரித்திருந்தனர். பின்னர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டால் அனுமதி தரப்படும் என்ற போது அதை நிராகரித்து வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்தார்.


தனது பிரியத்திற்குரிய நகரமான ஃப்ளோரன்ஸுக்கு தான் திரும்பவே முடியாதென்ற ஏக்கம் அவர் இறப்பு வரை இருந்தது. மேலும் அவரது இளமையில் 9 வயதான போதே பீட்ரைஸ் என்னும் சிறுமியை கண்டவுடன் காதல் வந்திருந்தது. பீட்ரைஸ் வளர்ந்து இளம்பெண்ணான போது அவர் காதலும் வளர்ந்தது, அடிக்கடி ஃப்ளோரன்ஸ் நகரத் தெருக்களில் சந்திருக்கிறார். 

ஆனால் தாந்தேயின் பெற்றோர் அவர் 12 வயதாக இருக்கும்போதே இன்னொரு பெண்ணுக்கு மணம் முடிப்பதாக ஒப்பந்தம் செய்து விட்டனர். பின்னர் அவரையே திருமணம் செய்து கொள்ளவேண்டியிருந்தது. ஐரோப்பாவிலும் அந்தக் காலத்தில் பால்ய விவாகம் இருந்திருக்கிறது! வெகு இளம் வயதிலேயே பீட்ரைஸ் இறந்ததும் தாந்தேயின் கவிமனதை ஆழமாகப் பாதித்தது. இந்தக் காலங்களில் ஃப்ளோரன்ஸுக்கு வெளியில் தான் தனது உலகப் புகழ்பெற்ற ‘டிவைன் காமெடி’ என்கிற கவிதைக் காவியத்தை இயற்றினார்.

பீட்ரைஸின் உருவமும், அவரது இளம் வயது காதல் நினைவுகளும் மீண்டும் மீண்டும் தாந்தேயின் மனத்தில் எழும்ப, அந்த எழுச்சியினால் உந்தப்பட்டு எழுத அரம்பித்தது தான் டிவைன் காமெடி. தாந்தே தன்னையே கதாப்பாத்திரமாக உருவகித்துத் தான் இறந்து நரகத்திற்கும், பின்னர் சிறிய தண்டனை/ பக்குவப்படுத்தல் காலத்தைக் கடந்து, கடைசியாக சொர்க்கத்திற்குச் செல்வதையும் மிக நுணுக்கமான, ஆழந்து தத்துவார்த்தமாகப் பொருள் கொள்ளும் விதத்தில் எழுதி, அதன் வழியாக ஒவ்வொரு மனிதனின் ஆன்மீகமான வாழ்க்கைப் பயணத்தை காவியமாக்கினார். 

அவரது காவியமே இத்தாலியன் மொழி உண்டாகி வளரக் காரணம். இத்தாலியன் மொழியையே ‘தாந்தேயின் மொழி’ என்று குறிப்பிடும் வழக்கம் இருந்தது. கடைசி வரை தான் மிகவும் விரும்பிய தன் சொந்த ஊருக்குப் போக முடியாமலேயே 1321ல் ராவென்னா என்னும் ஊரில் மரணமடைந்தார். அங்கேயே அவரது உடல் புதைக்கப்பட்டது. பின்னர் ஃப்ளோரன்ஸ் தவறை உணர்ந்து, அவரது உடலின் மிச்சங்களைப் பலமுறை கேட்டும் ராவென்னா சபை மறுத்துவிடவே, ஃப்ளோரன்சின் சாண்டா கிராஸ் தேவாலயத்தில் தாந்தேயின் நினைவு ஸ்தூபம் அமைக்கப்பட்டு, அந்த வெற்று நினைவுச் சினத்தின் மேல் “காலத்தின் மிகச்சிறந்த கவிக்கு, மரியாதையுடன்...’ என்று அவரது காவியத்திலிருந்தே வரியை மேற்கோள் எடுத்து பொறித்துவைத்துள்ளனர்.
தாந்தேயின் நினைவுச் சின்னம், சாண்டா கிராஸ் தேவலயத்தினுள்....


பகுதி-2                                                          பகுதி-4

Wednesday, December 7, 2011

ஃப்ளோரன்ஸ் - ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தொட்டில் - (பகுதி 2)


பெர்சீயஸின் மெடூசா வதம்

 

கிரேக்க தொண்ம நாயகன் பெர்சீயஸ்பாம்புக் கூந்தல் கொண்டமக்களைக் கல்லாக மாற்றும் அரக்கி மெடூசாவின் தலையை அறுத்துமுகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் கட்டுப்படுத்திக் கொண்டு நிற்கும் காட்சி -பதினாறாம் நூற்றாண்டு ஃப்ளோரன்ஸ் சிற்பி பென்வெனுடோ செல்லினியின் படைப்பில் வெண்கலச் சிலையாக. இந்தச் சிலையை தொடர்ந்து 10 வருடம் செய்ய முயன்றுமுடியாமல் தோல்வியடைந்துஒருநாள் தன் வீட்டு சாமன்களையெல்லாம் எரி உலையில் போட்டு வெண்கலத்தை உருக்கி சிலையை வார்த்தபோதுஅதிசயமாக சிலை முழு உருப்பெற்றது. வலதுகாலில் மூன்று விரல்கள் மட்டும் பின்னால் சேர்க்கப்பட்டது

நாடும் நாட்டு மக்களும்
அதிகாலை ஃப்ளோரன்ஸ் 'சாண்டா மரியா நோவெல்லா' ரயில்நிலையத்தை வந்தடைந்த போது 5.30 மணி. வெளியேறி, வாடகைக் கார்களைத் தாண்டி ரோட்டில் இறங்கிய போது மெல்ல விடிந்து கொண்டிருந்தது. குளிர் அவ்வளவாக இல்லை. முன்னரே லாட்ஜைச் சென்றடையும் வழியை அச்சிட்டு கையில் வைத்திருந்தாலும், அதிகாலை மயக்கத்தில் முன்னால் பிரிந்து சென்ற நான்கு பெரிய சாலைகளில் எதில் செல்ல வேண்டுமென்பதில் குழப்பம் வந்தது. சரி, மக்களின் பொறுமை எப்படி என்று சோதித்துத் தெரிந்துகொள்ள வேண்டியது தான் என முடிவு செய்து, யாராவது சிக்குவார்களா என தேடினேன். தன் பெட்டிக் கடையை திறந்து, தினசரிகளை தொங்கவிட்டும், பொருட்களை எடுத்து வெளியில் வைத்து அடுக்கிக் கொண்டும் இருந்த பெரியவரிடம், ஹோட்டல் முகவரியைக் காண்பித்து உலகப் பொது மொழியில் (சைகை!) கேட்டேன். பொறுமையாக வழி சொன்னார் -இத்தாலியனில்! ஒன்றும் புரியவில்லை, இருந்தாலும் என் சோதனையில் தேறிவிட்டமையால் அவரது திருப்திக்காக மண்டையை வெகு விவரமாக ஆட்டிவிட்டு, நன்றி சொல்லி, பெட்டியை உருட்டிக் கொண்டு நடந்தேன். சிறிய கருங்கற்கள் பதிக்கப்பட்ட நடைமேடையில் பெட்டியின் சக்கரம் ‘கடபுட’வென சத்தம் போட்டு காலை வேளையின் அமைதியைக் கெடுத்தது, இருந்தாலும் இறக்கமில்லாமல் தரதரவென இழுத்துச் சென்றேன். ஐம்பது மீட்டருக்குள் மறுபடியும் சந்தேகம், இம்முறை ஆளரவமில்லாத பனிபொழிந்து ஈரமான சாலையைப் பெருக்கும் பணிப்பெண் சிக்கினார். அவரிடம் தெருப்பெயரைப் புரியவைக்க பத்து நிமிடமும், ஹோட்டல் பெயரை புரியவைக்க பத்து நிமிடமும் முதலீடு செய்தேன். என் உச்சரிப்பு ஒரிஜினல் பெயருக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் இருந்திருக்கவேண்டும். ஆனால் நானே விட்டாலும், அவர் விடுவதாய் இல்லை. என்னை நிற்கச் சொல்லிவிட்டு அந்த அரை இருட்டில் இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் பத்தடி நடந்தார். அப்புறம் சைகை காட்டி விட்டு என்னைத் திரும்பிப் பார்க்கச்சொன்னார். எதிரே வலப்பக்கம் நான்கு கட்டிடம் தள்ளி விடுதி! வழிந்து சிரித்துக் கொண்டு போய்ச்சேர்ந்தேன், மக்கள் நல்லவர்கள் தான் போல என சமாதானம் செய்தபடி!

பொதுவாக சுற்றுலாத் தலங்களில் வசிப்பவர்கள் இந்தமாதிரி வழி சொல்லி அலுத்துப் போயிருப்பார்கள். இந்தியாவில் அதை பொழுதுபோக்காக எடுத்துக் கொண்டு, கூடவே கூட்டிச்சென்று விடும் நல்ல உள்ளங்கள் எல்லா ஊரிலும் உண்டு. ஆனால் ஐரோப்பாவின் நியூட்ரினோ வேக வாழ்க்கையில், அடுத்தவர்களுக்காகச் செலவழிக்கும் ஒவ்வொரு மைக்ரோ நொடியும் பேரிழப்பாகத் தோன்றுவது போலிருக்கும். யாரையும் கவனிக்காமல் ஓடிக்கொண்டே இருப்பார்கள்.

செக் குடியரசில் வெள்ளையர்களைத் தவிர வேறு இன, நிற மக்கள் மிகமிகக் குறைவு. தலைநகரான பிராகில் கூட அப்படித்தான். மங்கோலிய முக அமைப்புடைய வியட்நாமியர்களை விட்டால் வேறு நாட்டு மக்கள் அதிகம் பார்க்க முடியாது. ஐரோப்பவின் அனைத்து நாடுகளிலும், பெருநகரங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆப்பிரிக்கர்கள் பிராகில் விரல் விட்டு எண்ணிவிடும் அளவு தான் இருக்கிறார்கள். பிராகை விட்டு தள்ளி ஏதாவது சிறு நகரங்கள், கிராமப்புறங்களுக்குச் சென்றால் இந்திய நிறத்தைப் பார்த்த்தும் சட்டென்று ஒரு அதிர்ச்சி முகத்தில் பரவி, அந்தக்கனமே அதைச் சமாளிக்கும் மக்களைப் பார்த்திருக்கிறேன். அசட்டு வெள்ளையில் இருக்கும் வட இந்தியர்களை சமயங்களில் ரோமா என்றழைக்கப்படும் ஜிப்ஸி இன மக்களுடன் குழப்பிக் கொள்வார்கள். அவர்களுக்கு ஜிப்ஸிக்களைக் கண்டால் ஆகாது. 

ஆனால் ஃப்ளோரன்ஸில் ஆப்பிரிக்கர்களும், மத்தியக் கிழக்கு நாட்டினரும், பங்களாதேசிகளும், இலங்கைத் தமிழரும், சிங்களரும் நிறைய இருக்கிறார்கள். பங்களாதேசிகள் மற்றும் ஆப்பிரிக்கர்கள் எண்ணிக்கையில் அதிகம். பெரும்பாலும் தெருக்கடைகள், சிறு வியாபாரம், துப்புரவுப் பணி போன்றவற்றைச் செய்கிறார்கள். ஆகவே வெவ்வேறு நிற மக்களைப் பார்த்துப் பழகிப் போன கண்களுக்கு யாரும் வித்தியாசமாகப் படுவதில்லை. ஒரு நாள் ஊர் சுற்றி விட்டு இரவு பதினொன்னரை மணிக்கு ஒருவரிடம் வழி கேட்டேன். இளம்பெண், ஐந்தே முக்கால் அடி உயர டார்க் சாக்லேட் நிறத்தில் இருக்கும் என்னிடம் எந்தத் தயக்கமும் இல்லாமல் அருகில் வந்து பதில் சொன்னாள். உணவகங்கள், சுற்றுலாத் தளங்கள், பேருந்துகள் என எல்லா இடங்களிலும் அப்படியே.

நகரின் பெரும்பகுதியும், குறிப்பாக பழைய நகரப்பகுதி முழுவதும் கருங்கல்லாலான ரெனையசென்ஸ் பாணி கட்டிடங்களே இருக்கின்றன. கற்பாறைகளைச் செவ்வக வடிவத்தில் பெருங்கற்களாகச் செதுக்கி அதை ஒன்றின் மீது மற்றொன்று அடுக்கிக் கட்டப்படும் கட்டிடம். வெளிப்புறமிருந்து பார்க்க செவ்வக வடிவ கட்டம் கட்டமாகத் தெரியும். எல்லாம் திட்டமிட்டு கட்டியது போல ஒரே அமைப்பும், நான்கு மாடி உயரமுமாக இருக்கிறது. வண்ணம் பூசப்பட்ட கட்டிடங்களும் இருக்கின்றன. சிவப்பு, மஞ்சள், பச்சை என்று பளீர் வண்ணங்கள் இருந்தாலும் அவற்றின் மங்கலான 'ஷேட்'களே பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கட்டிடங்கள் ஒன்றையொன்று அடுத்து வரிசையாக நதியின் இருகரைகளிலும், தெருக்களிலும், சதுக்கங்களின் நாற்புறமும் சுற்றி நின்று கண்களுக்கு கலவையான அழகைக் காட்சிவைக்கின்றன. இதுவே பொதுவாக ஐரோப்பாவின் எந்த நகரத்துக்குப் போனாலும் பொதுவான அமைப்பு.

பிரதான சாலைகள் கூட அகலமில்லாமலும், குறுக்குச் சாலைகள் அதை விட நெருக்கலாகவும், சந்துகள் இரண்டு பேர் மட்டும் நடக்கக் கூடிய அளவிற்கு குறுகலாகவும் இருக்கிறது. இந்தக் குறுகிய சந்தில் நடக்கும் போது தலைக்கு மேலே பல கட்டிடங்கள் எதிர்ப்புறமுள்ள கட்டிடத்தை இனைத்துக் கட்டப்பட்டிருக்கிறது. கட்டிடங்களின் கூரை கேரள, தமிழ்நாட்டு பழைய வீடுகளைப் போல ஓடு வேயப்பட்டு, உள்புறம் மரச் சட்டங்களால் தாங்கப்பட்டுள்ளது. 










பெரும்பாலும் எல்லா பழைய சாலைகளும் செங்கல் அளவுள்ள கருங்கற்களால் பாவப்பட்டிருக்கிறது. அதில் சுற்றுலாப் பயணிகளை ஊர் சுற்றிக் காட்ட அழைத்துச் செல்லும் இரண்டு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டிகள் தடதடத்துப் போகும் போதும், குதிரைகளின் இரும்பு லாடம் அடித்த குளம்படியின் டக்டக் சத்தமும், குறிப்பாக அந்தி சாய்ந்த பிறகு, கண்ணை உறுத்தாத ஆரஞ்சு பொன் நிறத்து விளக்கொளியில் ஏதோ 16ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவில் இருப்பது போல ஒரு பிரமையை உண்டாக்குகிறது. கட்டிடங்கள் அவற்றின் பழமை மாறாமல் பேணப்படுகிறது. அந்தப் பழமை தான் இந்நகரின் சுற்றுலா மூலதனம். அதை பெயிண்ட் அடித்தும், இடித்துவிட்டு கண்ணாடி ஒட்டிய ஜிஜிகு உயர கட்டிடங்கள் கட்டியும் நாறடிக்கவில்லை.

தடுக்கி விழுந்தால் ஒரு மியூசியம் அல்லது பழைய சர்ச், இல்லாவிட்டால் காபி – பிஸா கடைகளில் தான் விழவேண்டும். நகரமெங்கும் காபி மணம் அடித்துக் கொண்டே இருக்கிறது. இத்தாலியர்களுக்கு காபி என்றால் நல்ல ஸ்ட்ராங்கான கடுங்காப்பி, சர்க்கரை இல்லாமல், ஒரு மடக்கு – அவ்வளவு தான். அந்த வாசனையும், கசப்பும் பல மணி நேரம் தங்கும். நான் 30மில்லி அளவுள்ள அந்தக் காப்பியைக் குடித்துவிட்டு கசப்பு தலைக்கேறி கபாலத்தை இடிக்க, சாமி வந்தது போல தலையைச் சிலுப்பிக் கொண்டு உட்கார்ந்துவிட்டேன். மூச்சு, நாடி, நரம்பெல்லாம் காபி ஓடுவது போலிருந்தது. நமக்கு 'ஆத்துல கலந்த பசுமாட்டுப் பாலில், டிகாஷன் சேர்த்து, வட்ட டபராவில் நுரைவர ஆற்றிக் குடிக்கும் நரசூஸ் காபி தான் பேஷ்..பேஷ்..' என நினைத்துக் கொண்டேன். வீட்டுக்கு வருபவர்களுக்கு இந்தக்காபி கொடுப்பது பாரம்பரியமான விருந்தோம்பல். மற்றபடி கப்புசினோ, பால் காபி (கஃபே லாட்டே), இத்யாதிகள் அவர்கள் விரும்புவதில்லை. அதெல்லாம் இத்தாலி பெயரைச் சொல்லி வெளியே பிரபலம். 

ஸ்பாகெட்டி, பாஸ்தா, பிஸா, லஸான்யா என்று இத்தாலிய உணவுகள் எல்லாம் உலகம் முழுதும் பரவி விட்டது. நம் மக்களிடம் அதைச் சாப்பிட்டால் விஞ்ஞானி ரேஞ்சுக்கு ஒரு தற்பெருமையும், அறியாதவர்களை ‘அபிஷ்டு’க்களாகப் பார்க்கும் தொணியும் வந்துவிட்டது. மைதா மாவு அப்பளம் போல இருக்கும் மெல்லிய வஸ்துவை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, ஒவ்வொரு அடுக்கின் நடுவிலும் கீரை, காய்கறி, சீஸ் வைத்து நிரப்பி வேக வைத்து, உப்பிலிட்ட ஆலிவ் காய்கள் மற்றும் தக்காளி சாஸுடன் பரிமாறப்படும் சைவ லஸான்யா பிடித்திருந்தது. பாகிஸ்தானிய மற்றும் இந்திய உணவகங்கள் இருந்தது, சரி தமிழ்வாணன் போல இட்லி தேடி அலைந்து தமிழ் மானம் காக்க மனமில்லாமல் பிஸா, பழம், காபியென்றே நான்கு நாளும் ஓட்டிவிட்டேன்.

தங்கநகைக் கடைப் பாலம்

இரவில்...
பதிணான்காம் நூற்றாண்டில் ஆரன் நதியின் குறுக்கே கட்டப்பட்ட இந்தக் கல்ப்பாலத்தில் (ponte vecchio - பழைய பாலம்) ஆரம்ப காலத்தில் முழுவதும் கசாப்புக் கடைகள் தான் இருந்திருக்கிறது, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மாறி சிறுவியாபாரம், வட்டிக்கடை என்று வளர்ந்து இப்போது வரிசையாக தங்க நகைக்கடைகள் தான் இருக்கின்றன.

பகலில்...
ஆங்கிலத்தின் Bankrupt என்ற வார்த்தை உருவாக இந்தப் பாலம் தான் காரணம். அந்தக்காலத்தில் வியாபாரிகள் தங்கள் கடைச்சரக்கை பரப்பி வைக்கும் மர மேசையை (banco), அவர்கள் தரவேண்டிய கடன் தொகையைத் தர முடியாமல் போனால், அரசாங்க ஆட்கள் அடித்து நொறுக்குவார்களாம் (rotto). மேசை உடைந்தால் வியாபாரம் செய்ய முடியாது. இந்தச் செயலே bankruptcy என்றானது. கடைகளின் பழைய தோற்றத்தை மாற்றாமல் வியாபாரம் செய்கிறார்கள். இன்று இந்தப் பாலம் ஃப்ளோரன்ஸின் முக்கியமான காட்சித்தலம்.



பகுதி -1                                                                                                                                   பகுதி -3





Saturday, December 3, 2011

ஃப்ளோரன்ஸ் - ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தொட்டில் - (பகுதி 1)




அக்டோபர் இறுதியில் ஒரு அறிவியல் கருத்தரங்கில் கலந்துகொள்ள இத்தாலியிலுள்ள ஃப்ளோரன்ஸ் நகரத்திற்குச் சென்றேன். பிராக்கில் இருந்து வியன்னா, வெனிஸ் வழியாக நீண்ட ரயில் பயணம். ஐரோப்பாவில் விமானப்பயணத்தை விட மிகவும் சௌகரியமானது ரயில் பயணம். ஏசுவைப் போல ரெண்டு கையையும் நீட்டி ‘நம்புங்க துரை..நான் அப்படிப்பட்டவனில்லீங்க’ என்று சாட்சியம் சொல்லும் பாதுகாப்பு சோதணை கிடையாது, கூட்டம் இருக்காது, அமரவும் கால் நீட்டிக் கொள்ளவும் வசதியான நல்ல அகலமான இருக்கைகள், விமானத்திற்கு இணையான துயமையான கழிவறை வசதிகள், வண்டி ஓடும் தடதட சத்தமே இல்லாமல் இருக்கும் அமைப்பு, உள்ளே புகைபிடித்து அடுத்தவர்களுக்கு கேன்சர் அன்பளிப்பு அளிக்க அனுமதியில்லை, நிலப்பரப்புகளை நன்றாக காணும்படியான அகலமான கண்ணாடி ஜன்னல்கள்... என்ன ஒன்று நம் ஊர் போல உடனே பேசக்கிளம்பி இறங்கும் போது, ‘மறக்காம மெயில் பண்ணுங்க’ என்று ஆரத்தழுவிப் பிரியும் ‘ரயில் ஸ்னேகம்’ உருவாகும் வாய்ப்பு இல்லை. நேரம் பெரியவிஷயம் இல்லை என்றால், பேச்சுத் துணைக்கு ‘ஆள்’ இருந்தால் அல்லது ‘பராக்கு’ பார்ப்பதிலும், தண்டிதண்டியான புத்தகத்துள் முகம் புதைத்து மூக்கால் உழும் பழக்கமும் இருந்தால் ரயில் பயணமே சுகமானது.

ஃப்ளோரன்ஸ்

அழகிய ‘ஆரன்’ நதியின் கரையில் அமைந்திருக்கும் ஃப்ளோரன்ஸ், இத்தாலியின் துஸ்கானி மாகாணத்தின் தலைநகரம்,. இத்தாலிய மொழியில் ‘ஃபியரென்ஸ்’ என்றும் லத்தீனில் ‘ஃப்ளோரென்ஸியா’ என்றும் அழைக்கப்படுகிறது.

நகரத்தின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மையப் பகுதி முழுவதும் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. ஒரு நகரம் ஒட்டுமொத்த பகுதியும் உலகப் பொக்கிஷமாகக் கருதப்படும் அளவிற்கு என்ன சிறப்பு அங்கே இருக்கிறது?

ஃப்ளோரன்ஸ் – இத்தாலி மற்றும் மொத்த ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலகட்டத்தின் (Renaissance) பிறப்பிடம். பதினாலாம் நூற்றாண்டில் ஃப்ளோரன்ஸிலிருந்து தான் அறிவியல், தத்துவம், சமயம், அரசியல், இசை, ஓவியம் என எல்லா துறைகளிலும் ஒரு கலாச்சாரப் புரட்சி அலை கிளம்பி ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் 17ஆம் நூற்றாண்டு வரை அதன் அனைத்துத் தளங்களிலும் புதிதாகப் புரட்டிப் போட்டது.

ஃப்ளோரன்ஸில் வாழ்ந்த மேதைகளின் பட்டியலைப் பார்த்தால் மலைப்பு வரும், அதுவே அந்நகரம் ஏன் ஐரோபிய வரலாற்றில் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் விளக்கும். சுருக்கமான ஒரு பட்டியல்: பலதுறை மாமேதையான லியனார்டோ டாவின்சி, கலைமேதை மைக்கேல் ஏஞ்சலோ, அரசியல், தத்துவ சிந்தனையாளர் மாக்கியவில்லி, ஐரோப்பாவின் தலைசிறந்த கவியான தாந்தே, வானவியலாளர் மற்றும் தத்துவவாதியான கலிலியோ கலிலி, செவிலியர்களின் முன்மாதிரியான ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் என்று இன்னும் நீண்டு கொண்டே போகிறது.

மெடிஷி குடும்பம்

ஃப்ளோரன்ஸைச் சேர்ந்த ‘மெடிஷி’ என்னும் பிரபுக்குடும்பம் ஐரோப்பா முழுமையிலும் செல்வாக்குடன் இருந்திருக்கிறது. அந்த ஒற்றைக் குடும்பத்தில் இருந்து மட்டுமே நான்கு கத்தோலிக்க ‘போப்’கள் உருவாகியிருக்கின்றனர், இரண்டு ஃபிரெஞ்சு அரசிகள் மற்றும் ஆஸ்திரிய நாட்டின் மன்னரின் பட்டத்தரசி இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். ஃப்ளோரன்ஸின் நுண்கலைகள் மற்றும் கட்டிடக்கலைக் கலைஞர்களை ஆதரித்து கலைகளின் வளர்ச்சிக்கும் பரவலுக்கும் காரணமானவர்களும் இந்தக் குடும்பத்தினர் தான். வங்கித்துறையில் நுழைந்து அரசியல், மதம் என மெல்ல மெல்ல வளர்ந்த சாதாரண விவாசாயக் குடும்பம் இது.  ஃப்ளோரன்ஸை மையமாக்கி 14-18 ஆம் நூற்றாண்டு வரையில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர்களாக இருந்திருக்கிறார்கள். கடைசியில் 18ஆம் நூற்றாண்டில் வாரிசில்லாமல் முடிவுக்கு வந்திருக்கிறது மெடிஷி குடும்பம்.

புனித மேரி கதீட்ரல் (Cathedral of St. Mary of the Flower)

13ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்து படிப்படியாக 15ஆம் நூற்றாண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த கிறிஸ்தவ ஆலயம் முழுவதும் பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இதன் கவிந்த அரைக்கோள வடிவ மையக்கும்மட்டம் ஒருகாலத்தில் உலகின் மிகப்பெரிய கும்மட்டமாக இருந்துள்ளது. 

அகலமான உயர்ந்த வாயில்களின் இருபக்கத்தையும் அலங்கரிக்கும் சுருள் வடிவ பளிங்குத் தூண்கள் கவனிக்கப்படவேண்டியது. ஒவ்வொரு சுருள் வடிவமும் வேறுபட்டவை. இடையில் வெவ்வேறு நிற பளிங்குக்கல்லை இழைத்து எப்படி இந்தச் சுருள் வடிவங்களை வடித்தார்களோ சிற்பிகள்? 









காலை மற்றும் மாலையில் இளஞ்சூரியன் வண்ணக்கிரண விரல்களால் இந்த பளிங்கு ஆலயத்தின் சுவர்களில் வருடி விளையாடும் காட்சியும், இரவில் முழுநிலவு மௌனமாக குளிர் வெண் ஒளியைப் பொழிந்து வட்ட முகம்மலர விண்ணிலிருந்து ரசித்திருப்பதையும் கண்டபோது ஒருவித பரவசம் மனதைக் கரைத்தது.








முன்பக்கத்தைத் தவிர மற்ற பக்கங்கள் அழுக்கும் பிசுக்கும் படிந்து பளிங்கின் பளபளப்பு மங்கிக் கிடந்தது. ஒரு வயதான அமெரிக்கர் என்னிடம், “இது பரவாயில்லை இருபது வருடம் முண்டு நான் வந்த போது இதைவிடக் கேவலமாக இருந்தது” என்றார். புதுப்பிக்கும் பணி மிகுந்த பொருட்செலவில் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.




சைனோரியா சதுக்கம்

வெக்ஹியோ அரண்மனை
ஃப்ளோரன்ஸின் மையத்தில் அமைந்துள்ள இந்தச் சதுக்கத்தில் ‘வெக்ஹியோ அரண்மனை’ (Vecchio palace) மற்றும் அழகிய மேற்கூரை வளைவுகள் கொண்ட சைனோரிய அரங்கம் இருக்கிறது. இங்கிருக்கும் சிலைகள் ஒவ்வொன்றும் ஒரு அற்புதம். எல்லாம் பளிங்குச் சிலைகள் சிலையின் முப்பரிணாம வடிவத்தின் அனைத்து சாத்தியங்களையும் உச்சபட்ச திறமையுடன் பயன்படுத்தியுள்ளார்கள். 360 கோணமும் சுற்றி வந்து நுணுக்கமாக ரசித்தால் மட்டுமே கலைஞனின் உழைப்புக்கும், திறமைக்கும் மதிப்புக் கொடுத்த்தாகும். எல்லாம் கிரேக, ரோம தொண்மங்களில் இருந்து எடுக்கப்பட்ட சம்பவங்கள், சிலையாக உறைந்து நூறாண்டுகள் தாண்டி நிற்கின்றது. 

பாலிக்சீனாவின் பலி

ட்ரோஜான் போர் முடிந்ததும், அக்கிலிஸின் ஆவி கிரேக்கர்களின் முன் தோண்றி, அவர்கள் கப்பல் மீண்டும் ஹெல்லாஸ் சென்றுஅடைய காற்று வீச வேண்டுமானால் மனித பலி கொடுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறான். அக்கிலிஸின் கல்லறையில் கன்னியான பாலிக்ஸீனாவைப் பலி கொடுக்க வேண்டுமென்கிறான். பாலிக்ஸீனா அடிமையாய் சாவதைக் காட்டிலும் பலியாய் மடிவதை விரும்புகிறாள். அக்கிலிஸின் மகன் நியோப்டோலமஸ் அவள் கருத்தை அறுத்துக் கொல்கிறான். பாலிக்ஸீனாவின் தாய் ஹெக்குபா தனது மகளின் முடிவை என்னிக் கண் கலங்குகிறாள்.ஹோமரின் இலியட்டில் இந்தக் கதை வரவில்லை, என்றாலும் யூப்ரிடிஸ் என்பவர் எழுதிய ட்ரோஜான் பெண், ஹெக்குபா என்னும் நாடகங்களில் வருகிறது. பியோ ஃபெடி என்னும் சிற்பி மனத்தில் கண்டதை பளிங்கில் அற்புதச் சிலையாக உருவாக்கி நிறுத்தியிருக்கிறான் சைனோரிய சதுக்கத்தில். சிலைகளின் முகத்தில் உணர்ச்சிகள், ஆடை, கூந்தல் ஆகியவற்றின் நுண்மையான, தத்ரூபமான செதுக்கல், கடைசிப் படத்தில் ஹெக்குபாவின் கண்ணில் இருந்து கண்ணீர்த் துளி வருவதைக் கூட செதுக்கியிருக்கிறான் மகாகலைஞன்!!





ஆடை மற்றும் கூந்தல் இழைகளின் நுணுக்கம்...
கண்ணீர்த் துளியை கவணிக்கவும்...



                                                               பகுதி - 2


Monday, November 28, 2011

மொழியின் விதை


மொழி ஆற்றல் என்பது பேச்சு, எழுத்து, வாசிப்பு, புரிந்துகொள்ளல் ஆகியவை ஒன்றுசேர்ந்தது. மனித இனத்தில் கிளைபரப்பி, வேர் விட்டு வளர்ந்திருக்கும் நமது மொழி அல்லது பேச்சாற்றல் என்னும் பண்பின் விதை எது? மொழி முற்றிலும் மனித இனத்தின் கலாச்சார பரிணாம வளர்ச்சியின் ‘கண்டுபிடிப்பா’ அல்லது உயிரியல் பரிணாமத்தின் ‘மரபணுக் கொடையா’? மானுடவியலாளர்கள் மற்றும் அறிவியல் ஆய்வாளர்கள் இடையிலும், அறிவியலாளர்களுக்குள்ளேயே வெவ்வேறு கருதுகோள்கள் உள்ளவர்கள் மத்தியிலும் நீண்ட காலமாக இருந்து வரும் சர்ச்சைக்குரிய சந்தேகங்களில் இதுவும் ஒன்று.
முன்கதைச் சுருக்கம்
மொழி மானுட இனத்தில் தோன்றியதன் பின்னனி குறித்து இரண்டு முக்கியமான கருதுகோள்கள் உள்ளன. ஒன்று, மொழி என்பது எங்கிருந்தோ திடீரென்று மனித இனத்தில் வந்து குதித்துவிடவில்லை- அது படிப்படியாக மனிதனின் மூதாதையான பேரினக்குரங்குகள் காலத்திலிருந்து இருக்கக்கூடிய பல்வேறு அடிப்படையான தகவல்/உணர்வுப் பரிமாறல் முறைகளின் வளர்ச்சி அடைந்த நிலை என்கிறது. அதாவது மொழி என்பது தொடர்ந்து உருமாற்றமும், வளர்ச்சியும் அடைந்து வந்துள்ள ஒன்று. இந்தக் கருதுகோளின் மறுதரப்பு, மொழி என்பது வேறு எந்தப் பண்போடும் அல்லது மனிதனல்லாத வேறு எந்த உயிரினத்தின் பண்போடும் தொடர்பு படுத்திப் பார்க்க முடியாதது. இதற்கு அடிப்படையாகவும், இணையாகவும் இன்னொரு பண்பு இல்லை. எனவே எதன் தொடர்ச்சியுமாக அல்லாது மனித இனத்திற்கு நேரடியாகக் கிடைத்த கொடை என்கிறது.


மொழியின் தோற்றம் பற்றி பரிணாம அடிப்படையிலான பல கருதுகோள்களும் உள்ளன. பறவைகள், விலங்குகள் எழுப்பும் ஒலிகளை அடியொற்றி மனிதனின் மொழி வந்திருக்கும் (பௌ-வௌ கோட்பாடு), வலி, இன்பம், ஆச்சரியம் போன்ற மிகை உணர்வுகளின் போது எழும் இயல்பான ஒலிகளை வைத்து மொழி வளர்ந்திருக்கும் (பூ-பூ கோட்பாடு), நாம் காணும் எல்லாப் பொருட்களுக்குள்ளும் இயற்கையாகவே இருக்கும் ஒலி அதிர்வுக் குறிப்புகளைத் தான் மனிதன் தன் ஆதி மொழியில் எதிரொலித்தான் (டிங்-டாங் கோட்பாடு), ஆதியில் மனிதர்கள் கூட்டாக உடலுழைப்பில் ஈடுபடும் போது ஒரு தாள கதியில் அடுத்தடுத்து வெளிப்படுத்தப்படும் சத்தத்திலிருந்து இருந்து பேச்சு மொழி வளர்ந்திருக்கும் (யோ-ஹி-ஹோ கோட்பாடு), மனிதனின் அங்க அசைவுகளை அப்படியே ஒலியாக மாற்ற முனைந்ததன் விளைவாக மொழி தோன்றியிருக்கும் (தா – தா கோட்பாடு), தாய் தன் குட்டிகளிடம் தகவல் பரிமாற்றத்திற்காகப் ‘பேச’, பின் அது தன் இனத்தின் மற்ற வளர்ந்த உறுப்பினர்களிடமும் தொடர்புகொள்ளும் கருவியாகிப் பரவி மொழி உருவாகியிருக்கும் (‘தாய்மொழிக்’ கருதுகோள்) என்று ஏராளமான கோட்பாடுகள், கருதுகோள்கள் -வகைக்கு இரண்டு ஆதாரங்களுடன் உள்ளன! மொழியின் தோற்றம் பற்றிய அடிப்படைகளை விரிவாக அறிய விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரை உதவும்.
மேற்கண்டவை எல்லாம் பெரும்பாலும் நூற்றாண்டுகாலப் பழக்கமுடைய கருத்தாக்கங்கள். மானுடவியல், சமூகவியல், கலாச்சாரப் பரிணாமவியல், மொழியியல் சார்ந்த ஊகங்கள். ஆனால் இதுவரை மரபியல் விளக்கங்கள் கொடுக்கப்பட முடியாமலிருந்த பல பண்புகளுக்கும் மூலக்கூறு மரபணுவியல், நரம்பியல் போன்ற துறைகளில் நடைபெற்றுவரும் நவீன ஆய்வுகள் மூலம் உயிரியல் விளக்கம் அளிக்கப்படுகிறது. உதாரணமாக அறிவாற்றல் என்னும் பண்பின் மரபணுப் பின்புலம் குறித்தான சமீபத்திய கண்டுபிடிப்புகள். இந்தக் கட்டுரையின் நோக்கம், ‘பேச்சு/மொழி என்பதை மனித இனத்தின் ஒரு சிறப்பு உயிரியல் பண்பாகக் கொள்ளலாமா?’ என்னும் கேள்வியைக் கொண்டு சமீபத்தில் வெளிவந்துள்ள மூலக்கூறு மரபியல் மற்றும் நரம்பியல் ஆய்வு முடிவுகளின் வழியாக மொழி என்னும் பண்பின் மரபியல் விதை எது என்பதைத் தேடுவதாகும்.
மொழியின் இடம் - மூளையில்
மொழி என்னும் பண்பின் மரபியல் சார்ந்த வேர்களைத் தேடும் முன்பே மனிதனின் மூளையில் பேச்சு/மொழிக்கான இயங்கு தளங்கள் உள்ளனவா என்ற தேடல் தொடங்கிவிட்டது. 1861ல் பால் புரோக்கா (Paul Broca) என்னும் ஃபிரெஞ்சு நரம்பு அறுவைசிகிட்சையாளர், மொழியை புரிந்து கொள்ள முடிந்த ஆனால் தொடர்ச்சியாக ஒரு வாக்கியத்தை பேசவோ எழுதவோ செய்யும் திறனை இழந்த ஒரு நோயாளியின் மூளையை அவரின் இறப்பிற்குப் பிறகு ஆய்வு செய்த போது, நோயாளியின் மூளையின் இடது அரைக்கோளத்தின் முன்பகுதியில் ஓரிடத்தில் சதையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தார். மூளையின் இந்தப் பகுதி பேச்சு/மொழி இவற்றின் கட்டுப்பாட்டு மையமாக இருக்கக்கூடும் என்று ஊகித்தார். மேலும் அதே பேச்சுக் குறைபாடுள்ள எட்டு நோயாளிகளின் மூளையைச் சோதித்தபோது அனைவருக்கும் மூளையின் அதே இடத்தில் பாதிக்கபட்டிருந்ததைக் கண்டறிந்தார். மூளையின் இந்தக் குறிப்பிட்ட பகுதியே “மொழியின் மையம்” என்ற கோட்பாட்டை முன்வைத்தார். இப்பகுதி பின்னர் “புரோக்காவின் பகுதி” என்று பெயரிடப்பட்டது. ஒரு வகையில் மனிதனின் செயல்பாட்டுக்கும் மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கும் இருக்கும் நேரடித் தொடர்பை முதன் முதலில் நிரூபித்ததும் இந்தக் கண்டுபிடிப்பே!
புரோக்காவிற்குப் பிறகு பத்தாண்டுகள் கழித்து கார்ல் வெர்னிக் (Carl Wernicke) என்னும் ஜெர்மன் நரம்பியலாளர், பேசமுடிந்த ஆனால் தொடர்பற்ற, பொருள் கொள்ள முடியாத பேச்சைக் கொண்ட நோயாளிகளின் மூளையைச் சோதனை செய்தபோது அதே இடது அரைக்கோளத்தில் பின் பகுதியில் இருக்கும் பாதிப்பைக் கண்டறிந்தார். மூளையின் இப்பகுதி “வெர்னிக்கின் பகுதி” என்றழைக்கப்படுகிறது.
மூளை என்பது ஒரேசமயம் பல்வேறு வேலைகளைச் செய்யும் திறன்கொண்ட ஒட்டுமொத்தமான ஒற்றைச் சதைப் பிண்டமல்ல, அதன் ஒவ்வொரு பகுதியும் இசைக்கும், மொழிக்கும், ஒரு உருவத்தை பார்த்து அறிந்து கொள்வதற்கும் என குறிப்பிட்ட செயல்பாட்டுக்கான கட்டுப்பாட்டுமையங்களாகத் தனித்தனியாகச் செயலாற்றுகிறது. சமீபத்திய மூளையின் செயல்பாட்டினைப் படம்பிடிக்கும் உயர்தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் புரோக்கா, வெர்னிக்கின் உட்பட இன்னும் சில பகுதிகள் மனிதனின் பேச்சு/மொழி சம்பந்தமான மூளைக் கட்டுப்பாட்டுமையம் என்பது உறுதி செய்யப்பட்டது. மொழி தொடர்பான சோதனைகளில் மூளையின் இந்தக் குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே செயல்படுகின்றன எனவும், பிற அறிதல் செயல்பாடுகளின் போது இவை செயல்படுவதில்லை எனவும், அதனால் மூளையின் இந்தப் பகுதிகள் பேச்சு/மொழிக்கான தனிப்பட்ட மையங்கள் பகுதிகள் என்பதும் மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது (1). தலையில் அடிபட்டு உண்டாகும் காயங்களால் இப்பகுதிகளில் ஏற்படும் பாதிப்பு அவர்களின் பேச்சு/மொழி வெளிப்பாட்டினை பாதிக்கிறது என்பதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது (2). இந்த ஆய்வில் காயங்களினால் மொழித் திறன் இழந்தவர்களது மூளை, ஆரோக்கியமானவர்களின் மூளைச் செயல்பாட்டுடன் படம்பிடிக்கப்பட்டு ஒப்பிடப்பட்டது. மொழித் திறன் இழந்தவர்களில் மூளையின் மொழி மையங்களை இணைக்கும் நரம்பிழைகள் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
புரோக்கா மற்றும் வெர்னிக் போன்ற மூளை மொழி மையங்கள் மனிதனுக்கு மட்டும் உரியவை அல்ல. மனிதனின் பரிணாமப் பங்காளிகளான பேரினக் குரங்குகளிலும் இவை/இவற்றுக்கிணையான பகுதிகள் உள்ளது. அவையும் இந்த மொழிமையங்களின் செயல்பாடு மூலமாகவே அங்க அசைவுகள், சிமிக்ஞை, ஒலியெழுப்புதல் போன்ற தங்களுக்கே உரித்தான முறையில் தகவல் பரிமாறிக் கொள்கின்றன (3). ஆனால் அது மொழியாக ஏன் பரிணமிக்கவில்லை? ஏன் மனிதனுக்கு மட்டும் பேச்சு மற்றும் மொழி ஆற்றல் தனிச்சிறப்பான பண்பாக வளர்ந்தது?
2008ஆம் ஆண்டு வெளியான ஆராய்ச்சிக் கட்டுரை இந்தக் கேள்விக்கு பதில் சொல்கிறது (4). சிம்பன்ஸி, மகாக் குரங்கு (Rhesus Macaque) மற்றும் மனித மூளைகளில் மொழி மையங்களின் செயல்பாட்டை ஒப்பிட்டு ஆராய்ந்த போது, மொழி/ பேச்சின் தகவல்களை உள்வாங்கி, கடத்தி, புரோக்கா, வெர்னிக் மற்றும் இதர மொழி மையங்களைத் தொடர்புபடுத்தி, சிந்தித்து, வெளியிடும் பதில் தகவல் சமிக்ஞைகளைக் கடத்தும் நரம்பிழைத் தொகுப்பு மனித மூளையில் அகன்று விரிந்தும், பெரிதாகவும் வளர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. மனித இனத்துக்கு நெருக்கமான மற்ற பேரினக் குரங்குகளில் இந்த நரம்பிழைத் தொகுதி மிகக் குறுகியதாகவோ அல்லது முற்றிலும் இல்லாமலோ இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே பரிணாமத்தில் மற்ற குரங்குகளை விட மூளையின் அளவு மனிதனுக்குப் பெரிதாக அமைந்ததும், அதனால் இந்த மூளையின் மொழி மையங்களின் விரிவும், இவற்றை இணைக்கும் நரம்பிழைத் தொகுதி செறிவாகவும், பெரிதாகவும் அமைந்ததுமே நாம் குரங்குகளை விட அதிக தகவல்களை கையாண்டு, சிந்தித்து, வெளிப்படுத்தும் உயர்தள தொடர்பு ஊடகமான மொழி என்னும் பண்பைப் பெறக் காரணம் என்பது தெளிவாகிறது.
மொழியின் மரபியல் விதை
மூளையில் மொழி மையங்கள் இருப்பது உறுதியானாலும், மூளை என்பது உடல் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும், கட்டளைகளைக் கடத்தும் கட்டுப்பாட்டு மையம் மட்டும் தான். மூளையின் செயல்க்கட்டுப்பாட்டு மையங்களைத் தூண்டும் காரணிகள் அதற்கான புரதங்களே. புரதங்களோ மரபணுக்களால் குறிக்கப்படுபவை. மரபணுக்களே உயிரியல் பண்புகளைத் தலைமுறைகளுக்குக் கடத்தும் அடிப்படை அலகுகள். அப்படியானால் மூளையின் மொழிமையங்களின் வளர்ச்சிக்கும், தூண்டுதலுக்கும், இணைப்புக்கும், செயல்பாடுகளுக்கும் காரணமான மரபணுக்கள் எவை?
இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடிக்கப்பட்டதும் மிகவும் சுவாரஸியமானது. ஒட்டுமொத்த மனித இனத்தினுடைய மொழியென்னும் சிறப்புப் பண்பிற்கான மரபணுப் பின்புலம் கண்டுபிடிக்கப்பட்டது, மொழி/பேச்சுக் குறைபாடுள்ள ஒற்றைக் குடும்பத்திலிருந்து! லண்டனில் வாழும் KE என்னும் குடும்பத்தின் (இந்தக் குடும்பத்தின் முழுப்பெயர், விவரம் போன்றவை தனிப்பட்ட காரணங்களுக்காக ஆராய்ச்சியாளர்களால் பொதுவில் வெளிப்படுத்தப் படவில்லை) நெருங்கிய ரத்த உறவுகளில் மூன்று தலைமுறையைச் சேர்ந்த பாதிக்கும் அதிகமான உறுப்பினர்களுக்கு பேச்சு/மொழிக் குறைபாடிருந்தது தெரியவந்தது. இவர்களுக்கு முகத்தின் கீழ்பகுதியை அசைப்பதில் சிக்கல் இருந்தது, அதனால் நுண்மையான சில ஒலிகளை எழுப்பவோ, பல வார்த்தைகளை உச்சரிக்கவோ முடியாது. மேலும் இன்னொரு சிக்கலும் கவனிக்கப்பட்டது – அவர்களுக்கு பேச்சு, எழுத்து இரண்டிலும் இலக்கண ரீதியாக மொழியைக் கையாளுவதிலும் பிரச்சனை இருந்தது.
பேச்சுக் குறைபாடுள்ள பிறரிடம் ஏற்கனவே செய்யப்பட்ட மரபணு ஆய்வுகளில் 7ஆம் மரபணுத் தொகுப்பில் (குரோமோசோம்) இருக்கும் மரபணுக்களில் மாற்றங்கள் இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது (5). ஆனால் அதில் இருக்கும் நூற்றுக்கணக்கான மரபணுக்களில் எந்தக் குறிப்பிட்ட மரபணு காரணம் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் 2001ல் KE குடும்பத்தினரிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மரபணுவில் ஆராய்ச்சி நடத்தப்பட்டபோது 7ஆம் குரோமோசோமில் உள்ள FOXP2 (Forkhead box protein2) என்று பெயரிடப்பட்ட ஒற்றை மரபணுவில் ஏற்பட்டுள்ள மாற்றம் தான் அவர்களுடைய பேச்சு/மொழி குறைபாட்டிற்கான காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது (6). இது பேச்சு/மொழி என்னும் பண்பின் மரபியல் மூலத்திற்கான தேடுதலில் மிகமுக்கியமான ஒரு திறப்பை அளித்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மரபணு ஆராய்ச்சிகளில் FOXP2 மரபணு என்பது ஆர்.என்.ஏ படியாக்கல் காரணி (RNA Transcription factor) என்பதும், மூளை வளர்ச்சியிலும், நரம்பணுக்களின் நெகிழ்தன்மை, உருமாற்றம் ஆகியவற்றிலும் ஈடுபடும் மற்ற மரபணுக்களின் வெளிப்பாட்டைத் (Expression) தீர்மாணிப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. FOXP2 மரபணுவில் முக்கியமான இடத்தில் ஏற்பட்ட ஒரே ஒரு மாற்றம் தான் KE குடும்பத்தினரின் மூளை நரம்பணுக்களில் பாதிப்பை ஏற்படுத்தி மூளையின் மொழி மையங்களின் வளர்ச்சி, செயல்பாட்டுச் சிக்கலை உருவாக்கி பேச்சு/மொழிக் குறைபாட்டினை ஏற்படுத்தியது. பல்வேறு நாடுகளிலும் பேச்சு/மொழிக் குறைபாடுள்ளவர்களில் இந்த FOXP2 மரபணு மாற்றம் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த FOXP2 மரபணுவும், அதனால் குறிக்கப்படும் புரதமும் சிம்பன்ஸி, உராங் உட்டான், மகாக், கொரில்லா போன்ற மனிதனுக்கு பரிணாமத்தில் நெருங்கிய பேரினக்குரங்குகளிடமும் இருக்கிறது, எலிகள் முதலான பிற பாலூட்டிகளிடமும், மீன்கள், சில பாடும் பறவைகள், சிலவகை ஊர்வனவற்றிலும் காணப்படுகிறது. எலிகளிலிருந்து குரங்குகள் பரிணாமத்தில் பிரிந்து 75 மில்லியன் ஆண்டுகளில் FOXP2 மரபணுவில் ஒரே ஒரு அமினோ அமிலம் மட்டுமே மாற்றமடைந்துள்ளது, அதற்கு அப்புறம் மனிதன் சிம்பன்ஸிக்களிடமிருந்து பிரிந்து பரிணாம வளர்ச்சி அடைந்த 5-7 மில்லியன் ஆண்டுகளில் வெறும் இரண்டு அமினோ அமிலங்கள் மட்டும் மாறியுள்ளது (7). பரிணாமத்தில் ஒரு புரதத்தில் இரண்டு அமினோ அமிலங்கள் மாற்றமடைவதென்பது எவ்வளவு பெரிய வியக்கத்தக்க உயிரியல் பண்பு/திறன் வித்தியாசத்தை உண்டாக்க முடியுமென்பது ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டியதாகும்!
மரபணு மாற்றம், மொழிகளின் தோற்றம் –காலத்தின் கணக்கில்
ஒரு உயிரியல் பண்பும் அதற்கான மரபியல் காரணிகளும் சேர்ந்தே பரிணாம வளர்ச்சி கொள்ளும். நிலையான மொழிச்சூழல் இல்லாத கட்டங்களில் மொழிக்கான மரபணு இயற்கையில் தேர்வுசெய்யப்பட முடியாது. ஆனால் பேச்சு/மொழிக்கான மரபணு என்று கருதப்படும் FOXP2, மனித மொழி வளர்ச்சிக்கு முன்பே தோன்றிவிட்டது, எனவே மொழிக்கான காரணம் மரபியல் அல்ல கலாச்சாரப் பரிணாமம் தான் என்னும் கருதுகோளும் இருக்கிறது (8).
ஆனால், முக்கியமாக FOXP2 நேரடியாக மொழியைக் குறிக்காமல், நரம்பணு வளர்ச்சி, தூண்டுதலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மூளையின் மொழி மையங்களின் செயல்பாட்டுக்குக் காரணமாகிறது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். மேலும் மொழிக்கான மரபியல் காரணியாக FOXP2 மரபணுவைப் போல வேறு புதிய மரபணுக்கள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் மொழியின் மரபியல் தாக்கம் இன்னும் விளக்கமாகப் புரிந்துகொள்ளப்படலாம். மற்ற அனைத்து உயிரினங்களிலிருந்தும் வேறுபட்டது மனிதனின் குரல்வளையின் அமைப்பும், நாசிக் குழியும் (Nasal cavity). மொழி/பேச்சு வளர்ச்சிக்கான பங்கில் இவையும் முக்கியமானவை. இந்த உறுப்புக்களின் பரிணாமத்திற்கான காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், இயற்கையில் முதலில் தேர்வுசெய்யப்பட்டுவிட்ட FOXP2 போன்ற மரபணுக்கள் விதை என்றும் அவை மொழியாக வளர தேவைப்படும் மற்ற உயிரியல் காரணிகள் நிலம் என்றும் தொகுத்துப் புரிந்து கொள்ளலாம்.
மனிதன் தனது சக இனமான நியாண்டர்தால்களிடமிருந்து பரிணாமத்தில் பிரிந்து 3லட்சம் ஆண்டுகள் தான் ஆகிறது. அப்படியானால் நியாண்டர்தால்களுக்கும் மொழிக்கான மரபணு இருந்திருக்குமா? ஆம்! என்கிறது நியாண்டர்தால்களின் புதைபடிவ எச்சங்களிலிருந்து (fossils) பிரித்தெடுக்கப்பட்ட மரபணுக்களில் நடத்தப்பட்ட ஆய்வு. எனவே நியாண்டர்தால்களும் மொழி பயின்றிருக்கலாம் (9). எலும்பால் செய்த புல்லாங்குழல் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் நியாண்டர்தால் மனிதன் இசையறிவும் பெற்றிருந்திருக்கலாம் என்கிறது அகழ்வாராய்ச்சி சான்றுகள். இவை மொழிக்கான ஆதி மரபணுப் பின்புலத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றன.
மொழியின் மரபணு என்பது தமிழின் மரபணு, லத்தீனின் மரபணு அல்லது திராவிட மொழிக் குடும்பத்தைக் குறிக்கும் மரபணு, இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைக் குறிக்கும் மரபணு என்று மொழிகளையும், அவைகளின் வளர்ச்சியையும் மரபணுவுடன் நேரடியாக தொடர்புபடுத்துதல் அல்ல. மாறாக, மொழி ஒரு அறிதல் செயல்பாடு, அது மற்ற எந்த அறிதல் செயல்பாடுகளையும் போல மூளை என்னும் கட்டளை செயல்பாட்டு மையத்தின் மூலமாகச் செயல்படுத்தப்படுகிறது. அந்தச் செயல்பாட்டு மையத்தின் உருவாக்கத்தையும், வளர்ச்சியையும், சிக்கலான சிமிக்ஞை வலைப்பின்னல்களையும், மொழி என்னும் அறிதல் நிகழும் மூளைப் பகுதிகளை நிர்ணயிக்கும் காரணி –மரபணு, இந்த மரபணு உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் மனித இனத்தில் சிறப்புப் பண்பாக தேர்வு செய்யப்பட்டது என்று தொடர்புபடுத்திப் புரிந்துகொண்டால் எளிதில் விளங்கும்.
ஒப்பீட்டு விலங்கு நடத்தையியல் அறிஞரான தோர்ப் (W.H.Thorpe), “மற்ற உயிரினங்களுக்கும் தகவல் தொடர்பு முறைகள் இருக்கிறது. மனிதனின் மொழிக்கும், மற்ற விலங்குகளின் தொடர்புமுறைக்கும் இருக்கும் எளிய ஒற்றுமை என்னவென்றால் இரண்டிற்கும் நோக்கம் (Purposive), தொடர்ச்சி/இசைவு (Syntactic), தெரிவிக்கப்படும் தகவல் (Propositional) மூன்றும் இருக்கிறது. ஆனால் மனிதனின் மொழி, எந்த எளிய தொடர்புமொழிகளின் வளர்ச்சி நிலையல்ல” என்றார். சமகாலத்தின் முக்கியமான மொழியியல் அறிஞரான நோம் சாம்ஸ்கி (Noam Chomsky) இந்த மரபணுக் கண்டுபிடிப்புகள் வெளிவருவதற்கு பல ஆண்டுகள் முன்பே, மனிதனின் மொழி எந்த தொல்/அடிப்படை மொழியிலிருந்தும் ‘பரிணமித்த’தில்லை, மாறாக உயிரியல் பரிணாமத்தின் ஏதோ ஒரு புள்ளியில் ஏற்பட்ட திடீர்மாற்றத்தால் மனிதனுக்கு நேரடியாகவே கிடைத்த சிறப்புப்பண்பு என்று தொடர்ந்து வாதிட்டு வந்தார். இப்போது பெருகிவரும் மரபணு ஆய்வுமுடிவுகள் அதைப் பெரிதும் ஆமோதிப்பதாகவே உள்ளது.
- பிரகாஷ் சங்கரன்.
உதவிய மூல ஆராய்ச்சிக் கட்டுரைகள்:
1. Fedorenko E., et al., 2011. Functional specificity for high-level linguistic processing in the human brain. PNAS. 108 (39): 16428-16433
2. Turken A.U., and Dronkers N.F. 2010. White matter pathways subserving the language comprehension network. Society for Neuroscience 40th annual meeting. San Diego, CA.
3. Taglialatela J.P., 2008. Communicative signaling activates ‘Broca’s’ homolog in chimpanzees. Current Biology 18: 343-348
4. Rilling J.K., et al., 2008. The evolution of the arcuate fasciculus revealed with comparative DTI. Nature Neuroscience. 11, 426 – 428.
5. Fisher S.E., et al., 1998. Localisation of a gene implicated in a severe speech and language disorder. Nature Genet. 18 (2): 168–70.
6. Lai C.S.L., et al., 2001. A forkhead-domain gene is mutated in a severe speech and language disorder. Nature 413(6855): 519–23.
7. Enard W., et al., 2002. Molecular evolution of FOXP2, a gene involved in speech and language. Nature 418: 869 – 872.
8. Chater N., et al., 2008. Restrictions on biological adaptation in language evolution. PNAS. 106 ( 4): 1015-1020
9. Krause J., et al., 2007. The Derived FOXP2 Variant of Modern Humans Was Shared with Neandertals. Current Biology 17: 1-5.
நன்றி: சொல்வனம் - இதழ் 60ல் வெளியானது. http://solvanam.com/?p=17709

Sunday, November 13, 2011

லீலை (சிறுகதை)

தேஜா பளீரென்றிருந்த வெளியில், உற்றுக் கவனித்தால் மட்டும் தெரியும் கரும்புள்ளிகளில் மனதைச் செலுத்தினான். அக்கரும்புள்ளிகள், அப்பால் மிதக்கும் மற்ற ஒளிரும் கிரகங்களுக்கு இடையே உள்ள வெளி என்று அவனுக்கு உணர்த்தப்பட்டிருந்தது. மனவிலக்கம் அடைந்தவர்கள் மட்டுமே அந்தப் பிலங்களின் உள்ளே நுழைந்து வெளியேற முடியும் என்பது அவர்கள் நம்பிக்கை. அப்படிப் போனவர்கள் திரும்பியதில்லை, அப்புறம் இங்கிருக்கும் யாருடைய ஆழ் மனதாலும் அவர்களை உணரமுடியாது. ‘அது எதற்கு இப்போது?’ என்று ஆழ்மனதைக் கலைத்து தங்கள் கிரகத்தின் நியதிகளிலும், பழம் புராணங்களிலும் மனதைக் குவித்து கிரகிக்கத் தொடங்கினான். அவர்கள் இனத்தின் புராணங்களில் சில பகுதிகள் நம்ப முடியாததாகவும், இன்னும் சில - அவன் இதுவரை உணர்ந்திராத மனப்பதிவுகளாகவும் இருப்பதை உணர்கையில் ஒளிரும் அவன் உடல் இன்னும் ஒரு ஒளி அலையை வெளியிட்டு அடங்கியது.

தேஜாவின் இன மூதாதைகள் ஆழ்மனத்தால் அடையமுடியாத ஏதோ ஒரு புள்ளியில் பூமி எனும் கிரகத்தில் வாழ்ந்து வந்தவர்கள். அந்தக் கிரகம் இதைப் போல ஒளிர் கிரகமல்ல. சூரியன் என்று அழைக்கப்பட்ட மற்றொரு சுயஒளிர் எரியிலிருந்து வெளிவரும் ஒளியைத் தான் ஏந்திக் கொண்டிருந்தது. பூமி தன் முழுப்பரப்பிற்கும் ஒளி வேண்டி சூரியனைத் தொழுது சுழன்று கொண்டே இருந்தது. சுழற்சியில் ஏதாவது ஒரு பாதிக்கு மட்டுமே ஒளி கிடைத்ததால் இன்னொரு பாதி இந்த வெட்டவெளிப் பிலம் போல இருந்தது. அதை இருள் என்று அழைத்தார்கள். இருளும் ஒளியும் மாறி மாறி வந்ததால் அவர்கள் ஒளிக்குக் கட்டுப்பட்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் கிரகத்தில் ஒளியே அனைத்திலும் வேகமாகப் பயனித்ததாக அறிந்திருந்தார்கள், எனவே ஒளியால் அளக்கப்படும் காலத்தில் அடைக்கப்பட்டிருந்தார்கள்.
இப்போது தேஜாவின் இனம் இருப்பது தன்னொளிக் கிரகம். இங்கே இருப்பவர்கள் தங்கள் தேஜோமயர்கள் என்று கூறிக்கொண்டார்கள். எல்லோரும் ஒளிரக் கூடிய உடல் பெற்றிருந்தார்கள். தேஜோமயர்களின் ஒளியுடல் தான் கிரகத்தையே ஒளிமயமாக்கியதா, இல்லை கிரகத்தின் தன்னொளியால் தேஜோமயர்களின் உடல் ஒளிர்கிறதா என்பது இங்கே எப்போதும் நடக்கும் விவாதம். பக்கத்தில் இருக்கும் இன்னொரு கிரகமும் ஒளிரக்கூடியது தான், அங்கிருக்கும் உயிர்கள் தங்களைச் சுயம்பிரகாசிகள் என்று அழைத்துக்கொண்டார்கள். இரு இனங்களும் ஒரே மூதாதையர்களில் இருந்து தான் தோன்றினார்கள் என்றும், பூமியிலிருந்து இருள் பிலத்தின் வழியாக இங்கே வந்தடைவதற்காக தங்களை ஒளிரும் உடலுள்ளவர்களாக மாற்றிக்கொண்டார்கள் என்றும் பதிவுகள் இருப்பதை உணர்ந்தான். ஒளிராத உடல் எப்படி இருக்குமென்று ஆச்சர்யப்பட்ட போது அவன் உடலில் ஒரு ஒளியலை வெளியேறியது.

ஆழ்மனதின் ஒரு பகுதியைத் திருப்பி தன் ஒளிரும் கிரகத்தின் இயங்குவிதிகளில் நிறுத்தினான். இங்கே மனம் தான் எல்லாவற்றிலும் இயங்கு விசை. அதன் வேகம் அளக்கப்படவில்லை, அளக்கவும் முடியாது. ஆகவே இங்கே காலம் என்னும் கருத்தே இல்லை. மக்கள் தங்கள் மேல்மனத்தால் இன்னொருவரின் மேல்மன எண்ணங்களை உணர்ந்தார்கள். ஒவ்வொருவரும் அடுத்தவரை தெளிவாக அறிந்தார்கள். அதனால் மிக வெளிப்படையான நல்ல எண்ண அலைகள் மட்டுமே இருந்தது. மக்கள் ஒற்றுமையாக, நிம்மதியாக வாழ்ந்தார்கள் அல்லது வாழ்க்கை என்ற ஒன்றே இருக்கவில்லை. தேஜோமயர்களின் மூதாதையர் பூமியில் வாழ ஆரம்பித்த காலங்களில் இங்கிருப்பது போன்றே வெளிப்படையாக வாழ்ந்தனர், ஆனால் அடுத்தவர் மனதை நேரடியாக உணரும் ஆற்றல் பெற்றிருக்கவில்லை. ஒலியைப் பயன்படுத்தி தங்கள் மேல்மனதை வெளிப்படுத்தினர் என்பதை கவனித்தான். அந்த மகிழ்ச்சியான பகுதிகளை அவர்கள் ‘கிருதயுகம்’ என்று அழைத்திருந்தனர் என்பதும் பதியப்பட்டிருந்த்து.

ஒளிர்கிரகத்தில் உடலாலும் அறிவாலும் எல்லோரும் சமமானவர்கள். தங்கள் ஆழ்மனத்திற்குள் நுழைந்து பிரபஞ்ச விதிகளையும், மூதாதைகளின் புராணங்களையும், மற்ற உணரப்படாத எண்ண அலைகளையும் கிரகிப்பதில் காட்டும் ஈடுபாட்டில் தான் வேறுபட்டனர். அது முற்றிலும் அவர்களின் மேல் மனத்தின் விருப்பத்தைப் பொறுத்தே அமைந்தது. தேஜா தங்கள் மூதாதைகள் கிருதயுகம் முடிவடைந்த காலத்தில் ஒலியால் வெளிப்படுத்தப்படும் முறையான மொழியைக் கொண்டு தங்கள் மேல் மனதை மறைக்கும் அறிவைப் பெற்றிருந்தார்கள் என்பதை அறிந்தான். அந்தக் கட்டம் அவர்கள் மொழியில் த்ரேதாயுகம் என்று குறிக்கப்பட்டிருந்தது. மனத்தில் எண்ணாதவற்றை வெளிப்படுத்தவும், எண்ணங்களை ஒளிக்கவும் மூதாதைகளுக்கு ஆற்றல் இருந்தது என்பது அவனுக்கு சுவாரசியமாக இருந்தது. மேல் மனதில் அம்மா தன்னை அழைப்பதை உணர்ந்தான், அப்புறம் வருவதாக எண்ணியவுடன் அம்மா மனம் கலைந்து செல்வதை உணர்ந்தான்.

மீண்டும் மூதாதைகளின் புராணங்களில் ஆழ்மனதைக் குவித்தான். அடுத்து துவாபரயுகம் என்றழைக்கப்பட்ட காலகட்டத்தில் உடலால் மொழியையும், மேல்மனத்தையும் மூடி, அடுத்தவர்கள் தங்கள் அறியாதபடி மறைத்துக் கொண்டார்கள். கலியுகத்தில் மேல்மனம், மொழி, உடல் மூன்றாலும் ஆழ்மனத்தையே மறைக்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டதும் மூதாதைகள் ஒவ்வொருவரும் தனித்தனியாகி, விரும்பியதை அடையும் வல்லமை பெற்றார்கள். அடைந்தவற்றை அனுபவிக்க அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த உடலும், ஆயுளும் போதவில்லை. தங்கள் உடலை நிர்ணயிக்கும் உயிரின் அடிப்படை வரிகளையே திருத்தி எழுதினார்கள். உயிரின் எழுத்தை மாற்றி, பிரபஞ்ச விதிகளை வெற்றி கொண்டதன் குறியீடாக தங்கள் இறைவன் கையில் பின்னிப் பிணைந்திருக்கும் இரண்டு பாம்புகளை வைத்தார்கள். மரணத்தை வென்று அதன் மூலம் எல்லோரும் காலத்தை மீறிவிட முயன்றார்கள். ஆனால் அவர்களின் ஆதி இச்சையான அன்பும், காமமும், குரோதமும் அவர்கள் மனதை அழைக்கழித்தது. மரணமில்லாமல் பெருகிய மனித உடல்கள் அவர்களுடைய பூமிக்கிரகத்தை நிறைத்தது. அடுத்தவரின் மன எண்ணங்களை அறியமுடியாமையும், ஆசையும் போட்டியை வளர்த்து ஒருவரை ஒருவர் அடக்கமுற்பட்டார்கள். அவர்கள் இறைவனின் கையிலிருந்த உடல்கள் பிணைந்திருந்த அந்தப் பாம்புகளின் தலைகள் ஒன்று மற்றொன்றை எதிர்த்து நோக்கி விஷமூச்சு வெளியிட்டு ஓயாது சீறின. நிலமும், வெளியும், சலமும் எல்லாம் நச்சுகலந்து நிறைந்தது. ஒட்டுமொத்தமாக பூமியே அழிவை நோக்கிச் சுழன்று சுழன்று நகர்ந்தது. கலியுகம் தங்கள் இனத்தின் ஊழிக்காலம் என்பதை அறிந்த அவர்கள் இனிப் பூமி சுழன்று, பகலும் இரவுமாகிக் காலம் நகர்வதை தடுக்க முடியாதென்று புரிந்து கொண்டார்கள். முற்றான அழிவிலிருந்து அவர்கள் இனம் தப்பிக்க ஒரே வழி காலம் விரைந்து கலியுகம் முடியுமுன் இந்தக் காலச்சக்கரத்திலிருந்து வெளியேறுவதே என்று கண்டுகொண்டார்கள். இறுதி முயற்சியாக மீண்டும் ஒருமுறை தங்கள் உயிருடல் விதியின் வரிகளை மாற்றி எழுதினார்கள். மூளையின் கட்டமைப்பையும், வலைப்பின்னல்களையும் அடியோடு மாற்றினார்கள். பேச்சுக்கான பகுதியை முற்றிலும் செயலிழக்க வைத்தார்கள். எல்லோருக்கும் மூளையின் அளவும், செயல்படும் வேகமும் ஒன்றுபோல இருக்கும்படி உயிர்விதியின் வரிகளைத் திருத்தி எழுதினார்கள். இருளில் ஒளிரும் உயிரிகளின் உயிர் வரிகளைப் படித்து, அதைச் செறிவாக்கித் தொகுத்து தங்கள் இனத்திற்குள் புகுத்தினார்கள். ஒளிர்ந்தார்கள். இரண்டு கலங்களிலாக காற்றை உந்தி, பூமியை வெட்டவெளியில் அனாதையாக விட்டு விட்டு கரியபிலத்துள் நுழைந்து மறுபுறம் வெளியேறி ஒளிர்கிரகங்களில் வந்து ஒட்டிக்கொண்டார்கள்.




தங்கள் மூதாதையர், காலத்தை வெல்ல, காலமே இல்லாத ஓரிடத்தில் வந்து நிலைபெற்றனர் என்பது மெல்ல மெல்லப் புரியும் தோறும் தேஜாவின் உடல் ஒளி வெப்பமாக அடங்காத அலைகளாக வெளியேறியது. தனக்கு முன் யாரும் இவற்றை உணர்ந்திருக்கிறார்களா என்று தேடி தன் ஆழ்மன அடுக்களில் இறங்கி தங்கள் ஒளிர்கிரகத்தின் நியமங்களில் நகர்ந்தான். அறிந்தவர்களின் மன அலைகள் இன்னும் ஆழத்தில் கிடப்பதை அவன் மனம் கண்டுகொண்டது. ஒருவேளை அவர்கள் எல்லாம் மனவிலக்கம் அடைந்து பிலத்திற்குள் சென்று விட்டார்களோ என்று நினைத்துக் கொண்டான். தன்னால் அவ்வளவு ஆழம் சென்று உணரமுடிவது அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. அல்லது தானே முன் பிறவிகளில் தேடிக் கண்டுகொண்டவற்றின் எண்ண அலைகளோ இவை என்று வியந்துகொண்டான். இந்த ஒளிர்கிரக வாழ்வில் பிறப்பும், இறப்பும் உண்டு, ஆனால் எதற்கும் மகிழ்ச்சியோ துக்கமோ இல்லை. யாருக்கும் பசியும் கிடையாது கழிவும் வெளிவராது. உடல் ஒரு ஒளித்துண்டு போல உள்ளும் புறமும் தெரிய காற்றில் மிதப்பது போல லேசானது. யாருக்கும் எந்த ஆசைகளும், தேவைகளும் இல்லை. ஆகவே, போராட்டமும் இல்லை. சுற்றிலும் எப்போதும் ஒரே அளவான வெண்ணொளி. பிறக்கும் போதே மேல்மன அலைகள் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியும். மூதாதையர்களிடமிருந்து காமமும், பொருள் வடிவான அவர்கள் மொழியும் மட்டும் ஒளிர்மாந்தர்களுக்கு பொதிந்து கைமாறப்பட்டு வந்தது. ஆதி இச்சைக்கேற்ப முடிவிலாது புணர்ந்தார்கள், சந்ததிகளை பிறப்பித்தார்கள். அதுமட்டுமே அவர்களுக்கு விதிக்கப்பட்ட செயல் கட்டளை. தேஜாவுக்குள் ஒரு கணம் ஆழ்மனதிற்குக் கூட அறியாத அடியாழத்திலிருந்து ஒரு குறும் அலை கிளம்பி அடங்கியது. அது என்னவென்று உணரமுடியவில்லை. முயன்று பார்த்த போது எங்கோ வெளிக்கு அப்பால் யாரோ எதுவோ உணர்த்த முயசிப்பது போல தோனியது. ‘ஒருவேளை சுயம்பிரகாசர்களில் என்னைப் போலவே யாராவது பிரபஞ்ச விதிகளில் தங்கள் மனத்தால் ஊடுறுவியிருக்கிறார்களா?’ என்று நினைத்துக் கொண்டான். எண்ணங்களை மீட்டு மேல் மனத்திற்கு வந்த போது ஒரு ஒளிரும் இளம்பெண் மெண்மையாக ஒளியலை பரப்பிக்கொண்டு ஒளிவெளியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். தன்னை அவள் மனம் உணரவில்லை என்று நினைத்த போது அவனுக்கு வியப்பாக இருந்தது.
தேஜா தங்கள் இனத்தை எண்ணிக் கொண்டான். பிறப்பவர்கள் எல்லோரும் வளர்கிறார்கள், மேல்மனதால் எதையும் தெரிவிக்கவோ, கிரகிக்கவோ முடியவில்லை என்றாலோ, தேகம் ஒளிர்வது நின்றாலோ அவர்கள் அடுத்தவர்களுக்கு புலப்படாமல் மறைவார்கள். மறைந்தவர்களின் மேல்மன நினைவுகள் சுத்தமாக அழிக்கப்பட்டு மறுபடியும் பிறப்பார்கள். அவர்களின் ஆழ்மனத்தில் கிரகித்துக் கொண்ட பிரபஞ்ச உணர்வுகளை மட்டும் மீண்டும் முயன்று மீட்டுக்கொள்ளலாம். தொடர்ந்து ஆழ்மனதில் உலாவி முன்னோர்களைப் பற்றிய புராணங்களையும், அவர்கள் இனத்தின் விதிகளையும் உணர்ந்து கொள்ளலாம். அதே வாழ்க்கை. ஒளி போல. மாற்றமில்லாமல், மங்கலும், துலக்கமும் இல்லாமல் ஒரே நிலை. இந்தச் சுழல் சலித்துப் போனால் தீவிரமாக முயன்று ஆழ்மனதையும் தாண்டி தங்கள் மனதையே அடியோடு விலக்கி பிரபஞ்ச மனதுடன் இணைந்து விடலாம். பின் மீண்டும் ஒளியுடல் கிடைக்காது, புணரமுடியாது. கரும் பிலத்துக்குள் சென்று விட்டதாக மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள். பிரபஞ்ச நியமத்தின் ஒரே கட்டளை –மன விலக்கம். அந்த நிலையில் ஒடுங்கும் வரை திரும்பத் திரும்பப் பொருளே இல்லாமல் பிறந்து, புணர்ந்து, ஒளிர்ந்து, மறைந்து…. மாற்றமே இல்லாமல்!
ஒளி அலைகள் இல்லாமல் அமைதியாக வெளிச்சப் பரப்பையே பார்த்துக் கொண்டிருந்தான். ‘நம் மூதாதைகள் தான் எத்தனை உணர்வுகளை வெறும் சொல்லாக, முடமாக்கிப் பொருள் இல்லாமல் விட்டுச் சென்றிருக்கிறார்கள்? பொய், துரோகம், திருட்டு, ஓசை, இசை, மரம், மயில், நாய், தெய்வம், பகை, உறவு.. எத்தனை எத்தனை பொருளற்ற சொற்கள் எண்ண அலைகளாக வெளிப்படுத்த முடியாமல்?? மூதாதைகளின் கிரகத்தில் ஒளி சிதறி நிறங்கள் உண்டானதாக பழைய எண்ணப் பதிவுகளை கவனித்த போது உணர்ந்திருக்கிறான்.
‘அவர்களைப் போலவே இங்கும் ஒளி பிரிந்து வண்ணங்கள் வந்தால்? ஒளியே இல்லாமல் போனால்..? ஒளியில்லாத நேரத்தில் வாழும் முற்றிலும் வேறான ஒரு வாழ்க்கை இருந்தால்…?’ தேஜாவின் ஆழ்மனதின் கீழே ஒரு கருப்புத் துளை குழிந்து விரிந்து பின் மூடிக்கொண்டது போலத் தோணியது. அவர்கள் இனம் அழியாமல் இருக்கவேண்டி, இங்கே கிருதயுகம் மட்டும் நிலைத்திருக்கும் படி மாற்றத்திற்கான எல்லா வழிகளையும் மூதாதைகள் அடைத்து விட்டார்களா? இங்கே எந்த மாற்றமும் இல்லாததால் காலம் என்பது இல்லையா? அல்லது காலமே இல்லாததால் எதுவும் மாறுவதில்லையா? என்னால் ஒரு த்ரேதாயுகத்தை உருவாக்கும் லீலையைத் தொடங்கி வைக்க முடியுமா? இங்குள்ளவர்கள் வாழ்வில் வண்ணங்களை வாரி இறைக்க முடியுமா? அப்படி நினைக்கும் போதே அவன் உடல் வெண்ணொளியைப் பொழிந்து மேலும் பிரகாசித்தது. அந்த ஒளிர் மங்கை வெட்டவெளியிலிருந்து மனத்தை நகர்த்தித் திரும்பி தேஜாவை ஆர்வமாகப் பார்த்தாள். எந்த உணர்வலைகளையும் மேல்மனத்தில் எழுப்பாமல், அவளை நோக்கி “உன்னை நேசிக்கிறேன், உன்னுடனேயே கலந்திருக்க விரும்புகிறேன்” என்று ஆழ்மனத்திலிருந்து ஒரு எண்ணஅலையை எழுப்பி அனுப்பிப் பார்த்தான். அவள் உடல் ஒளிர்ந்தது. அலையலையாக வெண்மை படரும் ஒளி பரவி தேஜாவைத் தொட்டது. மெல்லப் புண்ணகைத்து அவன் உடலில் கலந்து இறுக்கிக் கொண்டாள்.
தேஜா மறுபக்கம் ஒளிவெளியில் புள்ளியாகத் தெரிந்த கரும் பிலத்தைப் பார்த்துக் கண்ணடித்தான்.

- பிரகாஷ்.
நன்றி: சொல்வனம். இதழ் 59 (11.11.2011)ல் வெளியானது http://solvanam.com/?p=17347

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மேற்கண்ட கதை குறித்து அன்பிற்குரிய என் ஆசான் ஜெயமோகனுக்கு தெரிவித்திருந்தேன். அவரிடமிருந்து வந்த பாராட்டும், ஆலோசனையும் உருவாக்குகின்ற உத்வேகத்திற்கும் உற்சாகத்திற்கும் அளவே இல்லை. http://www.jeyamohan.in/?p=22614
அன்புள்ள ஜெ,
வணக்கம். சென்ற மாதம் சொல்வனத்திற்கு ஒரு சிறுகதை அனுப்பியிருந்தேன். இந்த இதழில் பிரசுரமாகியுள்ளது “லீலை”
கதைகளை உங்களிடம் அனுப்பி தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைப்பேன். இருந்தாலும் இதை உங்களிடம் பகிர்வதற்குக் காரணம், ‘கடவுளை நேரில் காணுதல்’ கட்டுரையில் கார்ல் சாகனின் ‘காண்டாக்ட்’ நாவல் பற்றி நீங்கள் எழுதியிருந்ததைப் படித்ததும் எனக்கு ஏற்பட்ட உற்சாகம் தான். நான் காண்டாக்ட் படித்ததில்லை. உங்களின் கட்டுரை வருவதற்கு ஒரு மாதம் முன்பு, பரிணாமத்தின் அடுத்த கட்டத்திற்கு வளர்ந்த மனிதர்கள், பூமியைக் கைவிட்டுப் போதல், பேச்சு மொழியல்லாது பிரக்ஞைப் பூர்வமாக தொடர்பு கொள்ளல், காலத்தை மீறல் என்று சில விஷயங்களை அடிப்படையாக வைத்துச் சுருக்கமாக (காண்டாக்ட் அளவிற்கு விரிவாகவோ, அவர் பேசும் தளத்திலோ அல்ல) ஒரு சிறுகதையாக எழுதி சொல்வனத்திற்கு அனுப்பியிருந்தேன். ஒரு பெரும் அறிவியல் அறிஞரின் சிந்தனையில் ஒரு சிறுதுளி அதிர்ஷ்டவசமாக எனக்குள்ளும் விழுந்துவிட்டதோ என ஒரு மகிழ்ச்சி உங்கள் கட்டுரையைப் பார்த்தவுடன் வந்தது. அதை உங்களுடன் பகிரந்து கொள்ள வேண்டுமென விருப்பம்.
நன்றி,
அன்புடன்,
பிரகாஷ்.
அன்புள்ள பிரகாஷ்
நல்ல கதை.
ஆனால் அறிவியல்கதைகளில் இரு முக்கியமான அம்சங்களை கருத்தில்கொள்ளவேண்டும். சிக்கல் இல்லாமல் கதையுடன் இணைந்து அறிவியலை விளக்குதல் ஒன்று. முற்றிலும் புதிய சூழலை உண்மையான சித்திரமாக சித்தரித்துக்காட்டுதல் இரண்டு
மேலும் முயலலாம்
வாழ்த்துக்கள்
ஜெ