Wednesday, December 26, 2012

நிசப்தத்தில் பிறந்த இசை


sokout1
“நேற்று நடந்ததைப் பேசாதே
நாளையை எண்ணி வருந்தாதே
கடந்ததையும் வரப்போவதையும்
நம்பிக் காலத்தை வீணாக்காதே
இந்தப் பொழுதை இறுகப் பிடி”

என்னும் உமர் கய்யாமின் கவிதை வரிகளைப் போல் வாழ்பவன் சிறுவன் குர்ஷித். பிறவியிலேயே பார்வைத் திறன் கிடையாது. ஆனால், மலர்களில் தேன் சேகரிக்கும் தும்பியையும், மலத்தில் அமரும் வண்டையும் அவற்றின் சிறகடிப்பின் ரீங்காரத்தை வைத்தே கண்டுபிடிக்கும் அளவுக்கு செவிக் கூர்மை உண்டு.
மழைத் துளி மண்ணைத் தீண்டும் முன் வானிலேயே வாய்திறந்து அதைப் பருகித் தாகம் தணிந்து இசைபாடும் சாதகப் பறவை போல, எங்கும் எப்போதும் இசைக்காக மனம் திறந்து காத்திருந்து அதைச் செவிகளால் அள்ளிவிடும் குர்ஷித்தின் அகத்திற்குள் விதையாக வந்து விழும் ஒரு ஒலியும், அது மெல்ல வளர்ந்து மாபெரும் இசையாகப் பரிணமித்து அவனையும் மீறி இந்த உலகத்தை நிறைக்கும் தருணத்தையும் காட்சிப்படுத்தி இருக்கும் ஈரானித் திரைப்படம் – The Silence (ஃபாரசீக மொழியில் سکوت )‎
***
பார்வை உள்ளவர்களின் கவனத்தைக் கண்கள் சிதறடிப்பது போல, நுண்ணிய செவிப்புலன் கொண்ட குர்ஷித்தின் கவனத்தை அவனது காதுகள் கலைக்கின்றன. அவன் வீட்டைவிட்டு இறங்கினால் காதுகளைப் பஞ்சை வைத்து அடைத்து விரல்களால் அழுத்திக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால், அன்று மலர்ந்த மலர்களில் ஊறியிருக்கும் புதுத்தேனும், மகரந்தமும் தேனீயைத் தன் திசை நோக்கிக் கவர்ந்து இழுப்பது போல, தெருவில் எங்காவது கேட்கும் இசை அவனை ஈர்த்து இழுத்துக் கொண்டு போய்விடும். இசை வரும் திசையில் போய் அதன் இனிமையில் மூழ்கி மயங்கியிருப்பான். இதனால் ஒவ்வொரு நாளும் வேலைக்குச் செல்ல தாமதமாகிவிடும்.
vlcsnap-2011-02-23-17h15m20s166
குர்ஷித்துக்கு இசைக்கருவிகள் தயாரிக்கும் ஒரு சிறிய தொழிற்கூடத்தில் விற்பனைக்கு அனுப்பும் முன் இசைக்கருவிகளைச் சுருதி கூட்டிப் பார்த்து சரி செய்யவேண்டிய வேலை. அப்பா இல்லாமல் அம்மாவுடன் இருக்கும் சிறிய வீட்டிற்கும் வாடகை தரமுடியாமல் ஏழ்மையில் கழியும் சிரமமான வாழ்க்கை. வீட்டு உரிமையாளர் மாத இறுதிக்குள் பணம் தரச்சொல்லி கெடு விதித்திருக்கிறார். பணம் தராவிட்டால் வீட்டைக்காலி செய்து சாமான்களைத் தெருவில் வீசிவிடுவார். மாத இறுதிக்கு இன்னும் ஐந்து நாட்கள் தான் உள்ளன. ஆனால் குர்ஷித்தின் மனம், வீட்டுக்காரர் தினமும் அதிகாலையில் வீட்டுக் கதவை ‘ப.ப.ப.பம்ம்…’ என்று தட்டும் சத்தத்தில் உள்ள சந்தத்தில் லயித்துக் கிடக்கிறது.


அம்மா தினமும் முதலாளியிடம் முன்பணம் வாங்கிவரச் சொல்லி ஞாபகப்படுத்துகிறாள். குர்ஷித்துக்கு ஐந்து நாளைக்குப் பின் வீட்டை விட்டு இறக்கி விடப்படும் நிலையை விட அன்று காலையில் கேட்கும் கதவைத் தட்டும் சத்தத்தில் துவங்கி, தெருவில் கேட்கப் போகும் இனிமையான குரல்களும், இசையும் தான் மனதை ஆக்ரமித்து இருக்கிறது. நாளையைப் பற்றிய கவலைகளினால் அன்றைய நாளின் இனிமையைத் தவறவிட மாட்டான்.
குர்ஷித்துக்கு ஒரு தோழி இருக்கிறாள். அவனுடன் வேலை பார்க்கும் நதீரா என்னும் அனாதைச் சிறுமி. வண்ணமயமான அழகான ஆடையை நேர்த்தியாக அணிந்திருப்பாள், பூக்களின் இதழ்களைக் கிள்ளியெடுத்து தன் நகங்களில் நகப்பூச்சாக ஒட்டி அலங்கரித்துக் கொள்வாள், சிவந்த செர்ரிப் பழங்களைக் காம்புடன் எடுத்துக் காதுகளில் தொங்கவிட்டு லோலாக்கு போல ஆட்டிப் பார்த்துக் கொள்வாள், தண்ணீர் எடுக்கக் குளத்துக்குப் போனால் தன் ஆடையினுள் மறைத்து வைத்திருக்கும் சிறிய கண்ணாடியை வெளியில் எடுத்து யாரும் கவனிக்காமல் தன் அலங்காரங்களையும், முக அழகையும் தானே ரசித்துப் பார்ப்பாள். ஒளியால் துலக்கம் பெறும் காட்சிகளின் அழகில், மலர்களின் வண்ணங்களில், பழங்களின் சுவையில் மனம் கரைபவள். குர்ஷித் ஒலியின் காதலன் என்றால், நதீரா ஒளியின் காதலி.

அவன் இசைக்கருவிகளை ஸ்ருதி சேர்த்து இசைக்கும் போது அவள் தன்னை மறந்து ஒயிலாக நடனமாடுவாள். அவள் மென் கரங்கள் தென்றல் ஏரி மீது வருடி எழுப்பும் மென் அலைகள் போல நெளிந்தாடும். தலையசைவில் காதில் தொங்கும் செர்ரிப் பழங்கள் லயமுடன் அசைந்தாடும். அவளின் நடனம்தான் ஒலிபுகாத கண்ணாடித் தடுப்புக்கு அந்தப் பக்கம் இருக்கும் முதலாளிக்கு ஸ்ருதி சரியாக சேர்ந்திருக்கிறது என்பதற்கு அடையாளம். அவள் அசைவு சரியில்லையென்றால் அவர் முகம் எரிச்சலில் சுருங்கும்.
“மலத்தில் அமரும் வண்டுகளுடன் பேசினால், உன் ரீங்காரம் கெட்டுவிடும். அவைகளுடன் பேசாதே’ என்று தும்பிகளிடம் சொல்லும் குர்ஷித், இசையை ரசிக்காத - பணத்திலேயே குறியாக உள்ள கரகரக் குரல் முதலாளியுடன் நேரடியாகப் பேசமாட்டான். நதீரா தன் இனிமையான் குரலில் முதலாளி சொல்வதைச் திரும்பிச் சொல்ல வேண்டும், அவளிடம் தான் அவன் பதில் கூறுவான்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக இசை அவனை அலைக்கழித்து இழுத்துச் சென்று விடுகிறது. அப்படி ஒரு நாள் ஒரு மாணவனின் இசையைத் தொடர்ந்து சென்று இசைப்பள்ளி ஒன்றை அடைகிறான். இசை ஆசிரியர், குர்ஷித் வேலை பார்க்கும் இடத்தில் வாங்கிய இசைக்கருவிகள் நன்றாக இல்லை, எதிலும் சரியான ஸ்ருதியே இல்லை என்று குறை சொல்கிறார். ஒரு மாணவனின் இசைக்கருவியை குர்ஷித்தின் கையில் கொடுத்து முதலாளியிடம் கொண்டு போய் திரும்பக்கொடுக்கச் சொல்கிறார். குர்ஷித் ஆசிரியரின் கைகளைத் தொட்டுப் பார்க்கிறான், அவர் கை ஏறி இறங்கி அசைவதற்கேற்ப மாணவர்களிடமிருந்து இசை அலையலையாகப் பொங்கி வருவதை உணர்கிறான். மௌனமாக இசைக் கருவியைச் சுமந்தபடி திரும்புகிறான்.
இங்கே ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒசைகளின் கலவையிலிருந்து இசைத் துளிகளை மட்டும் துல்லியமாகத் தனியாகப் பிரித்து அனுபவிக்கும் அன்னப்பறவை குர்ஷித். ஸ்ருதி, லயம் சார்ந்த நுண்ணுணர்வும், கூர்மையான ரசனையும் உடைய அவன் ஸ்ருதி சேர்த்த இசைக்கருவிகள் அபஸ்வரமாக ஒலிக்கின்றன என்கிறார் ஒரு இசை ஆசிரியர். அப்படியானால் குர்ஷித்தின் மனதில் நிரம்பித் தளும்புவதாக நாம் நினைக்கும் இசை என்பது குழந்தை கிறுக்கிய வெற்றுச் சுழிப்புகள் மட்டும் தானா? அதற்கு ஒரு நேர்த்தியும், பொருளும் இல்லையா?
தொடர்ந்து வரும் காட்சி இந்தக் கேள்விகளுக்கு பதிலாக இருக்கிறது. இது படத்தின் பொருள் பொதிந்த கவித்துவமான காட்சிகளில் ஒன்று. இசைக்கருவியை எடுத்துக்கொண்டு அவன் நடந்து போகயில் தூரலுடன் ஆரம்பிக்கிறது மழை. இசைக்கருவி மழையில் நனைந்துவிடாமல் காக்க குர்ஷித் ஓடும் போது கால் தடுமாறி குப்புற விழுகின்றான். அவன் கையில் இருந்து தவறிய இசைக்கருவி தள்ளித் தரையில் மல்லாந்து கிடக்கிறது. மழை வலுக்கிறது. மழைத்துளிகள் இசைக்கருவியின் தந்திகளின் மேல் விசையுடன் விழுகிறது. தந்திகள் அதிர்ந்து மீட்டப்பட, இசைக்கருவி சிலிர்த்துக்கொண்டு ஒலிகளை எழுப்புகிறது. இயற்கை தன் நூற்றுக்கணக்கான கரங்களால் மீட்டும் – மனித மனம் கற்பனையே செய்திட முடியாத முற்றிலும் புதுமையான இசை அங்கே நிகழ்கிறது. குர்ஷித் சேர்த்திருந்த ஸ்ருதி இயற்கையின் பேரிசைக்கு பொருத்தமாக இருக்கிறது. குர்ஷித் அந்த இசையின் திசையை நோக்கி மெல்லத் தரையில் ஊர்ந்து, கைகளால் தடவிச் சென்று இசைக்கருவியை அடைகிறான். காட்சியின் முடிவில் தந்திக்கருவியை இசைத்த மழைத்துளிகள் சென்று கலந்த ஏரியில், இசைக்கருவி மிதக்க, கழுத்தளவு மூழ்கி குர்ஷித் இருக்கிறான். மழை ஓய்ந்த ஏரி சூரியனின் வெள்ளி ஒளி பட்டு தகதகக்கிறது. இதுவே அவனும், இசையும் அதைத் தந்த இயற்கையும் ஒன்றாகக் கலக்கும் இடம். குர்ஷித் மனிதர்களின் ஸ்ருதிக்கு அப்பாலுள்ள தன் மனதின் இசையை இயற்கையில் கண்டுகொள்ளும் மிக முக்கியமான தருணம்.
ஒன்று, இரண்டு, மூன்று என வாடகைக் கெடு நாள் நெருங்குகிறது. வீட்டுக்காரன் தினமும் காலையில் தவறாமல் “ப.ப.ப.பம்ம்…” என்று கதவை தட்டும் சத்தம், பணம் வாங்கிவரச் சொல்லி அம்மாவின் ஞாபகப்படுத்தல்கள் என்று நாட்கள் ஓடுகின்றன. குர்ஷித் தரையிலிருந்து பறந்து எழும் புறாக்கூட்டத்தின் சிறகடிப்பின் லயத்திலும், ‘ப.ப.ப.பம்ம்..’ என்ற கதவைத் தட்டும் ஓசையின் சந்தத்திலுமே ஆழ்ந்திருக்கிறான். வழியில் கேட்ட நாடோடியின் இசையில் மயங்கி அவனைத் தொடர்ந்து போய் நான்காம் நாளும் வேலைக்கு தாமதமாகப் போகிறான். முதலாளி வேலையில் இருந்து போகச் சொல்லிவிடுகிறார்.
அவனைச் சமாதானப்படுத்தும் நதீரா, குளத்துக்கு நீர் எடுத்துவர கூட்டிக்கொண்டு போகிறாள். அவளுடைய சிறிய கண்ணாடியை எடுத்து வழக்கமான தன் அலங்காரங்களை ரசித்துப் பார்க்கும் போது குர்ஷித்துக்கு கண்ணாடியைப் பற்றிச் சொல்லி, அதில் அவனை வரைந்து காட்டுகிறாள். அப்போது ஒரு தேனீயின் ரீங்காரம் சட்டென்று நின்றுவிட கவனம் சிதறிய குர்ஷித் கண்ணாடியைத் தவற விடுகிறான்.
இதுவும் படத்தில் குறியீடுத் தன்மை வாய்ந்த இன்னொரு முக்கியமான காட்சி. இரண்டாக உடைந்த கண்ணாடியில் குர்ஷித் உருவம் தெரியும் பாதியை நதீராவும், நதீராவின் உருவம் தெரியும் பாதிக் கண்ணாடியை குர்ஷித்தும் எடுத்துக்கொள்வதாக இயக்குனர் காட்சியமைத்திருக்கிறார்.
image3
மனிதர்களில் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களின் அனுபவங்கள் வழியாக அறிதல் நிகழ்கிறது. மெய் வழியாக தொடுதல் உணர்வையும், வாய் மூலம் ருசியையும், மூக்கின் நுகர்தல் வழி வாசனையையும், கண்களால் ஒளியையும், செவியால் ஒலியையும் உணர்கிறோம். இவற்றில் முறையே கண் மற்றும் செவியால் உணரப்படுவதாகிய ஒளியும், ஒலியும் தான் மனிதனால் மிக ஆழமாகவும், விரிவாகவும் வளர்த்தெடுக்கப்பட்டு மாபெரும் கலைகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன. துயரமான முரணாக இந்த இரண்டு புலன்களை மட்டும்தான் மனித இனத்தில் பிறவியிலேயே இழக்கும் சாத்தியத்தை இயற்கை விதித்துள்ளது. பிற மூன்று புலன்களிலும் பிறவிக் குறைபாடு விதிக்கப்படவில்லை. (நுகர்வு, ருசி ஆகிய உணர்வுகளும் கலையாக மேம்படுத்தப்படாலும் ஒளி, ஒலியின் கலைவடிவங்கள் போன்று மிகவிரிவானவை இல்லை). குர்ஷித், நதீரா தங்களது கண்ணாடி பிம்பங்களை பரிமாறிக் கொள்வதை மனிதரின் இந்த இயற்கைக் குறைபாட்டுடன் புரிந்துகொள்ளும் போது அற்புதமான திறப்பு நிகழ்கிறது. ஒலியும், ஒளியும் ஒன்றை ஒன்று முழுமை செய்து கொள்கிறது. ஆனால் பக்கத்தில் இந்தக் குறைகளற்ற இயற்கையில், தேனீயின் ரீங்காரத்தோடும், பறவையின் இசையோடும் கலந்து அலைகளற்ற அமைதியான குளம் சுற்றியுள்ள அழகை அப்படியே பிரதிபலித்தபடி முழுமையாக இருக்கிறது.
கடைசிநாள் முதலாளி கடையைப் பூட்டிவிட்டு வேலைக்கு வேறு ஆள் பார்க்கச் சென்று விடுகிறான். மறுநாள் காலை, ஏரிக்கரையின் ஒரு கரையில் நாடோடிப் பாடகர்கள், குர்ஷித், நதீரா இருந்து கொண்டு மறுகரையிலிருக்கும் குர்ஷித்தின் வீட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். படகில் ஒரு ஆள் குர்ஷித்தின் வீட்டை நோக்கிச் செல்கிறான். நாடோடிகள் தங்கள் இசையால் வீட்டுக்காரனை மகிழ்வித்து சமாதானப்படுத்தலாம் என்று நினைத்து இசைக்கிறார்கள். அவனுக்கோ இசை பிடிக்காது, பணம் மட்டும் தான் பிடிக்கும். அங்கே நடப்பதை எல்லாம் நதீரா குர்ஷித்துக்கு விவரிக்கிறாள். வீட்டுக்காரன் குர்ஷித்தின் அம்மாவிடம் கோபமாகப் பேசுகிறான். இக்கரையில் நாடோடிகளின் நாய் ஒரு வெள்ளைக் குதிரையைப் பார்த்துக் குரைக்கிறது. அங்கே வீட்டுக்காரன் சாமான்களைத் தூக்கி வெளியில் வீசுகிறான். குர்ஷித் நாடோடியிடம் குதிரையின் குளம்பொலியின் சந்தத்தில் அமைந்த இசையை மீட்டும்படி சொல்கிறான். அப்படியே இசைக்கிறான். குர்ஷித் குதிரை போல துள்ளிக் குதித்துப் பாய்ந்து ஓடுகிறான். குர்ஷித்தின் அம்மா ஒரு படகில் இவர்களை நோக்கி, சூரிய ஒளியை கண்கூசும் அளவுக்கு மேலும் பிரகாசமாக பிரதிபலிக்கும் ஆளுயரக் கண்ணாடியுடன் வருகிறாள்.
குதிரை போல ஓடியபடி கடைத்தெருவில் பாத்திரங்கள் செய்யும் ஒரு பெரிய கொல்லர் பட்டறையை வந்துசேர்கிறான். குழப்படியான உலோகச் சத்தங்கள் எழும்பும் அந்தப் பெரும் பட்டறைக்குள் நுழைகிறான். இரண்டு பிரிவாக பெரிய - சிறிய பாத்திரங்களைச் சுத்தியால் தட்டி உருவாக்கும் கொல்லர்களைத், தான் சொல்லும் சந்தத்தில் தட்டச் சொல்கிறான். சிறிய பாத்திரங்கள் ‘ப.ப.ப.’ என மூன்று முறை தட்ட, பெரிய பாத்திரம் ‘பம்ம்..’ என்று ஒரு முறை தட்டவேண்டும். இசை ஆசிரியன் செய்தது போல இரு பிரிவினைரையும் நோக்கி கைகளை நீட்டி அசைக்கிறான், சத்தம் ஒருசேர எழுகிறது -“ப.ப.ப.”, “பம்ம்..”, “ப.ப.ப.-பம்ம்..” “ப.ப.ப.பம்ம்..” ….. கைகளை அசைத்துக் கொண்டே வந்து ஓரிடத்தில் நிற்கும் குர்ஷித் மீது மேலிருந்து ஒரு ஒளிக் கற்றை பளிச்சென விழுகிறது.
தன் வீட்டிலேயே மிகப்பெரிய கண்ணாடி இருப்பதை அறிந்திராத குர்ஷித், தன்னுள்ளேயே இருக்கும் இசைப் பிரவாகத்தை அவனறியாமலேயே கட்டவிழ்த்து வெளியே விடுகிறான். தொடர்ந்து பீத்தோவனின் ஐந்தாவது சிம்ஃபனி துள்ளிப் பாய்ந்து கொண்டு பெருகி வந்து செவிகளை நிறைப்பதுடன் படம் நிறைவடைகிறது.

***
பிறவியிலேயே செவிப்புலன் இல்லாதவர்களுக்கு நிசப்தம் என்ற ஒரு நிலையே தெரியாது, ஏனென்றால் அவர்கள் சப்தம் என்கிற ஒன்றையே அறிந்திருக்கமாட்டார்கள். கேட்கும் திறனைப் பாதியில் இழந்தவர்களுக்கே ஒலிகள் ஓய்ந்த நிசப்தம் அனுபவமாகிறது.
மண்ணில் புரட்டியெடுக்கப்படும் காந்தத் துண்டு மற்ற அனைத்தையும் உதறி இரும்புத் தூசியை மட்டும் உடலெங்கும் அப்பியெடுத்துக் கொண்டு வருவது போல, இரைச்சலான ஓசைகள் மிகுந்த புற உலகில் இருந்து இனிய இசைக்கான தூய ஒலிக்குறிப்புக்களை மட்டும் தனியாகப் பிரித்து எடுக்கும் நுண்மையான செவித் திறன் கொண்ட குர்ஷித்தின் இசை எப்படி நிசப்தத்தில் இருந்து பிறந்த இசையாக இருக்க முடியும்?
குர்ஷித்தின் மனதுள் ஒலித்துளியாக விழுந்து பின்னர் பெருகிப் பெருகி மாபெரும் இசைப் பிரவாகமாக பொங்கிப் பரவும் ‘ப.ப.ப.பம்ம்…’ என்னும் இந்த ஒலிக்குறிப்பு தான் படத்தின் ஆன்மா. படம் முழுவதும் வெவ்வேறு வகையிலாக வந்து கொண்டே இருக்கும் இந்த இசைக் குறிப்பு ஐரோப்பிய செவ்வியல் இசைமேதை பீத்தோவனின் உலகப்புகழ் பெற்ற ஐந்தாவது சிம்ஃபனியின் தொடக்கம். அதைவிட முக்கியமான விஷயம் இந்த சிம்ஃபனியை பீத்தோவன் தனது காதுகேட்கும் திறனை கொஞ்சம் கொஞ்சமாக இழந்த பிறகு இசையமைத்தது என்ற தகவலை அறிந்தால் “நிசப்தத்தில் பிறந்த இசை” என்பது இன்னும் பொருத்தமானதாக தெரியும்.
மூன்று குறுகிய ஒலி (‘ப.ப.ப’), அதைத் தொடர்ந்து வரும் ஒரு நீண்ட ஒலி (‘பம்ம்..’) என்னும் இசைக்குறிப்பு தொடர்ந்து இரண்டு முறை இசைக்கப்படுவதுடன் பீத்தோவனின் ஐந்தாம் சிம்ஃபனி ஆரம்பமாகும். நான்கு கட்டங்களாக ஒருமணி நேரம் நீளும் இந்த சிம்ஃபனியில் ஆங்காங்கே தொடர்ந்து மேற்சொன்ன இசைக்குறிப்பு வந்து கொண்டே இருக்கும். இந்தப் புதுமையான (3+1) தொடக்க இசைக்குறிப்புடன் துவங்கும் பாணிக்காகவே இந்த சிம்ஃபனி மேற்கத்திய செவ்வியல் இசை வல்லுனர்களால் மகத்தான படைப்பாகப் போற்றப்படுகிறது.
இந்தப் புகழ்பெற்ற (3+1) ‘ப.ப.ப.பம்ம்..’ இசைக்குறிப்பு எழுதுவதற்கு பீத்தோவனுக்கு தூண்டுகோலாக இருந்ததாக இரண்டு விதமான கருத்துக்கள் உண்டு. ஒன்று பீத்தோவனுடைய மனதில் ‘விதி வாசல் கதவைத் தட்டும் சத்தம்’ என்ற படிமத்தில் இருந்து இந்தக் இசைக்குறிப்பு கிடைத்ததாக அவரது உதவியாளர் தனது புத்தகத்தில் கூறுகிறார். இன்னொன்று பீத்தோவனின் மாணவர் கூற்றுப்படி அது ஒருவகை மஞ்சள் குருவியின் சத்த்த்திலிருந்து தூண்டப்பட்டு உருவானது. இந்தப் படத்தில் ‘விதி வாசல் கதவைத் தட்டுதல்’ என்னும் படிம்மே கையாளப்பட்டுள்ளது. அது வறுமையில் வாடும் ஒரு சிறுவனின் வீட்டு வாசலை விதி தட்டி ’ப.ப.ப.பம்ம்…’ என்னும் ஒலி மூலம் அவனுள் இருக்கும் இசையுணர்வைத் தூண்டி, நாளை வரப்போகும் துன்பத்தை நினைக்காமல் இன்று கேட்கும் இசையில் லயித்து, கடைசியில் ஒரு இசைக்கலைஞனாக மாற்றுவதாக படத்தை விவரிக்க மிகப் பொருத்தமானதாகவே இருக்கிறது.
படத்தின் ஆன்மாவான நிசப்தத்தில் பிறந்த இசை பீத்தோவனுடையது என்றால் அதைத் தன் அகத்தின் இசையாகக் கண்டுகொண்ட அந்த சிறுவன் யார்? அது இந்தப் படத்தின் இயக்குனர் மோஹ்சென் மக்மல்பாஃப் தான். ஆம், அவரது இளமைக் கால அனுபவமே இந்தப் படம் உருவானதற்குக் காரணம். மிகுந்த இஸ்லாமிய மத நம்பிக்கையாளரான அவரது பாட்டி சிறுவனான மோஹ்செனை, “வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது காதுகளை இறுக்கமாகப் பொத்திக்கொள்ள வேண்டும். இசையைக் கேட்டால் நரகத்திற்குப் போவாய்,” என்று சொல்வாராம். இசைக்கு நிசப்தமாக்கப்பட்டிருந்த மோஹ்சென்னின் காதுகள் முதன் முதலாகக் கேட்ட மேலை இசை பீத்தோவனின் ஐந்தாவது சிம்ஃபனி தான். ஒரு நேர்காணலில் “முதன் முறை கேட்ட கணத்திலிருந்து அந்த தொடக்க இசையின் ‘ப.ப.ப.பம்ம்..’ என்னும் நான்கு இசைக்குறிப்புகள் என் தலைக்குள் சுற்றிச் சுற்றி வந்தன” என்கிறார். ஸ்வாதி நட்சத்திரத்தன்று பொழியும் மழையில் ஒரே ஒரு துளியை மட்டும் ஒரு சிப்பி மெல்ல வாய் திறந்து வாங்கிக் கொள்ளும். மழைத்துளியை தன்னுள் அடக்கிக் கொண்டு கடலாழத்தில் சென்று மௌனத்தில் ஆழ்ந்து காத்திருக்கும். கடல்நீரின் அழுத்தத்தால் சிப்பிக்குள் இருக்கும் அந்த நீர்த்துளி மெதுவாக இறுகி ஒருநாள் மிகச்சிறந்த மாசற்ற வெண் முத்தாக மாறும். அதைப்போல, 1808ஆம் வருடம் பீத்தோவன் என்னும் மாபெரும் கலைஞன் பெருமழையாய் பொழிந்துவிட்டுச் சென்ற இசையின் ஒரு துளி 190 வருடங்கள் காத்திருந்து மோஹ்சென் என்னும் இன்னொரு சிறந்த கலைஞனின் யதேர்ச்சையாகத் திறந்த காதுகள் வழியாக மனதில் சென்று தங்கி, இசையை வெறுக்கும் சமயச்சூழல், அரசியல், சமூகம், குடும்பம் போன்றவை கொடுத்த அழுத்தத்தால் இறுகி ஒரு சிறந்த கலைப்படைப்பாக உருப்பெற்று வந்துள்ளது.
படத்தில் இனிய (ஒலி) இசைக்கு உள்ள அளவு (ஒளி) அழகான காட்சிகளுக்கும் முக்கியத்துவம் உள்ளது. பெண்களின் முகத்தை முக்காடிட்டு முழுவதும் மூடிமறைத்துவிட்டால் இயற்கை அழகு எவ்வாறு முழுமை பெறும்? எனவே பெண்களுக்கு முகத்திரை கட்டாயமாக்கப்பாடாத தஜிகிஸ்தானில் முழுப்படத்தையும் எடுத்தார் மோஹ்சென். தஜிகிஸ்தான் ஃபார்ஸி மொழி பேசும் நாடு என்பதும் கூடுதல் அனுகூலம். 1997ல் வெளியான இந்தப் படம் ஈரானில் அடுத்த மூன்று வருடங்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. வழக்கமாக பின்னணி இசையை மிகக் குறைவாகவே பயன்படுத்தும் மோஹ்சென் மக்மல்பாஃப் இந்தப் படத்தில் சூஃபி இசை, நாடோடி இசை, மேற்கத்திய இசை என்று பின்னணி இசைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ளார். படத்தின் ஆன்மாவே இசை தான். படத்திலேயே சூசகமாக, மனிதர்களை இரண்டு வகை வண்டுகளாக உருவகித்து, இசை ரசனை மிக்கவர்களை மலர்களில் தேன் அருந்தும் தும்பியுடனும், இசையை விரும்பாத- பணத்தை மட்டும் தேடும் ரசனையற்ற மனிதர்களை மலத்தில் அமரும் வண்டுகளுடன் ஒப்பிடகிறார்.
இசை என்ன செய்துவிட முடியும்? என்னும் கேள்விக்கு பீத்தோவனின் இசையும், மோஹ்சென் மக்மல்பாஃபின் அனுபவமும் - அதன் விளைவான ‘நிசப்தத்தில் பிறந்த இசை’ (The Silence) படமும் சாட்சி.
- பிரகாஷ் சங்கரன்

(நன்றி: சொல்வனம்; இதழ் 79ல் வெளியானது)

Tuesday, December 4, 2012

எறும்புகளின் கதறல் – இந்திய ஞானத்தைப் பேசும் ஈரானியப் படம்


எறும்புகளின் கதறல் – இந்திய ஞானத்தைப் பேசும் ஈரானியப் படம்
“இந்தியாவில் ஒரு பரிபூரண மனிதர் இருக்கிறார். சென்று அவரைப் பார்த்துவிட்டு வா” என்ற தனது ஆன்மீக குருவின் கட்டளையை நிறைவேற்ற ஒரு ஈரானியப் பெண், நாத்திகனான தனது கணவனுடன் இந்தியாவிற்கு வருகிறாள். இந்திய நிலத்தில் அந்தப் பரிபூரண மனிதரைத் தேடிச்செல்லும் வழியில் நடக்கும் சம்பவங்களும், சந்திக்கும் பிற மனிதர்களும், இவற்றால் உண்டாகும் அனுபவங்களும் இறுதியில் அந்தக் கணவன் மனைவிக்கு எந்த ஞானத்தை அளிக்கின்றன? உண்மையில் அப்படி ஒரு பரிபூரணம் அடைந்த மனிதர் இந்தியாவில் இருந்தாரா? இருந்தால் அவர் ஈரானியத் தம்பதிக்கு அளித்த செய்தி என்ன? இந்தக் கேள்விகளுக்குச் சொல்லப்பட்ட பதில்தான், அதிரடியான அற்புதங்களால் அன்னியப்படுத்தாமல் மனம் ஒன்றிப் பார்க்கும்படியான காட்சிகளை வைத்து நம்பகத்தன்மையுடன் படத்தை நகர்த்தும் யதார்த்தமான திரைக்கதை, நேரடியான, எளிமையான வசனங்கள் ஆகியவற்றின் மூலம் “எறும்புகளின் கதறல்” (Scream of the Ants) எனும் திரைப்படமாகியிருக்கிறது.. பல காட்சிகள் குறிப்பாக இந்திய நகரங்கள், சாலைகள் ஆகியவற்றைக் காட்டும் பகுதிகள் ஒரு சுற்றுலாப் பயணியின் டிஜிடல் வீடியோ பதிவுக் கருவியில் எடுக்கப்பட்டது போல எந்தத் திணிப்பும், செயற்கைத் தனமும் இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கின்றன.. காட்சிகள் வலிந்து செய்யப்படும் பிரச்சாரம் போல் இல்லாமல் தெரிவதற்கு இதுவும் ஒரு காரணம்.
*
f2
படம் ஒரு இனிய முரணுடன் தொடங்குகிறது. கம்யூனிஸ்ட்டும் ஆகவே நாத்திகனும், குடும்பம் எதிர்காலம் எதிலும் நம்பிக்கையற்றவனுமான கணவனுடன், மேலான உண்மையையும், வாழ்வின் பொருளையும், முழுமையையும் அறியும் ஆன்மீகத் தேடல் கொண்ட ஒரு பெண் தன் தேனிலவுப் பயணமாக இந்தியா வருகிறாள் -அதுவும் தன்னைச் சந்திப்பவர்களின் வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்தும் ஞானியான ஒரு பரிபூரண மனிதரைத் தேடி. இருவரும் நேரெதிரான மனநிலைகளுடன் காதலும், சிறுசிறு ஊடல்களுமாக விவாதித்தபடியே பயணிக்கின்றனர்.


முதல் ரயில் பயணத்திலேயே சந்திக்க நேரும் ஒரு யதார்த்தவாதியான இந்தியப் பத்திரிக்கையாளன், ‘அற்புதங்கள், அற்புத மனிதர்கள் என்று தவறாக இந்தியாவைத் தேடி வரும் வெளிநாட்டினர் எல்லாம் பைத்தியம்’ என்கிறான். அந்த பயணத்திலேயே ஈரானிய தம்பதியினர் ரயிலை கண்களாலேயே நிறுத்தி விடும் ஒரு சாமியாரின் அற்புதச் செயலைப் பார்க்க நேர்கிறது. பின்னர் பத்திரிக்கையாளனிடம் சாமியார் தான் அற்புத மனிதனாக்கப்பட்ட கதையைச் சொல்கிறார். வாழ்வில் துயரங்களால் அவதிப்பட்ட அவர் ‘இனி வாழ்ந்து என்ன பயன்?’ என ஒருநாள் தற்கொலை செய்துகொள்வதற்காக இந்த தண்டவாளத்தில் அமர்ந்திருக்கிறார். நீண்ட நேரம் கழித்து வந்த ஒரு ரயிலின் ஓட்டுனர் தண்டவாளத்தில் கிடக்கும் ஆளைக் கண்டு வண்டியை நிறுத்தப் போய் பயணிகள் சாமியார் தன் பார்வையின் சக்தியினால் ஓடும் ரயிலையே நிறுத்திவிட்டதாக பூரிக்கின்றனர். அன்றுமுதல் கூட இருக்கும் பண்டாரங்களும், பிச்சைக்காரர்களும் அவரைக் கொண்டு வந்து ரயில் தண்டவாளாத்தில் உட்காரவைத்து ரயிலை ’நிப்பாட்டி’பயணிகளிடம் காணிக்கையும், உணவும் பெற்றுப் பிழைக்கிறார்கள். சாமியார் பாவமாக, “எனக்கு என் வீட்டிற்குப் போக வேண்டும், பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது. இந்தப் பண்டாரங்கள் என்னை விடமாட்டேனென்கிறார்கள். என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கெஞ்சுகிறார். அவரை பண்டாரக் கும்பல் அலேக்காகத் தூக்கிச் செல்கிறது. முதல் அனுபவமே ஏமாற்றமாக, ஈரானிய தம்பதியின் பயணம் தொடர்கிறது.
அடுத்து இந்தியாவின் ஒரு பெருநகரச் சாலையில் சைக்கிள் ரிக்ஷாவில் உட்கார்ந்தபடி சாலையோரக்காட்சிகளைப் பார்த்தபடியே சவாரி செய்கிறார்கள். பெண்ணின் பார்வையில் பூக்குவியல், சிட்டுக்குருவிகள், ஏழ்மையில் இருந்தாலும் சந்தோஷமாகச் சிரித்தபடி ஓடிவரும் அழகான குழந்தைகள், அழகான இந்தியப்பெண்கள், விதவிதமான மனிதர்கள் என காட்சிகள் தெரிகிறது, “எவ்வளவு அழகு?” என்று வியக்கிறாள்.
தொடர்ந்து அவன் பார்வையின் வழியாக சாலைக் காட்சிகள் விரிகின்றன. தெருவோரங்களில் படுத்திருக்கும் வீடற்றவர்கள், அவர்களுக்குப் பக்கத்திலேயே தூங்கும் நாய்கள், குப்பைமலைகள், போக்குவரத்து நெரிசல் பிச்சைக்காரர்கள், பிச்சை கேட்டு துரத்தியபடியே ஓடிவரும் சிறுமிகள், நீண்ட வரிசைகளில் தர்ம உணவுக்காகக் காத்திருக்கும் ஏழைகள் என்ற அழுக்கும் அசிங்கமுமான சித்திரம் தான் தெரிகிறது.
எங்கும் எப்பொழுதும் ஏதாவது ஒரு புரட்சிக்கான ஆவலிலேயே இருக்கும் அவனது கம்யூனிச மனம் ’தொன்னூறு’ சதவிகிதம் ஏழைகள் உள்ள நாட்டில் எப்படி புரட்சி வராமல் இருக்கிறது? என்று அடித்துக்கொள்கிறது. காந்தியின் அஹிம்சையால் பணக்காரர்கள் தான் பலனடைந்தார்கள், அஹிம்சை தான் வன்முறையை உருவாக்கும் என்று சமாதானம் செய்துகொள்கிறான். இங்கே தன் மனைவிக்கு என்ன அழகாகத் தெரிகிறது என்று புரியாமல் புலம்புகின்றான்.
மனைவியை, “உன் கடவுள் இந்த ஏழ்மைக்கும் துயரத்திற்கும் என்ன பதில் வைத்திருக்கிறார்?” என்று சீண்டுகிறான், அவள் வெடுக்கென, ”கண்டிப்பாக உன் புனித சோஷலிசம் இல்லை” என்று பதிலளிக்கிறாள். தொடர்ந்து இருவருக்குள்ளும் ஏழ்மை, அழகு, கடவுள் என்று பலவிஷயங்களிலும் வாதம் வளர்கிறது. காதல் என்னும் மைய அச்சில் இணைந்திருக்கும் கத்திரிக்கோல் போல இருவரும் ஒருபக்கம் பிரிந்து விவாதித்துக்கொண்டு மறுபுறம் இணைந்து முன்செல்கிறார்கள்.
தந்தை இறந்த அன்று இரவு மனைவியுடன் மகிழ்ச்சியாக இருந்த காந்தி பிறகு அதனால் மனம் வருந்தி குழந்தைப் பேறுக்காக அல்லாமல் இனி மனைவியுடன் உறவுகொள்ள மாட்டேன் ஏன்று முடிவெடுத்ததைப் பற்றி அன்றிரவு கணவனிடம் பேசுகிறாள். தாயாக வேண்டும் என்னும் தன் விருப்பத்தைச் சொல்லி அதற்காகவே அவர்கள் சேரவேண்டுமென்கிறாள். கம்யூனிச சித்தாந்தவாதியான கணவனுக்குக் குழந்தைகள் பெற்றுக்கொள்வதிலோ, குடும்பத்தை உருவாக்குவதிலோ விருப்பமும் நம்பிக்கையும் இல்லை. மறுபடியும் குழந்தைகள், குடும்பம் பற்றிய விவாதம் இருவருக்குள்ளும் துவங்குகிறது. எரிச்சலுடன் அறையை விட்டு வெளியேறும் அவன் ஒரு விலைமாதுவைச் சந்திக்கிறான். அவள் வீட்டில் குடித்துவிட்டு கடவுளை விளித்துத் தத்துவார்த்தமான கேள்விகளைக் கேட்டுக்கொண்டு புலம்புகிறான். சாதாரணப் பொழுதுகளில் அலட்சியமும், சந்தேகமுமாக பேசும் அவன் குடித்தபின் தனது இருப்பையும், இந்த உலகத்தையும், இதற்கெல்லாம்  காரணமான ‘கடவுளை’யும், அதை நம்பவிடாமல் தடுக்கும் தன் தர்க்கபுத்தியையும், கடவுள் இருக்கிறார் என்று தீர்க்கமாகத் தெரிந்துவிட்டால் சுலபமாக நம்பிவிடுவேனே என்ற எளிய காரணத்தை உருவாக்கிக் கொண்டு, வெறுமையாய் இருக்கும் தன்னை அள்ளியெடுத்துக் கொள்ளச் சொல்லிப் புலம்பும் காட்சி முக்கியமானது.
19677121
மறுநாள் ஒரு டாக்ஸி ஓட்டுனரிடம் பரிபூரண மனிதர் இருக்கும் இடத்திற்கு போக வேண்டும் என்று சொல்கிறார்கள். ஓட்டுனர் (தமிழ் நடிகர் யூகி சேது இந்தக் கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறார்) “காரில் போனால் ஒருமணி நேரம் தான், அவரை நன்றாகத் தரிசிக்கலாம். நடந்து சென்றால் இரண்டு நாள் ஆகும், ஆனால் அவரை நடந்து சென்று பார்ப்பது தான் சிறந்தது, அப்போது அவரிடமிருந்து வாழ்க்கைக்கு நல்ல தரிசனம் கிடைக்கும்” என்கிறார். வெயில் கொளுத்துகிறது. இவர்கள் காரில் செல்ல முடிவெடுக்கின்றனர். பாதி தூரம் போனதும் காருக்குள் ஒரு ஈ பறக்கிறது, ஓட்டுனர் வண்டியை திருப்பி ஈயை ஏற்றிய இடத்தில் கொண்டுபோய் இறக்கி விடவேண்டும் என்கிறார். வந்தவழியிலேயே திரும்பவும் போய் நடுவழியில் இறங்கி விடுகின்றனர்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை புழுதி பறக்கும் பொட்டல் காடு. இரவும் பகலுமாக கால்நடையாக பரிபூரண மனிதரைத் தேடி நடக்கின்றனர். “ஒவ்வொரு அடி கால்வைக்கும் போதும் ஒரு எறும்பு கொல்லப்படுகிறது, பரிபூரண மனிதரைப் பார்க்கவேண்டுமென்றால் எறும்புகளைக் கொல்பவர் ஆகித்தான் தீரவேண்டும், நடப்பதை நிறுத்தினால் குற்றவாளி ஆவாய்” என்று கிண்டலடிக்கிறான் கணவன். மனைவி கடவுளிடம் “எறும்புகளை என் பாதையில் இருந்து மாற்று தெய்வமே, நான் நடக்க வேண்டும். உனது எறும்புகள் சாவதால் உனக்கு வருத்தம் இல்லையா? அவை என் காலடியில் கதறுவது எனக்குக் கேட்கிறது, உனக்குக் கேட்கவில்லையா?” என வேண்டியபடி நடக்கிறாள்.
ஈரானில் இருந்து வரும் போதே ஒரு மரநாற்காலியைக் எடுத்துக்கொண்டு வருகிறார்கள். பரிபூரண மனிதரைச் சந்தித்தால் அவரை அதில் அமரச் செய்து புனிதமாக்கி ஈரானில் இருக்கும் தனது குருவுக்குப் பரிசளிப்பதாய் வாக்குக் கொடுத்திருக்கிறாள். போகும் இடமெல்லாம் கணவன் அதை முதுகில் சுமந்துகொண்டு வருகிறான், அதில் தான் அமர்வான். அது தான் அவனது சிம்மாசனம்.
f1
வழியில் மாடுகளை மேய்த்துக் கொண்டு வரும் ஒருவரிடம் பரிபூரண மனிதரைப் பார்ப்பதற்கு வழிகேட்கிறார்கள். அவருடைய பெயர் என்ன என்று பேச்சுக் கொடுக்கிறார்கள், ‘மக்கள் என்னை ‘மாட்டுக்காரன்’ என்று சொல்வார்கள் என்கிறார். ‘உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?’ என்று பெண்ணின் கேள்விக்கு மாட்டுக்காரர் பதில், ‘மனிதர்கள் ஒவ்வொருவருமே கடவுள் தான்’. பெண் விடாமல் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று கேட்கிறாள், “இருக்கிறார் என்றால் இருக்கிறார், இல்லை என்றால் இல்லை” என்று சொல்லிவிட்டு மாட்டுக்காரர் ஓரு வீட்டைக் காண்பித்து இது தான் அவருடைய வீடு, கூப்பிடுங்கள், பதில் வராவிட்டாலும் மனம் தளராமல் தொடர்ந்து கூப்பிடுங்கள், வருவார் என்று சொல்லிவிட்டு தன் பாட்டுக்குப் போகிறார்.
ஆண்  பரிபூரண மனிதரை உரக்கக் கூவி அழைக்கிறான்.  பெண் கண்மூடித் தியானிக்கிறாள். கொஞ்ச நேரத்தில் அந்த மாட்டுக்காரர் திரும்பவருகிறார், அவர் தான் பரிபூரண மனிதர் என அறிந்து ஆச்சர்யமடைகிறாள். பரிபூரண மனிதரைப் பற்றின தன் கற்பனைகள் எல்லாம் தவிடுபொடியாக அவர் இவ்வளவு எளிமையாக, எல்லாரையும் போல் சாதாரணமானவராக இருப்பதைக் கண்டு குழம்பிவிடுகிறாள். கணவன் “இந்தாள் ஒரு கிறுக்கன்,” என்கிறான். பெண் பரிபூரண மனிதரிடம் தன் எதிர்காலத்துக்கான நம்பிக்கையையும், பாதையையும் காண்பிக்கும் உபதேசத்தைச் சொல்லுமாறு கேட்கிறாள். பரிபூரண மனிதர் ஒரு வெங்காயத்தை நசுக்கி அதன் ஈரத்தை குச்சியால் தொட்டு ஒரு காகிதத்தில் எழுதுகிறார். கண்ணுக்குத் தெரியாத அந்த எழுத்துக்களை மூன்று நாள் கழித்து புனித நகரத்தில் நெருப்பின் மேல் காட்டினால் அவள் வாழ்க்கைக்கான அர்த்தம் தெரியும் என்கிறார். அவரை வணங்கி விடை பெறுகிறாள்.
திரும்பும் வழியில் மிகவும் வயதான ஒரு பெண்மணியைச் சந்திக்கிறார்கள். இந்தியாவில் பலவருடங்களாக ஆன்மீகத் தேடலில் இருக்கும் ஒரு ஜெர்மானியரும் கூட இருக்கிறார். அந்தப் பாட்டி தான் காசியில் இறந்து இனி மீண்டும் பிறக்காத நிலை அடையவேண்டும் என்கிறாள். ஜெர்மானியர் அவளுக்கு உதவ வாக்களிக்கிறார்.
நால்வரும் காசிக்குச் செல்கிறார்கள். ஜெர்மானியருடனான உரையாடல் தொடர்கிறது, அவர் ஏன் ஐரோப்பிய வாழ்க்கையை நிராகரித்து இந்தியா வந்தார் என்று சொல்கிறார். பிறப்பறுக்கும் காசியையும், புனித கங்கை நதியைப் பற்றியும் விளக்குகிறார் ஜெர்மானியர். “இந்த மக்கள் கங்கையைப் புனித அன்னையாக வணங்குகிறார்கள், அந்த நீரைக் குடிக்கிறார்கள் அதையே அசுத்தப் படுத்துகிறார்கள். பிறப்பும் இறப்பும் இங்கே ஒன்றாகிறது,” என்கிறார்.
கணவனும் ஜெர்மானியரும் பிணம் எரிக்கிற மணிகர்ணிகா படித்துறைக்குச் சென்றுவிட, பெண் கங்கையின் நடுவே படகில் இருந்தபடி காசியின் படித்துறைகளைப் பார்க்கிறாள். மீண்டும் ஒருமுறை காட்சிகள் அவள் பார்வையின் வழியாகக் காட்டப்படுகின்றன. பிணங்கள் எரியும் அணையாத நெருப்பு எங்கும் தெரிகிறது. சற்று முன் பாதி எரிந்த பிணம் மிதந்த கங்கையில், இப்போது ஒரு திறந்த புத்தகம் மிதந்து செல்கிறது. அதையே வெறித்துப் பார்க்கிறாள். அந்தச் சூழலும் காட்சியும் அவளை என்னமோ செய்கிறது. ஒரு படித்துறையில் இறங்கிக் குளிக்கிறாள், பின்னணியில் அன்னை பராசக்தியை அனைத்து தாய் தெய்வங்களின் வடிவமாக வருணிக்கும் பாடல் மெதுவாக ஒலிக்கிறது. படத்தின் கவித்துவமான காட்சிகளில் ஒன்று இது. கைகூப்பித் தொழுது கங்கையில் மூழ்கிக் குளிக்கிறாள். சடைமுடியும், சாம்பல் பூசிய மேனியுமாக சாதுக்களின் கூட்டம் ஒன்று வருகிறது. நிர்வாணமாக கங்கையில் அவளைச் சுற்றி இறங்கிக் குளிக்கிறார்கள். அவள் இருப்பதையே கவனித்ததாகத் தெரியவில்லை. அவளும் நிர்வாணமான ஆண்கள் தன்னைச் சுற்றிலும் இருப்பதை அறியவில்லை. பின்னால் அன்னையின் பாடல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. சாதுக்கள் கரையேறிச் சென்றுவிடுகிறார்கள்.
அதே சமயம் மணிகர்ணிகா கட்டத்தில் ஜெர்மானியர் இரண்டு எரியும் பிணங்களைக் காட்டி, மரணம் முடிவில்லை, மீண்டும் பிறப்பு, மறுபடி இறப்பு, அடுத்து ஒரு பிறப்பு என்று முடிவற்ற துயரம் நிறைந்த அலைகளாக உயிர் சுழல்கிறது. இந்துக்கள் இந்த முடிவிலாத் துயரிலிருந்து விடுபட நினைக்கிறார்கள்” என பிறவிச் சுழலை விளக்குகிறார்.. இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது குறைவான விறகுள்ள ஒரு ஏழையின் பிணத்தின் மேல் ஈரானியன் இத்தனை நாளும் சுமந்தலைந்த நாற்காலி விறகாக வைக்கப்படுகிறது. அவன் கண்முன் நாற்காலி எரிந்து சாம்பலாகிறது. தன் அதிகாரம் கருகிச் சாம்பலாகும்போது தருக்க மனம் ‘ஓ…’வென அலறுகிறது.
அந்தப் படித்துறையில் ஒரு ஆசிரியர் சின்னஞ்சிறு மாணவர்களுக்கு வேதம் கற்பித்துக்கொண்டிருக்கிறார். பாடம் முடிந்ததும். கண்களையும், காதுகளையும் அடைத்துக்கொண்டு சுவாசத்தை மட்டும் இழுத்து விட்டு காற்றை முகரச் சொல்கிறார். ஜெர்மானியரும் அப்படியே செய்கிறார். ஈரானியன் பின்னல் திரும்பிப் பார்க்கிறான், பிணம் எரிந்து கொண்டிருக்கிறது. இது தான் இன்றைய பாடம் என்று சொல்லிவிட்டு ஆசிரியர் போகிறார். மாணவர்கள் சந்தோஷக் கூச்சலுடன் நிர்வாணமாக கங்கையில் குதித்துக் கூட்டமாகக் குளிக்கிறர்கள். ஜெர்மானியரும் கங்கையில் இறங்குகிறார். ஈரானியன் கரையில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறான். ஒரே நேரத்தில் கங்கையின் இரு படித்துறைகளில் இருவேறு விதமான நிர்வாணக் குளியல். அதே கங்கை நதி. அவள் மூழ்கி எழுந்துவிட்டாள். ஈரானியன் இன்னும் சஞ்சலத்துடன் கரையில்.
பூ விற்க வரும் சிறுமிகளிடம் விளக்கை வாங்கி அதில் பரிபூரண மனிதர் கொடுத்த தாளைக் காட்டுகிறள், புரியாத மொழியில் எழுத்துக்கள் மெல்ல துலங்கி வருகின்றன. சிறுமி அவளுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்கிறாள்,
“ஏழு கடல்களைத் தாண்டினேன்
ஏழு மலைமுடிகளில் ஏறி
பள்ளத்தாக்குகளில் இறங்கினேன்
பெருநிலம் எங்கும் நடந்தேன்
நகரங்களின் வழியாக நடந்து
உலகத்தையே சுற்றிக் கடைசியில்
என் வீட்டிற்கே திரும்பினேன்
என் தோட்டத்து செடியொன்றின்
இலைநுனியில் இருந்த பனித்துளிக்குள்
உலகமே இருக்கக் கண்டு வெட்கினேன்”
அந்தக் கிழவி கங்கையின் நடுவில் ஒரு மேடையில் தன்னந்தனியாக கைகூப்பியபடி தன்னை எரிப்பதற்கான விறகுடன் காத்திருக்கிறாள். திரை மெல்ல இருள்கிறது.
*
எறும்புகளின் அலறல் (Scream of the Ants) எனும் இப்படம் அதன் நுட்பமான குறியீடுகளின் வழியாக வாழ்வில் அறியவேண்டிய மெய்ஞானத்தையும் அதை நோக்கிய தேடலுக்கான பயணத்தையும் குறிப்பிடுகிறது. மேலே விவரித்துள்ள எட்டு காட்சிகளும் தான் இந்தப் படத்தில் மெய்தேடலுக்கான பயணத்தின் பாதையிலுள்ள முக்கிய மைல்கல்கள். அவற்றைத் தவறவிடாமல் கவனிக்கும் பார்வையாளனே வழிதவறாமல் பயணிக்கிறான். அவனுக்கே படம் முடிவில் அர்த்தமுள்ளாதாகிறது.
எதிர் எதிரான கருத்து நிலைப்பாடுகள் கொண்ட, ஆனால் காதலுள்ள கணவன் மனைவி என்னும் குறியீட்டு மனிதர்களுக்குள் இருக்கும் ஒரு முனையாக சஞ்சலமும், முடிவில்லாத கேள்விகளும், அவநம்பிக்கையும் கொண்ட வறண்ட தருக்க மனதையும், அதன் எதிர் முனையாக நுண்ணுணர்வும், உண்மையை நோக்கிய தேடலும், அதனில் ஆழமான நம்பிக்கையும் கொண்ட உணர்ச்சி மிகுந்த மனதையும் சித்திரிக்கிறது. ஒவ்வொரு மனித மனமும், தருக்கமும், உணர்ச்சிகரமுமாக இரண்டாகப் பிளந்து தான் இருக்கிறது. இந்த இரு வேறு மனப்பகுதிகளின் பிரதிபலிப்புதான் பயணம் முழுவதும் கணவன் – மனைவி இருவரின் பார்வைகளில் மாறுபடும் காட்சிகளாகவும், விவாதங்களில் எடுக்கும் நிலைப்பாடுகளுமாக காட்டப்படுகிறது. மேம்போக்கான தருக்கம் தன்னால் தொடமுடியாத ஆழங்களில் நம்பிக்கையின் தோள்மேல் சாய்ந்துகொள்கிறது.
முதல் இரயில் பயணத்தில் சந்திக்கும் பத்திரிக்கையாளனின் கிண்டலான பேச்சும், இரயிலைக் கண்ணால் நிறுத்தும் சாமியாரின் கதை தரும் ஏமாற்றமும், மெய்ஞானத் தேடலின் பாதையில் முதலில் தடையாகும் அவநம்பிக்கைகளையும், ஏமாற்றங்களால் உண்டாகும் மனத்தடுமாற்றத்தையும் உணர்த்துகிறது. அவர்கள் காரில் சுலபமாகச் சென்று பரிபூரண மனிதரைச் சந்தித்துவிடலாம் என்று நினைப்பது மெய்த்தேடலில் குறுக்கு வழியை முயல்வது. பின்னர் நடந்தே போக வேண்டி வருவது உண்மையை நோக்கிய தேடலின் பயணத்தை அவரவர்களே சுயமாக, படிப்படியாகச் செய்தாக வேண்டுமென்பதைக் குறிக்கும்.
மெய்ப்பொருளை நோக்கிய தேடலில் சமரசங்கள் இல்லை, உண்மை கறாரானது. அதை நோக்கித் தீவிரமாக எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நமக்குப் பிரியமான சொந்த நம்பிக்கைகளும், கடவுளின் உருவங்களாகப் பற்றியிருக்கும் பிம்பங்களும், எளிய தர்க்கங்களும், மேலோட்டமான நியாயங்களும், தற்காலிக உண்மைகளும் காலாவதியாகின்றன. அவற்றை மிதித்துக் கொன்றுதான் மேலான உண்மையை நோக்கிய அடுத்த அடிக்கு முன்னேற முடியும். காலடியில் நசுங்கும் எறும்புகளின் கதறல் உணர்த்துவது அதைத்தான். எறும்புகளின் கதறலை அந்தப் பெண் கேட்கிறாள், அந்தத் துன்ப நிலையை மாற்றச் சொல்லிக் கடவுளை இறைஞ்சுகிறாள், ஆனால் ஆண் அதைத் தவிர்க்க முடியாதது என்றும், கேலிக்குரிய விஷயமாகவும்தான் எடுத்துக் கொள்கிறான்.
பரிபூரண ஞானம் ஆடம்பரமில்லாமல் தன்னந்தனியாக இருக்கிறது. ஒரே உண்மையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கண்டெடுக்கிறார்கள், வேறு வேறு பெயரிடுகிறார்கள் – மாட்டுக்காரன் என்றும், பரிபூரண மனிதர் என்றும், பைத்தியம் என்றும், ஞானியென்றும் பலவாறாக. ஆனால் பரிபூரண மனிதரின் ஞானம் இதுவே - “ஒவ்வொரு மனிதரும் கடவுள் தான்.”
கங்கையில் குளிக்கும் போது அந்தப் பெண் தான் விரும்பியவாறே அன்னையாகிறாள். நிர்வாண சாதுக்களுக்கும், அவளுக்கும் உடல் என்னும் தடை இல்லை. பின்னணியில் அன்னையைப் போற்றும் பாடலில் இது உணர்த்தப்படுகிறது. கூடவே பயணம் செய்து வந்தாலும், தருக்க மனம் வாதங்களின் அக்கப்போரில் சிக்கி கரையிலேயே தங்கி விடுகிறது. உண்மையான தேடலும், அதில் திடமாகவுமுள்ள உணர்வு பூர்வமான மனம் கங்கையில் மூழ்கி எழுந்து தன் ஞானத்தை கண்டடைகிறது. பரிபூரண மனிதர் எழுதித் தந்த “தோட்டத்துப் பனித்துளிக்குள் முழு உலகம்” என்னும் வரிகளின் மூலம் கடவுள் புறத்தே தேடவேண்டிய விஷயம் இல்லை, உள்ளேயே இருப்பது தான் என்னும் இரண்டற்ற அத்வைத நிலை உணர்த்தப்படுகிறது. படத்தின் தொடக்கத்தில் அவள் கண்களை மறைத்திருக்கும் பொய்க்கரம் (கை உறை) என்னும் மாயை இங்கே விலகுகிறது.
பிறப்பு – இறப்பு என்னும் சம்சாரச் சுழலில் இருந்து வெளியேறுவதைப் பற்றி ஜெர்மானியர் திரும்பத் திரும்பப் பேசுகிறார். படத்தின் இறுதிக்கட்டம் முழுக்க பிறவிப்பிணியை நீக்கும் காசி நகரத்திலும், கங்கையிலுமே நடக்கிறது. இங்கே மிக நுணுக்கமாக இயக்குனரால் சேர்க்கப்பட்ட பின்னணி இசையைக் குறிப்பிட வேண்டும். இருள் திரையில் இருந்து மெல்ல விலகி, ஒளி பெற்று படம் ஆரம்பிப்பதும் முடிவில் மீண்டும் மெல்ல ஒளி குறைந்து திரையில் இருள் பரவும் போதும் ஒரு சம்ஸ்கிருத துதி ஓதப்படுகிறது. அது யஜுர் வேதத்தின் மையப்பகுதியிலுள்ள ருத்ர உருவான சிவனைப் போற்றும் “ஸ்ரீ ருத்ரம்” என்னும் மிக முக்கியமான வேதப்பாடலில் உள்ள மரணத்தை வெல்லும் மந்திரம் என்று போற்றப்படும் (ம்ருத்யுஞ்ஜயம்) ‘த்ரயம்பகம் யஜாமஹே..’ எனத்தொடங்கும் இரண்டு வரிகள். அந்த வேத வரிகள் “பழுத்த வெள்ளரிப்பழம் எவ்வாறு அதன் கொடியுடனான பந்தத்திலிருந்து இயல்பாக விடுபடுகிறதோ அதைப்போல் மரணத்திலிருந்து விடுபட்டு வீடுபேறு அடையவேண்டும்” என்று வேண்டுகிறது.
இவ்வாறு படம் முழுக்க காட்சிகளிலும், இசையிலும், கதாபாத்திரங்களிலும், வசனங்களிலும் விரவிக்கிடக்கும் குறியீடுகளை உள்வாங்கத் தவறினால் படம் மொத்தமும் வெறும் நகரும் சம்பவங்கள் மட்டுமாகத் தான் பார்வையாளரின் மனதில் எஞ்சும். பல மேலை விமர்சகர்கள் இந்த நிலையில் சிக்கியிருப்பதை இப்படம் பற்றிய அவர்கள் விமர்சனங்களில் காணலாம். இதன் தத்துவ விசாரணையைப் பற்றிய எந்த அறிதலும் இல்லாத பார்வையாளருக்கு இது விளங்காது, ஏன் ரசிக்க முடியாமலும் போக வாய்ப்பு அதிகம்.
Mohsen Makhmalbaf
2006ல் வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் ஈரானின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான மோஹ்சென் மக்மல்பாஃப் (Mohsen Makhmalbaf). இது ஈரானில் தடைசெய்யப்பட்ட படம். உலகத் திரைப்பட ரசிகர்களுக்கு, குறிப்பாக ஈரானியப் படங்களை விரும்பிப் பார்க்கும் அனைவரும் அறிந்திருக்கக் கூடிய இயக்குனர் மோஹ்சென். தமிழ் இலக்கிய, சினிமா வட்டாரத்திலும் ‘தி சைக்கிளிஸ்ட்’ என்னும் இவரது படம் பிரபலம்.
மோஹ்சென் மக்மல்பாஃப் இளமையில் ஈரானின் அரசரான ஷாவின் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட இஸ்லாமிய புரட்சிக் குழுவில் சேர்ந்து, கலகம், வன்முறை செய்து ஐந்து வருடங்கள் சிறையில் இருந்தவர். அப்போது நிறைய வாசிக்கவும், யோசிக்கவும் தொடங்கினார். மகாத்மா காந்தியின் ஆளுமை இவரில் ஆழ்ந்த தாக்கத்தை உருவாக்கியது. அரசியலிலிருந்தும், வன்முறையிலிருந்தும் விலகி கலை, இலக்கியத்தின் பக்கம் வந்தார். ஒரு பேட்டியில் “சே குவேராவில் இருந்து காந்திக்கு வந்தேன்” என்கிறார். ஆரம்ப காலங்களில் எழுத்தாளராக (27 நூல்களை எழுதியுள்ளார்) இருந்தவர் பின்னர் திரைப்படத்தை தனக்கான போராட்ட ஊடகமாகத் தேர்ந்தெடுத்தார். தனது சுயமான திரைக்கதை மற்றும் காட்சிப்படுத்தும் பாணியை உருவாக்கிக் கொண்டார். 1979ம் ஆண்டு புரட்சிக்குப் பின் இஸ்லாமியக் குடியரசாக் மாறிய ஈரானில் இஸ்லாமிய மத அடிப்படைவாதத்திற்கு எதிராகவும், ஜனநாயகத்துக்கும், பெண் விடுதலை, பெண் உரிமை, மனித உரிமைகள், கல்வி, சமூக நலனுக்கு ஆதரவாகவும் தனது போராட்டத்தை திரைப்படங்கள் மூலமாகத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.
இந்தப் படம் (Scream of the Ants) மற்றும் Sex and Philosophy என்னும் இன்னொரு படம் எடுத்ததற்காக ஈரானிய அரசின் ரகசிய போலீஸ் பிரிவு இவரது படப்பிடிப்புத் தளத்தில் வெடிகுண்டு வைத்து தாக்கியது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 2009ல் இருந்து ஈரானை விட்டு வெளியேறி ஃபிரான்ஸ் நாட்டில் பாரிஸில் வசித்துவருகிறார். இவரது மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் என குடும்பம் முழுவதும் சினிமா இயக்குனர்கள். இவர்கள் குடும்பம் மட்டும் கேன்(Cannes), வெனிஸ், கனடா உட்பட பல முக்கியமான சர்வதேச திரைப்பட விழாக்களில் இதுவரை நூறுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள்.
பூடகமான கதை சொல்லல், உருவகங்கள் மற்றும் குறியீடுகளின் மூலம் உணர்த்துதல் என்று இவரது படங்கள் பார்வையாளனுக்கு சவலான அதே சமயம் மிகுந்த நிறைவான உணர்வைத் தரும்.
மத அடிப்படைவாதத்தில் சிக்காத பாரசீகனாக மோஹ்சென் மக்மல்பாஃப் படைத்திருக்கும் பெருமைமிகு திரைப்படம் இது.
- பிரகாஷ் சங்கரன்

(நன்றி: சொல்வனம். இதழ் 78ல் வெளியானது http://solvanam.com/?p=22882 )

Friday, November 23, 2012

விஷ்ணுபுரம்: பூரணத்திலிருந்து… (பகுதி-2)


நிறுவனப்படுத்தப்படும் ஞானம்
வளைந்து பின்னிய குறுகலான சந்துகளில் வழிதவறிச் சென்று, தொலைந்து விட்டோம் மீளவே மாட்டோம் என்று மனம்பதறி திசைமறந்து அலையும் போது, ஒரு சந்தின் திருப்பத்தில் எதிர்பாராமல் சட்டென்று தெரியும் பரபரப்பான பிரதான சாலை போன்று தங்கள் ஞானத்தேடலில் மிகச்சிக்கலான அகப்பாதைகளில் அலைக்கழிக்கபட்டு தவித்து ஒருகணத்தில் உண்மையை தரிசிக்கின்றனர் சிலர். அதன் பிறகு அவர்களின் வெறுமையில் துணையிருப்பது தனிமையும் மௌனமுமே. அத்தகைய ஞானிகளை முச்சந்தியில் மேடைகட்டி அமர்த்தி அதிகார அரசியல் செய்கின்றனர் அனுக்கர்கள்.
திருவடி ஆழ்வார் ஆகிறார், சோமன் அவருடைய சிஷ்யனாகிறான். பீதாம்பரமும், பரமனும் திருவடியை வைத்து பிராமணர்களை ஓரங்கட்டி ஆழ்வார்மடம் அமைத்துக் கோயில்களையும் அதிகாரத்தையும் கைப்பற்றும் திட்டத்தைப் பேசுகிறார்கள். வெளியே ஸ்ரீபாத திருவிழாவின் பிரம்மாண்டமான தேர் இரண்டு ஆட்டுக்குட்டிகளின் மீதேறி நசுக்கிக் குருதி பலி கொடுத்து அசைந்து நகர ஆரம்பித்திருக்கும்.
திரும்பத்திரும்ப ஞானத்தைப் புறவயமாக நிறுவ முயலும் ஒவ்வொரு ஞானியையும் அதிகார வேட்கையுள்ளவர்கள் ஓடிவந்து ஒட்டிக்கொள்கின்றனர். தங்கள் தருக்க உத்வேகத்தை இழந்தால் ஞானிகளை அவர்கள் கொல்லவும் தயங்குவதில்லை. அவர்களுக்குத் தேவை அடுத்து தர்க்கங்களை உருவாக்கிக் கொடுக்கும் இன்னொரு ‘ஞானி’. பவதத்தரைக் கொல்லச் சதி செய்யும் அதிகாரி வீரசிங்கர், அஜிதனை வைத்து ‘தர்ம’ ராஜ்ஜியம் நடத்தும் சந்திரகீர்த்தி போன்றவர்கள் மூலமாக இது சுட்டிக் காட்டப்படுகிறது. சந்திரகீர்த்தி லௌகீக நியாயங்கள் பேசிப் போலி தருக்கங்களை உருவாக்கி, உணர்ச்சி மிகுந்த வார்த்தைகளால் ஆவேசமாக சாமான்யர்களின் மீட்சிக்காக மகாதருமம் தன்னை இவ்வாறு தூண்டுவதாகச் சொல்கிறான். அஜிதன் ஒத்துக்கொண்டு ஒதுங்கியிருக்காவிட்டால், புதர் மறைவில் ஒளிந்திருந்த லாமாமகாபாதரின் வேங்கை போன்ற சிஷ்யர்கள் அஜிதனை மகாநிர்வாணத்துக்கு அனுப்பியிருப்பார்கள்.
ஞானத் தேடல் தன் மனத்தின் தவிப்பையும், கேள்விகளுக்கு விடையும் கண்டடைவதற்குக் கருவியாகும் வரை உபயோமானது. அதற்கான தர்க்கம் மனத்தின் ஊசலாட்டத்தை நிறுத்தி நிலைப்படுத்த உதவும். ஆனால் அந்த ஞானத்தைக் கொண்டு பிறரை வென்றடக்கவும், தனது ஞானத்தைப் பொது ஞானமாக நிலைநிறுத்தவும் முனையும் கணமே அது சுமையாக அழுத்த ஆரம்பித்து விடுகிறது. இந்த ஞானப் பந்தயங்களில் இருந்து விலகியதாலேயே சித்தன் சுதந்திரமானவனாக இருக்கிறான். அவனுக்கு இந்த விவாதமெல்லாம் வெறும் விளையாட்டு. அஜிதன் இதையே உணர்கிறான், சித்தனின் கட்டற்ற தன்மையை நினைத்து ஏங்குகிறான். சித்தனின் தந்தையான பவதத்தரும் கூட அந்த நிலையை அடைந்து அழுத்தும் ஞானத்தின் சுமையிலிருந்து விடுதலை பெற ஏங்குகிறார்.
ஜெயமோகன் குரு நித்ய சைதன்ய யதியுடன்

குழந்தைகள், பெண்கள்
பெண்கள் தங்கள் கருவில் இருக்கும் குழந்தைக்கு (மகனுக்கு) உயிரும் உடலும் மட்டும் அளிக்கவில்லை. எண்ணங்களால் தாங்கள் விரும்பும் உருவத்தையும் அளிக்கின்றனர். அந்த உருவம் பெரும்பாலும் அவர்களின் பகல்கனவு அல்லது ஆழ்மனதில் இருக்கும் கற்பனையான ஆண் பிம்பமாகவே இருக்கிறது. லட்சுமி அநிருத்தனுக்கு தருவதும், சாருகேசி உத்தரனுக்குத் தருவதும் அது தான். அல்லது தங்களுக்குள் இருக்கும் புரியாத ஆண் தன்மை தான் அவர்களின் ஆண் குழந்தைகள்.
சாருகேசிக்கு அவள் ஓவியத்தில் கண்ட அமைதி நிரம்பிய துக்கம் கொண்ட கண்களுடைய புத்த பிட்சுவே மறுபிறப்பு எடுப்பதற்காக அவளுள் குடியேறி இருக்கிறார். பிங்கலன் வெறும் நிமித்தம் தான். இனி அவளுக்கு அவன் முக்கியமே இல்லை. லட்சுமிக்கு அவள் இளமையில் பகல்கனவுகளில் உருவாக்கிக் கொண்ட சிதறிய ஆண் பிம்பம்தான் அவளுடைய ஆழ்மனதில் இருக்கிறது. மெதுவாக அந்த உருவத்தை வளர்த்தெடுத்துத் தன் மகன் அநிருத்தனுடன் பொருத்துகிறாள். அவளால் வலது பக்கமாகப் புரண்டு படுத்தால் தன் அந்தரங்க உலகத்துக்குள் சென்றுவிடமுடியும். அங்கே அவள் கற்பனை ஆண் பிம்பமாக அநிருத்தன்.
அநிருத்தன் இறந்த செய்தியைக் கேட்டதும் மயங்கி விழுகிற லட்சுமியைப் பார்க்கும் பெண்கள், நெஞ்சம் பதற கவனிக்கிறார்கள். அவள் மார்பில் தாய்ப்பால் சுரந்து கொண்டிருக்கிறது. பின்னர் பிங்கலனைக் கூடும் போதும் சங்கர்ஷணன் நினைவு ஒரு கணம் வருகிறது. தன்னை மறந்து ‘அநிருத்தா’ என்கிறாள், அப்போதும் அவள் மார்பில் தாய்ப்பால் சுரக்கிறது. லட்சுமி, பிங்கலன் இருவருக்குமே அந்தக் கணம் மிகப்பெரிய திருப்பத்தைத் தருகிறது. நாவலில் இது மிகமிக உக்கிரமான ஒரு நிகழ்வு. பல்வேறு உளவியல் ஊகங்களுக்கு வாய்ப்பளிக்கும் பொருள் பொதிந்த முக்கியமான ஒரு குறியீடு.
பத்மாட்சிக்கு அவள் இருப்பை அர்த்தப்படுத்துவதே ‘மகாபத்மபுராணம்’ தான். அவள் குழந்தை அதுதான். சங்கர்ஷணன் அவளை அந்த நூல் வந்தடைய ஒரு நிமித்தக்காரன் மட்டுமே. அவளுக்கு சங்கர்ஷணன் ஒரு பொருட்டே அல்ல.

தந்தை மகன்
அக்னிதத்தன் தன் தந்தையைக் கொன்றவன். புத்ரசோகம் அவன் குலத்தைத் தொடர்ந்து துரத்தும் சாபம். பவதத்தர்-விஷ்ணுதத்தன், சூரியதத்தர்-ஸ்வேததத்தன், ஆரியதத்தர்-வேததத்தன் என தலைமுறைகளுக்கு அது நீள்கிறது.
விஷ்ணுபுரம் ஞானசபைத் தலைமையையும், வைதிக ஞானத்தையும் உதறிப் பெருச்சாளித் தோல் கோவணம் அணிந்து, பிச்சையெடுத்துப் புழுதியில் தூங்கும் சுடுகாட்டுச் சித்தனாகிறான் விஷ்ணுதத்தன். தன் மகனை மிகவும் விரும்பிய பவதத்தர் புத்ர சோகத்தால் உடைந்துவிட்டவர். அஜிதனின் இளமையும், ஞானமும், சிரிப்பும் அவருக்குத் தன் மகனையே நினைவூட்டுகின்றன. அது பவதத்தரின் மிகப்பெரிய பலவீனம். அஜிதன், “பித்ருபுத்ர தொடர் மரணமின்மை ஆகாது. அது மனித மனதின் ஆற்றாமை தான்” என்றதும் பவதத்தர் ஞானசபையிலேயே உணர்ச்சி ததும்ப குரல் உடைந்து இடறுகிறார். பிள்ளைப் பாசத்தால் உணர்வு ரீதியாக அஜிதனிடம் மனதளவில் அவர் ஏற்கனவே தோற்றுவிட்டார். அல்லது தன் மகனுக்கு (அஜிதனுக்கு) ஞானசபையின் அதிகாரத்தைத் தந்துவிட்டு ஒரு தந்தையின் நிறைவுடன் உயிர்துறக்கிறார் என்றும் புரிந்து கொள்ளலாம்.
சர்வக்ஞராக அல்லாமல் வாழ்வில் ஒருநாள் கூட ஒரு தந்தையாக தன்னிடம் அன்பாகப் பேசாத சூரியதத்தரை வெறுத்து அவருக்கு நேர்எதிர்த் திசையில் ஸ்வேததத்தன் போகிறான். சர்வக்ஞர் பதவியைத் தூக்கி எறிந்து பிங்கலனின் வாமமார்க்கத்தில் இணைகிறான்.
சாருகேசி – அநிருத்தன் உறவுச் சித்திரம் போல சங்கர்ஷணன்-அநிருத்தன் உறவும் மிக அழுத்தமான, மிக அந்தரங்கமான நுண்ணிய உணர்ச்சிகளால் பின்னப்பட்டது. சங்கர்ஷணன் தன் மகன் அநிருத்தனின் மரணத்திற்குத் தான் எவ்விதத்திலும் காரணமில்லை என்றாலும், ஏன் மனைவியை எதிர்கொள்ள முடியாமல் அஞ்சி ஒளிகிறேன் என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறான். அதன் விடையாகத் தன் மகன் தன்னுடைய அழிவிலிருந்து உருவாகுபவனாக, தனது தோல்விகளில் வெற்றியடைபவனாக அவன் ஆழ்மனத்தில் எண்ணியிருப்பது தெரிகிறது. தன் ஆத்மாவின் வெறுப்புதான் தன் மகனைக் கொன்றதாக உணர்ந்து துடிக்கிறான்.
ஒவ்வொரு தந்தையும் தன் மகனின் வழியாகத் தாங்கள் இளமையோடு நீடித்து வாழ்வதாகவே எண்ணிக் கொள்கிறார்கள். மகன் தன் நீட்சி –ஆனாலும் தன் முக்கியத்துவத்தை உடைத்து வளர்ந்துவிடக் கூடாத, தன் நிழலைப் போல இருக்க வேண்டுமெனவே விரும்புகின்றனர். தன் மனைவிக்கு மகனிடம் தடைகள் எதுவும் இல்லை என்பதை அவர்கள் மனம் ஜீரணிக்க மறுக்கிறது. ஒரு கட்டத்தில் மகனைத் தன் போட்டியாளனாக உணரும் மேற்கின் உளவியல் கருத்துக்களின் சாயல் சங்கர்ஷணனின் புலம்பல்களில் நிறையவே தெரிகிறது.

கலையின் கர்வம்
பொருளியல் தேவைகளுக்கும், பதவி, அதிகாரம் என உலகியல் வேட்கைகளுக்கும் ஆட்பட்டுத் தங்கள் சுயத்தை விலைபேசும் படைப்பாளிகளையும், அறிவுஜீவிகளையும் நாம் இன்று காண்கிறோம். இவர்களின் மனசாட்சியை நோக்கி அற ஆவேசத்துடன் கேட்கப்படும் கேள்விகள் விஷ்ணுபுரத்தில் வருகிறது.
தூய கலை கலைஞனுக்கு உள்ளார்ந்த ஒரு கர்வத்தைக் கொடுக்க வேண்டும். தன் படைப்புத் திறன், காலத்தை விலகி நின்று பார்க்கும் கூரிய மனம் ஆகியவை அவனையறியாமல் அவனுக்கு பெருமையும் தலைநிமிர்வும் தரவேண்டும். அப்படித் தராத பட்சத்தில் உலகியல் யதார்த்தங்களுக்கும் அதன் அரசியல், சமூக, பொருளாதார, அதிகார அழுத்தங்களுக்கும் பணிந்து வளைந்துகொடுத்துப் படைப்பாளி கூனிக் குறுகிப் போவான். பணமும் பதவியும் இல்லாவிட்டாலும், தான் படைப்பவன், வெகுஜனங்களின் சாமானிய தளத்தில் தன் மனம் இயங்கவில்லை, உயர்ந்த உண்மைகளைக் கலைகளின் வழியாக தரிசிப்பவன் என்ற நிறைவும் சுயமரியாதையும்தான் கலைஞனின் படைப்புத் திறனுக்கு ஆதாரசக்தி. தன்மானத்தை விற்று உருவாக்கும் படைப்புக்கும் அதன் படைப்பாளிக்கும் எவ்வித உண்மை மதிப்பும் இல்லை. இதை உண்மையான படைப்பாளி தன் அக ஆழத்தில் அறிவான்.
பெருந்தச்சனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டவுடன் கடைசிக் கணங்களைத் தன் பிள்ளைகளுடன் செலவிட விரும்புவதாகக் கூறுகிறான். அநீதிமுன் தன்மானம் இழந்து துவண்டு நிற்கும் பெருந்தச்சனின் நிலையைக் கண்டு சோமனுக்கு வெறுப்பும் கோபமும் வருகிறது, “கடைசிக் கணங்களை மக்களுடன் செலவிடுகிறானாம், அற்பப் புழு, உளியை எடுத்துத் தன் தலையை வெட்டிக் கொண்டிருக்க வேண்டாமா? அவனுடைய கலை இதற்குக் கூடவா தைரியம் தரவில்லை?” என்று எரிச்சல்படுகிறான். இத்தகைய கணங்கள் கலையின் தோல்வி என்பதே அவன் எரிச்சலுக்குக் காரணம்.
சங்கர்ஷணன் காவிய அரங்கேற்றம் முடிந்த பின் குடித்துவிட்டு தாழ்வுணர்ச்சியும், குற்ற உணர்வும் மேலோங்க சாருகேசியிடம் புலம்புகிறான், “வெற்றுக்கர்வத்தை சாந்தி செய்வதற்காக ஆத்மாவைக் கறைபடுத்திய அசடன். நான் உண்மையானவனாக இருந்திருந்தால், என் காவியம் ஆத்மாவின் குரலாக இருந்திருந்தால் சூரியதத்தரின் அழைப்பை மறுத்திருக்க வேண்டும். என் நூலை அணைத்தபடி சோனாவின் ஆழ்கயத்தில் மூழ்கி உயிர்விட்டுருக்க வேண்டும்”.
சோமனின் குரல் விமர்சகனுடையது என்றால், சங்கர்ஷணனுடையது படைப்பாளியின் அந்தராத்மாவின் குரல்.

பூஜ்யம் முதல் ஒன்று வரை
பிரளயம் பூஜ்யம் எனக்கொண்டால், படைப்பு ஒன்று. பூஜ்யத்திலிருந்து ஒன்று வரை நகர்ந்து பின்னர் பூஜ்யத்தை அடைகிறது காலம். மீண்டும் அதே வட்டம். காலம் சக்கரமென மாறாமல் சுழன்று கொண்டே இருக்கிறது.
காலநதி சுழன்று ஓடும் விஷ்ணுபுரத்தில் ஒவ்வொரு எண்ணமும், செயலும், ஒரு சருகு மல்லாந்து படுக்கும் அசைவும் கூட மீண்டும் நிகழும். தழல் எரியும் நாவும், கூரிய தர்க்கமும் உடைய அக்னிதத்தன் தன் சொல்லால் விஷ்ணுபுரத்தை நிர்மாணித்தான். அவன் வம்சத்தின் கடைசி ஆண்மகன் வேததத்தனோ ஐம்புலன்களும் ஒன்றே என்று அறிந்த, தருக்கத்தால் மறைக்கப்படாத தூய மனம் கொண்ட மோன விரதன்.
இந்து மரபு, வேதங்கள் மனிதரால் உண்டாக்கப்பட்டதல்ல, பிரபஞ்ச உற்பத்தியின் போதே வேதங்களும் நாத வடிவாகத் தோன்றுகின்றன. பின்னர் ரிஷிகள் அவற்றைத் தங்கள் தவத்தால் கண்டடைகிறார்கள். யுக முடிவில் மகாபிரளயத்தில் பிரபஞ்சம் அழியும் போது வேதங்களும் அழியும் என்கிறது. அடுத்த யுகத்தின் தொடக்கத்தில் மீண்டும் இவை தோன்றும். அவ்வாறு காலச்சுழற்சி தொடரும் என்கிறது. விஷ்ணுபுரத்தின் வைதிக ஞான மரபின் கடைசி சர்வக்ஞன் பெயர் வேததத்தன் என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டியது.
சோனாவில் ஒரு கற்பாறையில் ஒதுங்கியிருந்த அக்னிதத்தனைக் காப்பாற்றிக் கைபிடித்து ஓடத்தில் எற்றிக்கொண்டு வந்தவள் ஒரு செம்பி. அதுவே விஷ்ணுபுரத்தின் துவக்கம். காலச்சக்கரம் சுழல்கிறது. இறுதியில் பிரளயத்தில் அக்னிதத்தனின் குலத்தின் கடைசி வாரிசு வேததத்தன் சோனாவின் வெள்ளத்தில் ஒரு கரிய பாறையில் ஒட்டிக்கொண்டு இருக்கிறான். செம்பர் குல வழித்தோன்றல் பெண் ஒருத்தி ஓடத்தில் வந்து கை நீட்டுகிறாள். ஆனால் பிடி நழுவி சோனாவில் மூழ்குகிறார்கள். ஒரு நாடகீய உச்ச தருணத்தில் வட்டம் தொடங்கிய புள்ளியில் வந்து முழுமை அடைகிறது.
ரூபிக்கின் கனசதுரத்திற்கு (Rubik’s cube) 43,252,003,274,489,856,000 வரிசை மாற்றங்கள் (Permutations) சாத்தியமுண்டு. இத்தனை கோடானுகோடி வரிசைமாற்றங்களுக்கு நடுவில் அதன் ஆறு பக்கங்களையும் முழுமையாக்கும் நகர்வுகள் உண்டு. அந்த சரியான சில நகர்வுகள் பிற கோடிக்கணக்கான நகர்வுகளுக்கும் பொருள் ஆகின்றன. விஷ்ணுபுரத்தின் முழுமையும் அப்படி எண்ணற்ற சம்பவங்கள் மற்றும் மனிதர்களால் பின்னப்பட்டுள்ளன. கடைசியில் அவை ஒட்டுமொத்தமான ஒரு முழுமையையும் பொருளையும் அடைகின்றன. பிரபஞ்ச தரிசனமும் இதுவே.
விஷ்ணுபுரம் ஒரு கனவு. மனிதகுலம் தன் துயிலில் இதைக் கண்டு கொண்டிருக்கிறது. பிரளயம் விழிப்பு போல.
விஷ்ணுபுரம் ஒரு புராணம். ஒரு சூதன் தன்னைத் தானே பிரதி எடுத்துக்கொண்டு யுகம் தோறும் மீண்டும் மீண்டும் கதை சொல்லிக் கொண்டிருப்பான். ஏனென்றால் அதுவே அவன். நிறுத்தினால் அவன் இல்லாமலாகி விடுவான்.
ராஜகோபுரத்தின் உச்சிமண்டபத்தின் தரையின் தூசுப்படலத்தில் எண்ணற்ற சிறு பூச்சிகள் சேர்ந்து தங்களை அறியாமல் ஒரு மாபெரும் சக்கரத்தை வரைந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பூச்சியின் வாழ்வும் ஒரு எழுத்து. அவை அனைத்தும் சேர்ந்து சக்கரம் முழுமை பெறப் பங்காற்றுகின்றன. ஆனால் அதன் அர்த்தம் அவற்றால் அறியாமுடியாத எல்லைக்கப்பால் உள்ளது.
கீழே விஷ்ணுபுரம் ஸ்ரீசக்ர வடிவமாக மின்னிக் கொண்டிருக்கிறது. விஷ்ணுபுரத்தின் ஞான சபையில் சொல்லப்பட்ட ஒரு சொல் கூட வீணாவதில்லை. அந்த மண்ணில் தோன்றிய யாருடைய ஞானத்தேடலும் பொருளற்றுப் போவதில்லை. அதன் படைப்பு அழிப்பு சுழற்சியில் அனைத்தும் அர்த்தமும் பூரணமும் அடைகிறது.
இது விஷ்ணுபுரத்தின் உண்மை. இதுவே பிரபஞ்ச உண்மையும் கூட.
ஓம். அதுவும் பூர்ணம். இதுவும் பூர்ணம்.

- பிரகாஷ் சங்கரன்
(பகுதி-1)

(காரைக்குடியில் 2012, ஜூன் 30 மற்றும் ஜூலை 1ல் நடந்த விஷ்ணுபுரம் வாசிப்பு அரங்கின் கலந்துரையாடலில் சமர்ப்பிக்கப்பட்டு, ஜெயமோகன் இணைய தளத்தில் வெளியானது http://www.jeyamohan.in/?p=28740)

விஷ்ணுபுரம்: பூரணத்திலிருந்து... (பகுதி-1)


மண்ணில் ஓடும் நதிகளெல்லாம்
கடலையே அடைகின்றன.
மாறுபட்ட சிந்தனைகளும் தரிசனங்களும்
இறுதியில் பிரம்மத்தையே சென்றடைகின்றன.
(சாந்தோக்ய உபநிடதம்)
*


முழுமை
உயர்ந்த மலையின் வெவ்வேறு சிகரங்களில் ஊற்றெடுத்த நீர் சிற்றோடைகளாகவும் குறு நதிகளாகவும் பாய்ந்து ஓரிடத்தில் சங்கமித்துப் பெருநதியாகப் பெருகி மீண்டும் கிளைத்து துணைநதிகளாகவும் வாய்க்கால்களாகவும் ஓடி இறுதியில் கடலை அடைகின்றன.
வேறுபட்ட குலங்களும், தனித்த ஞான தாகிகளும், மெய்த்தேடல் கொண்டவர்களும், பல்வேறு மார்க்கிகளும் தங்கள் பயணத்தில் ஒருமுறையாவது ஞானத்தின் உறைவிடமான விஷ்ணுபுரத்தின் வீதிகளின் குறுக்காகக் கடந்து செல்கின்றனர். மேகங்களைத் தாண்டி வளர்ந்த கோபுரங்கள் கொண்ட அந்தப் பேராலயத்தின் பிராகாரங்களில் நடக்கின்றனர். மல்லாந்த கரியமூர்த்தி ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருவருக்கும் தொடர்புடையவராகிறார். குலங்கள் கலக்கின்றன, நம்பிக்கைகள் மாறுகின்றன, மதிப்பீடுகள் திருத்தப்படுகின்றன, புதிய மார்க்கங்கள் பிறக்கின்றன. பயணம் தொடர்கின்றது. கடைசியில் அவை எல்லாமும் ஒரு பெரும் நியதியின் முழுமையின் ஒரு அங்கமாகக் கச்சிதமாகச் சேர்கின்றன.
ஒவ்வொரு முறை விஷ்ணுபுரத்தைப் வாசிக்கும் போதும் ஏதாவது ஒரு அம்சம் அப்போதைய மனநிலை மற்றும் ஆர்வத்துக்குத் தகுந்தபடி பிரதானமாகத் தோன்றும். இம்முறை அதன் ஒட்டுமொத்த முழுமை நோக்கும், எண்ணற்ற அதன் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் ஆகியவை நாவலின் இறுதியில் கொள்ளும் முழுமையும் முக்கியமாகப்பட்டது. இந்தப் பிரம்மாண்டமான பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவும் – அதன் அசைவும் நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட, முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட முடியாத ஒரு மாபெரும் நியதியினால் சிறு பிசிறு கூட இல்லாமல் முழுமையாகக் கட்டப்பட்டிருக்கிறது. பிரபஞ்ச இயக்கத்திற்குப் பங்களிக்காத எதுவும் இங்கே இல்லை. விஷ்ணுபுரமும் அப்படியே. நாவலின் மையப் படிமத்திற்குத் தொடர்பில்லாத ஒரு கதாபாத்திரமும், சம்பவமும் இல்லை. முதல் பகுதியில் ஒரே ஒருமுறை பெயர் வரும் காதாபாத்திரம் கூடக் கடைசிப்பகுதியில் முழுமை பெற்று எழுந்து வருகிறது. ஸ்ரீதரன் அப்படி ஒரு உதாரணம்.
பிரபஞ்ச உற்பத்தி பற்றிய கேள்விகளும், ஞானத்தேடலுக்கான வழிகளும், அதனூடாக ஞானதாகிகளின் அந்தரங்கமான பயணமும் அவர்களின் கண்டடைதலுமே நாவலின் மையக்கருவாக மிகுந்த கவனம் கொடுத்து வாசிக்கப்படுப்பவை. என்றாலும், எண்ணூறு பக்க பிரம்மாண்ட நாவலின் பக்கங்களில் ஏதேதோ இடங்களில் ஆங்காங்கே சிதறிச் செல்லும் சம்பவங்களையும், குறியீடுகளையும் பொறுக்கிக் கோர்த்து அவை ஒரு முழுமையான மாலையாக வடிவம் பெறுவதைக் காண்பதும் ஒருவித நிறைவைத் தரக்கூடியது தான்.
உதாரணமாக ஸ்ரீபாதம் பகுதியின் தோற்றுவாயில் வரும் அந்த இரண்டு பேர் யார் என்பதும், குதிரை லாய மேற்பாவையாளர் வீரநாராயணரின் வேர் எங்கு இருக்கிறது என்பதும் மிகப்பூடகமாக வெவ்வேறு தருணங்களில் பல்வேறு கதாபாத்திரங்கள் வழியாக மாறுபட்ட கோணங்களில் சொல்லப்படுகிறது. அவற்றை இணைத்து ஒரு முழுப்பிம்பத்தைக் கண்டுகொள்ள முயல்வது ஒரு புதிர் முடிச்சை அவிழ்ப்பது போலப் பரவசமான அனுபவமாக இருக்கும்.

மல்லாந்த திருமேணி யாருடையது?
விஷ்ணுபுரத்தில் இருக்கும் மாபெரும் கரியசிலை விஷ்ணுவா இல்லை மூப்பனா என்பது குறித்து வாசிப்புக்கேற்ப கருத்துக்கள் வந்துள்ளன. பொதுவாக மார்க்ஸிய வரலாற்றுப் பார்வையின்படி ‘பழங்குடிகளை விரட்டிப் பறித்துக்கொண்ட வைதிக ஆதிக்கம்’ என்கிற வாசிப்பு பிரபலம்.
புராணங்கள் அனந்த சயனம் உட்பட விஷ்ணுவின் சயனங்கள் பத்து எனக் கூறுகின்றன. பாம்பணை, சங்கு, சக்ரம், கதை என எதுவும் இல்லாத ஸ்தலசயனமும் அதில் ஒன்று. விஷ்ணுபுரத்தில் அப்படித்தான் மூன்று வாசல்கள் உடைய கருவறையை நிறைத்துப் படுத்திருக்கிறார். அஜிதருக்குப் பின் இன்னும் சில ஆயிரம் வருட காலம் பௌத்தம் விஷ்ணுபுரத்தின் ஞான தரிசனமாகக் கோலோச்சியிருந்தால் அந்தக் கரியசிலை சயனபுத்தராக மாறியிருப்பார். செம்பர்கள் மொட்டைத் தலையும் கப்பரையுமாக வந்த ஒரு பட்டனின் கட்டிலிருந்து தங்கள் மூப்பனை விடுவிக்கக் காத்திருப்பார்கள்.
ஆனால் மாற்றம் இல்லாவிட்டால் காலமே இல்லை. மாற்றங்களே சமூகப் பரிணாம வளர்ச்சியின் முக்கிய காரணி. பரிணமிக்காதவை தேங்கி அழியும். சமூகப் பரிணாமும் ‘முரண்பட்டு நகர்தல்’ என்ற ஒற்றை பரிமாணத்தில் மட்டுமே நகர வேண்டுமென்பதில்லை. ‘மானுட ஞானம் அழிகிறதா’ என்ற கேள்விக்கு ஜெ சொல்லியிருந்த பதிலையே இதற்கும் போட்டுப்பார்த்தால் சமூகப் பரிணாமம் என்பதும் சுழற்சியாகவும் ஒத்திசைவாகவும் இருக்கலாம்.
எல்லாக் கலாச்சாரங்களும் அவைகளின் பழங்குடி வேர்களிலிருந்தே தொடங்குகின்றன. இயற்கையான அவற்றின் வளர்ச்சியின் போக்கில் அம்மக்களின் வாழ்க்கை அனுபவங்களே செறிவுபடுத்தப்பட்டுத் தத்துவமாகின்றன. இடையில் அவை காலச்சூழலில் திசைக்கொன்றாகப் பிரிந்து தனித்தனியாக வளர நேரிட்டால், அவ்வாறு வளரும் புதியசூழலுக்கு ஏற்ப ஆதி நம்பிக்கைகள் புதிய முலாம் பூசியபடி இருந்துகொண்டே இருக்கும். மகாகால மார்க்கம், வைதிகம், செம்பர்குலம் என விஷ்ணுபுரத்தின் அனைத்து மரபுகளிலும் அவற்றின் நனவிலியில் அந்தக் கரியதிருமேனி இருக்கிறது. அந்த ஆதி நம்பிக்கை காலத்தின் ஊடே வெவ்வேறு கைகள் வழியாக மாறிச் சென்று கடைசியில் பிரளயத்தில் அமிழ்கிறது. பின்னர் புதிய வானும், பூமியும் பிறந்து அடுத்த சுழற்சி ஆரம்பிக்கையில் தொடங்கிய கைகளிலேயே இருக்கிறது. விஷ்ணுபுரத்தின் இந்தக் காலச்சுழற்சி தான் ஒருவகையில் காலச்சக்ர தரிசனம். அதன் எல்லாப் புள்ளிகளும் முடிவில்லாத பயணத்தில் இருக்கின்றன. மாறாத மையப்புள்ளி – மல்லாந்து வானை நோக்கும் அந்த பிரம்மாண்ட கரியமூர்த்தி தான். இதன் குறியீடாகவே விஷ்ணுபுரம் சக்கர வடிவமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஞானத்தேடலின் தோற்றுவாய்
விஷ்ணுபுரப் பேராலயத்தின் ஞானசபை விவாதத்தில் உறுதியான தத்துவ அடித்தளம் கொண்ட எல்லா தரிசனங்களும் கலந்துகொண்டு பேசுகின்றன. இவற்றின் நடுவில் காலந்தோறும் சுய தேடலின் மூலம் தங்கள் பாதையை தாங்களே கண்டடையும் ஞானதாகிகளும் தோன்றியபடியே இருக்கிறார்கள். அங்கே நடக்கும் பலசம்பவங்கள், தருணங்கள் இவர்களுக்குப்ம்பொதுவாக இருந்தபோதும், ஒவ்வொருவருக்கும் அவரவர் இயல்புக்கு தகுந்தபடி ஏதாவது ஒரு சம்பவம் அல்லது தருணத்தில் தான் அகத்தூண்டல் பெறுகிறார்கள்.
தெருவோரம் கால்நீட்டிப் படுத்திருக்கும் மகாரோகியின் உருவம் பிங்கலனைத் தொந்தரவு செய்யும் அளவு மற்றவர்களைப் பாதிக்கவில்லை. இயற்கையின் கரங்கள் மீட்டும் அதிமகத்தான இசை திருவடியின் மனதைத் தான் புரட்டிப் போடுகிறது. பிரசேனர் சொல்வது போல ஒரே பிரபஞ்ச அனுபவம் தான், அதை இசையிலிருந்து பெண்ணிலும் அதிலிருந்து மீண்டும் நாதமயமாகவே எதிலும் காண்கிறான். சோமன் முற்றிலும் மாறாக அதீத லௌகீக உணர்ச்சிகள் மிகுந்தவன், அவனது திறப்பு ஞானத்தை நோக்கியதல்ல. மானுட வாழ்வின் நீதி-அநீதி சார்ந்தது. பெருந்தச்சனுக்கு இழைக்கப்படும் அநீதி அவனை அறத்தின் பால் தூண்டுகிறது, ஆனால் அது பிங்கலனை சலனப்படுத்தவே இல்லை.
பொதுவாகக் காமமும், எதிர்பாராத மரணத்தைக் காணநேர்தலும் லௌகீகத்தை மீறிய ஞானத்தேடலுக்கான தோற்றுவாயாக ஆவதைப் பல ஞானிகளின் வாழ்வில் நாம் கவனிக்கலாம். விஷ்ணுபுரத்தில் காமம் அப்படிப் பலருக்குக் காரணியும், வழியுமாக இருக்கிறது. அழிவு மற்றும் மரணம் குறித்தும், அதன் மீதான ஆதிமனதின் அச்சம் குறித்தும் அஜிதன் முதல் யோகவிரதர் வரை பலர் பேசுகின்றனர். ஆனால் மரணம் என்னும் அழுத்தமான ஒரு அதிர்வினால் இகவாழ்வின் நிரந்தரமிண்மையைக் கண்டு திடுக்கிட்டு நிரந்தரத்திற்கான தேடுதலில் ஈடுபடும் எவரையும் காணமுடியவில்லை.



சொல்லாமல் சொன்னவை – குறியீடுகள்
எண்ணூறு பக்கம் விரிந்திருக்கும் அடர்ந்த சொல்வனமாகிய விஷ்ணுபுரத்தில் காட்சிகள் ஒரு அதிநவீன ஓளிப்படக்கருவியால் பதியப்பட்டது போல மிகத் துல்லியமாகவும், தெளிவாகவும், வெகு நுணுக்கமாகவும் கண்முன் நிறுத்தப்படுகின்றன. முன்னூற்றி அறுபது பாகையும் சுழன்று காட்சிகள் விரிகின்றன. கதாபாத்திரங்கள் ஒருவரோடொருவர் பேசுவது மட்டுமன்றி ஒவ்வொருவரும் அவரின் அந்தரங்கத்தில் எழுப்பிக்கொள்ளும் கேள்விகளையும், பதில்களையும், தருக்கங்களையும் கூட மனதை ஊடுருவிப் பதிவுசெய்து விடுகிறது. ஆனாலும் இவற்றின் நடுவில் சொல்லாமல் சொல்லப்பட்டதும், குறியீடுகளாக வாசகனுக்கு விடப்பட்டதும் தான் விஷ்ணுபுரத்தைத் தேர்ந்த வாசகர்களுக்கு மிகவும் நெருக்கமானதாக ஆக்குகிறது. அவர்கள் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதிதாக ஒரு வாசல் திறக்கிறது.
நாவல் முழுவதும் தொடர்ந்து வரும் சில குறியீடுகள் உண்டு. எடுத்துக்காட்டாக பச்சை நிறம் ,கருப்பு நாய், கழுத்து நீண்ட வெண்பறவை போன்றவற்றைக் கூறலாம்.
மானுட மனதால் கற்பனை செய்ய முடியாத பிரபஞ்ச வலைப்பின்னலின் குறியீடான அதிமகத்தான ஸ்ரீசக்ரத்தின் யோனி- பச்சை நிறம். சக்தியின் மூலாதாரம். காமத்தின், படைப்பின் குறியீடு. அதுவே அடையப் பெற வேண்டியதுமான ஞானத்தின் குறியீடுமாகும். எந்த சஞ்சலமும் எதிர்வினையுமின்றி வெறுமனே சாட்சியாகப் பார்க்கும் மிருகத்தின் விழியே ஞானவிருட்சமான ‘மிருகநயனி’. இருளில் பச்சையாக ஒளிரும் மிருக விழிகளின் நிறமே மிருகநயனியின் நிறமும். தேடலுள்ளவனுக்கு மிருகநயனியின் பச்சைநிற ஒளியே அக இருளில் ஞானத்தின் பாதையைக் காட்டுகிறது. பச்சைமாமலை போல் மேனியனாகிய விஷ்ணுவின் நிறம் அது. ஞானத்தின் இருப்பிடமான விஷ்ணுபுரத்தின் உயர்ந்த சிகரம் –ஹரிததுங்கா (பசுங்குன்றம், பச்சைமலை) ஞானத்தின் பருவடிவமே.
பிங்கலன், அஜிதன், பாவகன், யோகவிரதன் என தருக்கம் நிறைந்த தேடல் கொண்டவர்கள் எல்லாரும் மிருகநயனியை அடைகிறார்கள். மிருகநயனியைச் சுற்றிலும் வேறு எந்த மரம் செடியும் இல்லாமல் ஒளியாலான வெட்டவெளி உள்ளது. ஞானதாகிகள் அனைவரும் தங்கள் தேடலில் தனிமையையும், வெறுமையையும் உணர்கின்றனர். அது விரக்தியால் அடைந்த வெறுமை அல்ல. கண்டுகொண்ட உண்மை மட்டும் தன்னந்தனியாக இருப்பதனால் உணரப்படும் வெறுமை. அஜிதன் மிருகநயனியின் அடியில்தான் எண்ணங்கள் ஒழிந்த ஒரு வெறுமையின் அகழியை ஒரு கணம் தாண்டுகிறான்.
பிங்கலுனுக்கு ஒரு ஒளிவீசும் பச்சைக்கல்லாகக் கையில் அகப்பட்டு அவனை அவன் தேடலை நோக்கி இட்டுச் செல்கிறது. அந்தக்கல் இருபகுதிகள் கொண்ட விதை போலத் தோன்றுகிறது. அது தர்க்கம் நிறைந்த அவன் மனது -எப்பொழுதும் எதிரெதிராகப் பிளந்து போராடும் இருநிலைகளைக் காட்டுகிறது. சாருகேசியுடன் ஆவேசமாகக் கூடும் போது கூட, அந்தச் செய்கையை மனதின் மற்றொரு பகுதி வேறு எவரோ போலப் பார்த்துக்கொண்டிருக்கிறது. “இருநிலையின்றி இதைக் கூடச் செய்யமுடியாதா என்ன?” என்று விரக்தி அடைகிறான். பின்னர் அஜிதர் ஸ்தூபியில் அமர்ந்திருக்கும் போது அந்த விதை அதன் தாய்ச்செடியை நோக்கி அவனை நடத்திச்செல்லுகிறது. மிருகநயனியின் அடியில் அவன் அடைந்த ஞானமே இந்த இருண்மை நிலை என்னும் தடையை உடைப்பதில் தான் வருகிறது. ‘எதிர்ப்பின்றி, குற்ற உணர்வும், பேத உணர்வும் இல்லாத போகமே பேரானந்தநிலை’ என்பது தான் பிங்கலனின் தரிசனம்.
பிற்காலத்தில் பிரளய சமயத்தில் பிங்கலனின் வாமமார்க்கத்தில் இணையும் பத்மன் அபேத நிலையில் காமத்தை உணர தன் மனக்குகைக்குள் செல்கிறான். அங்கே அவன் ஆழ்மனத்தின் மிருக கர்ஜனை கேட்கிறது. அவன் துவண்டு பிறழ்ந்தால் வெளியில் காத்துக்கொண்டிருக்கும் நரிகள் (புலண்கள்) கூறுபோட்டுத் தின்றுவிடும். ஆனால் பத்மன் சோனாவில் மூழ்குவதாக வரும் குறியீடு – அவன் காமம் எனும் நதியில் எதிர்ப்பின்றி மூழ்குவதைக் குறிக்கிறது. அது அவனைக் கடலுள் கொண்டு சேர்க்கும்!
கௌஸ்துபம் பௌத்த தரிசனம் வெல்லும் காலகட்டமாக இருப்பதால், அந்தப் பகுதி தொடங்குவதே பௌத்த மரபின் முக்கியக் குறீயீடுகளில் ஒன்றான யானையுடன்தான் (அங்காரகன்). பௌத்தத்தில் யானை மனவலிமையின் குறியீடு. அங்காரகன் இத்தனை காலம் விரும்பிச் செய்த, சுவர்ணகண்டத்தை அடிக்கும் வெண்கலப் பிடியை உதறி, ஞானத்தை உதறிய சித்தனைப் போல விடுதலையாகி முதுகிலும் தலையிலும் சேறுபடிய காட்டு யானையாகிறது. மிருகநயனியின் பச்சை ஒளியில் அங்காரகனின் கரிய பேருருவம் கரைவதை அஜிதன் பார்க்கிறான். அங்காரகன் கனவில் கண்ட தரிசனத்தை தன் மனவலிமையால் அடைந்து விட்டது. அஜிதன் அவன் கண்ட தரிசனமான காலசக்ரத்தின் மையப் புள்ளியான அகாலத்தைத் தன் மனவலிமையால் அடைந்தானா என்பதை அவனே அறிவான்!
சித்தன் வாழ்வின் பொருளை நிராகரிக்கும் சார்வாகனல்ல. ஞானத்தை அடைந்து அதையும் உதறி மேலே சென்ற பரிபூரணன். ஞானசபையில் அஜிதன் உத்வேகத்துடன் பேசிக்கொண்டிருக்கையில் காஸ்யபனை மடியில் வைத்தபடி மௌனமாக சித்தன் வேடிக்கை பார்க்கிறான். இந்தக் காட்சி முண்டக உபநிஷத்தின் புகழ்பெற்ற ‘ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்திருக்கும் இரண்டு பறவைகளில், ஒரு பறவை பழங்களைத் தின்கிறது, மற்றொன்று அமைதியாக அனைத்தையும் பார்த்தவண்ணம் இருக்கின்றது’ என்னும் படிமத்தை நினைவுபடுத்துகிறது.
இளம் காஸ்யபன் ஞானசபையின் வாசல் திறந்ததும் அதன் பெரிய படியைத் தொடாமலே தாவி உள்ளே நுழைகிறான். மானுட துக்கத்துக்குப் பரிகாரமாகாத வாய்ச்சொல் ஞானம், அடையாளங்கள், விருப்பங்கள் என அனைத்தையும் எடுத்த எடுப்பிலேயே அவன் தாண்டிவிட்டதன் குறியீடு அது.
பிரளயத்திற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கியவுடன், தன் வாலைத் தானே விழுங்கும் பாம்பு குறியீடாக வரும். வாலில் தொடங்கி தன் உடலைத் தானே விழுங்கிய பாம்பின் விழுங்கமுடியாத கடைசி மிச்சத்துடன் ஒரு பந்து போல சுருங்கி நீருக்குள் விழும் (ஒரு சொல் மௌனத்திற்குத் திரும்பியது போல). இந்து மதத்தின் பல மரபுகளில் இந்தக் குறியீடு முக்கியத்துவம் வாய்ந்தது. புராணங்கள் காலத்தை சர்ப்பமாக உருவகிக்கின்றன. பிரளயத்தில் காலமும் வெளியும் உள் ஒடுங்கும். அடுத்த யுக ஆரம்பத்தில் இந்த மிச்சமே (ஆதி சேஷம்) விரிந்து காலமும் வெளியுமாக மீண்டும் பிரபஞ்ச சிருஷ்டி உண்டாகிறது. நீரில் இருந்தே உயிர்களின் தொடக்கம் இருக்கும் என்கிறது. மகாவிஷ்ணு இந்த ஆதிசேஷனின் மீது தான் அறிதுயில் கொள்கிறார்.
நாவலின் தொடக்கம் முதல் இறுதி வரை வரும் இன்னொரு குறியீடு கருப்பு நாய். அது படைப்புக் கடவுள் பிரம்மனின் வாகனம் காலபைரவன் தான். காலத்தின் குறியீடான அவனே ஒவ்வொருவருடைய காலம் முடியும் போதும் காலனாக வருகிறான். படைப்பு அழிவைத் தன் கர்ப்பத்தில் சுமக்கிறது. பிரளயத்தில் கடைசியாக விஷ்ணுவின் சன்னிதியில் வந்து நிற்கிறான். காலம் அகாலத்தில் ஒடுங்குகிறது அல்லது காலத்தின் கணக்கு எல்லாருக்கும் ஒன்று தான்!
முதல் பகுதியின் தோற்றுவாயில் பிரும்மாண்டமான ஸ்ரீசக்ரத்தை வரைபவன் ஒரு வெண் பறவையாக மாறிப் பறந்து சென்று எங்கோ ஒருவனின் கனவில் நுழைந்து அவன் நனவில் எழ விரும்புகிறான். அதைத் தொடர்ந்து பல இடங்களிலும் நீண்ட கழுத்துள்ள வெண்பறவை ஒரு குறியீடாக வருகிறது. ஞான சபையின் மேற்கூரையில் எல்லா ரிஷி சிலைகளின் மீதும் அந்தப் பறவை அமர்ந்திருப்பதை அஜிதன் காண்கிறான். பிரளயத்தில் விஷ்ணுபுரப் பேராலயத்தின் கோட்டைச் சுவரில் அவை பறந்து வந்து மோதி உயிரை விடுகின்றன. காலந்தோறும் விஷ்ணுபுரத்தைத் தேடி வந்து கொண்டிருக்கும் ஞானதாகிகளே வெண்பறவைகள். அது அவர்களின் தேடல் அல்லது கேள்விகள் என்றும் பொருள் கொள்ளலாம். அவை எப்போதும் ஏதோ திசைவெளியிலிருந்து விஷ்ணுபுரத்தைத் தேடி வந்து கொண்டெ இருக்கின்றன. கடைசியில் பிரளயத்தில் விஷ்ணுபுரம் அழியும் போது அவையும் சேர்ந்து அழிகின்றன. மீண்டும் விஷ்ணுபுரம் தோன்றும் போது கூடவே அவையும் எழும்.

                                                                                                                                                (பகுதி - 2)

Wednesday, October 3, 2012

அறிவியல் கட்டுரை

"தமிழனுக்கு சினிமா நடிகைகளுக்குப் குசும்புப் பெயர்கள் வைத்து எழுதப்படும் சினிமா 'கிசுகிசு'வைத்தாண்டி எதையும் தமிழில் படிக்கப் பொறுமையில்லை. ஏனென்றால் தமிழில் இதுவரை சத்தான எந்த விஷயமும் உருப்படியாக எழுதப்படவில்லை - முக்கியமாக அறிவியல். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவதாகஅறிவியலை தமிழில் எழுதுபவர்களுக்கு உண்மையில் அறிவியலே தெரியாது, இரண்டாவதாக அறிவியல்நிபுணர்கள் எழுத வந்தால் அவர்களுக்கு எளிய தமிழில் பாமரருக்கும் புரியும் வண்ணம் தெளிவாக எழுத வராது. இது ஒரு பெரிய இடைவெளி. இந்த இரண்டு தகுதிகளும் கைவரப்பெறுதல் என்பது வெகு அபூர்வம். அவர்களாலேயே  அறிவியல் தமிழில் உருப்படியாக ஏதேனும் பங்களிக்கமுடியும். இந்தக் காரணத்தினாலேயே நான் அறிவியல்கட்டுரைகளை தொடர்ந்து தமிழில் எழுத வேண்டும் என்று முடிவு செய்தேன்"


இப்படி ஒரு முன்னுரையுடன் உங்கள் முதல் அறிவியல் கட்டுரையை வெளியிடுங்கள். கட்டுரைக்கு முன்னுரை மாதிரியும் இருக்கும், உங்களைப் பற்றிய 'எளிய' அறிமுகமாகவும் இருக்கும். ஒரே கல்லில் ஒரு மாந்தோப்பையே வீழ்த்திய முதல் ஆள் நீங்களாகத் தான் இருப்பீர்கள். பின்னே இத்தனை அருமையாக உங்களைப் புகழ்ந்து அறிமுகம் செய்துவைக்க வேறு எவரால் முடியும்?

அறிவியல் கட்டுரை எழுதுவதற்கு முன்பு முதலில் எந்தப் பெயரில் எழுதுவது என்பதைத் தீர்மாணித்துக் கொள்ளுதல் நல்லது. நிஜப்பெயரில் கட்டுரை எழுதி இணையம் முழுவதும் அர்ச்சனை வாங்க தைரியம் இல்லாதவர்கள் தங்கள் சொந்த நலத்தை மட்டும் விரும்பும் உற்ற நண்பர்களிடம் ஆலோசித்து ஒரு பொருத்தமான புனைப்பெயர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். புதுக்கவிதை எழுதுபவர்கள், தீவிர இலக்கிய எழுத்தாளர்கள்  'காப்பியக் காவலன்' 'கவிப்பித்தன்' 'பாரதிக் கம்பன்' தமிழ்த்தமிழன்' என்றெல்லாம் வைத்துக்கொள்வது போல அறிவியல் கட்டுரைஎழுத்தாளனுக்கும்  அதிநவீன தொழில்நுட்பம் தெறிக்கும் பெயர் வேண்டும். 'மின்சாரக்கம்பி' 'காஸ்மிக் காதலன்' 'மரபணுவின் மைந்தன்' இன்னும் கொஞ்சம் லேட்டஸ்டாக வேண்டுமென்றால் 'நியூட்ரினோ நாதன்' போன்றவை சிறப்பாக பொருந்தி வரும்.

அறிவியல் கட்டுரை எழுதுபவர்கள் எப்போதும் பால்கனியில் இருப்பவர்கள். அதைத் தமிழில் வாசிப்பவர்கள் தரை டிகெட்டுகள். எனவே தரை டிக்கெட்டுகளின் தரத்திற்கு உங்களைத் தாழ்த்திக் கொண்டு தான் நீங்கள் அறிவியல்கட்டுரை எழுதியாக வேண்டும். தரை டிக்கெட்டுகளுக்கு எதையும் ஜோக்காகச் சொன்னால் தான் புரியும். 'சென்னையில் இருப்பவர்கள் வெயில் காலத்தில் ஃபேன் போட்டு மின்சாரத்தைச் செலவழிக்கவே தேவையில்லை.  அவர்கள் கார்ப்பரேஷன் குழாயைத் திறந்தாலே போதும் ஃபேனை ஐந்தில் வைத்தது மாதிரி காற்று பீரிட்டுக் கொண்டு வரும். சரி, இப்பொழுது காற்று எப்படி அவ்வளவு வேகமாக வருகிறது என்று நாம் என்றைக்காவது சிந்தித்திருக்கிறோமா?  சரி, எளிமையாக விஷயத்திற்கு வருகிறேன். ஹை ப்ரஷர் தான் காரணம். எப்படியென்றால்....' என்று ஒவ்வொரு பத்திக்கும் ஒரு அசட்டுஜோக் வீதம் எழுதத் தெரியவேண்டும்.

நீங்கள் எழுத ஆரம்பித்துவிட்ட அறிவியல் கட்டுரையில் ஒரு அடிப்படையான விஷயம் உங்களுக்கே தெளிவில்லையெனில் கவலைப்பட வேண்டாம். ஒரு மாதிரி ரெண்டு வரியில் சுருக்கமாக 'மியாஸிஸ் செல் பிளவின் ஆரம்பத்தில் பிரிந்து பிளந்து நிற்கும் க்ரோமோசொம்களின் சிஸ்டர் க்ரொமாடிட்கள் குறுக்கு-சேர்க்கை என்னும் எளிய ஒரு செயல்பாடு நடைபெறுவதால் மரபணு மாற்றம் உண்டாகிறது' என்று எழுதிவிட்டு அடைப்புக்குறிக்குள் 'எளிய இந்த தகவலை விளக்கவேண்டும் என்று கேட்பவர்கள் பக்கத்துவீட்டில் ப்ளஸ்டூ பயாலஜி படிக்கும் பையனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும்' என்று எழுதிவிட்டால் வெட்கக்கேடுக்குப் பயந்து படிக்கும் அனைவரும் 'தெளிவாகப் புரிகிறதே!' என்று சொல்லிவிடுவார்கள். அல்லது நீங்களே அதே அடைப்புகுறிக்குள் 'பின்னொரு சமயம் நேரம் கிடைக்கும் பொழுது இதை விரித்து தனிக்கட்டுரையாக எழுதுகிறேன்' என்றும் போட்டுவிடலாம். யாரும் 'எங்கே விளக்க கட்டுரை?' என்று கேட்டுவரப்போவதில்லை என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். 

நீர் அது இருக்கும் இடத்தின் வடிவமும், நிறமும் பெறுவது போல அறிவியல் கட்டுரையும் அதை எழுதுபவரின் ஆளுமையையும், விருப்பங்களையும் பொருத்தே வடிவம் பெறும் என்பது அறிவியல் கட்டுரைகளுக்கானஅறிவியல் விதி. 

தத்துவத்திலும், ஆன்மீகத்திலும் விருப்பமுள்ளவர்களாக இருந்தால் எந்தத் துறை சார்ந்த அறிவியல்கட்டுரையையும் எப்படியாவது நீட்டி முழக்கி இழுத்துச் சென்று தத்துவத்திலும் ஆன்மீகத்திலும் கோர்த்து முடிக்க வேண்டும். பிரபஞ்ச தோற்றம், வளர்ச்சி பற்றின கட்டுரையில் "இதைத் தான் யஜுர் வேதத்தின் தைத்திரீய உபநிடதம் -ஆகாசாத் வாயு: வாயோரக்னி: அக்னேர் ஆப: அத்ப்ய ப்ருதிவி, ப்ருத்வியா ஓஷதய: ஓஷதீப்யோ அன்னம், அன்னாத் புருஷ:' என்கிறது. இதையே வேதம் தமிழ் செய்த மணிவாசகப் பெருமானும் -'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊணாகி உயிராகி' என்று தெள்ளு தமிழில் விளக்குகிறார்" என்று எழுதலாம். இடையில் வரும் சமஸ்கிருத வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் எழுத வேண்டியதில்லை. கட்டுரையில் புரியவே புரியாத இடங்கள் இருப்பது பலம் தான். கட்டுரை எழுத்தாளனின் எல்லைக்குள்ளேயே இருக்கும். யாரும் கேள்வி கேட்டு இம்சைப் படுத்தமாட்டார்கள்.

பாரத நாட்டின்  பழைய மரபுகள் மற்றும் பண்பாட்டின் மேல் மதிப்பும், நமது அறிவியல் பாரம்பரியத்தின் மீது நம்பிக்கையும் இருப்பவர்கள் எழுதும் அறிவியல் கட்டுரையில் "பிதாகரஸ் தேற்றத்தை 2800 ஆண்டுகளுக்கு முன்பே ச்ரௌத சூத்திரத்தின் அங்கமான சுல்ப சூத்திரத்தில் நமது பௌதாயன ரிஷி எழுதிவைத்துவிட்டார். நமது பாரத தேசத்தவர்களே நமது அறிவியல் பாரம்பரியத்தை அறியாமல் மேற்கைப் பார்த்து வாய்பிளந்து நிற்பது வேதனையானது" என்று எழுதலாம். பாரதப் பன்பாட்டின் மேல் இதே நம்பிக்கைகள் உள்ள ஆனால் அறிவியல்விஷயத்தில் மட்டும் சற்று முற்போக்கான எழுத்தாளர்கள் இவற்றை நக்கலடித்து, எதிர்த்து எழுதும் வாய்ப்புள்ளது. ஆகவே கட்டுரையின் அடுத்தவரியிலேயே "அதிலும் இன்னும் வேதனையானது என்னவென்றால் நமது தேசத்தின் பாரம்பரியத்தை நன்கு உணர்ந்தவர்களும் இந்த மேற்கு அறிவியல் மாயையில் வீழ்ந்துகிடக்கும் சோகம் தான்" என்று ஒரு பக்கவாட்டு உதை (தமிழில் 'சைடு-கிக்') கொடுத்து எழுதிவிடுவது நீங்கள் தீர்க்கதரிசி என்பதைக் காட்டிவிடும்.

இலக்கிய ஆர்வமும் இருந்து அறிவியல் கட்டுரையும் எழுதுவோர் என்றால் எல்லா வரியையும் கவித்துவத்துடன் எழுதவேண்டும். அறிவியல் உண்மைகளை விளக்கி விட்டு பின்பு ஒரு பாரா அதைப் பற்றி வியந்து விகசித்து எழுதப் பழக வேண்டும். கட்டுரையின் ஆரம்பத்திலும், நடுவிலும், முடிவிலும் புதுமைபித்தன், ஜெயகாந்தன், ஜெயமோகன் என்று தமிழிலக்கிய நட்சத்திரங்களின் முக்கியமான படைப்புகளை மேற்கோள் காட்ட வேண்டும். 'பாக்டீரியா புதுமைபித்தனின் காஞ்சனை மாதிரி -வெறும் கண்ணுக்குத் தெரியாது, நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்க முடியும். அதன் அளவுடன் ஒப்பிடுகையில் ஒரு அமீபாவின் உருவம் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் போல மிகவும் பெரியது'.

நீங்கள் உலக இலக்கிய பரிச்சயம் உள்ளவராக இருந்தால், அதையும் அறிவியல் கட்டுரையின் ஊடே கோடி காட்ட விரும்பினால், உருமாற்றம் பற்றிய அறிவியல் கட்டுரையில் கூட்டுப்புழு பட்டாம்பூச்சியாக உருமாறுவதை இப்படித்தான் ஃப்ரான்ஸ் காஃப்கா தனது மெடாமார்ஃபசிஸ் நாவலில் தந்தையினால் உண்டாகும் மன அழுத்தத்தால் கரப்பான் பூச்சியாக மாறுகிறார்' என்று எழுதலாம். தஸ்தயேவ்ஸ்கி, தொல்ஸ்தொய், புஷ்கின், மாக்ஸிம் கார்கி, பத்யுஷ்கோவ், த்யுத்ஷேவ், க்ரிபோயெடோவ் போன்ற ரஷ்ய இலக்கியவாதிகளின் பேரை கட்டுரையில் இன்ன இடம் இன்ன காரணம் என்று இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் தூவிக்கொள்ளலாம். மறுப்பே இல்லாமல் உங்களுக்கு ஒரு முற்போக்கு அறிவியல் இலக்கியவாதி முத்திரை கிடைத்து விடும்.

இலக்கிய அறிவியல் கட்டுரையாளர்களுக்கு இன்னொரு முக்கிய பணி உள்ளது. அன்றாட நடைமுறை மொழியில் எழுதி யதார்த்த இலக்கியம், வட்டார மொழி இலக்கியம் படைக்கப்படுவது போல அறிவியல் கட்டுரைகளையும் வட்டார மொழியில் எழுதலாம். அந்த வகையில் நீங்கள் 'யதார்த்த அறிவியல் கட்டுரைகள்' 'வட்டார மொழிஅறிவியல்' போன்ற துறைகளின் முன்னோடி ஆகும் வாய்ப்புள்ளது. உதாரணம்: மதுரை வட்டார மொழியில் அணுக்கருவை விளக்கையில், "பொரட்டானும், நியூட்டுரானும் அணுவுக்கு நடுவாக்குல பொந்துனாப்புல இருந்துக்கிட்டு எனக்கென்னாண்டு 'செவசெவா'ண்டு ஒக்காந்துக்கிருக்கும். ...க்காலி.. எலக்குட்ரானு மட்டும் மருதையச் சுத்தின களுத மாதிரி கேனக்கூனா கணக்கா நிக்காம சுத்திக்கே இருக்குமப்பேய்ய்ய்' என்று எழுதலாம்.

'மக்களே இப்பம் சில எளவெடுத்தவன் கள்ளுகுடிச்சா வயிற்றிகிடக்காம மப்பு தலைக்கு கேறி சலம்புதானே... ஏன்னு யோசிச்சனும் பிலேய்.. கல்லீரல்ல இருக்கப்பட்ட ஆல்கஹால் டீஹைட்ரோஜீனேஸுன்னு ஒரு நொதியாக்கும் மத்தவன.. அதாம்பிலேய்.. எரிப்பன உடச்சு நசிக்குதது. அதுல வல்ல கேடும் உண்டாகும்பமாக்கும் ஆளு கெடந்து குஞ்சுல எறும்பு கடிச்ச கொச்சு கணக்கா கெடந்து துள்ளுகது' என்று கல்லீரல் பற்றியும் ஆல்கஹால் சிதைமாற்றம் பற்றியும் நாஞ்சில் மலைத்தமிழில் எழுதலாம்.

அல்லது ஏதாவது அடிக்க வராத சாதியின் பாஷையில், 'முதல் தடவை வ்யாதி உண்டாகறச்சே உத்பத்தியாற எதிர்ப்பு ஜீவாணுக்கள்ல சிலது தேமேன்னு ஒன்னும் பண்ணாம பிரம்மமாட்டம் போய் ஒக்காண்டுடும். இதத்தான் இம்முனாலஜிக்காரா மெமரி செல்னு ஷொல்லுவா. திருப்பி அதே வ்யாதி க்ருமி வந்தாக்கே அந்த மெமரி செல் காளசம்ஹார மூர்த்தியாட்டம் ருத்ரதாண்டவம் ஆடிண்டு வந்து க்ருமிகளை எல்லாம் க்ஷணநேரத்திலே பிராணன வாங்கி வதம் பண்ணிப்டும். அதனால தான் நாம பகவத் க்ருபையாலே க்ஷேமமா இருந்துண்டு ரசஞ்சாதமும், நார்த்தங்கா ஊறுகாயும் ஷாப்டறோம்' என்று எழுத முயற்சி செய்து பார்க்கலாம்.

இவ்வளவுக்குப் பிறகும் உங்கள் அறிவியல் கட்டுரைகளை ஒருவரும் வந்து படித்துக் கருத்து சொல்வதில்லையே என்ற கவலை வரும். பொறுமை. அதற்கும் வழி இருக்கிறது. உலகத் தமிழர்கள் எங்கிருந்தாலும் ஓடி வந்து சிக்கும் கன்னி ஒன்று உள்ளது. அது சினிமாவும் சினிமா சார்ந்த எதுவும் (முக்கியமாக நடிகைகள்). கட்டுரைகளுக்கு முடிந்தவரை கிளுகிளுப்பான தலைப்பு வைக்கவும். எடுத்துக்காட்டாக 'மெலமின்' என்னும் நிறமி பற்றிய அறிவியல்கட்டுரைக்கு 'மைக்கேல் ஜாக்சனுக்கும் ஏமி ஜாக்சனுக்கும் என்ன கசமுசா?' என்று தலைப்பு வைக்கவும். மறக்காமல் ஏமி ஜாக்சனின் தொப்புள் தெரியும்படியான கவர்ச்சியான ஒரு வண்ணப் படத்தை தரவிறக்கி உங்கள் கட்டுரையின் நடுவே இணைக்கவும். இப்போது பாருங்கள் ஏமி ஜாக்சன் செய்யும் மாயஜாலத்தை. உலகெங்குமுள்ள சினிமாத் தமிழர்கள் கூகுளில் "ஏமி ஜாக்சன்+தொப்புள்" என்று தேடு பொறிகளில் இடும் எல்லாத் தேடலையும் கூகுள் தன் இணையற்ற கருணையால் அள்ளிக்கட்டி கொண்டுவந்து உங்கள் அறிவியல் கட்டுரைப் பக்கத்தில் கொட்டிவிட்டுப் போவதை கண்ணீர்வழிய கண்டு ஆனந்திப்பீர்கள். அறிவியல் கட்டுரைக்கு நடிகையின் தொப்புள் படத்தைப் போட்டு அறிவை அசுத்தப்படுத்தலாமா என்று யோசிக்காதீர்கள். அறிவு நெருப்பு போல. 'நெருப்புக்கு ஏதுடா சுத்தம் அசுத்தம்?' என்று நான் கடவுள் படத்தில் ஜெயமோகனே டயலாக் பேசி இருக்கிறார். ஆகவே துணிந்து செல்லுங்கள்.

இன்னொரு வழியும் உண்டு முகப்புத்தகம், கூகுள் கூட்டல் என ஒன்றுவிடாமல் எல்லா சமூக வலைப்பக்கத்திலும் உறுப்பிணராகுங்கள். அங்கே ஏதாவது ஆப்பிரிக்க மாடல் அழகியின் புகைப்படத்தைப் போட்டு அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆரய்ந்து கொண்டிருக்கும் ஏதாவது ஒரு தமிழ் நண்பர் குழாமில் போய் அந்த ஆப்பிரிக்க அழகியின் படத்தைச் சிலாகித்து இரண்டு வார்த்தை எழுதிவிட்டு 'இது தொடர்பாக 'ஆப்பிரிக்காவும் அணுசக்தியும்' என்று போன வருடம் நான் எழுதிய அறிவியல் கட்டுரை பாகம்-1, பாகம்-2' என்று சுட்டியைப் போடுங்கள். உங்கள் துஷ்பிரயோகத்தைச் சுட்டிக்காட்டி அசிங்கமாகத் திட்டு விழும். இருந்தாலும் பரவாயில்லை. ஒன்றிரண்டு பேர்கட்டுரையை க்ளிக்கி விடுவார்கள் என்று அனுபவம் சொல்கிறது.

தெரிந்தவர், தெரியாதவர், நண்பர், விரோதி என்று ஆயிரக்கணக்கானவர்களிடம் நண்பர்களாக இணைந்துகொள்ளுங்கள். அவர்கள் என்ன செய்தாலும் லைக் போடுங்கள் அல்லது +1. பாராட்டுங்கள். சிலர் இரக்கப்பட்டு உங்கள் அறிவியல் கட்டுரைக்கும் 'அருமையாக எழுதியுள்ளீர்கள். அதிலும் அந்தக் கடைசிப் பத்தி கண்கலங்க வைத்து விட்டது நண்பரே. மிக்க நன்றி சுட்டிக்கு, வாழ்த்துக்கள்!!!!' என்று பின்னூட்டம் போட்டு உங்கள் எழுத்தாற்றலை ஊக்குவிப்பார்கள். 

அப்படியே இணையத்தில் அறிவியல் கட்டுரைக்கு கொஞ்சம் 'பேர்தெரிந்த பார்ட்டி'யாக நீங்கள் ஆகும் காலம் வரும். அப்போது கொஞ்சம் பந்தாவாக நடந்து கொள்ளத் தெரிய வேண்டும். முக்கியமாக யார் எது எழுதினாலும் அதைப் படித்ததாகவே காட்டிக் கொள்ளக் கூடாது. லைக் போடுவதோ, பின்னூட்டம் போடுவதோ கூடவே கூடாது. வற்புறுத்தி யாராவது கேட்டால் மட்டும், 'இன்னும் கொஞ்சம் தெளிவாகவும், கோர்வையாகவும் எழுத முயற்சிக்கலாம். கட்டுரைநீளமாக இல்லாமல் அரைப்பக்கத்துக்குள் சுருக்கமாக இருந்தால் தான் வாசகனைச் சென்றடையும். முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்' என்று மட்டும் போட்டால் போதும். பாராட்டின மாதிரியும் இருக்கவேண்டும், பாராட்டாத மாதிரியும் இருக்க வேண்டும். கவனம்.

ஒருகட்டத்தில் அறிவியல் கட்டுரை எழுத விஷயமே கிடைக்கவில்லை என்றாலும் கவலைப்படாதீர்கள். பத்தாம் வகுப்பு தமிழ்மீடியம் அறிவியல் பாடப்புத்தகத்தை எடுங்கள். தங்கத்தை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுப்பது எப்படி என்று ஒரு பாடம் இருக்கும். 'தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை? தங்கத்தைக் காதலிக்கும் பெண்களா இல்லை? என்னும் மிஸ்டர் ரோமியோ படத்தில் வைரமுத்துவின் வைரவரிகளுக்கு ஏற்ப தங்கத்தை விரும்பாத பெண்கள் நமது நாட்டில் உண்டா என்ன? ஆனால் இந்த தங்கம் நமக்கு எப்படிக் கிடைக்கிறது என்று நாம் எப்பொழுதாவது சிந்தித்திருக்கிறோமா? அதற்கு விடை தேடித் தான் இந்தக் கட்டுரை' என்று முதலில் நாலு வரி எழுதிவிட்டு முடிந்தால் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தை கொஞ்சம் வரிகளை மாற்றி எழுத முயற்சி செய்யுங்கள். முடியாவிட்டாலும் மோசமில்லை. அப்படியே அந்தப் பாடத்தை எழுதி ஒரு அறிவியல் கட்டுரைதயாரித்து விடுங்கள். இது பத்தாம் வகுப்பு மாணவராலும், ஆசிரியராலும் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். கண்டுபிடித்து விட்டால்? என்று பதறாதீர்கள். வீட்டில் கஷ்டப்பட்டு இல்லாத காரணமெல்லாம் சொல்லி பணம் வங்கி இண்ட்டெர்நெட் மையத்திற்கு வரும் பையன்கள் உங்கள் அறிவியல் கட்டுரையை படிக்கவா வருகிறார்கள்?
'அப்படினா வாத்தியார்... ?' 

போங்க சார், நீங்கள் உலகமே தெரியாதவராக இருக்கிறீர்கள். அறிவியல் கட்டுரை எழுத நீங்கள் சரிப்பட்டு வரமாட்டீர்கள். பேசாமல் www.jeyamohan.in என்று டைப் அடித்து தத்துவம், இலக்கியம், வரலாறு, வேதாந்தம் என்று எதையாவது படித்து எப்படியோ போங்கள்....

-பிரகாஷ் சங்கரன்.