Friday, July 27, 2012

பறைச்சி பெற்ற பன்னிருகுலங்கள் - கேரள நாட்டார் கதை


(குறிப்பு: எழுத்தாளர் ஜெயமோகன் 'வேதங்களின் முக்கியத்துவம் ஒரு பொதுப் பிரமையா?' என்னும் தலைப்பில் மிக விரிவாக எழுதியிருந்த அற்புதமான கட்டுரையில் உண்மையில் இந்த நாட்டில் வேதம் யாருக்கும் மறுக்கப்ட்டதல்ல என்றும், எவ்வாறு ஐரோப்பியர்களின் கற்பிதத்தால்  அப்படி ஒரு தவறான புரிதல் நம் மக்களிடையே வந்தது என்றும், தொழிலின் அங்கமாக எப்படி எல்லா சாதிகளிலும் வேதத்தின் பகுதிகள் பாரம்பரியமாகப் பயிலப்பட்டன என்பது பற்றியும் கேரள சமூகத்தில் சமீபகாலம் வரை நடைமுறையில் இருந்த நிஜ உதாரணங்களுடன் விளக்கியிருந்தார். இக்கட்டுரை நான் குழுமத்தில் பகிர்ந்திருந்த அதனுடன் தொடர்புள்ள ஒரு கேரள தொண்மக்கதை. ஜெ  வலைப்பக்கத்திலும் வெளியிடப்பட்டது )
****
கட்டுரையில் ஜெ சொன்ன ஒரு சுவாரசியமான கதை – கேரளத்தில் ‘இளையது’ என்றழைக்கப்படும் விலக்கப்பட்ட பிராமணப் பிரிவு உருவான கதை. மேற்குமலைக் காடுகளின் மரங்களின் எண்ணிக்கைக்குச் சமமாக யக்ஷிகளும், நீலிகளும், சாத்தன்களும், கதைகளும் உள்ள கேரளத்தில் உள்ள ஒரு செவிவழிக் கதை. இக்கட்டுரையுடன் சேர்த்து வாசிக்கலாம். ஜாதி, வேதம் பற்றின பல விசித்திரமான தகவல்கள் உடையது. ஜெ சொன்ன ‘இளையது’ பற்றியும் அதில் உண்டு.
விக்ரமாதித்த மகாராஜாவின் அமைச்சராக இருந்த வரருசி என்கிற பிராமணனுக்கும் ஒரு பறைக்குலப் பெண்ணுக்கும் பிறந்த பன்னிரு குழந்தைகளைப் பற்றிய கதை இது. ‘பறயி பெற்ற பந்திருகுலம்’ என்று கேரளத்தில் இக்கதை பிரபலம். இவர்கள் மகனாகப் பிறந்த ‘வாயில்லாக் குந்நிலப்பன்’, ‘நாராணத்து பிராந்தன்’ ஆகியோரும் இன்றும் தெய்வமாகவும், ஞானியாகவும் போற்றப்படுபவர்கள்.
கதை இப்படிப் போகிறது….
விக்ரமாதித்தன் ஒருமுறை வரருசியிடம் இராமாயணத்தில் மிக முக்கியமான வரி எது என்று கேட்கிறார். வரருசியால் சொல்ல முடியவில்லை. ராஜா நாற்பத்தியொரு நாட்கள் கெடு விதிக்கிறார். வரருசி அறிஞர்களைக் கேட்டுப்பார்க்கிறார், ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. நாற்பதாம் நாள் இரவில் ஒரு ஆலமரத்தின் அடியில் கவலையுடன் அமர்ந்து ஓய்வெடுக்கும் பொழுது, இரண்டு ஆவிகள் காலமேனிப் பறவைகளின் உருவில் அம்மரத்தின் மீது வந்தமர்ந்து பேசத் தொடங்குகின்றன. அவை ராமாயனத்தைப் பற்றிப் பேசி, அதில் மிக முக்கியமான வரியாக, ராமனுடன் காட்டுக்குப் புறப்படும் லக்ஷ்மணனுக்கு சுமித்ரை சொல்லும் அறிவுரையாக வரும், “ராமனைத் தந்தை தசரதனாக நினைத்துக்கொள், ஜனகன்மகள் சீதையை நானாக (தாயாக) நினைத்துக்கொள், காட்டை அயோத்தியாக நினைத்துக்கொள், பயணம் சுகமாகிவிடும்” என்ற செய்யுள் வரிகளைக் கூறி, அதிலும் “ஜனகன் மகளைத் (நானாக) தாயாக நினை” (மாம் விதி ஜனகாத்மஜம்) என்னும் வரி மிகமுக்கியமானது என்று கூறுகின்றன. கூடவே வரருசி இப்பொழுது பிறந்திருக்கிற ஒரு பறையர்குலப் பெண்ணை மணக்க வேண்டும் என்பது விதி என்றும் பேசிக்கொள்கின்றன.
வரருசி
மறுநாள் விக்ரமாதித்தனிடம் ராமாயணத்தின் முக்கியமான வரி என்ற விடையைக் கூறி அவன் பாராட்டுக்கு ஆளான வரருசி, இதுதான் சமயமென்று கருதி முன்கூட்டியே தெரிந்து விட்ட விதியை மாற்ற எண்ணி நேற்று பிறந்த பறையர் குலப் பெண்குழந்தையால் அரசனுக்கு ஆபத்து என்று கூறுகிறான். அரசனது ஆணைப்படி படை அந்தக் குழந்தையைத் தேடிக் கண்டுபிடித்து, சிறு தெப்பத்தில் வைத்து ஆற்றில் விடுகிறது.
பலவருடங்கள் கழித்து ஒருமுறை வரருசி பிரயாணத்தில் ஒரு அந்தணர் வீட்டில் உணவு உண்ணச் சம்மதிக்கிறார். உணவு உண்பதற்கு அவர் விதிக்கும் நுட்பமான சங்கேத மொழியில் அமைந்த விதிகளை வீட்டிற்குள் இருந்து ஒரு பெண்குரல் புரிந்து கொண்டு பதிலளிக்கிறது. அவளின் அறிவில் கவரப்பட்டுப் பின் அவளை மணக்கிறார். உண்மையில் அந்தப் பெண் நிளா நதியின் (பாரதப்புழை) கரையில் உள்ள கொடுமுண்டா கிராமத்தில் நரிபட்டாமணையைச் சேர்ந்த ஒரு பிராமண குடும்பத்தால் எடுத்து வளர்க்கப்பட்ட பறைக்குலத்தில் பிறந்த அதே பெண் தான். இந்த உண்மை தெரியவந்ததும் விதியின் வலிமையை உணர்ந்தவராக வரருசி தன்னைத் தானே சாதி விலக்கு செய்து கொண்டு மனைவியுடன் அடர்ந்த காடுகளின் வழி யாத்திரையைத் தொடங்குகிறார்.
பறயி
ஒவ்வொரு முறை மனைவி பிரசவிக்கும் போதும், ’குழந்தைக்கு வாய் இருக்கிறதா? என்று கேட்கிறார். மனைவி ‘இருக்கிறது’ என்று சொன்னவுடன், “வாயைக் கொடுத்த இறைவன் அதற்கு உணவையும் கொடுப்பான். குழந்தையை அங்கேயே விட்டுவிடு!” என்று சொல்லிவிடுகிறார். இப்படிப் பதினோரு குழந்தைகளை இழந்த மனைவி, பண்ணிரண்டாவது குழந்தை பிறந்தவுடன் அதற்கு வாய் இல்லை என்று பொய் சொல்லி விடுகிறாள். ‘சரி குழந்தையை எடுத்துகொள்’ என்று கூறுகிறார் வரருசி. பின்னர் பாலூட்ட எண்ணிக் குழந்தையைப் பார்க்கையில் நிஜமாகவே அதற்கு வாய் இல்லை. பதறிய மனைவி ஞானிகளின் வாக்கு பலிக்கும் என்பதை உணர்கிறாள். தன் தவறால் தன் குழந்தைக்கு நேர்ந்ததை எண்ணி வருந்துகிறாள். வரருசி அந்தக் குழந்தையை அந்தக் குன்றின் மேலேயே தெய்வமாகப் பிரதிஷ்டை செய்கிறார். அது ‘வாயில்லா குந்நில் அப்பன்’ (குன்றில் இருக்கும் வாயில்லா தெய்வம்) என்று அழைக்கப்படுகிறது. அந்தக் கோயில் பாலக்காடு மாவட்டம் கடம்பாழிபுரம் என்னும் ஊரில் இன்றும் உள்ளது.
அதற்கப்புறம் வரருசி கேரளத்தின் மண்ணூர் என்னும் இடத்தில் சமாதியடைந்தார் என்று கதை முடிகிறது. வரருசிக்கும், பறைக்குலப் பெண்ணுக்கும் பிறந்த பதினோரு பிள்ளைகளும் பின்னாளில் வளர்ந்து ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்கின்றனர். அவர்கள் அனைவரும் மூத்த மகனின் வீட்டில் தந்தை இறந்த நாளன்று கூடி அவருக்கு நீர்க்கடன் செய்கின்றனர். இன்றும் அவர்கள் பரம்பரையினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், பதினோரு பிள்ளைகளும் வெவ்வேறு ஜாதி, மதங்களில் வளர்க்கப்பட்டனர். பதினோரு பிள்ளைகளும் முறையே; மேழத்தோள் பிரம்மதத்தன் அக்னிஹோத்ரி (பிராமணர்), பாக்கனார் (பறையர்), ராஜகன் (வன்னார்), நாராணத்து பிராந்தன் (இளையது), காரக்கல் மாதா (உயர்குல நாயர்), அகவூர் சாத்தன் (வைஸ்யன்), வடுதல நாயர் (படை நாயர்), வள்ளோன் (வள்ளுவர் குலம்), உப்புக்கொட்டான் (இஸ்லாமியர்), பாணனார் (பாணர்), பெருந்தச்சன் (தச்சர்). (வாயில்லா குந்நிலப்பன் – தெய்வம்)
பெரும்பாலானவர்களின் தலைமுறைகள் இன்றும் பாலக்காடு மாவட்டத்தின் தெற்குப் பகுதிகளில் (ஷொரனூர், பட்டாம்பி, த்ரிதல) வசிக்கின்றனர்.

எனக்கு இந்த நாட்டார் செவிவழிக்கதை முக்கியமாகப் படுவதற்குக் காரணம் உண்டு. கேரளத்தின் ஜாதி வேறுபாடுகள் மிகுந்த சூழ்நிலையில் வித்தியாசங்களை அழித்து எல்லாரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்னும் கருத்தை முன்னிறுத்த இந்தக் கதை ஏற்பட்டிருக்கலாம். எல்லோருடைய உடம்பிலும் பறைச்சி பார்ப்பனன் இருவரின் ரத்தமும் கலந்து ஓடுகின்றது, எனவே பிறப்பால் வித்யாசமில்லை என்று சொல்ல வந்திருக்கலாம். இந்தக் கதையின் படி வெவ்வேறு ஜாதியில் பிறந்தவர்கள் வேதக்கல்வி கற்று அதில் முக்கிய ஆளுமைகளாக உருவாகியிருக்கின்றனர். ஆளும் தம்பிரான்கள் யாரென்று நியமித்திருக்கின்றனர். உதாரணமாக சில..
1. பறையர் குலத்தில் வளர்க்கப்பட்ட பாக்கனார் தான் நம்பூதிரிகளில் இருந்து ‘ஆழ்வாஞ்சேரி தம்பிராக்கள்’ என்கிற தம்பிராக்களை (ஒருவகையான ஆளுனர்கள்/ தலைவர்கள்) உருவாக்கி அந்தப் பகுதியின் தலைவர்களாக நியமித்தார்.
பாக்கனார்

ராஜகன்
2. வன்னார் குலத்தில் வளர்ந்த ராஜகன் என்பவர் மிகப்பெரும் வேத நிபுணராக இருந்துள்ளார். பூர்வ மீமாஸ்கரான குமாரிலபட்டரின் மாணவராக இருந்து அவரின் பட்டா பள்ளியிலிருந்து மாறுபட்டு பிரபாகர பள்ளியை கேரளத்தில் பிரபலமாக்கியவர். அவர் தொடங்கியது தான் கடவல்லூரிலுள்ள வேதவித்யாலயம். கேரளத்தின் மிகமுக்கியமான வேதக்கல்வி நிலையம் இது. மாநிலத்தின் எந்த கல்விக்கூடத்தில் வேதம் பயின்றாலும் ராஜகன் தொடங்கிய கடவல்லூர் கல்வி நிலையத்தில் தேர்வில் வென்றால் மட்டுமே அவர்கள் கல்வி அங்கீகரிக்கப்படும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. கடவல்லூர் அன்யோன்யம் என்று இன்றளவும் இந்தப் பாரம்பரியம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஜெ கூட ஒரு அங்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அதன் புதியபரிணாம வளர்ச்சியை எழுதியது ஞாபகம் இருக்கலாம்.
நாராணத்து பிராந்தன்

3. கீழ்சாதி பிராமண குலத்தில் வளர்ந்த நாராணத்து பிராந்தன் வானவியல் பண்டிதர். ஹரிதகாரணம் என்னும் சோதிட நூலை எழுதியவர். ஆத்மஞானியான இவர் சுடுகாட்டில் சாம்பலில் புரண்டு கொண்டும், மலையில் கல்லை உருட்டிவிட்டுக் கொண்டும், ஆற்றின் கரையில் இரவில் மல்லாந்து படுத்தபடி நட்சத்திரங்களையும் பார்த்தபடி இருந்ததனால் பிராந்தன் (பைத்தியம்) என்று அழைக்கப்பட்டார். நாராயணமங்கலம் மனை என்னும் நம்புதிரிக் குடும்பத்தில் வளர்ந்து நாராணத்து பிராந்தன் என்று அழைக்கப்பட்டார்.



4. வள்ளுவர் குலத்தில் வளர்ந்த பிள்ளையே தமிழில் திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் என்கிறது கேரள நாட்டார் மரபு. கேரளத்திலும் வள்ளுவர் குலம் வானவியல், சோதிடம், மருத்துவம், மந்திரவாதம் முதலியவற்றில் பாரம்பரியமாக தேர்ந்தவர்கள்.
5. பாணர் குலத்தில் (இசைக்கலைஞர்கள், கேரள சாதி அடுக்கில் தாழ்த்தபட்ட வகுப்பினர்) – தொல்காப்பியம், அகநானூறு, பதிற்றுப்பத்து போன்றவற்றில் குறிப்பிடப்படும் பாணர் இவர்களே என்கிறது நாட்டார் மரபு.
வள்ளுவர்
பாணன்









6. மேழத்தோள் அக்னிஹோத்ரி குழந்தைத் திருமணத்தை ஒழிப்பதிலும், சைவ-வைணவ ஒற்றுமைய உண்டாக்கியதிலும் கேரளத்தில் மிகமுக்கியமானவர்.
வாயில்லாக்குந்நிலப்பன்
உப்புக் கொட்டன்
வடுதல நாயர்
காரக்கல் மாதா
ஆராய்ந்தால் இன்னும் பல தகவல்கள் பல திறப்புகளைக் கொடுக்கக் கூடும். வரருசி என்னும் பெயரில் இந்தியாவின் பல பகுதிகளிலும் பலகாலகட்டத்தில் பலர் குறிப்பிடப்படுகின்றனர். கேரளத்தில் குறிப்பிடப்படுபவரின் காலம் பொது ஆண்டு 4ம் நூற்றாண்டு. ஆனால் தொன்மக் கதையாக (விக்ரமாதித்தனும் வேதாளமும்) விக்ரமாதித்தரின் காலம் பொது ஆண்டுக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன். ஆனால் விக்ரமாதித்தன் என்ற பெயரிலும் பல அரசர்கள் இருந்துள்ளதால் இவர் வேறு விக்ரமாதித்தன் என்று கொள்ளலாம். அதன்படி ராஜகன் குமரிலபட்டரின் மாணவர் என்னும் செய்தியிலிருந்து சங்கரர் காலத்தை பற்றிய கணக்கீடுகளை ஆராயலாம். நாட்டார் கதைகள் எப்பொழுதும் வரலாற்றெழுத்தில் எழுத்திலறியா சுவாரஸ்யமான புதிய தகவல்களைக் கொடுக்ககூடியவை - உரிய கவனம் கொடுக்கப்பட்டால்!
-பிரகாஷ் சங்கரன்.
(படங்கள்- நன்றி: ஓவியர் A.Roy :)

எறும்புகளின் உழைப்பு


எறும்புக் கூட்டங்களின் அதிகார அடுக்குகளில் எல்லா எறும்புகளும் வேலைத் திறனில் சமம்தான் என்று இதுநாள் வரை நம்பப்பட்டு வந்தது. ஆனால் இது உண்மையில்லை என்றும், ‘விஷயமறிந்த’ தனிப்பட்ட சில எறும்புகளின் தீர்மானங்களே மொத்தக் கூட்டத்தையும் புதிய வாழ்விடங்களை நோக்கி வழி நடத்துகின்றன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிஸ்டல் பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு பற்றிய சுட்டி இங்கே… http://www.wired.com/wiredscience/2011/08/experienced-ants/
விஷயம் ஒருபுறம் இருக்கட்டும். இந்த அறிவியல் தகவலை நாம் நன்கு அறிந்த சிலர் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்தால்…
1 . ‘வசவு புகழ்’ சகா.செம்பட்டை :
“மார்க்சியம் என்றும் அறிவியல் பூர்வமாகவும், வரலாற்றின் இயங்கியல்படியும் தான் இயங்கும் என்பதை அறியாத வலதுசாரி, பாசிச வெறி பிடித்த, முதலாளிகளின் கைக்கூலியான, தொழிலாளர் வர்க்க எதிரிகளான, ஆன, ஆன, ஆன கயவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் நவீன அறிவியல் நமது மூத்த தோழர் மார்க்ஸ் சொன்னது உண்மை என்று நிரூபித்து விட்டது. உழைப்பாளர் வர்க்கமாகிய வேலைக்கார எறும்புகளை வழிநடத்தி தோழர் மார்க்ஸ் வகுத்த செம்புரட்சிப் பாதையில், சமத்துவ சமூகத்துக்கான புரட்சியை ப்ரோலட்டேரியன் எறும்புகளே முன்னின்று நடத்துகின்றன என்பதை செவ்வெறும்புகளை வைத்து விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளார்கள். இதை அறியாத வலதுசாரி, பாசிச வெறி பிடித்த, முதலாளிகளின் கைகூலியான, தொழிலாளர் வர்க்க எதிரிகளான, ஆன, ஆன, ஆன………







2 . ‘காசிரங்கா புகழ்’ ஹரிராம்ஜி தீனதயாள்ஜி அக்னிஹோத்ரிஜி மகாராஜ்:
‘ப்ராஹ்மநோஸ்ய முகமாசீத்’ என்ற வாக்யத்தால் முகத்தில் தோன்றிய பிராமணனே பிரம்மத்தை உணர்ந்தவன் என்று சொல்கிறது ஸ்ரேஷ்டமான வேதம். ஆர்யனாகிய பிராமணனே லோகக்ஷேமத்திற்காகவும், இதர வர்ணங்களின் உஜ்ஜீவனத்திற்காவும் பிரம்மவித்யையை அனுஷ்டானம் பண்ணி சகலஜனங்களையும் மோக்ஷ சாம்ராஜ்யத்திற்கு உத்தாரணம் பண்ணுகிறான்ங்கிறதை இப்போ விக்ஞான சாஸ்த்ரகாராளே பிபீலிக சமூஹத்தை வச்சு சம்சோதனம் பண்ணி நிரூபணம் பண்ணிவிட்டார்கள். ஆகையினாலே ஸ்ரேஷ்டமான வேதம் சொல்கிறாற்படி அவரவர்கள்…
ஆதிமந்திவமிசத்தாரே லெமூரியக் கண்டத்து மூத்த தமிழ்க் குடிகள், என்று நாட்டுப்புறவியலை அடிப்படையாக வைத்து குரங்கிலிருந்து பரிணமித்த ஆதிமனிதன் செந்தமிழனே என்று நான் நிரூபித்தபோது எள்ளிநகையாடி எக்காளமிட்ட ஆரிய சதிகாரர்கள் மீண்டும் கைபர்கணவாய் வழியாக ஓடும்படி ஒரு வெள்ளைத் தமிழன் (ஆரிய திராவிட கலப்பு சதியில் நிறம்மாற்றப்பட்ட அப்பாவி ஆதிதமிழன்) கரிய எறும்பு இனங்களை வைத்து அறிவியல் ஆராய்ச்சிசெய்து நிரூபித்துள்ளான். கரிய எறும்புகள் திராவிட இனம் என்பது சொல்லத் தேவை இல்லை. தங்கள் வாழ்விடம் அழிந்தபோது அவை வடக்கு நோக்கி நகர்ந்து இன்னொரு வாழ்விடத்தைக் கண்டுகொண்டு மற்ற திராவிடத் தமிழ்ச் சகோதர்களையும் வழிநடத்திச் சென்றதை நாம் லெமூரிய கண்டத்து ஆதிமந்தி மக்கள் கடல்கோளின் போது வடக்கு நகர்ந்து குமரிகண்டம் வந்ததுடன் ஒப்பிட்டுப் பார்த்துப் புரிந்து கொள்ளவேண்டும். அனால் இந்த ஆரியச் சதியாளர்கள்…
4. பிரபல தோமாகிறித்தவ ஆய்வாளரும் அதன் நிறுவனருமான முனைவர். ஆ.ஆ.தெய்வீகராகம் அவர்கள்:
ஆவிக்குப் பிரியமானவர்களே.. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, “என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்” (யாத்திராகமம் 33:14) என்றபடியாலே, மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்துவே குஞ்சாடுகளை தன் பிதாவினிடத்தில் கொண்டுசெல்லுகிறார் என்பதை பரிசுத்த வேதாகமத்தில் தேவவசனங்கள் சொல்லுகிறபடிக்கு தேவனுடைய கிருபையாலே..ப்ரைஸ் தி லார்ட்… நமது அன்பிற்குரிய சயன்டிஸ்ட் சகோதரர்கள் கர்த்தருடைய படைப்பிலே கீழ்மையான எறும்புக் கூட்டங்களை வைத்து விஞ்ஞான ஆராய்ச்சி செய்து தேவனுடைய சத்திய வாக்குகளின் மகிமையை நிரூபித்து, ப்ரைஸ் தி லார்ட்… சேசுவுக்கு சாட்சியம் தந்துள்ளார்கள். பாவிகளாகிய மற்ற எறும்புகளை மீட்டு பரலோகத்திற்கு பரமபிதாவினிடத்திலே அழைத்துச் செல்லுபவை சுவிசேஷகர்களாகிய புனித எறும்புகளே என்பதையும் கர்த்தருடைய வல்லமையினாலே நிரூபித்துள்ளனர். சகோ.பேரா. முனைவர். அற்புதப் பாண்டியன் சொன்னது போலே தேவன் தம்முடைய மெய்யான வாக்குத்தத்தத்தின் படி மெய்யாகவே மெய்யாகவே புனித தோமையர் மூலம் பாவிகளாகிய ஆதிமந்தி வமிசத்தாரை தேவனுடைய இராஜாங்கத்துக்கு அழைத்துச் சென்றார் என்பதையும் இங்கே பிரசங்கிக்கிறேன். ப்ரைஸ் தி லார்ட்… அல்லேலூயா…யா..யா..
5 . ‘நான்காவது கொலை புகழ்’ மிஸ்டர் ஷெர்லக் ஹோம்ஸ்:
பிரிட்டிஷ் பாரம்பரியப்படி மோவாயைத் தூக்கிக் கொண்டு நடந்து வந்து, “மிஸ்டர். வாட்சன், மேன்மை தாங்கிய மகாராணியாரின் மேன்மைதங்கிய அரசாட்சியில் உங்களுக்கு இந்த நாள் இனிமையாக அமையவேண்டுமென்று வாழ்த்த விரும்புகிறேன் என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்”. “அபாரம் மிஸ்டர் ஹோம்ஸ்” என்றார் மிஸ்டர்.வாட்சன். “சூரியன் மறையாத நமது பிரிட்டிஷ் அரசாட்சியில், நமது மேன்மை தாங்கிய மகாராணியாரின் தலைமையில் பிரிட்டிஷ் கனவான்களே உலகை வழிநடத்துகிறார்கள் என்பதை என் துப்பறிவில் கண்டுபிடுத்துள்ளேன் என்பதை பிரிட்டிஷ் தன்னடக்கத்துடன் உங்களிடம் நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்பதைத் தெரியப்படுத்த விரும்புவதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நான் நம்பலாமா மிஸ்டர் வாட்சன்?” பைப் புகையை வானத்தை நோக்கி விட்டபடி கண்ணடித்தார் மிஸ்டர் ஹோம்ஸ்.
“அபாரம் மிஸ்டர்.ஹோம்ஸ், நீங்கள் அந்த எறும்புகளின் பின்னால் இரவில் உன்னிப்பாக கவனித்துக் கொண்டே ஊர்ந்து செல்லும்போதே நான் ஊகித்திருக்க வேண்டும். காளைச் சாணம்… ஓ..என் தெய்வமே… பிரிட்டிஷ் மரபை மீறி காளைச் சாணம் என்ற வார்த்தையை பிரயோகப்..ஆ..என் தெய்வமே மறுபடியும் சொல்லிவிட்டேன்….நீங்கள் பிரிட்டிஷ் மரபு அனுமதித்தால் என்னை மன்னித்துவிட்டீர்கள் என்று நான் நம்பலாமா என்று சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்பதை மகாராணியாரின் மீதுள்ள விசுவாசத்தின் பேரில் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் என்பதை சொல்லக் கடமைப்பட்டுளேன் என்று……. “
6. மார்க்க அறிஞர், விஞ்ஞான பேச்சாளர் ஹாஜி பாதுஷா பின் குலாப் ஷா ஹுசைன் அல் ஜாகிர் கல் நாயக்:
 “மனிதர்களை கொஞ்சம் தூசி, கொஞ்சம் திரவம் எல்லாம் கலந்து நான் படைத்தேன் (35 : 11). இந்த எறும்பு சமாச்சாரத்தை எல்லாம் விட அற்புதமான கண்டுபிடிப்புகளை 1400 வருஷத்துக்கு முன்னாடியே சொல்லியாச்சு. எம்பிரியாலாஜி (2:222, 2:233, 33:4, 40:67, 76:2), அஸ்ட்ராணமி (32:5, 10:5, 78:12-13, 27:40) இன்னும் ராக்கெட் தயாரிக்கிறது, சேட்டிலைட் தயாரிக்கிறது, அணுகுண்டு தொழில்நுட்பம், க்ளோனிங் பண்றது எல்லாமே ஏக இறைவனின் வார்த்தைகளில் இருக்கு பிரதர்ஸ். இனிமே கண்டுபிடிக்கப்போற அறிவியல் எல்லாம் இருக்கு பிரதர்ஸ். அதெல்லாம் யாராவது கண்டுபிடிச்சப்புறம் இறைவாக்கில இருந்து நாங்க கண்டுபிடிச்சு ஒன்னொன்னா உங்களுக்கு சொல்வோம் பிரதர்ஸ்.
7 . “ஆபிரகாமிய ஆப்பு”, “நம்பக்கூடிய அறிவியல்” புகழ் ‘அநீ’தி அறியாத அநீ:
இந்துத் தொன்மங்களைக் குறித்து ‘கோட்டி அறிவியல்’ கோட்பாடுகளைப் பரப்பும் முடை நாற்றமெடுக்கும் பழமைவாத   அஃறினைகளைச் சாடியும், போன வருடம் வெளிவந்த இந்த எறும்புகளைப் பற்றிய ஆராய்ச்சியைப் பற்றி விளக்கி நான்கு வருடம் முன்பே ‘திண்ணை’ தமிழ் இணைய இதழில் எழுதியிருந்த அறிமுகக் கட்டுரையையும் மீண்டும் தமிழில் மொழிபெயர்க்க நாக்கில் சுளுக்கு பிடிக்காமல் இருக்க அயோடெக்ஸ் தடவிக்கொண்டு ஒரு குழுவே கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறது . விரைவில் வெளிவரலாம்…

8 . பார்வதிபுரம் B 12 ஸ்டேஷன் ரைட்டர் ஜெயமோகன்:
இயற்கையில் எல்லாமே சமம் இல்லை. உலகை வழிநடத்துபவர்கள் தங்கள் செயலூக்கத்தினால் முன்செல்லும் தேர்வு செய்யப்பட்ட சிலரே. அவர்களை விதிசமைப்பவர்கள் என்று நித்யா ஒருமுறை என்னிடம் சொல்லியுள்ளார். இதையே இன்றைய நவீன நடத்தையியல் அறிவியல் துறையில் எறும்புகளின் சமூக வாழ்வியலை உன்னிப்பாகக் கவனித்துச் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சாங்கிய தரிசனத்தில் இதையே ‘பிபீலிக மார்க்கம்’ என்று விளக்கபட்டிருக்கிறது. நான் பேசும் தளம் வேறு. சாதாரண இணைய வம்புகளை மேயும் ஒருவரால் நான் சொல்லும் கருத்தின் ஆழத்தைப் புரிந்து கொள்ளமுடியாது என்பதை நான் நன்கு அறிவேன். இதனைப் பன்னிப்பன்னி பெரிதாக்கி அவதூறு செய்ய முயலும் ஒருவரின் மனச்சிறுமையை எண்ணி இப்போதெல்லாம் மெல்ல நகைத்துக் கொள்ளப் பழகிவிட்டேன்.
9 . ஒருவாசகரின் கடிதம்:
அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகனுக்கு,
தேர்வு செய்யப்பட்டவர்கள் கட்டுரை படித்தேன். நீங்கள் நித்யா என்று சொல்லியிருப்பது நித்தியைத் தானே? அவர் ஆதீன பீடாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து உங்களின் நுண்ணரசியல் கருத்துக்களை வழக்கம் போல நுழைத்துவிட்டீர்கள். அவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அவர் எழுதிய ‘கதவைத் திற, வாயை மூடு’ என்கிற புத்தகத்தை நீங்கள் படிக்க வேண்டும். இன்னும் நிறைய இருக்கிறது சொல்ல, உங்கள் போன் நம்பர் அனுப்புங்கள்.
-இப்படிக்கு, ம்ருத்வி.
***************************
-பிரகாஷ் சங்கரன்
(எழுத்தாளர் ஜெயமோகனின் தளத்தில் வெளியிடப்பட்ட எனது நகைச்சுவைக் கட்டுரை http://www.jeyamohan.in/?p=27142 )