Friday, July 29, 2011

இருளொளி நாடகம்

ஆதியில்...
எங்கும் இருளாயிருந்தது
அப்போது அதற்கு
இருளென்ற  பெயரில்லை..
இருள் வெளியாய்ப் பரவியிருந்தது
இருள் காற்றாய் அலைந்து திரிந்தது
இருள் மலையாய் உறைந்து நின்றது
இருள் நதியாய் ஒழுகியோடியது
அதுமட்டுமாயிருந்தது.
அங்கே..
வடிவமும் வர்ணமுமில்லை
பெயர்களும் பேதமுமில்லை
ஒலியும் மொழியுமில்லை
வெறும் உணர்வு மட்டுமாயிருந்தது
அதுவே இருளின் சக்தி..
எல்லாவற்றிலும் உறைந்து
உறைபோல மூடி
அமைதியாய் ஆதிக்கம் செய்தது!
என்றோ ஒருநாள்...
இருள்வெளியின் விளிம்பில்
அப்பால் எங்கிருந்தோ வந்த
ஒற்றை ஒளிகற்றை
இருளுறையைக் கீறி இறங்கியது
மெல்லப் பிளந்து விரிந்தது
இருள் பின்வாங்கிய பிரதேசங்களில்
பருப்பொருளெல்லாம்
ஒளியைப் பருகின
மேடும் பள்ளமும்
வளைவும் விளிம்பும்
துலங்கி எழுந்தன
அடர்த்தி வேற்றுமையினால்
ஒளியை
உள்வாங்கி வெளியிட்டு
விலக்கிச் சிதறடிப்பதில்
வேறுபாடுண்டானது
வடிவமும் வர்ணங்களும் தெளிந்தன
உணர்தல் குன்றி  அறிதல் தோன்றியது
ஒளி வெப்பமாயிருந்தது..
வெப்பத்தால்
வெளியில் சலனமுண்டானது
சலனத்தால் அணுக்கள்
பிளந்தும் கூடியும்
புதுக்குணம் பெற்றன
இயக்கம் தொடங்கியது
சக்தி உருவானது
சக்தி உருமாற -மற்றொரு  இயக்கம்
தொடரியக்கம்  -உயிர்ப்பித்தது
உயிரியக்கம் வாழ்வானது
வாழ்க்கை வளர்ந்து நாகரிகமானது
நாகரிகம் நிலைத்து பண்பாடானது
பண்பாடு திரிந்து கலாச்சாரமானது
எதிர்காலம் நிகழ்காலமாகி
கடந்தகாலமாய் கடந்து சென்று
வரலாற்றுக் கடலாகிக் கலந்து
பெருகி விரிந்து கொண்டிருக்கிறது ...
இன்றும்...
ஒளிபடரும் ஒவ்வொரு பொருளின்
மறுபக்கமும்
இருள் இருந்தது கொண்டுதானிருக்கிறது
எந்தக்கணமும்
புவியின் சரிபாதி இருளில்தான்.
இருள் - இயல்பு
ஒளி - இடைச்செருகல் !
இம்மாபெரும் இயக்கமே
இருளின் அரைத்தோல்வி
அல்லது..
ஒளியின் அரைவெற்றி.
இரண்டில் எது வென்றாலும்
உயிரியக்கம் சூனியமாகும் 
இருள் - ஒளி
ஒன்று மற்றொன்றை
விழுங்கத் துரத்தும் - இந்த
நாடகம் தொடரும்வரை
இங்கே எல்லாமே நிஜம்!
இறுதித் திரையிறக்கம்
எப்போது? எப்படி??
அறியாதவரை
இவ்வாழ்வியக்கம் சுவாரசியம்!!
- பிரகாஷ் சங்கரன்.

Monday, July 25, 2011

மூன்று கவிதைகள்





பெய்யெனப் பெய்யும்...

உறங்கி விழித்தேன்
முன்னிரவில்
மழை பெய்திருக்க வேண்டும்
என் பங்கை
வாங்கி வைத்திருந்து 
தலையில் தெளித்துச் 
சிரித்தது 
நான் நட்ட வேம்பு!




அறிதல்

காலம்....
முடிவற்ற பெருங்கடலாய்
அகன்ற பிரவாகமாய்
குறு நதியாய்
ஓடையாய்
சிற்றோடையாய்
துளிகளாய்
துளியாய்
என்
உள்ளங்கையில்
நின்றபோது
உணர்ந்தேன்
நானே அதுவென்று!


















சிந்தனை

உங்கள் 
கணத்த சுவர்களுள்ள 
சதுர அறைகளுக்குள்
திட்டவட்டமாக 
நான்கு திசைகள் உண்டு.
என் 
வட்டக் கூடாரத்திற்கோ
எல்லாமே திசைகள் தான்
அல்லது - 
திசைகளே கிடையாது.













- பிரகாஷ் சங்கரன்.

Saturday, July 23, 2011

சொல் அன்றேல் கொல்

என்னுடல் முழுதும் செவியாயுரு மாறிட
உன் செவ்விதழ் வாய்திறவாதோ - அதிற்
செந்தமிழ்ச் சொல் பிறவாதோ...?

உறைந்து கிடக்குமென் உயிரொளி பெற்றிட
அஞ்சன இமை மலராதோ - உன்
சுடர்விழி எனை நோக்காதோ...?

போதமழிந்து நான் காலம் மறந்திட
காதல் செய்திடலாதோ - மென்விரல்
நானம் தாண்டியென் மேனியை தீண்டிடலாதோ..?

சமன்பிறழ்ந்தென்மனம் சந்நதங் கொள்ளுமுன்
சம்மதமெனச் சிறுநகைக்குறி காட்டிடுவாயோ - அன்றேலென்
சவமவிந் தடங்கிடக் காண்பாயோ...?

-பிரகாஷ் சங்கரன்.

Wednesday, July 20, 2011

அன்னை (குறுநாவல் - நிறைவுப் பகுதி)


உச்சியில் தகித்துக் கொண்டிருந்த சூரியனின் மொத்த வெப்பமும் அனல் அருவியாக என் தலை வழியாகக் கொட்டி உடம்பை எரிப்பது போலத் துடித்தேன். சற்று நேரம் அந்தப் பாதையிலேயே முன்னும் பின்னுமாக என்னையறியாமல் நடந்தேன். சோர்ந்து ஒருபெரிய மரத்தின் வேரில் அமர்ந்தேன். திடீரென்று யாரோ முதுகில் சாட்டையால் அடித்து விரட்டியது மாதிரி எழுந்து வேகமாக பாடசாலை நோக்கி ஓடினேன். 


அம்மா லலிதாம்பிகை படத்தின் முன் அமர்ந்து கண்மூடி வலது கையைப் புடவைத்தலைப்பால் மறைத்து அமர்ந்திருந்தாள். மெல்லிய நார்மடிப்புடவையின் உள்ளே பெருவிரல் மற்ற விரல்களின் மடிப்புக் கோடுகள் மீது தொட்டுத் தொட்டு நகர்வது நிழல்காட்சி போலத் தெரிந்தது. மூடிய இமைகளுக்குள் விழிகள் அமைதியில்லாமல் அலைவதைக் கண்டேன். உதடுகள் யாரிடமோ கெஞ்சுவது போல துடித்துக் கொண்டிருந்தன. செய்வதறியாமல் அவளையே பார்த்திருந்தேன். சிலநிமிடங்கள் கழித்து நமஸ்கரித்து எழுந்தாள். நான் வந்ததை முன்னரே அறிந்திருந்தவள் போல, என் கண்களைப் பார்த்துத் தீர்மாணமான வார்த்தைகளில் பேசினாள்.

“உன் கொள்ளுத்தாத்தா, தாத்தா, அப்பான்னு உத்தம வைதீகாள் வம்சத்து ஒரே ஆண் வாரிசு நீ தான்ப்பா. சாஸ்திர விரோதமா ஒன்னும் யோஜிக்க மாட்டேன்னு அம்மாவுக்கு சத்தியம் பண்ணிக்கொடு” என்று கையை நீட்டினாள்.

அதிர்ச்சியில் சற்று நிலைகுலைந்தேன். அவ்வளவு நேரடியாகப் பேசுவாள் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. என் மனம் தயாரித்து வைத்திருந்த பீடிகைகளுக்கு அவசியமேயில்லாமல் உடைத்து விட்டாள். அதனால் அடுத்து என்ன பேசுவதென்று தெரியாமல் சிறிய மௌனத்துடன் தலை குணிந்து நின்றேன்.

அதையே அவள் அடுத்த வார்த்தைக்கான சந்தர்ப்பமாக மாற்றிக்கொண்டு, “சங்கரா என்னடா ஒன்னும் சொல்லமாட்டேங்கறே. அம்மா வேணுமா? வேண்டாமா?” தடங்கலே இல்லாமல் அடுத்த அம்பைத் தொடுத்தாள். ஒருவேளை நான் வந்த போது கண்மூடி இந்த வார்த்தைகளைத் தான் அடுக்கியடுக்கிச் சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தாளோ என்று நினைத்தேன்.

மனம் அருவியாக வார்த்தைகளைக் கொட்டியது. ஆனால் எதுவும் வாக்கியமாகச் சேராமல், உதிரியாக நாக்கில் கரைந்து தொண்டைக்குள் ஒழுகி இறங்கியது. நனவில்லாமல் கூட என்னால் சொல்ல முடிந்த வார்த்தையைத் திணறி, மிகவும் கஷ்டபட்டுக் கோர்த்து, “அம்மா..” என்றேன். ஒலியாக வெளியேறியதா என்று எனக்கே சந்தேகமாக இருந்தது.

“உன் அப்பா போனப்போவே பிராணனை விடாம, இன்னும் வச்சிண்டு இருக்கறதே உனக்காகத் தாண்டா. எல்லாரும் ‘ச்சீ’ன்னு சிரிக்கறா மாதிரி அவமானப்படுத்தி கொன்னுடாதேடாப்பா” கைகளை என் முன் கூப்பி குரல் தழுதழுக்க நடுங்கினாள். கதறி உடைந்து அப்படியே படாரென்று அம்மாவின் காலடியில் விழுந்தேன். அழுகிறேன் என்று நினைத்தேன். ஆனால் கண்ணீரே வரவில்லை. அடிபட்ட மிருகம் வலிதாங்காமல் ஊளையிடுவது போன்ற சத்தம் மட்டும் வந்தது. 


சிறிய இடைவெளிவிட்டு தோளைத்தொட்டு மெதுவாகத் எழுப்பி என் தலையை அவள் தோளில் சரித்து கழுத்தைக் கட்டிக்கொண்டாள். மூளையில் பிறந்து குரல்வளைக்கு வரும் முன்பே ஸ்பரிசத்தால் என் தலையிலிருந்து நேரடியாக என் எண்ணங்களைப் படிக்கிறாள் என்று தோணியது. நிச்சயமாகத் தீமானித்து மிகச் சரியாக அடுத்தடுத்து வார்த்தைகளை வீசி என்னை முழுமையாக செயலிழக்க வைக்கிறாள்.

இல்லை நான் பேசியே ஆகவேண்டும். உயிரைத் திரட்டி நாக்கில் வைத்தேன். மெல்ல அசைந்து வார்த்தைகள் வெளிவந்தது. “அம்மா ஸ்ரீதேவி பாவம்மா. உன்ன மாதிரிம்மா.. ரொம்ப நல்ல பொண்ணும்மா” என்றேன். என் கைகளை நீவி விட்டபடி, “லோகத்திலே எல்லா பொம்மணாட்டிகளும் அம்பாள் சொரூபம் தான். எல்லாருமே நல்லவா தான். ஆனா ஒவ்வொருத்தருக்கும் ஒரு தர்மம் இருக்கு. அதை மீறி மனசு போனதுன்னா மகாபாபம். அவா பரம்பரையே அதை அனுபவிக்கனும்” என்றாள்.

தலையை அம்மாவின் தோளில் புதைத்து, “கல்யாணம் பண்ணிக்கறேன்னு வாக்கு குடுத்துட்டேன்மா. என்னை விட்டுட்டு அவ ஜீவனோட இருக்க மாட்டாம்மா” விசும்பிக் கொண்டே சொன்னேன்.

“பெத்தவாளுக்குத் தெரியும் அவாவாள் கொழந்தேளுக்கு என்ன பண்ணனும்னுட்டு. அவ அப்பா அவளுக்கு காலாகாலத்திலே கல்யாணம் பண்ணி வச்சு, அவ குடும்பமும், குட்டியுமா சந்தோஷமா இருப்பா. அம்மா அம்பாள்கிட்ட பிரார்த்தனை பண்ணிக்கிறேன். நீயும் அம்மா சொல்றதக் கேட்டு சமத்தா நடந்துக்கோ”. அம்மா, வெற்றியை நோக்கி நகர்பவள் போல நிதானமாக என்னை சிறுபிள்ளையாக்கிச் சமாதானப்படுத்தும் வார்த்தைகளைச் சொன்னாள்.

முகத்தை அம்மாவின் தோளிலிருந்து விலக்கி அவள் முகத்தைப் பார்த்தேன். கற்சிலை. எப்போதும் போல எதையும் கண்டறிய முடியாத, அதிகம் உணர்ச்சிகளற்ற சாதாரண பாவம். ஒருவேளை, ஒருநாள் நான் இப்படி வந்து நிற்கும் போது அசையாமல் நிலைத்திருக்கவே இத்தனை வருடங்களாக இதைப் பயின்று வந்தாளோ என எண்ணிக்கொண்டேன். வேதத்திலிருந்தும், புராணங்களிலிருந்தும், இதிகாசங்களிலிருந்தும் என்னால் நூறு உதாரணங்கள் காட்டி நான் செய்வது தர்ம விரோதமல்ல என்று என்னால் வாதிட முடியும். ஆனால் அதனால் சிறிதும் பயனில்லை, 


அம்மாவின் நம்பிக்கைகளை என்னால் அசைக்கவே முடியாது என்று உள்ளூற நன்றாக அறிவேன். வாழ்வில் முதல்முறையாக பிரம்மகிரி, மடம், ஆச்சார்யர், மனிதர்கள், காலம், என் முன்னோர், அம்மா, வேதப்படிப்பு, சிகை, பூணூல், வெளுத்த தோல், எல்லாம் கசந்து தொண்டையில் குமட்டிக்கொண்டு வந்தது. எல்லாரையும், எல்லாவற்றையும் என் உயிரின் கடைசித் துளி வரை வெறுத்தேன். இது எதுவுமே எனக்கு இனி இல்லை என்று நினைத்த போது ஒரு கனம் நிறைவும், பின் ஆழ்ந்த வெறுமையும் கவ்வியது. 


கடைசி முயற்சியாக என்னால் முடிந்த வரை பலம்கொண்டமட்டும் மோதி அம்மாவின் இறுக்கத்தை உடைக்க முடிவு செய்தேன். வெடுக்கென்று அம்மாவின் கையை உதறி விட்டு அலறலான குரலுடன் பின்னோக்கி நகர்ந்து கதவின் மரநிலையில் தலையை வேகமாக பல முறை மோதினேன். நெற்றி நரம்புகள் நைந்து, சுருண்டு, சுற்றி இருப்பவையெல்லாம் கலைவையான ஓசை இழந்து ’ம்ம்ம்ம்’ என்ற ஒற்றை ஒலி மட்டுமாக மிஞ்சியது. 


“உன் புள்ளைய நீயே கொன்னு திண்ணுடு. அதுக்குத்தானே வளர்த்தே. அவ வேண்டாம்னா நானும் உனக்கு வேண்டாம். இனி உன் முகத்தையே பார்க்க மாட்டேன். செத்துப் போறேன். நீ சந்தோஷமா இரு” என்று கத்தி விட்டு, என்னைப் பாய்ந்துவந்து கட்டிக்கொண்டு தடுப்பாள் என்ற நம்பிக்கையில் பாடசாலையை விட்டு இறங்கி ஓடினேன்.
***

      ஓடி ஓடி கடைசியாக ஸ்ரீதேவியின் வீடு இருக்கும் கமுகுத் தோப்பினருகில் வந்து விட்டிருந்ததை உணர்ந்தேன். அதற்கு மேல் என்னால் நகர முடியவில்லை. அவள் வீட்டிற்குள் நுழையும் துணிவில்லை. அங்கே இருந்த பெருத்த மரமொன்றின் வேரில் அமர்ந்தேன். தலைக்குள் வின்னென்று தெறிப்பது போல் வலித்தது. மரத்தில் சாய்ந்து கால்களை நீட்டி வெகு இயல்பாக மரத்தின் ஒரு கிளை போல ஒன்றினேன். கொஞ்சம் கொஞ்சமாக எண்ண ஓட்டங்கள் அடங்கியது. ‘ஸ்ரீதேவி’ என்ற ஒற்றைப் பெயரும் ‘காத்திருக்கிறேன்’ என்கிற ஒற்றைச் சிந்தனையுமாக ஆனேன்.

என் கண்கள் எல்லைக் காவல் தெய்வங்களின் கல்விழிகள் போல நிலைத்துத் திறந்து அவள் வரவை நோக்கியிருந்தது. அன்று மாலையும், இரவும் கழிந்தது. மறுநாள் முழுவதும் கழிந்தது. என்னால் என் உடம்பைப் புரட்டக் கூட முடியவில்லை. என் கண்களை மட்டும் காவலுக்கு வைத்துவிட்டு எல்லா அங்கங்களும் உறங்கிவிட்டது போல. மூன்றாம் நாள் பின் மதியம் நேரே என்னிடம் வந்தாள். மூளை உயிர் பெற்று என்னை இயக்கியது. முதல் சிந்தனை, “நான் இங்கே இத்தனை நாளாக இப்படிக் காத்திருக்கிறேன் என்று இவள் அறிந்திருந்தாளா?” என்பது தான். அறிந்தும் வராமல் இருந்தாள் என்கிற அழுத்தத்தை நினைக்கும் போது அம்மா நினைவு வந்தது.

“அம்மா மனசு எனக்குத் தெரியும். நீங்க தான் அவங்களுக்கு எல்லாமே. அவங்கெ கண்ணீர் சிந்தி எனக்கு ஒரு ஜீவிதம் வேண்டா. தெய்வம் பொறுக்காது. தப்பெல்லாம் என்மேலெ தான். அருகத இல்லாத்தத ஆசப்பெட்டது என் குற்றம். நான் நாளேக்கு மதுரை போகும், மகாத்மாவ பாக்கறதுக்கு. அப்பா இங்கே பணி முடிஞ்சதும் அங்கே வந்துடுவாங்கெ. பின்னெ அவங்கெ கூடவே ஆஸ்ரம சேவைக்கு வடக்கே போயிடுவேன். நீங்க அம்மாவெ கஷ்டப்பெடுத்தாம, அவங்கெ சொல்றது அனுசரிக்கனும்” 


மனதை முழுதுமாக மறைத்து, முகத்தை சலனமே இல்லாமல் வைத்துக்கொண்டு அம்மாத்தனமாக எனக்கு அறிவுரை சொன்னபோது எரிச்சலடைந்தேன். அம்மாவோ, இவளோ என்னைக் குரோதத்துடன் சீண்டியிருந்தாலோ, சவால் விட்டு மிரட்டியிருந்தாலோ வெகு சுலபமாய் அள்ளி நொறுக்கி ஒடுக்கியிருப்பேன். ஆனால் இருவரும் என் ஆழ்மனதையும், உணர்ச்சிகளையும், மறைக்கவே முடியாத என் மிகப் பலவீனமான பக்கங்களையும் விரல் நுனியால் தட்டுகிறார்கள். திமிறவே முடியாமல் மண்டியிட்டு அடங்குகிறேன். வானில் பறக்கவும் முடியாமல், நிலத்தில் நிற்கவும் முடியாமல் எதோ ஒரு பறவையின் சிறகிலிருந்து உதிர்ந்த ஒற்றை இறகாக காற்றில் தத்தளிக்கிறேன்.

அவளால் அம்மாவைப்போல அப்படி உறுதியாக இருக்க முடியாது என்பதை அவளுக்கே நிரூபிக்கத் துடித்தேன். என் பதிலையே எதிர்பார்க்காமல் அவள் நகர்ந்த போது, பாய்ந்து அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டு, “உன்னைப் போக விடமாட்டேன்” என்று சிறுவன் போல முரண்டுபிடித்தேன். என் கை பட்டதும் அவள் உடலின் செயற்கையான இறுக்கம் தளர்ந்ததை உணர்ந்தேன். திரும்பி என் விரல்களைப் பிரித்து விலக்கி, “விடுங்கெ” என்ற போது அவள் அகன்ற விழிகளில் இமை வரம்புகளை தொட்டுத் தேங்கியிருந்த கண்ணீர்க் குளம், கரையை மோதி உடைத்து வழிந்து என் புறங்கையில் பட்டுத் தெறித்து நிலத்தில் சிந்தியது.
***

      எனது எட்டாவது வயதில் எனக்கு பூணூல் அணிவித்து, பிரம்மோபதேசம் செய்தனர். அன்று தான் முதல் முறையாக உச்சியில் இருந்த மயிற்கற்றையைத் தவிர்த்து தலையை சுத்தமாக மழித்துவிட்டிருந்தனர். திடீரென்று தலைக்கு மேல் ஒன்றுமில்லாமல் பொட்டலாய்க் காய்ந்து சுரீரென எரிந்தது. காலையிலிருந்தே ஹோமப்புகை கண்ணில் ஏறி, இமைகளைத் திறந்தாலே ஒளி வெள்ளமாகப் பாய்ந்து விழித்திரை கூசியது. 


மதியம் அரைமயக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தேன். கனவில் என் தலையில் யாரோ நூறு நூறு ஊசிகளை வைத்துக் குத்துவது போன்று இருந்தது. வலி தாங்காமல் அலறித் துடித்தபடி எழுந்தேன். சிரித்தபடி வெள்ளைவெளேரென்று என் தாய்மாமா மகள் சாரதா உட்கார்ந்திருந்தாள். என்னை விடச் சிறியவள், ஐந்து வயதிருக்கும். “அய்.. உச்சிக்குடுமி சங்கதா...” என்று சிரித்துக் கொண்டு என் தலையை எட்டிக் குடிமியைப் பிடித்து ஆட்டினாள். மறுபடியும் ஊசிகுத்தும் வலி. பொறுக்க முடியாமல் அவளை இழுத்து என்னால் முடிந்தவரை அவள் தலையில் ஓங்கிக் குட்டினேன். அவள் கண்கள் கலங்கி நீர் திரைகட்டியது. நீர்த்திரையின் பின்னால் அவள் கரிய விழிகள் சிதறிய ஒழுங்கற்ற வட்டமாகத் தெரிந்தது. சிறிய வாயைக் கோணலாகத் திறந்தாள். எச்சில் கம்பிகள் மேலுதட்டிலிருந்து கீழுதட்டிற்கு இழுபட்டது. சில கணங்கள் சத்தமே இல்லை, பிறகு விட்டுவிட்டு சிலமுறை கரகரப்பான சத்தம் எழுப்பிய பின், காது கிழியும்படி கீச்சுக்குரலில் கத்தி அழுதாள். எனக்கு அவள் அழும் முகம் பார்க்க வேடிக்கையாக இருந்தது. அவளை மாதிரியே அழுது காண்பித்தேன். “அத்தேத்த தொல்லுதேன் பாது..” என்ற எழுந்து அழுதபடியே ஓடினாள்.

சிறிது நேரம் விளையாடி விட்டு சமையலறைக்குள் அம்மாவைத் தேடிச் சென்றேன். சாரதா அம்மா மடியில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். கண்ணங்களில் கண்ணீர் வழிந்த தடம் காய்ந்து ஒரு கோடு போல தெரிந்தது. அம்மா அவளுக்கு வெள்ளிக்கின்னத்தில் வைத்து சர்க்கரைப் பொங்கல் ஊட்டிக் கொண்டிருந்தாள்.


“அம்மா” என்றபடி பின்னால் சென்று கழுத்தைக் கட்டிக்கொண்டேன். அம்மா காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. அம்மாவின் பின்னலைத் தூக்கி பின்னந்தலையிலிருந்து உச்சிவகிடு வழியாக நேராக மடக்கி, மீதமிருந்த்தை கூந்தலை நெற்றி மேல் விரித்து “பாம்பு...” என்றேன். பதிலே சொல்லவில்லை அம்மா.


“அம்மா பசிக்கிறதும்மா.. நேக்கும் சக்கரைப் பொங்கல் வேணும்” என்றேன். அம்மா கோபமாக இருந்தால் சும்மாவாவது பசிக்கிறது என்று சொல்லுவேன். உடனே கோபத்தை மறந்துவிட்டு சாதம் பிசைந்து ஊட்ட ஆரம்பித்து விடுவாள். 


அம்மா சரதாவை மடியிலிருந்து கீழே இறக்கிவிட்டு, என்னை இழுத்து அவள் முன்னால் நிற்கவைத்தாள். “சாரதா கால்ல விழுந்து நமஸ்காரம் பண்ணி, இனிமே அழவிடமாட்டேன்னு சொல்லு!” என்றாள். ஒன்றும் புரியாமல் விழுந்து நமஸ்கரித்தேன். “அய்...உச்சிக்குடுமி” என்று பிடித்து ஆட்டிச் சிரித்தாள் சாரதா. 


அம்மா, என்னைக் கட்டிக்கொண்டு சொன்னாள், “கண்ணா, எப்பவும் பொம்மணாட்டிகள அழவிடப்டாதுப்பா. அது மகாபாபம். அம்பாள் கோவிச்சுண்டு உன்னவிட்டுட்டு போயிடுவா. அப்புறம் அது அம்மாக்கு தானே கஷ்டம்?”.


எனக்கு ஏதோ காற்றுருளை தொண்டைக் குழிக்குள் அடைப்பது மாதிரி இருந்தது, “இனிமே அழவே விடமாட்டேம்மா” என்று அம்மாவின் இடுப்பை கைகளால் வளைத்துக் கட்டமுயன்று எட்டாமல், வயிற்றில் முகத்தை அழுத்திக்கொண்டேன்.
***

      மெல்ல நடந்து மடத்துப் பக்கம் வந்தேன். மடத்துப் பூஜகர் சுப்பு சாஸ்திரிகள் தான் ஓடி வந்து என்னைப் பிடித்தார். படபடப்பாக இருந்தார். “சங்கரா, எங்கேடாப்பா போயிட்டே. ரெண்டு நாளா எல்லாரையும் பயப்பட வச்சுட்டியேடா. என்னடா ஆச்சு, என்ன கோலம்டா இது?” சொற்கள் அழிந்த மொழியைக் கொண்டு என்னால் ஒன்றும் பேசமுடியவில்லை. “அம்மா, அம்மா” என்று மட்டும் தொடர்ந்து முனுமுனுத்துக் கொண்டிருந்தேன். “பாவம்டா அவள். உன்னைக்காணாத பைத்தியம் பிடிச்சாமாதிரி இருக்காடா” என்றார். அப்புறம் கடைசியாக “கோசாலை” என்ற சொல் காதில் விழுந்தது.
அதன்பிறகு அவர் சொன்ன எல்லா சொற்களும் பொருளில்லாமல், கொதிக்கும் கனத்த இரும்புக் குந்துமணிகளாய் மழைத்துளி போல சட்சட்டென்று தலையில் விழுந்து மண்டையோட்டைப் பொத்துக் கொண்டு மூளையின் மென் சதைப் பரப்பில் சூட்டுக்கோலை நீரில் விட்டது போல ‘ஷ்ஷ்க்’ என்னும் ஒலியுடன் பதிந்தது. இரும்புக் குண்டுகள் மெல்ல மூளையின் நெளிநெளியான பிளவை வாய்க்கால்களின் வழி ஓடி மையச்சுழலை அடைந்து, கரகரவென பெரும் விசையுடன் சுழன்றன. மூளைச் சதை கடையப்பட்டுத் திண்மையழிந்து, கூழாகி தலைக்குள் ததும்பியது. காலம், திசை, நினைவுகள், கற்பனை, எண்ணம், சொல், காட்சி, செயல் எல்லாம் வரிசைமாறி ஒன்றையொன்று முண்டியடித்துக்கொண்டு முன்னால் வந்தது. என்னைக் கட்டிப்போட்டிருந்த தர்க்கம் மெல்ல அறுந்து நழுவியது.
***

      மடத்தைச் சுற்றி ஓடினேன். வழியில் மறித்த எதையும், பிடிக்க வந்த எல்லோரையும் தலைக்கு மேல் தாவிக்குதித்து அனாயாசமாக ஓடினேன். சிறு சருக்கலோ, தடுக்கி விழவோ இல்லை. பிரம்மகிரியின் சரிவு தன் ஆயிரம் கரம் நீட்டி என்னை ஈர்த்தது. அருவிபோலப் பெரும் பாய்ச்சலாக விழுந்தேன். மேகங்கள் மீது பறக்கும் கந்தர்வன் போல புதர்கள், மரங்களைத் தாண்டி ஓடினேன். அந்தியின் தொடுவானத்தில் ஒளியின் கடைசி சிவப்புத் திரையை கிழித்துக் கொண்டு இருளில் ஓடினேன். ஓடும்போது சிகை அவிழ்ந்து காற்றில் பறக்க, வெள்ளை அங்கவஸ்திரமும், வேஷ்டியும் படபடக்க தேவேந்திரனின் வெண்குதிரை நான் என புரிந்தது. கண்கள் மங்கல் ஒளியிலும் தெளிவாகத் தெரிந்தது. எத்தனை மணிநேரம் ஓடியிருப்பேன் என்று தெரியவில்லை. களைப்பே இல்லை. கால்கள் சோர்ந்ததாக மூளை அறியவே இல்லை. ஹிரண்யகர்ப்ப வனத்தை அடைந்திருந்தேன். ஒரு நீர்வீழ்ச்சியின் அருகில் வந்து நின்றேன். அரையிருட்டில், இருண்ட கருவறையின் சாம்பிராணிப் புகை போல மங்கலாக இருந்தது வெள்ளை அருவி. ஒரு பெரிய பாறையின் சமதளமான பரப்பில் நின்றேன். உடலிலிருந்து வியர்வை பெருக்கெடுத்து வழிந்து கொண்டிருந்தது. வேஷ்டியை அவிழ்த்து பக்கத்தில் நின்றிருந்த உருண்டையான பாறையில் சுற்றினேன். அங்கவஸ்திரத்தை எடுத்து அதன் கழுத்தில் போர்த்தினேன். கொஞ்சம் நேராக நின்று பார்த்தேன். காதிலிருந்த கடுக்கணைக் கழற்றி மரப்பிசினை உருட்டி அதில் பதித்து பாறையின் காதுகளில் ஒட்டினேன். இடையிலிருந்த அரைஞான் கயிற்றை உருவி பாறையின் வேஷ்டி அவிழாமல் இறுக்கிக் கட்டினேன். ஏதோ ஒன்று குறைவது போலிருந்தது. சட்டென்று மார்பில் இருந்த பூணூலை அறுத்து பாறையின் வலதுதோளில் இருந்து இடையின் இடது பக்கம் வரை தொங்கவிட்டு முடிந்தேன். பாறையாகிய நான் முழு நிர்வானமான என்னைப் பார்த்துச் சிரித்தேன்.

       பாறையில் மல்லாந்து படுத்துக்கொண்டேன். சுற்றிலும் உயர்ந்த மலை முகடுகள் எழுந்து சுவர் போல அடைத்து நின்றிருந்தது. இருண்ட வானம் கர்ப்பினியின் மேவிய வயிறு போல கவிந்திருந்தது. அருவி தொப்புள்கொடி போல வளைந்து நீண்டு வந்தது. அப்படியே பார்த்துக்கொண்டே இருந்தேன். கண்களிலிருந்து நீர் பக்கவாட்டில் வடிந்து காதுமடல்களில் தேங்கிக் குளிர்ந்தது. புரண்டு ஒருபக்கமாக படுத்து கால்களை மடக்கி அடிவயிற்றொடு ஒட்டி வைத்துக்கொண்டேன். கைவிரல்களை உள்ளங்கைக்குள் சுருட்டி முஷ்டியை மடித்து இரண்டு கரங்களையும் மடக்கி மார்போடு சேர்த்து தலையைச் சற்றே சரித்துக் கொண்டேன்.

நான் என் அம்மாவின் கருவுக்குள் இருக்கிறேன். இன்னும் பிறக்கவே இல்லை.
***
பகுதி -4

அன்னை (குறுநாவல் - பகுதி 4)


“கௌரியேட்டா... நீங்களும் கோசாலைக்கு என்கூட வாங்களேன்” தலையை ஒரு பக்கமாகச் சரித்து, கண்களை இடுக்கி செல்லமாகக் கெஞ்சும் பாவனையில் அழைத்தாள். பட்டுநூலில் கட்டிய நாய் மாதிரி அவளுடன் சென்றேன். ஒருக்காலும் என்னால் அதை அறுத்துக் கொண்டு ஓட முடியாது என அறிவேன்.

      கோசாலை நோக்கி நந்தவனத்தின் ஊடாக நடந்தேன். பூஜைக்குப் பறித்தது போக மீதமிருந்த பூக்களிளெல்லாம் ஒரு தேனீ போல விரல்களால் தொட்டுத்தொட்டுப் பார்த்துக்கொண்டே வந்தாள். இமைகள் சிறகு போல படபடக்க, தன்னையறியாமல் மெல்லச் சிரித்துக்கொண்டே இருந்தாள். நந்தவனத்தின் மறுபுறம் வழியாக வெளியேறி சரிவில் ஒற்றையடிப் பாதை வழியாக இறங்கினேன். எப்பொழுதும் போல மிகக்கவனமாக அடியெடுத்து வைத்து பின்தொடர்ந்து வந்தாள். அவள் ஒன்றும் பேசாமல் அமைதியாக வர, மௌனம் கணத்து என் முதுகில் தொற்றி ஏறி உட்கார்ந்து கொண்டு சரிவில் என்னை முன்னோக்கித் தள்ளுவது போல உணர்ந்தேன்.

கல்தூண்களின் மேல் படுக்கவைத்த மர உத்தரத்தில் வந்து சரிந்த ஓடுவேய்ந்த முன் பக்கத் திண்ணையில் யாரோ வேட்டியால் முகத்தைமூடி இன்னமும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். பெரிய மரக்கதவைத் திறந்து கோசாலைக்குள் நுழைந்தேன். நடுவே திறந்த முற்றத்தைச் சுற்றிக் கவிழ்த்த ‘ப’ போல இருந்த கொட்டிலுக்குள் அவளை அழைத்துச் சென்றேன். கருங்கல் பாவி, புல்கூரை வேய்ந்திருந்த்தது. வேலையாட்கள் யாரும் இல்லை. பால் கறந்து, கழுவி விட்டு சென்றிருந்தார்கள். பசுக்களின் உடம்பிலிருந்து வெப்பம் மெல்லிய அலைகளாக வெளிவந்து கொட்டிலே கதகதப்பான போர்வைக்குள் இருப்பது போலிருந்தது. புதிய சானமும், மூத்திரமும் கலந்த காரநெடி நீராவியாக எழுந்து பரவி நாசியை அடைத்தது. 

இடுப்பு உயரமிருந்த சுவற்றிலிருந்து கொஞ்சம் இடைவெளி விட்டு வைக்கப்பட்டிருந்த மரப்பலகைத் தடுப்புக்குள் புதிதாகக் அறுத்துக் கொண்டுவந்த புல்லைக் கொட்டியிருந்தார்கள். மூக்கனாங்கயிறு இல்லாமல் பசுக்கள் சுதந்திரமாக திசைக்கு ஒன்றாக இருந்தன. என் பாட்டியின் தோழிமார்களில் ஒருத்தி முன்னங்கால் இரண்டையும் கழுத்தின் கீழே மார்போடு ஒட்டி மடக்கி, வலது பின்னங்காலை உப்பிய வயிற்றின் அடியில் வைத்து, பெருத்து வெளிறிய அகிடு பிதுங்கி வெளித்தெரிய இடது பின்னங்காலை நீட்டி உட்கார்ந்து, வாயில் நுரைவழிய அசுவாரசியமாய் பழங்கனவுகளை அசை போட்டுக் கொண்டிருந்தாள். எங்கள் காலடி அதிர்வினால் கனவிலிருந்து மீண்டது போல மெல்லத் தலையைத் திருப்பிப் பார்த்தாள். வால் முனைக் கூந்தலால் கவரி வீசுவது போல முதுகின்மேல் வீசி ஈக்களை விரட்டிய பின் தனியாக நீட்டிக் கிடத்தி வைத்தாள். நாக்கை நீட்டி புள்ளித் துளைகள் நிறைந்த, கறுத்த குளிர்ந்த நாசியின் ஒரு பக்கத் துவாரத்திற்குள் விட்டெடுத்தாள். பக்கவாட்டில் நீண்டிருந்த காதுகளை ஒரு முறை சுழற்றி அடித்து, ஸ்ரீதேவியைப் பார்த்தவாறு ஆச்சர்யமாய், ‘ம்ம்ம்பாஆஆ....?’ என்றாள், ‘ஆமாம்’ என வெட்கி சிரித்துக் கொண்டே அருகில் சென்று கழுத்தின் கீழே படுதா போல தொங்கும் சதையை மெல்லச் சொறிந்து கொடுத்தேன். ‘இன்னும்’ என்பது போல் தாடையை உயர்த்திக் காண்பித்தாள். வெண்மயிர்பரப்பில் விரல்களால் அளைந்தேன். சுகமாக ஒரு முறை கண்களை மூடித்திறந்து, பெருமூச்சு விட்டாள். ஸ்ரீதேவி பழங்களை எடுத்து நீட்டவும் கருநீல நாக்கு வெளியில் நீண்டு பழத்தைச் சுழற்றி உள்ளே இழுத்துக் கொண்டது. 

பழ வாசனை அடித்ததும், இன்னொரு மாமி கழுத்தை முன்னோக்கி இழுத்து நாக்கை வெளியில் நீட்டி ஆர்வமாக காற்றில் துழாவினாள். மெதுவாக தலையைக் குலுக்கிக் கவனத்தைக் கோரினாள். ஸ்ரீதேவி பழத்தை எடுத்து நீட்டும் முன்பே எக்கி, நாக்கை நீட்டி இழுத்துக்கொண்டாள். பழத்தை எடுத்துக் கொள்ளும் சாக்கில் தன் சொரசொரப்பான நாக்கினால் ஸ்ரீதேவியின் விரல்களில் ‘வறட்’டென்று ஒரு முறை வருட, வசந்தத்தில் நிலம்கீறித் துளிர்த்தெழும் இளம் பசும்புல் நுனி பரவிய பரப்புபோல அவள் மேனி சிலிர்த்து மயிற்கூச்செறிய, அனிச்சையாய் என் கைகளைப் பற்றி விரல்களை இறுகக் கோர்த்துக்கொண்டாள். ஒவ்வொரு புல்நுனியின் மீதும் அமர்ந்துகொள்ளும் பேரார்வத்துடன், அவள் மேனியைக் கருமேகமாய்ச் சூழ்ந்து பெருமழையாய்ப் பொழிந்தேன்.

***
      
இங்குள்ள எல்லாம் உள்ளே ஒரு நெருப்புப் விதையுடன் தான் படைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் மற்றொன்றின் மீது உரசும் போது உள்ளிருக்கும் நெருப்புப் விதை மேல்த்தோலைக் கீறி நுனிநீட்டிக் கிளைபரப்பி வளரும். கிளைநுனிகளில் பட்பட்டென்று முட்டை ஓட்டை உடைத்து வெளியேறி நெருப்பு வண்டுகள் சிறகை வீசி வானில் பறக்க ஆரம்பிக்கும். உணவுக்காக அகலத் திறந்த பறவைக்குஞ்சின் சிவந்த வாய் போல தீ நாக்கு நீட்டி இன்னும் இன்னும் என்று படபடத்து அடிக்கும். வாய்க்குள் விழும் யாவற்றையும் மிச்சமில்லாமல் உண்டு, வளரும்தோறும் பிளவுபட்டு பல்கிப்பெருகி நூறுநூறு தீநாக்குகள் வான்நோக்கி துழாவும். பின் பசியாறி, சிவந்த புழுக்கள் போல மெல்ல நெளிந்து அசைவு அடங்கும்.

சிலசமயம் குருதியில் குளித்துச் சிவந்த கூந்தலை காற்றில் விசிறி எறிந்து பெருங்கூட்டமாகக் குதித்து ஆவேசமாக ஆடும் ஏதோ பழங்குடி நடனம் போல இருக்கும். செக்கச்சிவந்த சிறகுகள் செருகிய பொன் கிரீடம் அணிந்த நீலநிற தேவதைகள் இடையை ஒடித்து ஆடும் நளின நாட்டியம் போல சிலசமயம்.

சிவந்த அலைகள் விளிம்பில் ஆர்ப்பரித்து வீசி காற்றை மோத, மையத்தில் ஒளிகரைந்து ஜொலிக்கும் நீலநிற ஆழி. பார்வையை உறுத்தாத குளிர்ந்த நீலம். நெருப்புக்குள் இருக்கும் ஆழி. அதில் குதித்துவிட வேண்டும். ஒரு நொடிப்பொழுதே எரிச்சல். பிறகு அதன் ஆழத்தில் அமிழ்ந்து கரைந்து குளிர்ந்து ஆழியாகி விடுவோம்.

***

      மழையில் நனைந்த இறகுபோல என் மார்பில் ஒட்டியிருந்தாள். நான் இதுநாள் வரை மெண்மை என்று அறிந்திருந்த எல்லாவற்றிற்கும் இனி வேறு சொல் தேட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். காற்றை தழுவியனைப்பது போல இருந்தது. இன்னும் கொஞ்சம் இறுக்கி ஆழமாக மூச்சை இழுத்தால் அவளை அப்படியே என்னுள்ளே நிரப்பிக்கொண்டு விடுவேன். அப்புறம் அவள் என்னிலிருந்து பிரிந்து வெளியேறினால் நான் வெறும் பிணம் தான். அதனால் அவள் என்னைவிட்டு பிரியவே கூடாது.

“ஸ்ரீதேவி, என்னை விட்டுட்டுப் போயிடாதே. நான் செத்..” விரல்களால் என் வாயை மூடினாள்.

 “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது கௌரியேட்டா. இனி ஒரு ஜன்மம் எனக்கு வராது. அது தான் எப்போழும் என் பிரார்த்தனை. இந்த ஜன்மத்தில் ஒரு ஜீவிதம் உண்டுன்னா அது உங்களோடே தான். வேற ஒரு ஆசையும் எனக்குக் கிடையாது. அம்பாளுக்கு தெரியும். என் விளி கேட்கும்” தலை நிமிர்த்தி என் முகத்தைப் பார்த்தாள். அவள் சிவந்த கண்ணத்தில் செம்மன் மேட்டில் ஓடிய வண்டித்தடம் போல என் பூணூல் வரிகள். என் மார்பில் அவள் காது தோடு பதிந்து ஏதோ ஒரு பூ பூத்திருந்தது.

***
      நறுமணத்தால் கவர்ந்து இழுக்கப்பட்டு தாழைமடலுக்குள் புகுந்து கட்டுண்ட பூநாகம் போல என் மனம் அவளுள் சுருண்டு மயங்கியிருந்தது. இந்த மயக்கத்தை நானே வலிய விரும்பி ஏற்றுக்கொள்கிறேன். ஒரு கடுந்தவமிருப்பது போல் மனம் இந்த ஆறுமாதங்களாக வேறெந்தச் சிந்தனையும் இல்லாமல் அவள் மேல் ஒருமுகப்பட்டு இருப்பது ஒருவகையில் ஆறுதலாக இருந்தது. மனம் கொஞ்சம் கூட ஒட்டாமல், ஆனால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வராமல் எல்லா வேலைகளையும் நேர்த்தியாக, முழுக்கவனத்துடன் செய்வது போல நம்பவைக்கும் என் நடிப்பு எனக்கே வியப்பாக இருந்தது. குறிப்பாக ஆச்சார்யரிடம் அடிக்கடி தணித்து நேர்ப்பார்வையில் படாதபடி கூட்டத்தில் கலந்தும் மறைந்தும் நான் நாட்களைத் தள்ளிய சாமர்த்தியத்தையும், அம்மாவிடம் ரொம்பத் தொடாமலும், கண்களைச் சந்திக்காமலும் நகர்ந்து கொண்டே பேசும் தந்திரத்தையும் எப்படியோ கற்றுக்கொண்டேன். 

எனக்குள் புகுந்து கொண்ட ஏதோ ஒரு வல்லமை, திசைவெளியெங்கும் பறந்து பாயும் அலைக்கழிப்புள்ள என் மனத்தின் மீது ஏறி உட்கார்ந்து, அத்தனை நுனிகளையும் அடக்கிப் பிடித்து ஒற்றை முனைப்புள்ள ஒரு கருவியாக்கித், தன் இலக்கை நோக்கித் தான் விரும்பும் திசைவேகத்தில் முடுக்கி விரட்டுவதை வெறுமனே வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்தேன். 

“ஸ்ரீதேவி இன்னைக்கு என் அம்மாகிட்ட உன்னை அழைச்சுண்டு போறேன். மத்தியானம் பாடசாலைக்கு வந்துடு. அம்மாவுக்கு உன்னைப் பாத்த உடனேயே ரொம்ப இஷ்டமாயிடும். சந்தோஷப் படுவா.” என்றேன்.

அவளுள் படபடப்பு அதிகரித்தது. புடவைத் தலைப்பு நுனியை கைகளால் சுருட்டி, கசக்கிப் பின் இழுத்து நீவிவிட்டு மறுபடியும் சுருக்கி நிலை கொள்ளாமல் தவித்தாள்.  பெரிய விழிகளால் மலங்க விழித்தபடி நான் ஏதாவது சொல்லவெண்டும் என்பது போல என்னைப் பார்த்தாள். பின் தளர்ந்து கண்மூடி, என் மார்பில் சாய்ந்து அனைத்துக்கொண்டு, “அம்மே, என் கூடவே இருக்கனும்” என்று முனுமுனுத்தாள். முதுகைத் மெல்லத் தடவிக் கொடுத்தேன். உச்ச வேகத்தில் அடித்த அவள் இதயத்தின் தாளகதி, மெல்லத் தணிந்து என் இதயத் துடிப்பின் லயத்தோடு ஒன்றியது.

மதியம் பாடசாலைக்குச் சென்று அம்மாவின் மடியில் தலைவைத்துக் கொண்டு கால் நீட்டிப் படுத்தவாறே சம்பந்தமில்லாமல் பலரைப் பற்றியும் பேசி நடுவே பொதுவாக ஸ்ரீதேவியின் பெயரையும் சிலமுறை சொன்னேன். அம்மா அவளைப் பற்றி மேற்கொண்டு விளக்கமாகக் கேட்கவேண்டும் என்பதற்காகவே சட்டென்று பாதியில் நிறுத்திவிட்டு வேறெதையோ யோசிப்பதுபோல மௌனமாக இருந்தேன்.

அம்மா ஒன்றுமே கேட்காமல் என் சிகையை இறுக்கி கட்டிவிட்டு, என் தோள்களைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தாள். எனக்கு இக்கட்டாகிவிட்டது. மறுபடியும் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் பேசாமல் இருந்தேன்.

“மடத்தில ஏதாவது சாப்பிட்டியா கண்ணா? இல்ல அம்மா ஏதாவது பிசைஞ்சு கொண்டுவந்து ஊட்டட்டுமாப்பா?” என்றாள். எப்படியாவது பெண்களைப் பற்றி பேச்சைத் திருப்பவேண்டுமென்று, “நீ சின்னப்பொண்ணா இருந்தபோது எப்டிம்மா இருந்தே?” என்றேன். ‘ஹ்ம்ம்..’ என்று சிறுபுன்னகையை தந்துவிட்டு என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். அம்மா உறுதியான மரம் போல. காற்றால் அதன் இலைகளையும், கிளை நுனிகளையும் தான் அசைக்க முடியுமே தவிர அதன் வேரை தொடக்கூடமுடியாது. ஏதேனும் சூறாவளி வந்தால்தான் உண்டு.

ஸ்ரீதேவி, அவள் முகத்தை வாடவைக்க முயன்ற சூரியனைத் தோற்கடித்து, மலர்ந்த முகத்துடன் வந்தாள். அம்மா மடியில் படுத்திருந்த என்னைச் சிறு பார்வையால் தொட்டுவிட்டு அம்மாவைப் பார்த்து கைகூப்பிப் புண்ணகைத்தாள்.

“வாங்கோ” என்றபடி எழுந்து அம்மாவிடம், “அம்மா நான் சொல்லிண்டிருந்தேனே அந்த பொண்ணு இவா தான்” என்றேன்.

அம்மா ஒன்றுமே கேட்காதவளாய், “யாருப்பா?” என்றாள். “மடத்துக்கு வந்திருக்கிற மலையாளத்து இன்ஜினியரோட பொண்ணும்மா. ஆனா தமிழ் நன்னா பேசுவா. இவா அம்மா பாலக்காட்டு பிராம்மணா” இனிச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்காமல் முடிந்தவரை எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.

“வாம்மா” என்று அழைத்தாள் அம்மா. அவள் உள்ளே நுழைந்து அம்மாவின் காலில் விழுந்து நமஸ்கரித்தாள். அம்மா அவள் தலையில் மெதுவாகக் கைவைத்து “அம்பாளாட்டமாயிருக்கே. லலிதாம்பா அனுக்கிரகத்தில தீர்க்க சுமங்கலியா க்ஷேமமா இருப்பேம்மா.” என்று வாழ்த்தினாள். அம்மா என்னைத் தவிர யாரையுமே தொட்டுப் பேசிப் பார்த்ததில்லை. எனக்கு ஒரே தாவலில் பாதிமலை ஏறிவிட்ட மகிழ்ச்சி.

“உன்னைப் பாத்துட்டு அப்படியே பாடசாலையை பார்க்கனும்னு சொன்னா. பாவம் இவா அம்மா மூனு வருஷத்துக்கு முன்னாடித் தவறிபோயிட்டாளாம்”

அவள் பார்வையைத் தாழ்த்தித் தரையை நோக்கினாள். அம்மா, “எல்லாருக்கும் தாயார் அந்த லோகமாதா லலிதை தான்” என்றாள்.

“இவாள முதல் தடவை கோயில்ல பாத்தபோது உன்னையே சின்னப் பொண்ணா பாத்தாமாதிரி தோணித்தும்மா. அப்பவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது” என்று அடுத்து முன்னேறினேன்.

அம்மா, அங்கே இருந்த லலிதாம்பாள் படத்தின் அருகில் வைக்கப்பட்டிருந்த குங்குமத்தையும் பூவையும் எடுத்துக்கொடுத்துவிட்டு, “சீக்கிரமே கல்யாணமாகி ஆத்துக்காரும், குழந்தையுமா சந்தோஷமா இருக்கனும். சரிம்மா, ஆத்துல தேடப்போறா. பத்திரமா போயிட்டு வாம்மா” என்றாள்.

ஸ்ரீதேவி மறுபடியும் அம்மாவை விழுந்து வணங்கி எழுந்தாள். 

இருவரின் கண்களும் ஒரு கண நேரம் சந்தித்து மீண்டது. ஆண்களால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாத மொழியில் பார்வையால் ஏதோ பரிமாறிக் கொண்டார்கள். “போயிட்டு வரேம்மா” என்று சொல்லிவிட்டு என் பக்கம் திரும்பாமலேயே புறப்பட்டு நிதானமாக நடந்து சென்றாள்.  

சில நிமிடங்களை தவிப்புடன் கடத்திவிட்டு, “நாழியாச்சும்மா. மடத்துக்குப் போகனும்” என்று சொல்லிவிட்டு மெதுவாக பாடசாலையின் வாசல் வரை நடந்து வெளியேறிய பின், விருட்டென்று வேகமெடுத்து ஓடி ஸ்ரீதேவியை நெருங்கி மூச்சிறைக்க நின்றேன்.

“சொன்னேனோல்லியோ? அம்மாவுக்கு உன்னை ரொம்பப் புடிச்சுடுத்து பாத்தியா?” என்றேன். முதிர்ந்த பெண்மனியின் தோரணையுடன், ஒரு சிறுவனைப் பார்ப்பது போல அலட்சியமாக ஒரு வறட்டுச் சிரிப்பை உதிர்த்து, “அப்படியா?” என்றபடி நடந்தாள்.

“பின்னே? சீக்கிரம் விவாகமாகனும்னு ஆசிர்வாதம் பண்ணாளே... புரியலையா?” என்றேன் உற்சாகம் குறையாமல். 

ஒன்றும் பேசாமல் குணிந்தபடி நடந்தாள். கோபமாக, “உனக்கு சந்தோஷமில்லையா?” என்றபடி அவள் மோவாயைப் அழுத்திப்பிடித்து முகத்தை நிமிர்த்தினேன். 

கீழுதட்டை மடக்கிப் பற்களால் அழுந்தக் கடித்திருந்தாள். கண்கள் கலங்கி, மூக்கு நுனியும், கண்ணங்களும் சிவந்திருந்தது. தோள்களைத் தொட்டேன். ஜன்னி வந்தது போல உள்ளூற நடுங்கினாள். மெல்ல அனைத்துக் கொண்டேன். “வேண்டாம் கௌரியேட்டா. நாம நினைச்சது போல நடக்காது” நடுங்கிச் சிதறிய சன்னமான குரலில் சொன்னாள். 

அணைத்திருந்த கையை விலக்கி, “அம்மா நன்னாத்தானே பேசினா. ஏன் இப்படி தப்பா புரிஞ்சுண்டு கஷ்டப்படறே?” என்றேன்.

“எனக்கு சரியா புரிஞ்சாச்சு”

“எப்படி?”

“உங்களுக்கு சொன்னா புரியாது கௌரியேட்டா...” மரங்களுக்கிடையே பிரிந்து சென்ற ஒற்றையடிப் பாதையில் விறுவிறுவென நடந்தாள்.

***






பகுதி-3                                            நிறைவுப் பகுதி                                

அன்னை (குறுநாவல் - பகுதி 3)

       கொள்ளுத்தாத்தா யக்ஞராம சாஸ்திரி மறைந்தவுடன், ஐந்து வயது குழந்தையாக இருந்த என் தாத்தா பத்மநாபனை மடத்திலேயே ஆச்சார்யரின் நேரடிக் கண்கானிப்பில் வளர்த்தார்கள். குழந்தை எப்பொழுதும் பண்டிதர்களும், ஞானிகளும் கூடியிருந்த சபையில் விளையாடி, ஞானத்தை விளையாட்டாகவே அடைந்தது. மிக இளம் வயதிலேயே மாபெரும் அறிவாளியாகத் திகழ்ந்தார். அவரும் இதே வேதபாடசாலையில் தான் ஆசிரியராயிருந்தார். பாரதமெங்கும் நடந்த வித்வத் சதஸ்களில் மடத்தின் சார்பாகப் பங்கேற்ற அவரின் நிகரற்ற கல்வி ஞானத்தை போற்றி ‘ஸலக்ஷன வேத விஷாரத்’, ‘வைதீகப் பிரவீன’ என்று பட்டங்கள் குவிந்தன. செல்லுமிடமெல்லாம் விருதும், கௌரவமும் பெற்று பிரம்மகிரி ஸ்ரீவித்யா பீடத்தின் ஞானச் செல்வாக்கை அழுத்தமாக நிறுவிவந்தார். சன்னியாசம் கொடுத்து, அடுத்த மடாதிபதியாக ஆச்சார்யர் அவரையே நியமிப்பாரென்று எல்லாரும் பேசிக்கொண்டார்கள். ஆச்சார்யர் சம்பிரதாயத்துக்காக ‘கல்யாணம் செய்து கொள்கிறாயா?’ என்று கேட்டபோது, தாத்தா கொஞ்சமும் தயங்காமல் ‘ஆச்சார்யாள் அனுக்கிரஹம்’ என்று சொல்லி விட்டார். மடத்தில் இருந்தவர்களுக்கெல்லாம் பெரும் அதிர்ச்சியாயிருந்தது. ஆச்சார்யருக்குத் தெரியும், தாத்தா ஆத்மஞானி, அவருக்கு எதிலும் விருப்பு, வெறுப்பு இல்லை, ‘சன்னியாசம் சுவீகரித்துக் கொள்கிறாயா?’ என்று கேட்டிருந்தாலும் அதுவே அவரது பதிலாயிருந்திருக்குமென்று.

      பதினெட்டு வயதில் கௌசலை என்கிற பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார்கள். ‘பத்மநாப கணபாடிகளின் ஆத்துக்காரி’ என்று அறியப்படுவதில் கௌசலை பாட்டிக்கு அளவில்லாத பெருமை. திருமணமாகி பத்து வருடங்களுக்குப் பிறகு பிறந்த பிள்ளைக்கு ராமனாதன் என்று பெயரிட்டார்கள். குழந்தை வளர வளர மற்ற பிள்ளைகள் போலல்லாமல், அம்மாவின் வயிற்றைக் குரங்குக்குட்டி போல கவ்விப்பிடித்துக் கொண்டு கீழே இறங்காமல், எல்லாவற்றையும் வெறித்துப் பார்த்தபடி இருந்தது. நான்கு வயது வரை ஒரு சொல் கூட பேசவில்லை. தாத்தாவின் அறிவின் மீது பொறாமை கொண்டு உள்ளூற குமைந்து கொண்டிருந்தவர்கள் குளிர்ந்தார்கள், “புள்ளை எங்கேர்ந்து பேசுவான், அதான் இவரே மொத்த வம்சத்துக்கும் சேத்து ஒரேடியாப் படிச்சு, பேசிப்பேசியே அடுத்தவா வாயெல்லாம் அடைச்சுட்டு, நாந்தான் பண்டிதன்னு அகங்காரமா அலையறாரே.. இதோ புள்ளயாண்டான் வாயப்பிடுங்கிட்டா அம்பாள்!” என்று பின்னால் பேசினர். பத்மனாப கணபாடிகள் மடத்து வளாகத்திலும், கோயிலிலும் எங்கு சென்றாலும் மகனைத் தூக்கிக் கொண்டு தேவி மஹாத்மியம் முழுவதையும் ஒவ்வொரு சொல்லையும் தன் உயிரிலிருந்து உருக்கியெடுத்து சொல்ல ஆரம்பித்தார். மௌனமாய் கேட்டுக்கொண்டிருந்த பிள்ளை கடைசி நாள் கடைசிச்சொல்லைச் சொல்லி முடித்ததும் வாய் திறந்து ‘அம்மா’ என்று தொடர்ந்தது. “இனிமே அவ பாத்துப்பா” என்று மகனை அப்படியே லலிதாம்பிகையின் சன்னதியில் கிடத்தி, அன்னையை உள்விழிகளால் உற்றுப்பார்த்தார். அன்னை மலரிதழ் மொட்டவிழ்ந்தது. நேரே மடத்திற்குச் சென்று ஆச்சார்யரின் காலில் விழுந்தார். ஞானானந்த தீர்த்தர் என்னும் சன்னியாசி ஊரை விட்டு வெளியேறி, பிரம்மகிரியின் உயர்ந்த குன்றொன்றின் மேல் தனித்த சுடராக பொருந்தியிருந்து, ஒரு வார்த்தைகூட பேசாமல், மனதிற்குள் மீதமிருந்த கடைசிச் சொல் வரை, ‘குரு கருணா விலாசம்’, ‘ஸ்ரீவித்யா தந்த்ர ப்ரயோக தீபிகா’ ‘அத்வைதானுபூதி சூத்ரம்’, ஜீவப்ரஹ்ம ஐகபத்ய ப்ரகரணம்’ என்று நூல்களாக எழுதிக் குவித்தார். வருடங்கள் கழிந்து ஒருநாள், பிட்சை அளிக்கச் சென்ற மடத்துச் சிப்பந்தி, ஆளைக்காணாது வெறும் காவிவேட்டியும், துண்டும் மட்டும் கிடக்க, பதறியோடி ஆச்சார்யரிடம் சொன்னார். அனைவரும், ஏதாவது மிருகத்திற்கு இரையாயிருப்பார் என்று வருத்தப்பட்டார்கள். ஆச்சார்யர் குன்றின் உச்சியில் நின்று, சரிவைத்தாண்டி பள்ளத்தாக்கில் மண்டியிருந்த ஹிரண்யகர்ப்ப வனத்தின் பச்சைமரக்கூட்டத்தின் தலைகளுக்கு நடுவில் எதையோ நிலைத்தவிழிகளுடன் பார்த்தபடி இருந்தார்.
***

      அரைப்பிச்சியான கௌசலைப் பாட்டி மீதமிருந்த போதத்தை முழுக்கத் தன் மகன் மேல் வைத்தாள். ராமனாதன் குறைவாகப் பேசி, அதிகமாகப் படித்தார். தந்தை ஞானத்தின் கூர்வாளால் வார்த்தைகளைப் பிளந்து, சிதறிய பீஜாட்சரங்களின் உள்ளே அதிரும் நாதஒலியில் மனம் லயித்தார். மகனோ மெல்லிய மயிலிறகால் ஒலிகளை வாரி அள்ளிக் கோர்த்த வார்த்தைகளைக் கொண்டு கட்டியெழுப்பிய காவியங்களில் கரைந்தார். கால்கள் நிலத்தில் ஊன்றி நின்றாலும், எப்போதும் மனம் எங்கோ அந்தரத்தில் பறந்தபடி இருந்தது. காக்கை, குருவி, மாடு, நாய், மலர், மலை, சிலை என்று பேதமில்லாமல் எல்லாவற்றிடமும் பாடிச் சிரித்தார். சமயங்களில் சிறுமிகள், கன்னிப்பெண்கள், தாய்மார்களை பார்த்ததும் நடு வீதியிலே காலில் விழுந்தார். கவிமனம் அறியாதவர்கள் பெண்பித்தன் என்று இழிவுசெய்து ஒதுங்கினர். தங்கள் பெண்களைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்தனர். ஆச்சார்யரிடம் வாமாச்சாரம் பயின்று புத்தி பேதலித்தவன் என்று புகார் செய்தனர். ஆச்சார்யர் பதிலே சொல்லாமல், அப்பாவையே லலிதாம்பிகைக்கு பூஜை செய்யச்சொன்னார். ஊர் வாய் மெல்ல முனுமுனுத்து அடங்கியது. தாத்தாவின் சிஷ்யர் ஒருவர் தான் தன் மகளைக் கல்யாணம் செய்து வைத்தார். அடுத்த வருடம் நான் பிறந்தேன்.

      எனக்கு ஐந்து வயதிருக்கும் போது ஒருமுறை நானே பார்த்திருக்கிறேன். அந்திப்பொழுதில் விளையாடிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தபோது, முற்றத்தில் அம்மா சிவப்புப் பட்டுடுத்தி, செவ்வரளி மாலை சூடி, இடைவரை கேசம் விரிந்து புரள, வெற்றிலை மென்று சிவந்த வாயுடன் லலிதாம்பிகை சிலை போல ஒரு காலை மடித்து, மறுகாலை தொங்க விட்டு கல்லுரல் மேல் அமர்ந்திருந்தாள். பக்கத்தில் தூபக்காலிலிருந்து குங்கிலியம் புகைந்து, கணத்த வெண்புகை குட்டி மேகம் போல் தங்கி வழிந்து, காற்றில் கரைந்து பரவியது. அப்பா அம்மாவை சுற்றி வந்து பூத்தூவி, காலில் விழுந்து வணங்கினார். ஒன்றும் புரியாமல் விழித்த என்னையும் நமஸ்கரிக்க வைத்தார். ‘அம்மா..’ என்று அழைத்தேன். அம்மா என்னைக் கவனித்ததாகவே தெரியவில்லை. பாதி இமைகள் சரிந்திருக்க, விழிகள் மேல்நோக்கி சொருகி நின்றிருந்தது. பயந்து மூர்ச்சையானேன். தெளிந்த போது கோயில் கருவறையில் அப்பாவின் மடியில் இருப்பதை உணர்ந்தேன். அப்புறம் அப்பா என்னிடம் லலிதாம்பிகை தான் அம்மா, பயப்படக் கூடாதென்றார். மற்றவர்களுக்கு சிலையாக இறுகி அமர்ந்திருக்கும் அன்னை, என் தாத்தா, கொள்ளுத்தாத்தாவிடம் கணிந்து, முகமலர் அலர்ந்து, ‘வா...!’ என்றழைத்த கதையைச் சொன்னார்.  எனக்கும் கோயிலில் லலிதாம்பிகையின் கல்லுதடு மெல்ல விரிந்து சிரிப்பதையும், பேசுவதையும், அருகே அழைப்பதையும் காண்பித்துக்கொடுத்தார்.

      மடத்தில் வாசிப்பும், விவாதமும் எல்லாம் சமஸ்கிருதத்தில் தான். அப்பா தான் எனக்குத் தமிழ் படிக்கக் கற்றுக் கொடுத்தார். மடத்தில் ஆச்சார்யருக்கும், இன்னும் வெகுசிலருக்கும் தவிர வேறு யாருக்கும் தமிழில் புலமை கிடையாது. ஆச்சார்யரிடம் தான் அப்பாவும் தமிழ் கற்றுக்கொண்டார். சுப்பிரமணிய பாரதியைப் போய்ப் பார்த்திருக்கிறார், அவரை தமிழ்க் காளிதாசன், ஸ்ரீவித்யா உபாசகர் என்று சொல்லுவார். பரம்பரையாய் சேமித்து வைத்திருந்த ஓலைச்சுவடிகள், அச்சிட்ட புத்தகங்கள் அடங்கிய பெட்டியில் அப்பாவின் கையெழுத்தில் தேவநாகரியில் எழுதப்பட்ட கொத்துக்கொத்தான தாள்களைப் பார்த்தேன். அப்பா எழுதி நான் பார்த்த ஞாபகமே இல்லை. எப்போது எழுதியிருப்பாரென்று யூகிக்க முடியவில்லை. ‘பாலா லீலா விநோதம்’ என்று தலைப்பிட்டு சமஸ்கிருதத்தில் செய்யுள்களாக எழுதியிருந்தார். முதல் பத்துப்பாட்டு சம்பிரதாயமான விநாயகர், குரு, அன்னை துதிகளுடன் அவையடக்கமும் இருந்தது. அப்புறம் அதில் துதிகளே இல்லை. பாலா, கன்யா, அம்பா என்று மூன்று காண்டங்களாகப் பிரித்து, அன்னை லலிதாம்பிகை நூலாசிரியனை வாலைக்குமரியாக காலில் நூபுரம் கிலுகிலுக்க, சிற்றடி வைத்து ஓடி, மழலை மொழி பேசி, குறும்பு விளையாட்டுக்கள் செய்தும், இளங்கன்னியாக மிளிறும் பேரழகுடன் வசீகரித்து, தனைமறந்து அவளைத் தேடித்தேடி ஏங்கித் தாபத்தில் அழுது, கல்வியும், குலமும், பணமும் எல்லாம் துறந்து, காணும் பொருளிலெல்லாம் அவள் அழகே கண்டு, பரவசத்தில் ஆடிப்பாடி, மதியழிந்து தகரும் தருணத்தில், கருணையே வடிவாக, உலகனைத்திற்கும் தாயாக, மகனின் துயர் பொறுக்காதவளாக, எல்லா மாயையும் தனது லீலையே என்று உணர்த்தி, சிறுகுழந்தையாக்கி மார்பில் அனைத்து அமுதூட்டி அமரனாக்கி, பின் தன் கருவுக்குள் வைத்து தானாக்கினாள் என்று அழகும், காதலும், காமமும், அன்பும், கருணையும், தத்துவமும், வர்ணனைகளும் அடுத்தடுத்து வர, அதற்கேற்ற சந்தங்களில் ஒலிக்கும் சொற்களைக் கோர்த்து காப்பியமாக பொன் நகை செய்யும் நுணுக்கத்துடன் எழுதியிருந்தார்.

      ஒரு நவராத்திரி உற்சவ காலத்தில் கன்னியாபூஜை, சுவாசினி பூஜை, ஹோமம், வேத சதஸ், ஊர்வலங்கள் என்று வழக்கம் போல் பிரம்மகிரி கொண்டாட்டங்களில் மூழ்கியிருந்தது. அப்பா வழக்கத்தை விட அதிக உற்சாகத்தில் மிதந்தார். எல்லாரும் பித்து முத்திவிட்டதாக கிண்டலாகப் பல்லிளித்துக் கூடி நின்று அப்பாவை சிகை பிரிந்து, வேட்டி அவிழக் கூத்தாடவைத்து வேடிக்கை பார்த்தனர். பத்தாம் நாள் அதிகாலை நூபுரகங்கையின் கரையில் அப்பாவின் அங்கவஸ்திரம் இருந்தது.  சற்றுத் தள்ளி நதி கலகலவென சிரிக்க, நீர்ப்பெருக்கின் ஓரத்தில் வளர்ந்துநின்ற புதர்ச்செடியில் கைகோர்த்து வேட்டியும், பூனூலும் இன்னும் நெளிந்து ஆடிக்கொண்டிருந்தது.

      அம்மா மௌனம் கனத்து அசையாமல் நின்றிருந்தாள். ஜலசமாதி அடைந்துவிட்டார், யோகி என்றார்கள். அம்மா கற்சிலை போல அமர்ந்தாள். விழிகள் திறந்து, கடைசிப் புன்னகை அப்படியே உறைந்தது. மாறாத புன்முறுவல் பூத்த லலிதை போல அம்மா என்று எண்ணிக்கொண்டேன். என்னை இறுக வயிற்றோடு கட்டிக்கொண்டாள். கொதிக்கும் சோற்றுப் பானையின் மூடி போல அம்மாவின் அடிவயிறு தட்தடப்பதை உணர்ந்தேன்.

      கௌசலைப் பாட்டி நீர்ச்சுழலில் சிக்கிய எறும்பு போல திசையழிந்து தத்தளித்தாள். கோவில் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு என்னேரமும் வாய் ஓயாமல் அரற்றிக் கொண்டே இருந்தாள். “என் ஆத்துக்காரரையும், குழந்தையையும் திருப்பிக் கொடுடி முண்டை. ராட்சஷி, என் குலத்தையே நாசம் பண்ணின துஷ்டை. நீ மட்டும் சந்தோஷமா ராஜ்ஜியம் பண்ணிண்டிருக்கலாம்னு நினைச்சியோ. நாசமாபோயிடுவே. விடமாட்டேன். கொன்னுட்டுத்தான் மறுவேலை....” புடவையை அவிழ்த்தெறிந்து, எச்சில் தெறிக்க, அழுது சிவந்து வெறிபிடித்த விழிகளுடன் காற்றில் யாராருடனோ சண்டை போட்டாள். மெல்லக் கிட்டப்போய் கவணித்தவர்கள் அவள் வாயிலிருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டு வாயடைத்து, அரண்டு போய் விலகி ஒடினார்கள். அங்கேயே சிலமுறை மலமூத்திரம் கழித்தாள். கோயில் ஊழியர்கள் பொறுக்கமாட்டாமல், வாயைத் துணியால் கட்டி, குண்டுக்கட்டாகத் தூக்கி கொண்டுவந்து வீட்டில் போட்டார்கள். பின் அம்மா என்னையும் பாட்டியையும் அழைத்துக் கொண்டு மாமாவீட்டிற்கு வந்தாள். பாட்டி நள்ளிரவில் திடீர் திடீரென்று எழுந்து தலையிலடித்துக்கொண்டு உரக்க காது கூச கெட்டவார்த்தைகளாக பொழிந்தாள். அம்மா மட்டும் தான் அவ்வேளைகளில் பாட்டியை நெருங்க முடியும். அம்மா ஒன்றுமே பேசமாட்டாள். பாட்டியின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணை உற்றுப் பார்ப்பாள். சிலநிமிடங்களில் பாட்டி திட்டுவதை நிறுத்திவிட்டு, அம்மா மடியில் குழந்தை போல முகம் புதைத்துக், கதறி அழுது, அப்புறம் கேவிக்கேவி வெறும் விசும்பல் மட்டுமாக ஆகி அப்படியே தூங்கிவிடுவாள்.

      மாமாவின் ஏச்சுக்களுக்குப் பதிலெதுவும் சொல்லாமல் அம்மா என்னையும் பாட்டியையும் கூட்டிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினாள். கௌசலைப் பாட்டி கொஞ்சம் கொஞ்சமாக பேசுவதை நிறுத்திவிட்டாள். இரவு, பகல் எப்பொழுதும் மடத்து கோசாலையில் பசுக்கொட்டிலிலேயே இருந்தாள். எல்லா பசுக்களும் அவளுக்கு கணவனைப் பிரிந்து, குழந்தையையும் இழந்து, சதா துக்கத்தை மென்று அசைபோட்டு, கண்ணீரைப் பாலாய்ச் சொரியும் கைம்பெண்கள். லட்சுமி மாமி, கௌரி மாமி, சாந்தா மாமி, வனஜா மாமி என்று அவைகள் எல்லாம் அவளைப்போலவே வாழ்வு மீந்து போன அன்னையைர்கள். அவளுக்கு அவர்களோடு துக்கத்தைப் பங்கு போட்டுப், புலம்பி, அழுது, ஆறுதல் சொல்லவே நேரம் சரியாயிருந்தது. குழந்தைகள் ஒளிந்து நின்று அவளை வேடிக்கைபார்த்தன, ‘கோசாலைப் பாட்டி’ என்று பேர் வைத்து அழைத்தன. கொஞ்சம் கொஞ்சமாக அவளை நெருங்கி விளையாடின. பிறகு எல்லாருக்கும் கௌசலைப் பாட்டி ‘கோசாலைப் பாட்டி’ ஆனாள். எப்பொழுதும் கன்றுக்குட்டிகளைக் கட்டிக்கொண்டு தூங்கினாள். இரண்டு வருடங்களில் அழுகையும், புலம்பலும் நின்று முகத்தில் அமைதி நிறைந்தது. புண்ணகையும், மகிழ்ச்சியும் கூடி சன்னமான குரலில் கீர்த்தனைகளைப் பாடினாள். பெண்கள் கோசாலைக்குச் சென்று பாட்டியிடம் ஆசி வாங்கினார்கள். பாட்டி கோசாலையிலேயே ஒருநாள் தோலுக்குள் வைக்கோல் பொதிந்த ஒரு கன்றுக்குட்டியைக் கட்டியபடி அசையாமல் கண்மூடியிருந்தாள். வளைத்து அணைத்திருந்த அவள் கரங்களுக்குள்ளிருந்து அதைப் பிரிக்கமுடியாமல், அப்படியே சிதையில் வைத்து தீ மூட்டினோம்.
***


பகுதி-2                                           பகுதி-4

அன்னை (குறுநாவல் - பகுதி 2)

       என் அம்மாவைப் போல இந்த பிரம்மகிரியில் இன்னொரு பெண் என்றால் அது சாட்சாத் லலிதாம்பிகையே தான். அந்த லலிதையை இளம் பெண்ணாக ஒரு முறை மடத்தில் பார்த்தேன். வெளியூர்களில் இருந்து ஆச்சார்யரையும், ஸ்ரீ லலிதாம்பிகையையும் தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. ஸ்ரீமடம் சர்வாதிகாரி அனந்தராமையர், சன்னிதானத்தின் கட்டளையின்படி பக்தர்கள் தங்க ‘யாத்ரி நிவாஸ்’ கட்டும் ஏற்பாடுகளில் இறங்கினார். கட்டிடப் பணிகளுக்காக அவருடைய நண்பரும், மடத்தின் ஆப்தருமான இன்ஜினியர் அச்சுதன் நாயர் அவர் மகளுடன் பிரம்மகிரியிலேயே வந்து தங்கினார். அனந்தராமையர் அச்சுதன் நாயரையும், அவர் மகளையும் சுவாமிகளைத் தரிசனம் பண்ணிவக்கும் படி என்னிடம் சொன்னார். அவர்களை ஒரு சிறுபார்வையால் அழைத்துவிட்டு குரு மந்திரத்தை நோக்கி நடந்தேன். என் பின்னால் அவர்கள் புரியாத மொழியில் ஏதோ மெல்லப் பேசியபடி இடைவெளிவிட்டுத் தொடர்ந்து வந்தார்கள். கௌரிசங்கர பூஜை முடிந்து ஆச்சார்யரை தரிசிக்க நிற்கும் மக்கள் கூட்டத்திற்கு சற்று தள்ளி நின்று கொண்டேன். நாயர் தன் அங்கவசஸ்திரத்தை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். ஆச்சார்யரைக் கண்டதும் இருவரும் விழுந்து நமஸ்கரித்தார்கள். அந்தப் பெண் தலைமுடியைப் பின்னாமல், காதோரங்களில் இருந்து சிறிது முடிக்கற்றையை எடுத்து பின்தலையில் கட்டி, அதையும் சேர்த்துத் தொங்கவிட்டு இடையின் கீழ் முடிந்திருந்தாள். நமஸ்கரிக்கும் போது அவள் முதுகில் அது ஒரு கருநாகத்தின் பத்தி போல விரிந்தது.
***

      சூரிய உதயத்திற்கு முன்பாகவே நூபுரகங்கையில் குளிக்கச் சென்றேன். சற்று நேரம் ஆற்றை வெறித்தபடி எண்ணங்களற்று உட்கார்ந்திருந்தேன். மங்கிய நிலவொளிக்கு கண்கள் பழகியதும், காற்றில் அசையும் கருப்புத் துணி போல ஓடிக்கொண்டிருந்த ஆறு இதுவரையில் நான் கவணித்திராத ஏதோ ஒன்றை நினைவுபடுத்தியது. எவ்வளவு யோசித்தும் என்ன அது என்று பிடிபடவில்லை. சலித்துப் போய், மௌனவெளியில் ஒற்றைச் சொல்லை விட்டெறிவது போல சரேலென ஆற்றில் பாய்ந்தேன். குளிர்ந்த நீரில் ஒரு நிமிடம் தோல் எரிந்து அடங்கியது. ஆற்றின் அடியாழத்துக்கு நீந்திச் சென்றேன். காற்று நிரம்பிய சுவாசப்பை விம்மி மார்புக்கூட்டை முட்டியது, பின்மண்டையில் நீரழுத்தம் யாரோ கவ்விப்பிடிப்பது போல இருந்தது. இமைகளை இறுக்கிக்கொண்டபோது கண்களுக்குள் அடர்ந்த கருமை பரவியது. சட்டென்று ஆறு எண்ணைப் பளபளப்புள்ள கரிய, நீண்ட கூந்தல் ஓடை என்று தோணியதும் யாரோ உந்தித்தள்ளியது போல மேற்பரப்பிற்கு வந்தேன். பிடிவாதமாக எதையோ மறுதலிப்பவன் போல தலையைச் சிலுப்பிக் கொண்டேன். சிறைப்பட்டிருந்த காற்று வெடித்துக்கொண்டு வாய்வழியாக வெளியேறியதும் மார்புக்குள் அறைந்த முரசு ஓய்ந்து நிதானமடைந்தேன்.
***

      பாடசாலையில் ஆரம்பநிலை மாணவர்களுக்கு வகுப்பெடுத்து முடித்ததும் நான் எனது பாடம் கேட்க பெரிய வாத்தியாரிடம் போக வேண்டும். அவர் வர இன்னும் நேரம் இருக்கிறது. சமையலறைக்கு சென்று அம்மாவைப் பார்க்கலாம் என்று எண்ணிப் புறப்பட்டேன். பட்டர் குரலைக் கேட்டு திடுக்கிட்ட போதுதான் கோயிலுக்கு வந்திருக்கிறேன் என்று புரிந்தது. எப்படி இங்கே வந்தேன்? என்னை அம்மாவைப் பார்க்கப் போவதாக நம்பவைத்து கால் கோயிலுக்கு கூட்டிவந்து விட்டதா? காலுக்கு தனி மனம் உண்டா என்ன? “சங்கரா, சித்தநாழி சன்னதியப் பாத்துக்கோ, அவசரமா ஆத்துக்குப் போயிட்டு ஓடிவந்துடறேன்” என்று சொல்லி வெறும் கால்கள் மட்டுமாகிவிட்டிருந்த என்னை மீட்டு முழுவுடலாக்கி, பதிலுக்கு காத்திருக்காமல், பஞ்சகச்சத்தை ஒருபுறமாகத் தூக்கிகொண்டு கால்களைப் பரப்பிவைத்து விரைந்தார் கோயில் பட்டர்.

கருவறைக்குள், எனக்கும், என் அன்னைக்கும், அவளின் அன்னைக்கும், மற்றுமுள்ள அன்னையர்க்கெல்லாம் அன்னையாகிய லலிதாம்பாள் காலமற்று, கல்லில் வடித்தவன் காதலுக்காக கருணையுடன் இளம்பெண்ணாக உருக்கொண்டு வெளிப்பட்டிருந்தாள். ஆயிரம் தலைமுறை நம்பிக்கை, கற்சிலை தெரியவில்லை, அன்னையை பார்த்துக்கொண்டே இருந்தேன். மெல்லிதழ் மெல்ல விரிந்தது. “ஒரு புஷ்பாஞ்சலி பண்ணனும்” என்றாள். திடுக்கிட்டு திரும்பினேன். லலிதையே தான். கருவறையின் வெளியே நின்றிருந்தாள். “ஸ்ரீதேவி, நாள் பரணி” என்றபடி பூக்குடலையை கற்படியில் வைத்தாள். ஒரு கணம் உறைந்து பின் மீண்டு, நீர்தெளித்து பூக்களை எடுத்துக் கொண்டேன். அர்ச்சனை முடிந்து பிரசாதம் வாங்கிக் கொண்டு சந்தனத்தை நெற்றியில் தீற்றியபடி சினேகமாய்ச் சிரித்து 

“திருமேனி இங்க தான் சாந்திப் பணிக்கு நிக்குதா?” என்றாள். ஒன்றும் பேசாமல் பார்த்தபடியே இருந்தேன்.

“திருமேனி மறந்நு போயாச்சா? ஞான் இஞ்சினியர் அச்சுதன் நாயரோட மகள்”

அவள் சொற்கள் வந்து தொட்டதும், நாக்கு மரவட்டை போல சுருண்டு கொண்டுவிட்டது. பேசும் முயற்சியைக் கைவிட்டு கண்களை மூடிக்கொண்டு, அசையும் இதழ்களையும், வீணையொலி போன்ற குரலையும் மறுபடியும் மனதில் நிகழ்த்திக்கொண்டேன். லலிதையின் குரல் இனிமையாகத்தான் இருக்கும். ஆனால் இது வரை நான் கேட்டது அம்மாவின் குரல் மாதிரி இருக்கும். இன்று வேறு விதமாகக் கேட்கிறதே...

“அப்போ செரி திருமேனி, ஞான் போகனம்” என்று சொன்னது காதில் விழுந்தது.

கண்ணைத் திறந்து பார்க்கும் போது அவள் திரும்பி நடக்க ஆரம்பித்திருந்தாள். தலையிலிருந்து ஒரு கரிய நதி வழிதோடியது, ஒரு துளசிக்கதிர் மட்டும் மிதந்து வந்து கீழே ஒரு சுழலில் சிக்கிக்கொண்டு நின்றது. நான் நூபுரகங்கைக்குள் விழுந்து மூச்சு முட்டுவது போல இருந்தது. சுவாசத்திற்காக வாய் திறந்தேன் “இல்லை, நான் பாடசாலையில் அத்யயனம் பண்றேன். பூஜகர் ஆத்துக்குப் போயிருக்கார். அவர் வரவரைக்கும்....”

நான் முடிக்கும் முன்பே, திரும்பி நின்று பார்த்து சிரித்தாள். “ஓ...” என்று கொஞ்சம் ராகம்போட்டு நீட்டிச் சொன்னாள். பாடப்போகிறாள் போலிருந்தது.

“மௌனவிரதமோன்னு எனக்கு ஸம்சயம் வந்தாச்சு. என்னவாக்கும் படிக்கிறது?” என்று கேட்டாள். தமிழ் மாதிரி இருந்தாலும் வித்தியாசமாகப் பேசுவதாகப் பட்டது. எப்படிக் கேட்பதென்று தெரியாமல் “தமிழ் பேசுவேளா?” என்று கேட்டேன்.

மெலிதாகப் புண்ணகைத்து, “வீட்டிலே கொஞ்சம் தமிழ் சொல்லும். அம்மா இருந்தவரை என்கூட தமிழாக்கும் பேசறது. இப்போ இல்லை....’ என்றவள் சற்று நிறுத்தி பிரசாத சந்தனத்தில் ஒட்டியிருந்த பூக்களை தனியாகப் பிரித்துக்கொண்டே, “அம்மா பாலக்காடு தமிழ் பிராமணராக்கும்” என்றாள்.

அவள் சொன்னது முழுதாகப் புரியவில்லை, “நான் இங்கே மடத்து வேத பாடசாலையில் யஜுர்வேத அத்யயனம் பண்றேன், கணபாடம் முடிச்சாச்சு. மேற்கொண்டு படிக்கிறேன்” என்றதும் பெரியவாத்தியார் வந்திருப்பார் என்ற ஞாபகம் வந்தது.
அவள் சரி என்பது போல மெதுவாகத் தலையசைத்து விட்டு நிதானமாகத் திரும்பி நடந்தாள்.

சந்தனநிற கோடிப்புடவை நெற்கதிர் பச்சைநிறக் கரையுடன் அணிந்திருந்தாள். அவளே தாமரை மலரின் ஒளிஊடுறுவும் ஒரு இளம் இதழ் போலத்தான் இருந்தாள். மெலிதாகச் சிரித்தாலும் மேலேரும் கண்ணக்கதுப்புகள் சிவந்து, திறந்த குங்குமச் சிமிழ் போலத் தெரிந்தது. மையெழுதிய அகன்ற விழிகளில் புதிதாய்ப் பிறந்த கன்றுக்குட்டியின் கண்கள் போல ஈரமினுமினுப்புடன், கள்ளமின்மையும், குதூகலமும் கொப்பளித்தது. மாதுளம்பழ நிறத்தில் மென்வரிகள் நிறைந்த சிறிய இதழ்கள் விரியும் போதெல்லாம் ஈறுகள் தெரியாமல் சொல்லுக்குக் கட்டுபட்டது போல கைகோர்த்து வரிசையாக நிற்கும் பற்கள் ஒளிவீசியது. முன்கழுத்தில் அணிலின் முதுகு போன்று மூன்று மெல்லிய சதை வரிகள் இருந்தது. நெற்றியில் சந்தனம் வைத்துக்கொள்ளும் போது உள்ளங்கை போலவே புறங்கையும் விரல் மூட்டுகளின் தோல் சுருக்கங்களில் கூட நிறஅடர்த்தி இல்லாமல் நெய் பூசியது போல பளபளப்பாக இருந்ததைப் பார்த்தேன். காதுகள் புதிய வாழையிலைக் குருத்துச்சுருளின் மெண்மையுடன் இருப்பது பார்க்கும் போதே தெரிந்தது. பின் கழுத்தில் அம்மாவின் கையை உதறி ஓடும் குறும்புக்குழந்தைகள் போல மிருதுவான சிறிய கேசச்சுருள்கள் பின்னலுக்குள் அடங்காமல் ஆர்வமாக எட்டிப்பார்த்தது. தோளிலிருந்து முழங்கை வரை கைகள் உடலை ஒட்டி இருக்க, இடையிலிருந்து முன்கை உடலிலிருந்து பக்கவாட்டில் சற்று விலகி காற்றிலாட நடந்தாள். அப்போது தான் அவள் உடலின் வடிவமும் அவ்வாறே தோளிலிருந்து இடைக்கு குறுகியும் மீண்டும் அகன்றும் இருப்பதை கவணித்தேன். உடனே என்னைப் பார்த்துக்கொண்டேன் அகன்ற தோள்கள் இடையில் குறுகி அப்படியே கால்கள் நீண்டிருப்பதாகப் பட்டது. அவள் நடக்கும்போது உடல் ரொம்பவும் மேலும் கீழுமாய் ஏறி இறங்காமல், தரையைக் காலால் தேய்க்காமல் சற்றே தூக்கி வைத்து காற்றில் மிதந்து செல்வது மாதிரி இருந்தது. ஏதோ வெகு அபூர்வமான பொருளை உள்ளே பாதுகாத்து வைத்திருப்பது போல நிதானமாகவும், ஜாக்கிரதையாகவும் நடந்தாள். பாதங்களை எடுத்துவைப்பது நல்ல சந்தஸில் அமைந்த சமஸ்கிருத சுலோகத்தின் வார்த்தைகள் போல சீராக இருந்தது. அதன் தாள கதியில் மனம் தானாக எங்கிருந்தோ வரிகளை எடுத்துப் போட்டது....

‘உடுராஜமுகி ம்ருகராஜகடி கஜராஜ விராஜித மந்தகதி
இஸதே வனிதா ஹ்ருதயே வஸதி...’*

சுவாரஸ்யமாய் எழுதும் பொது எழுத்தானி உடைந்தது போல, அடித்தொண்டையில் கத்தியபடி “சங்கரா.. ரொம்ப ஒத்தாசைப்பா. நீ கிளம்பு. உங்க வாத்தியார் அப்போவே பாடசாலைக்கு போறதப் பாத்தேன்” ஈரக்குடுமியை முடிந்துகொண்டே பட்டர் வந்தார். அவர் உடலெங்கும் பொழுது புலர்வது போல புதிய விபூதி பூச்சின் ஈரம் உலர்ந்து வெளிறி வெண்மை படர்ந்தது.

சட்டென்று மழை நின்றது போலிருந்தது எனக்கு. மனம் பின்னோகி ஒடி, ‘இவ்வளவு நேரம் என்ன செய்து கொண்டிருந்தேன்? என்ன யோசனை செய்தேன்? ஏதோ பாடல் வரிகள் சொன்னேனே, காளிதாசனுடையதா?’ என்று அறுந்து சுருண்ட வீணைத்தந்தியை இழுத்துக் கட்ட முயன்றது. நான் பாடசாலையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தேன்.
***

      மடத்துச் சிப்பந்திகள், பண்டிதர்கள், தர்மாதிகாரி என்று ஒரு கூட்டமே பாடசாலையின் முற்றத்தில் இருந்தது. ஆச்சாரிய ஸ்வாமிகள் மாணவர்களிடம் அவர்களுக்கு பாடம் ஆன வேத சம்ஹிதையின் நடுவிலிருந்து ஆங்காங்கே சில அடிகளை எடுத்துக் கொடுத்து அவர்களை முழுமை செய்யச் சொல்லி கவனித்துக் கொண்டிருந்தார். அருகே தலைமை அத்யாபகர் சற்று முதுகை வளைத்து, இடது கையை மார்பின் குறுக்கே கட்டி, வலது உள்ளங்கையை குவித்து வாயையும், மூக்கையும் பாவனையாக மறைத்து, கண்களில் மிகுந்த பனிவுடன் நின்றார். நான் சென்றவுடன் தரையில் விழுந்து நமஸ்கரித்து அத்யாபகரின் அருகில் சென்று நின்று கொண்டேன். ஆச்சாரியர் தலையில் முக்காடிட்டிருந்த காவித் துணியை காதுமடலின் பின்னல் இழுத்துவிட்டு ஒதுக்கிக் கொண்டே என்னைப் பார்த்தார். மிக மிருதுவான சப்தத்தில், “என்ன பாடம் ஆறது?” என்றார், அத்யாபகர் இன்னும் கொஞ்சம் வளைந்து, “சங்கரனுக்கு காவிய பாடம் ஆறது. ஆச்சார்யாள் அனுக்கிரஹம், பரம்பராகதமா வந்த ஞானம், ரொம்ப வேகமா கிரஹிச்சுக்கிறான்” என்றார். மிகக் குறைந்த உணவும், மிகமிகக் குறைந்த உறக்கமும், கடுந்தவமும், ஞானமும், தொன்னூற்றி ஆறு வயதின் வற்றிச்சுருங்கிய தேகமும், அனுபவமும் சேர்ந்து ஆச்சாரியர் முற்றி உலர்ந்த முழுத்தேங்காய் போல இருந்தார். என் மூன்று தலைமுறை மூதாதைகளைப் பார்த்தவர். அமைதியாகக் கூர்ந்து நோக்கி, கண்களின் வழியே ஊடுறுவிச் சென்று என் வேர்களைத் துழாவி, எதுவோ தட்டுப்பட்டதுபோல் பொருள்பட மெதுவாகப் புண்ணகைத்து, காய்ந்த சமித்துகளைப் போன்ற தன் கையால் மந்திராட்சதை தந்தார். “நீ பாடசாலையில் இருக்க வேண்டாம். மடத்துக்கு வந்துடு. நாளைலேர்ந்து நீயும் வேதாந்தபாடத்தில் சேந்துக்கோ. கார்த்தால பூஜைக்கு சுப்புவுக்கு ஒத்தாசை பண்ணு” என்றார். அருகிலிருந்த இன்னொரு முதிய வைதிகர் முன்வந்து “ஆச்சார்யாள் அனுக்கிரஹம்” என்று என்னை ஒருமுறை பார்த்தார்.
      மடத்தில் வேதாந்த பாடம் ஆச்சார்யரே நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிஷ்யர்களுக்கு சொல்வது. எனக்குப் பெருமையும், சந்தோஷமும் பொங்கியது, அடக்கிக்கொண்டு மறுபடியும் விழுந்து நமஸ்கரித்தேன். ஆச்சார்யர் புறப்பட்டவுடன், பாடசாலை சமையல்கட்டிற்கு ஓடிச்சென்று அம்மாவிடம் சொல்லி, நமஸ்கரித்தேன். அம்மாவிற்கு அதன் முக்கியத்துவம் புரியும், ஆனால் முகத்தில் எனக்காக சிறிது மகிழ்ச்சியைக் காட்டினாள், மற்றபடி அதை பொருட்படுத்தவே இல்லை. என் சிகையை அவிழ்த்து, தலையை விரல்களால் கோதி, முடியை நீவிவிட்டு பின் இறுக்கிக் கொண்டையாக முடிந்துகொண்டே “தினம் பாடம் முடிஞ்சாப்புறம் மத்தியான்னம் அம்மாவப் பாக்க வந்துடுப்பா” என்றாள். அம்மாவும் மஞ்சள் நிறமாக இருப்பாள், இப்பொழுது சமையல் வேலைக்கு வந்த பிறகு அவள் முகம் மட்டும் தீ நிறத்தில் இருந்தது. என்னேரமும் உள்ளே எதுவோ எரிந்துகொண்டே இருப்பது மாதிரி. உள்ளங்கைகள் மிருதுத்தன்மை குறைந்து கொஞ்சம் காய்த்திருந்தது. தலையில் ஒருமுடி கூட இன்னும் நரைக்கவில்லை. சிரிப்பும் பெரும்பாலும் இருக்காது, எனக்காக மிகமெலிதாக விரியும் உதடுகளின் கீறலான இடைவெளியில் பற்கள் சற்றே தெரியும். ‘லலிதே, என் குழந்தையப் பாத்துக்கோடி அம்மா’ என்று அவள் முனகும் சத்தம் எங்கோ தூரத்தில் கேட்டது. என் மனம் என்னையில் முக்கிய கை போல மிக லாவகமாக பிடியிலிருந்து நழுவி வேறெங்கோ செல்வதை பார்த்துக் கொண்டிருந்தேன்.
***

      “நமஸ்காரம் திருமேனி” என்ற ஒலி கேட்டு, அதற்காகவே காத்திருந்தது போல ரொம்பவும் ஆர்வமாக தலையை நிமிர்ந்து பார்த்தேன். நன்கு பழுத்த பொன்னிறமான தாழம்பூ மடல்கள் இருந்தது, இல்லை, கூப்பிய அவள் கரங்கள் தான் அது. நான் கோவிலின் உள்ளே செல்லாமல் குளக்கரைப் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தேன். எப்போது இங்கே வந்தேன்?, எதற்கு? - நினைவிலில்லை. ஆனால், நான் இங்கே, இப்பொழுது, இப்படி இருப்பதும், இவளைக் கண்டவுடன் அகம் மலர்ந்து சிரிப்பதும் தற்செயலானது இல்லை என்று புரிந்தது. கூடவே, ஒரே நாளில் மனம் அவள் கோயிலுக்கு வரும் நேரத்தைக் கணித்து, என்னை இழுத்துவந்து குளக்கரையில் விட்டிருப்பதை உணர்ந்ததும் ஆச்சரியமாய் இருந்தது. அதைவிட ஆச்சரியம், இவளும் கோயிலுக்குள் செல்லாமல் எப்படி நேரே இங்கே வந்தாள் என்பது. ஒருகனம் இருவரும் மிகச்சிக்கலான ஒரு மண்டலத்திற்குள் வழி தவறி மாட்டிக்கொண்டு அதன் திறப்புகளிலும், தடுப்புகளிலும் திசை திருப்பப்பட்டு எதிர்பாராத திருப்பங்களில் நேருக்கு நேர் முட்டிக்கொள்வது போல இருந்தது.
      குளக்கரையைச் சுற்றியிருந்த பெருமரங்களின் இலையடர்வுகளில் கிடைத்த சிறிய இடைவெளிகள் வழியாக கீற்றுகள் போல நீண்டு வந்த காலையின் பொன்னொளி அவள் முகத்தின் பக்கவாட்டில் மிகமென்மையாகத் தொட்டு நின்றது. நேர்பார்வைக்குப் புலப்படாத கன்னத்தின் மென்மயிர்கள் தங்ககத்தூசி போல மிளிர்ந்தது. மந்தமான காற்றில் ஆடிய இலைகளால் இடைவெளிகள் அடைபட்டு, புதிய சாளரங்கள் திறக்கப்பட்டு பீறிவந்த ஓளிக்கீற்று அவள் கன்னப்பிரதேசத்தில் வெவ்வேறு இடங்களில் தெளிந்து, மறைவது சூரியன் தன் கிரணங்களால் அவள் கன்னத்தை தொட்டுத் தொட்டுப் பார்ப்பது போல இருந்தது. பேசுவதற்காக வாயை சற்றே திறக்கும் போது ஒளி அவள் வெண்பற்களில் பட்டு சிதறி ஈரமான கீழுதட்டின் மேல் குளம்போலத் தேங்கியது. அவள் ஒளியை உமிழ்பவள் மாதிரி இருந்தாள்.

      இவளை நான் ரொம்ப உற்றுப்பார்க்கிறேன். இவள் அதை அறிவாள், ஆனாலும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் கொஞ்சம் நாணிக்கொண்டு அனுமதிக்கிறாள் என்று தோணியது. இப்படியெல்லாம் நினைக்க எவ்வளவு நேரம் ஆகியிருக்குமென்று தெரியவில்லை. காலத்திற்கு ஒரே சீரான ஒட்டம் இல்லை போலும். இடத்திற்கும், மனிதருக்கும், நேரத்திற்கும் தகுந்தமாதிரி காலம் மெதுவாகவும், வேகமாகவும் ஓடுகிறது. இவளருகில் எல்லாமே சற்று நிதானமாகவே செயல்படுவது போல் இருக்கிறது. அதுவே இவளின் இயல்புக்கும் பொருத்தமானதாக இருந்தது. ‘அப்படியென்றால், இவளுடனேயே இருந்தால் என் காலம் மெல்ல நகர்ந்து ஆயுள் கூடுமா...?’ சிரிப்பு வந்தது.

“எதுக்கு திருமேனி சிரிக்கறது?” என்றாள். எழுந்து அங்கவஸ்திரத்தால் உடலை போர்த்திக் கொண்டு படியேறி அவளருகில் சென்றேன். “நீங்க தமிழ் பேசறத நினைச்சுண்டிருந்தேன். சிரிப்பு வந்துடுத்து” என்றேன். காலைவேளையில் குளக்கரையில் உட்கார்ந்து அவளைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டேனோ என்று தோண, “அசடு” என மனதிற்குள் என்னையே திட்டிக் கொண்டேன். “ஓ... இப்போ ஞான் நிறைய தமிழ் பேசறது. மெட்ரிகுலேஷன் வரை படிச்சது கல்கத்தயிலா. அம்ம மரிச்ச சேஷம் தமிழ் பேசவே ஆளில்லா. திருமேனி பாக்கனும், இனி வேகம் படிச்சு சுத்தமாயிட்டு பேசுவேன்”

அவளுக்கு அம்மா இல்லை என்பது கேட்க கஷ்டமாயிருந்தது. இப்போது எதைக் கேட்டாலும் அபத்தமாகிவிடும் என்பதால், அபத்தமாகவே ஏதாவது கேட்க நினைத்து, “இங்கிலீஷ் பாஷை எல்லாம் பேசுவேளா?” என்றேன்.

தோள்கள் குலுங்காமல் தலையை மட்டும் அசைத்தாள். நீளமான கழுத்து கொண்ட பறவைகளுக்கு மட்டும் நளினமும், அழகும், பெண்மையும் கூடுதலாக இருப்பதன் ரகசியம் புரிந்தது.

“இந்தப்பக்கம் திருமேனின்னு சொல்ற பழக்கமில்லை. சாமின்னு கூப்பிடுவா. நீங்க அப்படியும் கூப்பிட வேண்டாம். கௌரிசங்கரன்னு பேர். எல்லாரும் சங்கரான்னு கூப்பிடுவா. உங்களுக்கு இஷ்டப்பட்ட மாதிரி கூப்பிடுங்கோ”

“ம்ம்ம்ம்..... கௌரியேட்டான்னு கூப்பிடறேன்”, ஏற்கனவே யோசித்து வைத்தது மாதிரி பட்டென்று சொன்னாள்.

“உங்களோட சௌகரியம்”

“அப்போ நீங்களும் என்னை ஸ்ரீதேவின்னு கூப்பிடனும்”
சிரித்துக்கொண்டேன்.

“கௌரியேட்டா.... அப்பா இன்னைக்கு மடத்திலேக்கு வரும்” என்றாள்.
அதில் விசேஷம் ஒன்றும் இருப்பதாகத் தெரியாததால் ‘ஓகோ..’ என்று வெறுமே சொல்லிவைத்தேன்.

“ஸ்வாமிகளுடே அடுத்து முக்கியமான விஷயம் பேசறதுக்கு”

சட்டென்று மனம் பரபரப்படைந்தது. “என்ன விஷயம்?”

“மகாத்மா காந்தி மதறாஸ் வந்திருக்காங்க. இங்க வரதுக்கு முன்னாடி நாங்கெ அங்கே போய் பாத்தாச்சு. பாபுஜி மதுரைக்கு போவாங்களாம். அப்பா பாபுஜிய பிரம்மகிரிக்கு ஸ்வாமியெ பாக்க க்ஷனிச்சிருக்காங்கெ. அம்பலத்துக்குள்ளே ஹரிஜனங்களையும் அனுவதிக்கிறது பத்தி ஸ்வாமிகிட்டெ பாபுஜி கேட்கப் போறாங்க”

நான் மகாத்மா காந்தியைப் பத்தி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆச்சார்யரே அப்படித் தான் குறிப்பிடுவார். பாரத தேசத்தின் விடுதலைக்காக வாழ்க்கையை அர்பணித்துக்கொண்ட கர்ம யோகி என்றும் சொல்லுவார். ஆனால் பஞ்சமர்கள் கோவிலுக்குள் எதற்கு வரவேண்டும் என்று தான் எனக்குப் புரியவில்லை.

“பஞ்சமர் கோவிலுக்குள் நுழையறது சாஸ்திர விரோதம் இல்லையா? அவாளோட சம்பிரதாயமே வேறயாச்சே?”

அவள் முகம் வாடியது. முகத்தைத் தாழ்த்தி கெஞ்சலாக, “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது கௌரியேட்டா... அவங்களும் நம்மள மாதிரி மனுஷ்யங்க தானெ? உங்கள லலிதாம்பிகைய பாக்கக்கூடாதுன்னு சொன்னா எத்ரமாத்ரம் சங்கடமாயிருக்கும்?”

வெறும் பேச்சுக்குக் கூட என்னால் அதைத் தாங்கமுடியவில்லை. துக்கம் பொங்கி கண்ணை நிறைத்தது. உடனே சென்று அம்பாளைப் பார்க்க வேண்டும்போல இருந்தது. இவள் சொல்வது நியாயமாகப்பட்டது. எல்லாருக்கும் இறங்கும் குணம். என் அம்மா போலவே தான் இவள். என் அம்மா சொன்னால் நான் மறுக்க மாட்டேன். ஆனால் சமஸ்தானத்திலும், ஸ்ரீமடத்திலும் இதற்கு என்ன முடிவு செய்வார்கள்? எனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. இவளுக்கு மகாத்மாவை ரொம்ப பிடித்திருக்கிறது. இவளிடம் பேசுவதற்காகவேணும் அவரைப் பற்றி இன்னும் கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

மௌனம் மெலிதாக உள்ளே நுழைந்து நீண்டு வளர்ந்து இருவரையும் பிரித்தது, அதை அறுத்து மீண்டும் ஒட்டிக்கொள்வது போல, “நிறைய வாழைப்பழம் இருக்கு வீட்ல, கோசாலைக்கு கொண்டு போய் கொடுக்கனும். வழி சொல்லித் தாங்க கௌரியேட்டா...” என்றாள்.
கோசாலை..... அங்கே நான் போய் இரண்டு வருடம் ஆகப் போகிறது. மடத்தில் முன்பு நான் மிகவும் விரும்பிய இடமும், பிறகு எப்போதும் நினைத்தாலே துயரம் கவ்விக்கொள்ளும் இடமும் அது தான்.
***
(* நிலவொத்த முகம், சிம்மம் போலக் குறுகிய இடை, கஜராஜனை (யானை) போன்ற மெல்ல நடை, இப்படி ஒரு அழகி என் இதயத்தில் வசிக்கையில்.....)
பகுதி-1                                                     பகுதி-3