Friday, August 22, 2014

குஞ்ஞுண்ணி மாஷ் கவிதைகள்

குஞ்ஞுண்ணி (1927 – 2006) மலையாளக் கவிஞர். கோழிக்கோடு இராமகிருஷ்ண மிஷன் சேவாஸ்ரம பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆசிரமவாசியாகவே வாழ்ந்தார். மலையாள மொழியின் நெளிவுகளை விடுகதை/வார்த்தை விளையாட்டு போல பயன்படுத்தி எளிய வாக்குகளில் சின்னஞ்சிறிய கவிதைகள் நிறையப் புணைந்திருக்கிறார். அதனால் கேரளத்தில் குழந்தைக் கவிஞர் என்று பரவலாக அறியப்பட்டாலும், ஆழ்ந்த தத்துவர்த்தமான பொருளுள்ள கவிதைகள் இவருடையது.
oOo
Kunjunni mash நான்(நான் என்னும் தலைப்பில் எழுதிய சில குறுங்கவிதைகள்)
கு வுக்குப்பிறகு ஞ்ஞு
ஞ்ஞு வுக்குப்பிறகு ண்ணி
குவுக்கும் ஞ்ஞுவுக்கும் ண்ணிக்கும் பிறகு
குஞ்ஞுண்ணி
குஞ்ஞுண்ணிக்குப் பிறகு?
நான் ஒரு பூவிலிருக்கிறேன்
வேறொரு பூவின் தேனுக்காக
ஏங்குகிறேன்
குந்துமணியைவிடப் பெரியவன் நான்
என்னும் நினைப்பு உண்டாகும் போது
எள்ளைவிடச் சிறியவன் நான்
என்னும் உண்மையை
எள்ளளவும் அறிவதில்லை
என் முதுகில் ஒரு பெரிய யானை
என் நாக்கில் ஒரு ஆட்டுக்குட்டி
நானோ ஒரு எறும்புக் குட்டி
நான்
நானென்னும் சொல்லின்
இடையிலிருக்கிறேனா
விளிம்பிலிருக்கிறேனா
முன்னிலிருக்கிறேனா
பின்னிலிருக்கிறேனா
மேலேயிருக்கிறேனா
கீழேயிருக்கிறேனா
எள்ளில் எண்ணைபோல
விரவியிருக்கிறேனா
அல்லது
நானென்னும் சொல்லாயிருக்கிறேனா?
நான் எனக்கு நாணோ
ஆமென்றால் அம்பு எது?
எனக்கு நான் உபயோகமேயில்லை
அதற்கு ஒரு உதாரனம் சொல்கிறேன்
ஒருகைக்கு சொரியவேண்டுமானால்
அதேகையால் முடியாதில்லையா?
ஐயோ என்னையே எனக்கு துர்நாற்றம் அடிக்கிறதே
ஐயோ என் மனதிலிருந்து வெளிவர
என்னால் முடியவில்லையே
ஐயோ நான் என்னை
எங்கோ
மறந்துவைத்துவிட்டு வந்திருக்கிறேனே
நானொரு கவிதைக்காரன்
கபட கவிதைக்காரன்
விகட கவிதைக்காரன்
ஆனாலும் விதைக்காரன்
நான் இனி என் தந்தையாவேன்
அப்புறம் தாயாவேன்
அப்புறம் மகனாவேன், மகளாவேன்
அப்புறம் நான் என்னுடைய
நானுமாவேன்
என்னிடமே வந்துசேர்கின்றன
நான் அனுப்புவதெல்லாம்
யாரிலிருந்து அவற்றை பார்ப்பது
முட்டாள் தபால்காரன் கடவுள்
நெடும்பாதை
மழைக்கால அந்திப்பொழுது
நான் தனியன்
குஞ்சாயிருந்ததிலிருந்தே உண்ணுபவன்
குஞ்ஞுண்ணி
குஞ்ஞுண்ணி என்கிற நானா
நான் என்கிற குஞ்ஞுண்ணியா
என்பேர் என்பேர்
என் பேர் என் வேர்
என் மனம் என் மனை
என்னுடைய கவிதை நானேதான்
கற்பனையில் ஒரு
புலியைத் தேடுகிறேன் நான்
எனக்கு உறங்கத்தெரியாது
விழிப்பதற்கு தெரியவே தெரியாது
அரண்மனைக்கு காவல்நிற்கும்
நாய்தானே நான்
நாயின் விலாசம் என்ன?
நான் விழித்தபோது
என்னைக் காணவில்லை
ஆஹா அதிர்ஷ்டம்!
எனக்கு உயரம் குறைவு
என்னை உயர்த்தாதிருங்கள்
எனக்கு வேகம் குறைவு
என்னை தடுக்காதிருங்கள்
உயரமில்லாததே என்
உயர்வு என்றறிகிறேன் நான்
எனக்கொரு உலகம் உண்டு
உனக்கொரு உலகம் உண்டு
நமக்கொரு உலகம் இல்லை
நான்
யாருடைய கற்பனை
என்னைப் பெற்றது
நானே
என்னூடாக நடக்கவே
என்கால்களுக்குத் தெரியும்
நான் ஒரு கால்கவி
பெண் அறை அறியாததால் இருக்கலாம்
அறிந்தால்
நானொரு அரைக்கவி ஆவேனா
அல்லது
அரைக்கால்கவி ஆவேனா
நான்
அதிநவீனனில்லை
நவீனனுமில்லை
வெறும் வீனன்
நானொரு வாடகை வீடு
யாருடைய?
யாரில் இதில் வசிப்பது?
நான் இறப்பதற்காக
நான் வாழவேண்டுமென்று வைப்போம்
நான் வாழ்வதற்காக
யார் இறப்பார்?
நானென்னும் சிலுவையின் மேல்
அறையப்பட்டிருக்கிறேன் நான்
ஆனாலும்.. ஆ!
கிறிஸ்துவாய் மாறவில்லையே
நான் ஒரு துக்கம் மாத்திரம்
நானென்னும் பூவில்
நானென்னும் தேனைத் தேடியலையும்
நானென்னும் வண்டினை
கூவியழைக்கும் விளக்காய்
எரிகிறேன்
நான்
இந்த நான் இப்படியல்லாமலானால்
இந்த பிரம்மாண்டம் இப்படியல்லாமலாகும்
அடேயப்பா… நான்!
எனக்கு
பசிக்கும்போது உண்பேன்
தாகிக்கும்போது அருந்துவேன்
சோர்வடையும்போது உறங்குவேன்
உறங்கும்போது எழுதுவேன்
கவிதைகள்.
நான்
எனக்காக உண்கிறேன்
பிறருக்காக உடுக்கிறேன்
என்னைக் காணாது
என்னில் உருகாது
என்னுள்ளில் என்றும் இருக்கவேண்டும்
நான்
நான் போனாலே ஞானம் வரும்
ஞானம் வந்தாலே நான் போவேன்
இவ்வளவுதான் நான்
சொல்லவந்த விஷயமும்
இவ்வளவுதான்
அதற்குத் தேவையான வார்த்தைகளும்
இவ்வளவுதான்
தமிழில் இரட்டுற மொழிதல், சிலேடை போல மலையாள மொழியில் சில இடங்களை மிகச் சுவையாக எழுதியுள்ளார் (ஞானெனிக்கொரு ஞானோ, என்மனமென் மன…) வார்த்தைக்கூட்டுக்களை வைத்து விளையாடியுள்ளார் (குஞ்ஞில்நின்னுண்ணுன்னோன் குஞ்ஞுண்ணி). தமிழுக்கு இதைப் பெயர்ப்பது சவால்தான். அதன் தத்துவார்த்தப் பொருள் கெடாதவாறு முடிந்தவரை முயன்றிருக்கிறேன். நான் என்னும் வார்த்தைக்கு பெரும்பாலும் இடங்களில் மேற்கோள் இட்டு (‘நான்’) வாசித்தால் உள்பொருள் விளங்கும்.
இவரின் இன்னொரு கவிதை,
பறவை பறந்து வந்தது
பாறை மீது அமர்ந்தது
பறவை பறந்து சென்றது
பாறை மீதமானது
தேவதேவன் கவிதைகளை நினைவுபடுத்துகிறது. இன்னொன்று,
சர்க்கரைக் குன்றின் மேலிருந்து
குஞ்ஞுண்ணி எறும்பு அழுதது -ஒரு
குஞ்ஞுண்ணி எறும்பு அழுதது
எத்தனை சிறியது என் வாய்
எத்தனை சிறியது என் வயிறு
கம்பன் தந்துசென்ற “பாற்கடலை நக்கிக் குடிக்க ஆசைப்படும் பூனை” என்கிற படிமம் போலவே இந்த எறும்பும். பிரபஞ்சத்தையும் வாழ்க்கையையும் பற்றிய நேர்மறைப் பொருளும் எதிர்மறைப்பொருளும் ஒருங்கே இருக்கிறது.
(இரா.முருகன் மொழிபெயர்த்த குஞ்ஞுண்ணி மாஷின் சில கவிதைகளை இங்கே படிக்கலாம்)
-பிரகாஷ் சங்கரன்

Friday, July 18, 2014

உடலைக் கடந்த இருப்பு

ஐம்புலன்களின் வழியாகவே மனிதனுக்கு அறிதல் சாத்தியமாகிறது. புலன்களோ உடலுள் பொருந்தியவை. எனவே ‘நான் அறிகிறேன்’ என்று அறியும் தூய தன்னுணர்வு இந்தப் பரு உடலுக்குக் கட்டுப்பட்டது. இப்போது, உடல் மனிதனுக்கு அறிதலின் பாதைகளை நோக்கித் திறந்திருக்கும் வாசலா அல்லது புலன்களைச் சார்ந்தே இருப்பதால் உடல் அறிதலின் பரப்பைக் கட்டுப்படுத்தும் வேலியா? உடலைக் கடந்து மனிதனின் தன்னுணர்வு தன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா? அவ்வாறு முடியுமென்றால் அறிதலுக்கு வாய்ப்பே இல்லையா அல்லது நேரெதிராக அறிதல் எல்லைகளற்று விரிந்துவிடுமா?
அறிதலில் பரவசமும், தன்னுணர்வின்/இருப்பின் இயல்பைக் குறித்த தேடலும் கொண்ட அனைவருக்கும் எழும் வினாக்கள் இவை. Transcendence என்கிற ஆங்கிலத் திரைப்படம் இக்கேள்விகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட அறிவியல் புனைவு திரைப்படம். 2014, ஏப்ரல் மாதம் வெளியானது. படத்தின் கதைத்தளத்தை இங்கே படித்துக்கொள்ளலாம்.
transcendence
தொழில்நுட்ப வளர்ச்சியை எதிர்க்கும் கும்பலால் சுடப்படும் விஞ்ஞானி கேஸ்டர் ஒருமாதத்தில் இறந்துவிடுவார் என மருத்துவர்கள் கூறிவிடுகிறார்கள். கேஸ்டரின் உடல் அழிவதோடு அவரது தன்னுணர்வும், இருப்பும் ஒட்டுமொத்தமாக அழிந்துவிடுமா? நேரடியான தத்துவ விவாதங்கள் இல்லாவிட்டாலும் கட்டுரையின் தொடக்கத்தில் நாம் எழுப்பிக்கொண்ட கேள்விகளின் அடிப்படையில் இந்தச் சிக்கலை அணுகி, தொழில்நுட்பமும் தத்துவமும் சந்திக்கும் புள்ளியில் ஒரு தீர்வைக் கண்டுகொண்டு அடுத்தகட்டத்தை நோக்கி கதையை கொண்டு சென்றிருக்கும் விதமே இந்தப் படத்தைச் சிறப்பானதாக ஆக்குகிறது.
கேஸ்டர் என்னும் ஆளுமை உயிர்வேதிப் பொருட்களாலான அவரது உடலா அல்லது அதனுள் உறையும் தன்னுணர்வா? இந்தக் கேள்விக்கு தத்துவார்த்தமான பதில் ‘உடலல்ல, அவரது தன்னுணர்வு தான் அவர்’ என்பதே. தன்னுணர்வின் விளைவே அவரது சிந்தனைகள். பௌதிக இருப்பிற்குக் காரணமான மனித உடலில், சிந்தனைகளின் நிகழ்களமாக இருப்பது மூளை. மூளையில் சிந்தனைகள் மின்காந்த அலைகளாக செயல்படுகின்றது. ஆக, இந்த மின்காந்த அலைகளை -அவை இயங்குவதற்கு ஏற்ற இன்னொரு தளத்திற்கு மாற்றும் தொழில்நுட்பம் இருந்தால், ஒருவரது தன்னுணர்விற்கு உடலைக் கடந்த இருப்பை அளிப்பது சாத்தியம். கேஸ்டர் ஏற்கனவே செய்திருந்த மற்றொரு ஆராய்ச்சியின் அடிப்படையில் அவரது மனைவியும், விஞ்ஞானியுமான எவலின் இன்னொரு நண்பரின் துணையுடன் இதைச் செய்கிறார். கேஸ்டரின் மூளையை மின்னணு இணைப்புகள் மூலம் குவாண்டம் கணிப்பொறியுடன் இணைத்து அவரது தன்னுணர்வை வெற்றிகரமாக மின்னணு சமிக்ஞைகளாக்கி இணையத்தில் ஏற்றிவிடுகிறார்.
உடல் அழிந்தாலும் கேஸ்டரின் தன்னுணர்வு கணிப்பொறிக்கு கடத்தப்பட்டதால் அழியாமல் இருக்கிறது. இங்கே அடுத்த கேள்வி எழுகிறது, புலன்களை இழந்த தூய தன்னுணர்விற்கு ஊடகம் இல்லாததால் இனி அறிதலும், இயக்கமும் சாத்தியமில்லையா? செயலற்று வெறுமனே எஞ்சி இருப்பது தான் அதன் ‘இருப்பா’? மறுபடியும் தொழில்நுட்பம் கைகொடுக்கின்றது. உடலைக் கடந்த கேஸ்டரின் தன்னுணர்வு, இதுநாள் வரையிலான மனிதனின் அறிதல்கள் பதிவுசெய்யப்பட்ட தொகுப்புவலையான இணையத்தில் கலந்ததும் எந்தத் தடங்கலும் இன்றி அத்தனையையும் அறிகிறது. உண்மையில் உடலையும், புலன்களையும் இழந்தது அறிதலுக்கான முடிவற்ற சாத்தியங்களைத் திறந்துவிடும் வரமாகிறது!
மனிதனின் இருப்பு என்பது அவன் உடல் சார்ந்ததா அல்லது தன்னுணர்வு சார்ந்ததா என்னும் ஆழமான கேள்வியை அடித்தளமாகக் கொண்டு, தன்னுணர்வை உடலைக் கடந்து இருக்கச்செய்தல் என்ற இடத்திற்கு தொழில்நுட்பத்தின் உதவியுடன் வந்ததும் கதை வழக்கமான ஹாலிவுட் பாணியில் தொழில்நுட்பத்தை முழுவீச்சில் எடுத்துக்கொண்டு வேறு திசையில் பயணிக்கிறது. கேஸ்டர் புதிய நேனோ துகள்களை உருவாக்கி, மருத்துவம், சூழியல் பாதுகாப்பு, உயிரியல், ஆற்றல் என அனைத்து துறைகளிலும் அசாத்தியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறார். கண்முன் கணவன் கொஞ்சம் கொஞ்சமாக இறப்பதை தாங்கமுடியாததால், ஏதேனும் ஒருவகையில் அவரது இருப்பை நீட்டிப்பதே எவலினின் எண்ணம். கேஸ்டரின் தன்னுணர்வு இவ்வளவு வேகமாக அனைத்தையும் அறியும் என்பது அவளே கூட கொஞ்சமும் யூகித்திராதது. ஒருகட்டத்தில் அவளே கேஸ்டரை அஞ்சுகிறாள்.
ஹாலிவுட் அறிவியல் புனைவுத் திரைப்படங்களின் பொதுவழக்கம், அபாரமான ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை அந்த விஞ்ஞானியோ அல்லது அதிகாரத்தை விரும்பும் வேறு யாரோ அழிவுக்குப் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். நாயகன் அந்த யாரோவையும் கூடவே அந்தக் கண்டுபிடிப்பையும் அழித்து நியூயார்க்கில் இருந்தபடியே உலகைக் காப்பாற்றுவார். டிரான்செண்டன்ஸ் நல்லவேளையாக அந்த ரட்சகப் பெரியண்ணனைக் கொண்டுவரவில்லை. மாறாக, தொழில்நுட்பம், தத்துவம் எல்லாவற்றில் இருந்தும் விலகி சாமான்யர்களின் உளவியலுக்கு, யதார்த்தத்துக்கு வருகிறது. சாமானியன் அறிவை அஞ்சுகிறான். அறிவாளியை உள்ளூர வெறுக்கிறான். அதற்காக அவன் உருவாக்கும் சமாதானங்கள்தான் அவனது இருப்பை நியாயப்படுத்தும். எல்லைகளற்ற அறிவு வாய்க்கப்பெற்ற ஒருவன் ஒருவேளை நன்மை செய்யக்கூடும் என்கிற ஒரு நல்லெண்ண வாய்ப்பே யாரும் தருவதில்லை, அவன் கண்டிப்பாக அழிவு சக்தியாகத் தான் இருப்பான் என்கிற பொதுப்புத்திதான் ஜெயிக்கிறது. கேஸ்டரின் காதல் மனைவி கூட ஒரு நம்பிக்கைக் கீற்றை அவனிடம் காட்டவில்லை. அவளே அவரை அழிப்பதற்கும் கூட துணை போகிறாள்.
படமாக்கலில் உள்ள சில தர்க்க ஓட்டைகள், இன்னபிற காரணங்களால் படம் பெரிய அளவில் வசூலில் வெற்றி பெறவில்லை. இன்செப்ஷன் முதலிய படங்களின் இயக்குனரான கிறிஸ்டோஃபர் நோலனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான வாலி ஃபிஸ்டர் இயக்கிய முதல் திரைப்படம் இது. கிறிஸ்டோஃபர் நோலன் படத்தயாரிப்பிலும் பங்களித்திருக்கிறார். இப்படத்தின் திரைக்கதை படமாக்கப்படுவதற்கு முன்பே மிகச்சிறந்த திரைக்கதையாக பிரபலமானது. இவையெல்லாம் இப்படத்தைக் குறித்த எதிர்பார்ப்புகளைக் கிளப்பியிருந்தாலும், படத்தின் வெள்ளோட்டத்தைப் பார்த்ததில் இருந்து இப்படத்தினைக் குறித்த எனது ஆர்வத்திற்குக் காரணம் ஒரு சிறுகதை.
2001ம் ஆண்டில் ஜெயமோகன் எழுதிய ‘கரிய பறவையின் குரல்’ தான் அந்தச் சிறுகதை. விபத்தில் துண்டிக்கப்பட்ட தன் கால்கள் கண்ணெதிரே எரிக்கப்பட்டதைக் கண்டாலும், வெட்டி அகற்றப்பட்ட -இல்லாத காலில் வலியிருப்பதாக மிகத் துல்லியமாக உணரும் கதை சொல்லி, தன் மூளையில் வெட்டப்பட்ட கால் அழுத்தமான ஒரு உணர்வாக உயிர்ப்புடன் மிச்சமிருப்பதை உணர்ந்து துணுக்குறுகிறான். தொடர்ந்து சிந்திக்கிறான். கால் இல்லாத போது மூளையில் கால் அருவமாக முழு உணர்ச்சிகளுடன் எஞ்சியிருக்கும் என்றால், ஒவ்வொரு அங்கமாக வெட்டப்பட்டாலும், முழு உடலே இல்லாமல் ஆனாலும் மூளையை மட்டும் அழியாமல் பத்திரப்படுத்தினால் அதில் முழு உடலின் அமைப்பும், உணர்ச்சிகளும் அப்படியே இருக்கும். தொழில்நுட்பம் வளர்ந்தால், இந்த மூளையின் நரம்பணு வலையுடன் உரையாடும் மின்னணு இணைப்புகளுடன் ஒரு ‘உடலை’த் தயாரித்துவிட்டால் போதும், முழு தன்னுணர்வுடன் புதிய உடலில் இருக்கலாம். அப்படியே உடல்களை மாற்றிக் கொண்டே போகலாம். அழிவே இல்லை!
 DSC03214-4
அடுத்த கேள்வி இன்னும் ஒரு அடுக்கு உள்ளே. மூளை என்பது இந்த புரோட்டீன் சதைப்பிண்டமா அல்லது அதன் மின்காந்த அமைப்பா? கால் சூட்சும வடிவில் இருக்கமுடியுமென்றால் மூளையும் சூட்சும வடிவில் இருக்கமுடியும்! பின்னர் அடுத்த கேள்வி, ‘மூளையின் மின்காந்த அலைகளின் அமைப்பைத் தீர்மானிக்கும் சூத்திரம் எது? நான் என கூறிக்கொள்ளும் எண்ணங்கள், கனவுகள், உணர்வுகள், உணர்வுகள் மூலம் அடையும் உடல், உடல் மூலம் அறியும் உலகம் அனைத்துமே அந்த சூத்திரம் தான். டி.என்.ஏ யில் தான் அந்த சூத்திரம் உள்ளது. அது கண்ணுக்குத் தெரியாத அச்சு, கருத்துருவாக கருவுக்குள் நுழைகிறது. தன் தேவைக்காக இந்த உடலை உருவாக்கிக் கொள்கிறது. அந்த அச்சு மூளையில் இருக்கும், அதற்கு அழிவில்லை. ஆனால் நான் என்பது அந்த நிரந்தரமான அச்சா அல்லது இந்த உடல் என்னும் நகல் மட்டுமா?
இன்னும் ஆழமான கேள்விகள் அடுத்து. உயிர் வாழ வேண்டும் என்கிற ஆதார வேட்கை படைப்புத் தொடரை நிலைநிறுத்துவதற்குத் தானே? சந்ததியை உருவாக்கிவிட்டால் ஆதார நோக்கம் நிறைவடைந்தது. அப்புறம் இந்த உடல் அழியாமல் இருக்கவேண்டும் என்பதும், ‘நான்’ என்னும் உணர்வும் எதற்காக? கேள்வி இங்கே முடியடைவில்லை. நான் என்னும் தன்னுணர்வு, பிறப்பு, இறப்பு என்பதன் ஆழங்களுக்கு நகர்கிறது. முடிவே இல்லாத கேள்விகளுக்கு, தற்காலிகமான ஒரு முடிவுடன் நிறைவுபெறுகிறது கதை.
‘உடலைக் கடந்த நான்/தன்னுணர்வின் இருத்தல் என்பது சாத்தியமா?’ என்கிற ஆதாரமான அதே கேள்வியுடன் தான் இந்தக் இரண்டு படைப்புகளும் தொடங்குகின்றன. அடிப்படையான, தத்துவார்த்தமான ஒரே கேள்வியுடன் தொடங்கினாலும் இந்தியத் தத்துவ மரபில் வந்த ஒரு படைப்பாளியின் அகமும், மேற்கின் நவீன சிந்தனை வழியில் வந்த ஒரு கலைஞனின் படைப்பூக்கமும் முதற் கேள்விக்கான விடையுடன் அடுத்து எந்தத் திசையில் நகர்கிறது என்பதை ஆராயவும் உதவும்.
தன்னுணர்வு உடலைக் கடந்து இருக்க சாத்தியமென்றதும், அதிநவீன தொழில்நுட்பத்தை கையிலெடுத்துக்கொண்டு அறிவியலின் எல்லாத் தளங்களிலும் புதிய கண்டுபிடிப்புகள், இன்னும் உயரிய தொழில்நுட்ப சாத்தியங்கள் என பக்கவாட்டில் பயணமாகிறது ட்ரான்செண்டன்ஸ் திரைப்படம். கரிய பறவையின் குரலின் கதை சொல்லி முதல் கேள்வியுடன் விடையுடன் அடுத்து அடுத்து என மேலும் பல தத்துவார்த்தமான கேள்விகளால் இன்னும் உள்முகமாக மனிதரின் இருத்தலின் அடிப்படைகளை நோக்கிப் போகிறான். கரிய பறவையின் குரல் வெளியில் இருந்து உள்நோக்கி செங்குத்தாக நகர்கிறது. ‘கரிய பறவையின் குரல்’ என்னும் தலைப்பு நம் மரபில் வந்த நம்பிக்கையை மிகச்சரியாக இங்கே பிரபிபலிக்கிறது.
தத்துவம், ​ தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஆர்வம் இருப்பவர்கள் ஒப்பிடவும், சிந்திக்கவும் தூண்டும் இரண்டு படைப்புகள். அவ்வாறு சிந்திப்பது நாம் எங்கே நிற்கிறோம் என்பதையும் நமக்கு உணர்த்தக்கூடும்.

- பிரகாஷ் சங்கரன்
(நன்றி: சொல்வனம், இதழ் 109ல் வெளியானது)

Saturday, November 16, 2013

அயல் கலாச்சாரம் (பகுதி -3)

கடைகளில் முகம் மலர சிரித்து வரவேற்கும் ஊழியர்கள், தெருக்களில் உற்சாகமாகப் பேசிக்கொண்டு செல்லும் இளைஞர்கள், முகம் ஒப்பனையில் மிளிர நேர்த்தியான ஆடைகள் அணிந்து கொண்டு பதவிசாக சிம்பொனி அரங்குகளுக்குச் சென்று இசையை ரசிக்கும் நடுவயதினர் மற்றும் முதியோர்கள், ட்ராம், பேருந்து, சாலை என எங்கும் கைகோர்த்துக் கொண்டும், தழுவி முத்தமிட்டுக் கொண்டும் காதலில் உலகம் மறந்த ஜோடிகள் என வெளியில் வாழ்க்கை அழகானது. அது உள்ளும் புறமும் அப்படி இருந்தால் அதைவிட என்ன வேண்டும் வாழ்க்கையை நிறைக்க?
அன்றில் பறவைகள் போலிருக்கும் ஜோடிகளைப் பிரித்தால் இறந்தே போய்விடுவார்கள் எனத்தோன்றும் அளவுக்கு நெருக்கமாக இருப்பார்கள். பந்தங்கள், பலவண்ணங்களைக் காட்டி மிளிர்ந்தபடி காற்றில் அலையும் சோப்பு நுரை போல மெல்லியது. தனிமனிதன், தனித்தன்மை என்பது சருமத்தோடு ஒட்டிய கவசம் போன்றது, அதில் சிறிய கீறல் விழுவது போல ஏதாவது சாதாரணமாக நிகழ்ந்தாலும் கடுமையாக சீண்டப்படுவார்கள், கோபமாக எதிர்வினையாற்றுவார்கள். சோப்புநுரை தெறித்துவிடும். இங்கும் காதல், பாசம், நட்பு எல்லாம் உண்டு. ஆனால் தனிமனித விருப்பம்,சுதந்திரம் என்னும் மனநிலையின் தீவிரப்பிடிப்புக்கு முன் உறவுகளும், பந்தமும் எல்லாம் நிலைத்து நிற்க முடியவில்லை.
நாற்பது ஆண்டு கால கம்யூனிஸ ஆட்சியில் செக் மக்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு அனுமதியில்லை. 1989ல் கம்யூனிஸ்ட் ஆட்சி அகற்றப்பட்டதும் பிரஷர் குக்கரிலிருந்து பீறிட்டு எல்லாத் திசையும் பாயும் நீராவி போல மக்கள் ஆர்வமாக எல்லா நாடுகளுக்கும் பயணம் செய்கிறார்கள். இந்தியா, நேபாளம் ஆகியவையும் அவர்களின் விருப்ப சுற்றுலாத் தலங்களுள் முக்கியமானவை. இந்தியாவிற்குப் பயணம் செய்துள்ள நிறைய செக் நண்பர்கள் உண்டு.
என் பல்கலையிலும், நான் வசிக்கும் விடுதியிலும், கிழக்கு முதல் மேற்கு வரை ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் இருந்து மாணவர்கள் இருக்கின்றனர். எனவே என் கோணங்கள் என்பது செக் மக்களுடன் மட்டுமே பேசியதிலிருந்து உருவானதல்ல. இந்தியாவைப் பற்றித் தெரிந்தவர்கள், இந்தியாவை விரும்புபவர்கள், இந்தியக் கலாச்சரத்தின் மீதும் இந்தியர்கள் மீதும் பெரிய மதிப்போ, விருப்பமோ இல்லாதவர்கள், மதநம்பிக்கை அற்றவர்கள், கிறிஸ்தவ, இந்து, புத்தமத ஆதரவாளர்கள் என்று பலதரப்பினருடனும், மாணவர்கள், இசைக்கலைஞர், ஆராய்ச்சியாளர், கார் ஓட்டுனர், மருத்துவர், சாதாரண வேலைகள் செய்பவர்கள், ஆண்கள், பெண்கள் என செக் மக்களுக்குள்ளும் வாழ்க்கையின் வெவ்வேறு நிலைகளிலும் வயதிலும் உள்ளவர்களிடமும் உரையாடியிருக்கிறேன்.
முதலில் பரிச்சயமாகும் யாரிடமும் ஒருபோதும் நானாக இந்தியாவையும், நமது கலாச்சாரத்தையும் பற்றியோ அவர்களது கலாச்சாரத்தையோ பற்றின உரையாடலைத் துவக்க மாட்டேன். பொதுவான விஷயங்களையோ, என்னுடைய ஆராய்ச்சி அல்லது அவருடைய தொழில் சார்ந்த விஷயங்களையோ தொட்டுத்தான் பேச்சு இருக்கும். நான் நெற்றியில் புருவமத்தியில் சிறியதாக குங்குமம் இட்டிருப்பேன். கொஞ்சம் நன்றாகப் பேசியதும் அது என்ன, எதற்காக என்று கேட்பார்கள். அல்லது நான் மதுவகைகளைத் தவிர்த்தாலோ, அசைவ உணவைத் தவிர்த்தாலோ ஆர்வமிகுதியால் அனுமதியுடன் ஏன் என்று கேட்பார்கள். பதில் சொல்வேன், அது பெரும்பாலும் இந்தியாவை -அதன் பழக்க வழக்கம், பண்பாடு பற்றின உரையாடலாகத் தான் நீளும். தொடர்ந்து என்னை, என் குடும்பத்தைப் பற்றிக் கேட்டால், அதன் வழியாக அவர்கள் தங்கள் நாடு, கலாச்சாரம், தங்களின் குடும்பம், தனிப்பட்ட தகவல்கள் பற்றியும் சொல்லவேண்டிவரும். அப்படித்தான் எனக்குத் தேவையான விஷயங்களைப் பெற்றுக்கொள்கிறேன்.
இந்தியாவின் பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் திருமண முறையை ‘அதில் காதல் என்னும் அற்புதம் இல்லை, வெறும் பிஸினஸ் அக்ரிமெண்ட்’ என்று விமர்சித்தபடி என்னுடன் பேச்சைத் துவக்கிய என் சகமாணவி உண்டு. நான் பொறுமையாக விளக்கினேன், என் அண்ணனின் கல்யாணம் நடந்த விதத்தை ஒரு ‘கேஸ் ஸ்டடி’ போல விவரணை செய்து, அவர்கள் இப்போது எப்படி சந்தோஷமாகக் குடும்பம் நடத்துகிறார்கள் என்றும் சொன்னேன். இன்றும் இத்தகைய திருமணங்களில் அதிக சதவீதமும் வெற்றிகரமானவையாக இருப்பதையும், அதில் அன்பும் காதலும் இல்லாவிட்டால் திருமண பந்தங்கள் நீடித்திருக்க வழியில்லை என்பதையும் விளக்கினேன். பேச்சு முடிந்து அடுத்த மாதமே மூன்று மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு தன் ஆண் நண்பனுடன் இந்தியா சென்றார். தன் சுற்றுலாவின் இடையில் மதுரை சென்று அங்கிருந்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பி என் வீட்டு முகவரி பெற்றுக்கொண்டு கிராமத்தில் என் வீட்டிற்குச் சென்று நான் சொல்லியபடிதான் என் வீடும், குடும்பமும், ஊரும், மக்களும், பழக்கங்களும் இருக்கிறதா என்றும் பார்த்துவிட்டு வந்தார்.
பிராக் திரும்பியதும், ‘இந்தியாவைப் பார்த்ததும் முதலில் உன் மனதில் தோன்றிய எண்ணம் என்ன?’ என்று கேட்டேன். அவரை பற்றித் தெரியும் என்பதால் அநேகமாக டாக்ஸிக்காரர்களையோ, தெருவில் இருந்த குப்பையையோ, காசு கேட்டு நச்சரித்த பிச்சைக்காரர்களையோ குறித்தான எரிச்சலான விமர்சனமாக இருக்கும் என எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்பு தோற்று நான் வியக்கும்படியாக, ‘திருவனந்தபுரத்தில் அதிகாலை விமானத்தில் இருந்து இறங்கிக் காரில் விடுதி நோக்கி சென்றோம். வழியில் சாலையைப் பெருக்கிக்கொண்டிருந்த துப்புரவு ஊழியர் பெண்கள் மனதில் இருந்து மகிழ்ச்சியாக முகம் எங்கும் சிரிப்புடன் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொண்டே வேலை செய்துகொண்டிருந்தர்கள். பறக்கும் தூசிக்கு நடுவிலும் அவர்கள் முகத்தில் சந்தோஷமும் நிம்மதியும் கலந்த ஒளி தெரிந்தது. இங்கே ஐரோப்பாவில் பெண்கள் இவ்வளவு உண்மையான சந்தோஷத்துடன் இல்லை. மனதிற்குள் ‘ஃபக்… தே ஆர் லிவிங்’ என்றேன்’ என்று சொன்னார்.
விரைவில் திருமணம் செய்துகொண்டு இந்தியாவைப் போல நிலைத்த பந்தத்துடன் தானும் தன் ஆண் நண்பரும் வாழ முடிவுசெய்திருப்பதாகச் சொன்னார். ஆனால் ஆறே மாதத்தில் சிறிய பிரச்சனையால் பிளவுபட்டுப் பிரிந்து போனார்கள். நான் அதற்காக உண்மையில் வருந்தினேன். இந்த மக்கள் அவர்களே விரும்பினாலும் கூடத் திரும்பமுடியாதவாறு கலாச்சாரத்தின் மறுபக்கத்திற்குப் புரண்டு வந்துவிட்டார்கள் என எண்ணிக்கொண்டேன்.
மிகையான தனிமனித உணர்வு உறவுகளில் உண்டாக்கும் சிக்கலை விளக்க ஒரு உதாரணத்திற்காக இவர்களை மட்டும் சொன்னேன். எனக்குத் தெரிந்து நான் பார்த்தவர்களிலேயே ஆண்கள் பெண்களில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கையில் முறிந்த பந்தங்கள் குறைந்தது ஒன்றிரண்டாவது உண்டு. அவர்களின் வேதனையை அவர்களாகப் பகிராவிட்டால் ஒருபோதும் என்னால் அவர்களின் நடவடிக்கைகளில் இருந்தோ வேறு எவ்வகையிலுமோ ஊகித்திருக்கவே முடியாது. எதையும் வெளியில் காட்டிக்கொள்ளவும் மாட்டார்கள். சாதாரணமாக மகிழ்ச்சியாக ‘வெற்றிகரமாக’ இருப்பதாகவே தோன்றும். இந்த வெளிப்புறத்தைத்தான் பெரும்பாலான இந்தியர்கள் அறிந்திருப்பார்கள். வேலை, விருப்பங்கள், சினிமா, அரசியல், சாப்பாடு, காலநிலை, விளையாட்டு இதற்கு மேல் ஒன்றும் பேசாமல், பெயர், சில மேலோட்டமான தனிப்பட்ட விவரங்கள் தவிர அதிக நெருக்கமும் இல்லாமல் மேற்கத்தியரைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கை, கலாச்சாரம், வெற்றிகளைப் பற்றியும் முடிவுக்கு வந்துவிடுவார்கள்.
சும்மா விக்கிப்பீடியாவில் மேற்கத்திய பிரபலமான இசைக்கலைஞர்கள், விஞ்ஞானிகள், விளையாட்டுவீரர்கள் இன்னபிற வெற்றிகரமான தனிநபர்களைப் பற்றிய பக்கங்களைப் புரட்டினாலே ஒரு விஷயம் தெரியவரும். அநேகமாக மிகப்பெரும்பாலானவர்களுக்குக் குறைந்தது ஒன்றோ இரண்டோ திருமண முறிவுகள் இருந்திருக்கும். ஆனால் அவர்களின் வெற்றியும், புகழும், பணமும் மட்டும் வெளியே தெரியும். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகளில் அவர் நிம்மதியைத் தொலைத்திருப்பாரா, உள்ளுக்குள் இதனால் துக்கம் இல்லாமல் இருக்குமா, அவர் உண்மையிலேயே மகிழ்ச்சியும் வெற்றியும் நிரம்பிய மனிதரா என்பதை நம்மவர்கள் கணக்கிலெடுப்பதே இல்லை.
சொந்தத் தாய் அல்லது தந்தை (கூட அவர்களின் புதிய துணை) என ஒற்றைப் பெற்றோர்களுடன் வளர்ந்தவர்கள் மனநிலையைக் கேட்டறிந்தால் தெரியும். ‘இந்த நிமிடம் வாழ்க்கையில் நான் துவண்டு அப்படியே மல்லாந்து விழுந்தால் என்னைத் தாங்க என் குடும்பம் மொத்தமும் துடித்துக் கொண்டு வரும், மெல்ல என்னை வாழ்விற்கு மீட்டுவிடும். எனக்கு உறுதியாகத் தெரியும்’ என்று நான் சொன்னால் அத்தகைய உறுதியுடன் திரும்ப பதில் சொல்லமுடியாமல் என்னைப் பொறாமையாகப் பார்க்காத ஐரோப்பியரே இல்லை. தனிமனித சுதந்திரம் என்பது மனிதர்களைத் திரளாகவே நடத்தாமல் தனியொரு மனிதரின் சிந்தனை, படைப்பூக்கம், விருப்பம், சுதந்திரம் ஆகியவற்றிற்கு மதிப்புக் கொடுத்து அவருக்கான வெளியை உருவாக்கிக்கொள்ள வகைசெய்தல் என்ற அதன் உண்மையான பொருளிலிருந்து திரிந்து, தன் உள்வட்டத்திற்குள் யாரும் நெருங்கமுடியாத தனியாள்- அவனுடைய விருப்பங்களும், வெற்றியும், மகிழ்ச்சியுமே முக்கியம் என்று குறுகிவிட்டதாகவே நான் உணர்கிறேன். வெற்றிக்கெல்லாம் எப்படி தனிமனிதனே பொறுப்பாகிறானோ அப்படியே தோல்வியும். தோற்ற ஐரோப்பியர்களை யார் கவனித்துப் பார்க்கிறார்கள்?
பொருளாதார, விஞ்ஞான முன்னேற்றத்தையும், எளிதில் உடைந்து உருமாறும் பந்தங்களையும் தவறாகத் தொடர்பு படுத்திக் கொண்டு ஒரு நண்பர் (இந்தியர்), “இந்திய மதங்கள் சொல்லும் தத்துவம் என்ன? பற்றற்று இருப்பது தானே? அப்படி செண்டிமெண்ட், இமோஷன்ஸ் இல்லாமல் இருந்தால் செயல்கள் வெற்றி பெறும் என்பதுதானே உண்மை. அதை இங்கே கண்ணால் பார்க்கிறேனே. ஐரோப்பியர்களுக்கு யார் மீதும் உணர்ச்சிபூர்வமான பந்தமே இல்லை பற்றற்று இருக்கிறார்கள். அதனால் தான் முன்னேறிய சமூகமாக, அறிவாளிகளாக இருக்கிறார்கள்” என்றார். இந்து மதம் கூறும் பற்றற்றிருப்பது என்றால் உண்மையில் என்ன என்று எனக்குத் தெரிந்த வகையில் கொஞ்சம் விளக்க முயன்றேன். நண்பர் அவரின் ‘தரிசனத்தை’ விட்டுக்கொடுக்கவில்லை. ஐரோப்பாவிலேயே தங்கத்  தீர்மானித்துவிட்டதாகச் சொன்னார். யாருடனும் நெருங்கிப் பழகியதில்லை, அதனால் நெருக்கமான நண்பர்களாக ஐரோப்பியர் எவரும் இல்லை, “நெறய ஃப்ரெண்ட்ஸ் உண்டு, ஆனா, என்னன்னா என்னங்கற லெவல்ல டிஸ்டண்ட் மெய்ண்டெய்ன் பண்ணிக்கிறது. பிரச்சனை வராது பாருங்க”. ஐந்து வருடமாக ஐரோப்பாவில் ‘பற்றற்று’ இருக்கிறார் போலும். அவர் வீட்டிற்குச் சென்று பார்த்தேன் இந்திய, மேற்கு தத்துவ நூல்கள் அடுக்கி வைத்திருந்தார். (மனதில் ஆசானுக்கும் மற்ற குருமார்களுக்கும் நன்றி சொன்னேன். தெளிவாகச் சிந்திக்கும் திறன் இல்லாமல், வழிகாட்ட ஒரு குருவும் இல்லாமல் எதையாவது படிக்கக் கிளம்பினால் இப்படி ‘தரிசனம்’ கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டேன்).
மதவரலாறு, ஆன்மீக வறுமை, வாழ்வின் சாரமற்ற வறட்சி, அரசியல் வரலாறு, கொடும் போர்களின் பேரிழப்புகள், அதன் உளவியல் தாக்கம், மிகையான தனிமனித முக்கியத்துவம், சீர்குலைந்த குடும்ப அமைப்பு, நிலையற்ற தனிப்பட்ட உறவுகள் என்று ஐரோப்பாவைப் பற்றி அடுக்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இங்கே விஞ்ஞானம் வளர்கிறது, பொருளாதாரம் வளர்கிறது, மக்கள் காதலிக்கிறார்கள், குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள், வளர்க்கிறார்கள், குழந்தைகள் வளர்ந்து வெற்றியாளர்கள் ஆகிறார்கள், அவர்களும் காதலித்துப் பிள்ளை பெறுகிறார்கள், அவர்களும் வளர்கிறார்கள்…. என வாழ்க்கை தொடர்ந்துகொண்டுதானே இருக்கிறது. எப்படி?
இந்தியாவில் அரசாங்கம் சரியில்லை, எங்கும் ஒரே ஊழல், லஞ்சம், நல்ல சாலை இல்லை, மின்சாரம் இல்லை, வறுமை, அழுக்கு, குப்பை, குடிக்க தூய குடிநீர்கூட இல்லை, இருந்தும் இங்கேயும் வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருக்கிறதே? எப்படி? நாம் நமது சமூகச் சீர்கேடுகளை ‘இதெல்லாம் இப்படித்தான்’ என்று சகிக்கப் பழகிக்கொள்ளவில்லையா? அப்படித்தான் மேற்கிலும் அவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை ‘இதுஇப்படித்தான், மாற்ற முடியாது’ என்று சகிக்கப் பழகிக்கொண்டு அடுத்து என்ன? என்று வாழ்கிறார்கள். நாம் இழப்பது வசதியான வாழ்க்கையை, அவர்கள் இழப்பது மகிழ்ச்சியான வாழ்க்கையை.
ஐரோப்பா கீழானது, இந்தியா மேலானது என்று எளிய சூத்திரத்தை ஒப்பிக்க வரவில்லை, அது உண்மையும் இல்லை.
இந்தியாவில் தற்போது இருக்கும் மோசமான சீர்கேடுகளை, சமூகச் சூழ்நிலையை, ஒழுங்கீனங்களை வைத்து நமது சமூகத்தின் வரலாறே இப்படித்தான், எனவே இது மாறாது என்று நினைப்பவர்கள் உண்டு. மனித மனம் எட்டக்கூடிய பிரபஞ்சம் மற்றும் வாழ்க்கை குறித்தான தரிசனங்களின் உச்சங்களை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கண்டடைந்த, அறிவியல், மெய்யியல், கலை, நாகரீகம் என்று அனைத்துத் துறைகளிலும் தனித்தன்மை வாய்ந்த நம் நாட்டின் நீண்ட வரலாறை அவர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். அடிப்படை சமூக, பொது ஒழுக்கங்கள் கூட அடையப்பெறாத மக்கள் சமூகத்திலிருந்து இத்தகைய ஒரு பண்பாடு எழுந்துவர வாய்ப்பிருக்கிறதா? நிச்சயமாக இல்லை என்று கொஞ்சம் யோசிக்கும் யாராலும் சொல்லமுடியும். ஐரோப்பாவின் அகவாழ்க்கைக் குளறுபடிகளுக்கு ஒரு வரலாற்றுக் காரணம் இருப்பது போல நமது சமூகச் சீர்கேட்டிற்கும் வரலாற்றுக் காரணம் இருக்கிறது. மேற்கின் காலனியாதிக்கத்திற்கு அடிமைகளாக இருந்த, ஒட்டச் சுரண்டிவிட்டுப்போன தேசத்தின் வறுமையிலும், வேலையில்லாத் திண்டாட்டத்திலும், வாழ்க்கையை தக்கவைத்துக்கொள்ளப் போராடிய காலத்தின் எச்சம் இவை. கல்வியும், பொருளாதாரமும், விழிப்புணர்வும் போதும் இதை மாற்ற. இது மாற்றக்கூடிய புறச்சீர்கேடு. மாறும்.
போரிட்டு நாடுகளை அழித்த, தொழில் வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுப்புறத்தைக் கவலையே இல்லாமல் மாசுபடுத்திச் சீரழித்த ஐரோப்பா விழிப்புணர்வு பெற்று இப்போது பாரம்பரியக் கட்டடங்களைக் காப்பதும், காடு நதி என்று இயற்கையைப் பேணுவதும் பார்க்கிறோமே? அவர்களால் முடியுமானால் நம்மாலும் முடியும். கடுமையான ஒரு சட்டமும் அதை கறாராக அமுல்படுத்தும் அரசும் போதும், இவற்றை மாற்றிவிட முடியும். (அத்தகைய மாற்றத்தை கொண்டுவரக்கூடிய அரசியல் தலைமை உருவாகும் நல்லூழ் நமது நாட்டிற்கு இருக்கும் என்றே நம்புகிறேன்). பழக்கத்தாலும் மாறும். இந்தியாவில் எப்படி இருந்திருந்தாலும், மேற்கிற்கு வந்ததும் அவர்களின் குடிமை ஒழுக்கத்தை கவனித்து வியப்பவர்களில் பலரும் தாங்களும் அதைப் பின்பற்றுவதைப் பார்த்திருக்கிறேன். எனவே இது மாறக்கூடிய சீர்கேடு தான்.
வேதியியலில் மீள்வினை, மீளாவினை என்று இருவகையான வினைகள் உண்டு. நமது சமூகச் சீர்கேடுகள் மீள்வினை, இவற்றை மீட்டுப் பழைய நல்ல நிலைக்கு முயன்று கொண்டுவந்து விடலாம். ஆனால் ஒருபண்பாடு தன் உள்ளார்ந்த உயர்ந்த விழுமியங்களை முற்றிலுமாக இழப்பது மீளாவினை. குடும்பம், வாழ்வின் அர்த்தம் மீதான நம்பிக்கை, நிலைத்த உறவுகள், தியாகம், ஒருவருக்காக ஒருவர் என்ற வலைப்பின்னல் சமூகம், போன்றவை இழந்தால் மீட்கமுடியாதவை. ஐரோப்பாவின் பிரச்சனை இதுதான். நான் பேசிப் பார்த்தவரை அவர்களும் இதை உணர்கிறார்கள்.
ஐரோப்பா எதற்கு? இங்கே நமது நாட்டிலேயே நாம் இதைக் கவனிக்கலாம். அயலானை சந்தேகத்தோடு பார்க்கிற, கதவை சாத்தி வாழ்கிற அடுக்குமாடி வாழ்க்கையும், பெருகும் திருமண முறிவுகளும், முதியோர் இல்லங்களும், இன்னும் பிறவற்றையும், வாழ்வை வாழ நினைக்கும் எவரும் கவலையோடு தான் நோக்குவார்கள். இதனால் உண்டாகும் இழப்பும், துயரமும் என்ன என்பதை நாமும் அறிவோம். இவற்றைப் பழைய நிலைக்கு மாற்ற முடியவில்லையே என்ற நிதர்சனம் தான் பழங்காலத்தை, கூட்டுக் குடும்பத்தை, கிராமத்து வாழ்க்கையை, கடந்த போன பால்யத்தைப் பற்றின ஏக்கம் நிரம்பிய புலம்பல்களாக நாள்தோறும் கேட்கிறோம். நாமும் புலம்பியிருப்போம். இது இப்படியே தொடர்ந்தால் நாமும் ஐரோப்பியர்களாகி விடுவோம்.
இந்தியாவில் மக்களிடையே கசப்பும், அதிருப்தியும், கவலையும் உள்ளது. மிகப்பெரும்பாலும் அது பணப்பற்றாக் குறையால். நமது நாட்டில் நடக்கும் தற்கொலைகளில் அதிகமும் வறுமை, கடன் முதலியவற்றால், மேற்கில் இது முறிந்த பந்தங்கள், தனிப்பட்ட வாழ்க்கையின் தோல்விகள், ஆதரவு தர ஆளில்லாததால் உண்டாகும் மன அழுத்தத்தால். ஆக, என்னைக் கேட்டால் ஒப்பீட்டளவில் மேற்கை விட இந்தியர்கள் வசதியற்ற வாழ்க்கையின் நடுவிலும் ஒரு மகிழ்ச்சியும், திருப்தியும் இருப்பவர்களாகவே சொல்வேன். கையில் இருப்பதன் பெருமை உணரப்படாது என்பது பொதுவிதி.
அயல் கலாச்சாரத்தையும் வாழ்க்கையையும் புறவயமான முன்னேற்றம், பொருளியல் வெற்றி, இவற்றை முதன்மைப்படுத்தும் வறட்டு பொருளியல், அரசியல் கோட்பாடுகளைக் கொண்டு அளவிடுபவர்களிடம் பேச எனக்கு எதுவும் இல்லை. மாறாக, மெய்யான மன மகிழ்ச்சியும், வாழ்ந்ததன் திருப்தியும், ஆத்மார்த்தமான நிறைவும் ஒரு கலாச்சாரத்தையும், வாழ்க்கையையும் அளக்கும் அளவீடுகளாக நம்புபவர்களுக்காகவே என் அனுபவங்களை சொல்கிறேன்.
இந்தியா வெற்றிபெற்ற சமூகமாக இருக்க வேண்டுமா அல்லது மகிழ்ச்சியான சமூகமாக இருக்க வேண்டுமா இரண்டில் ஒன்றுதான் சாத்தியம் என்றால் நான் மகிழ்ச்சியையே தேர்ந்தெடுப்பேன். மண்ணில் யூடோப்பியா சாத்தியம் இல்லை, ஆனால் இங்கே நாம் வாழமுடிந்த அதிகபட்சமான சிறப்பான, நிறைவான வாழ்க்கை என்பது இன்றைய நிலையில் மேற்கின் குடிமை ஒழுக்கங்களையும், சூழல் உணர்வையும் இந்தியா அடைவதும், மேற்கு தன் ஆத்மாவை நிரப்பும் ஆன்மீக தரிசனத்தையும், குடும்ப வாழ்க்கை என்னும் பலத்தையும் வெற்றிகரமாக இணைப்பதில் உள்ளது. இந்தியாவின் பக்கம் இந்த சமன்பாடு எளிதாக அடையக்கூடியது என்று நம்புகிறேன்.
                                                                             -நிறைவு-
-பிரகாஷ் சங்கரன்