Monday, April 29, 2013

மேல்நாட்டுச் செருப்பு


மித்திலனின் கட்டுரை மற்றும் பஞ்சநதத்தின் கடிதத்தை ஒட்டி நடந்த விவாதத்தில் பிரகாஷ் சங்கரனின் கருத்துக்களின் சில பகுதிகள்.
poli90
1. //Logocentric சிந்தனைதான் இன்றைய மேற்குச் சிந்தனை என்பதோடு நவீனமாகுதல் என்பது அதீதமான மொழி மைய, எழுத்து மைய, புத்தக மைய, பிரதி மைய நடைமுறை. இதை நிராகரித்தால், மொழி இன்றி அனுபவங்கள் தன்னிலை தாண்டிய சமூக உடன்பாட்டுக்குச் செல்ல வழியுண்டா என்று கேள்வி எழும். அப்படிப்பட்ட ஒரு நடைமுறை இன்று நாம் மதித்துப் பேசக்கூடிய கருதுபொருளாக இருக்க முடியுமா என்றும் கேள்வியைத் தவிர்க்க முடியாது.//
இதைத் தான் ‘மேற்கு வைக்கும் -நமக்குப் பொருந்தாத ஒரு கருத்துச் சட்டகத்தை கீழை நாடுகள் வாங்கித் தலையில் கட்டிக்கொண்டு அழ வேண்டுமா?’ என பாலகங்காதராவும், கட்டுரை வழியாக மித்திலனும் நிராகரிக்கிறார்கள். இதற்கு உதாரணமாகத் தான் லிங்க வழிபாடு என்ற தத்துவம் பண்டைய இந்துச் சமூகத்தில் எப்படி இருந்தது, மேற்கத்திய ஆய்வாளர்கள் அதை எப்படி தங்கள் கோட்பாட்டுச் சட்டகத்துக்குள் போட்டு மோலோட்டமாக “ஆண்குறி வழிபாடு” என்று குறுக்கினார்கள், இப்போது அதை மறுத்து அதன் குறியீட்டு ஆழத்தை விளக்க வேண்டுமானால் நாமும் அவர்கள் கருத்தியல் கருவிகளையே ஏற்க வேண்டிய நிர்பந்தத்திற்கு எவ்வாறு ஆளாகிறோம், “அந்த அளவுகோளிலேயே பேச வேண்டும் என்பதே சரி” என எப்படி இந்திய அறிவுஜீவிகளும் இயல்பாக மனதில் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று விளக்குகிறார்கள்.
இந்துமதத்தின் பல சடங்குகளும், வழிபாட்டு முறைகளும் வரலாற்றுக் காலத்துக்கும் மிக முந்தைய ஆதிப்பழங்குடிக்கால வாழ்க்கையில் வேர் கொண்டு இன்று வரை அறுபடாது தொடர்ந்து வளர்ந்தபடி வந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான வருடங்கள் நீண்ட அதன் வளர்ச்சிப் போக்கில், ஆரம்பகட்ட எளிய வழிபாட்டு முறைகள் தத்துவார்த்தமான உட்பொருள் கொண்ட குறியீடுகளாகவும், சடங்குகளாகவும் செறிவுபடுத்தப்பட்டு அழமும் விரிவும் கொண்டதாக இன்று உருப்பெற்றுள்ளன. லிங்க வழிபாட்டை எடுத்துக் கொண்டால், அது பழங்குடி வாழ்க்கையின் வளச்சடங்குகளில் இருந்து வளர்ந்ததாக இருக்கலாம் என்று கருதும் சிந்தனைப் பள்ளியும், அல்லது, சுவாமி விவேகானந்தர் உட்பட பலரால் விளக்கப்படும் ‘ஸ்தம்ப வழிபாடு’ என்பதன் நீட்சியே லிங்க வழிபாடு என்னும் சிந்தனைப் பள்ளியும் இம்மண்ணில் உள்ளது. கோள்கள், நதி, மரம், கல், பறவை, விலங்கு, சகமனிதன் என இப்பிரபஞ்சத்தில் உள்ள எதையும் தீயதின் உருவமாகப் பார்க்காமல், அனைத்திலும் ஒரே பிரபஞ்ச சாரத்தையே -மேண்மையின் உருவமாகவே காண்பவை இந்துமத வழிபாட்டு முறைகள். ஆனால், ஒரே இறைவன்-ஒரே இறைத்தூதர்-ஒரே இறை நூல் என்னும் எளிய நேர்கோட்டு ஆபிரகாமிய மதச்சிந்தனைகளின் அடிப்படையில் அமைந்த மேற்கின் கலாச்சார ஆய்வு மனங்கள், அவற்றின் சிந்தனைக்கே எட்டாத, “நான் உட்பட இங்குள்ள அனைத்தும் இறையின் அம்சமே” என்னும் மகத்தான இந்து சிந்தனை முன் பிரமித்து நிற்கின்றன. அவர்களால் விளங்கிக் கொள்ளவும், செரித்துக் கொள்ளவும் முடியாத இந்தச் சிந்தனை உச்சத்தை மறுப்பதற்காக அதன் தத்துவார்த்த சாரத்தை புறந்தள்ளிவிட்டு “பயத்தால் வழிபடுகிறார்கள்” என்று ஒற்றைப்புரிதலில் குறுக்குகின்றனர். மேலை நாட்டினர் அவர்களின் குறுகிய புரிதலுக்கு ஏற்ப உருவாக்கிய செருப்புக்கு ஏற்ப இந்துமதத்தின் கால்கள் வெட்டப்பட்டு அச்செருப்புக்குள் தினித்து நிற்க வைக்கப்படுகிறது. நம்முடைய தத்துவங்களை விளக்க நாம் இந்தச் செருப்புக்குள் நின்று கொண்டு விளக்க வேண்டியதில்லை.
ஃபிராய்டும் ஒரு உதாரணம். மேற்கு மனங்களையும் அதன் கலாச்சார பின்புலம் சார்ந்து அவர்கள் மனங்களில் எழும் சிக்கல்களையும் வைத்து அவர் உருவாக்கிக் கொண்ட புரிதல்களை, எப்படி உலகம் மொத்தத்துக்கும், எல்லா கலாசார பண்பாட்டுப் பின்புலம் கொண்ட மக்கள் குழுவிற்குமான புரிதலாக ஒரே நாடாவால் சுற்றினார் என்பதையும் கவனிக்க வேண்டும்.
கிழக்கின் கலாச்சாரத்திற்கு -குறிப்பாக இந்தியப் பண்பாட்டுப் பின்புலமுள்ள வாழ்க்கை முறைக்கும், உறவுமுறைகளுக்கும், மனஓட்டத்துக்கும் சிக்மண்ட் ஃப்ராய்டின் உளப்பகுப்பாய்வு எல்லா சூழலிலும் கைகொடுக்காது. ஒரு உதாரணம் - சத்யஜித் ராயின் ‘தேவி’ படத்தில் தயாமயி (ஷர்மிளா தாகூர்) தேவியாவதற்கு முன் வயதான தன் மாமனாருக்கு மருந்து கொடுத்து, கால் பிடித்துவிட்டு பணிவிடை செய்வதுபோல ஒரு காட்சி வரும். பின்னர் மாமனாரின் கனவில் அவரின் மருமகளே தேவியாக தோன்றுவாள். இதை ஃபிராய்டிய உள்ளோட்டம் இருப்பதாக விளங்கிக் கொண்டு விமர்சனம் செய்தார் உலகப்புகழ்பெற்ற அமெரிக்க திரைப்பட விமர்சகர் பௌலின் கேல். தாய், தந்தை, உடன்பிறந்தோரைத் தவிர பிற அனைவரையும் ஆண், பெண் என்று பாலினம் மட்டுமாகவே பார்க்கும் மேற்கின் கலாச்சாரத்தில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் தாயாகவும், தந்தையாகவும், சகோதர சகோதரியாகவும், பாட்டன் பாட்டியாகவும் பார்ப்பதையும், அவர்களைத் தொட்டு பணிவிடை செய்வதையும் இப்படித்தான் தவறாக பாலியல் சிக்கலாக உளப்பகுப்பாய்வு செய்யமுடியும்.
இந்த ஃபிராய்டிய நனவிலி, உளப்பகுப்பு ஆகிய உளவியல் அறிதல் கருவிகளை மீறி ஒரு படி முன்னேறி கூட்டுநனவிலி வரை சென்றதாலேயே யுங் நமக்கு நெருக்கமாக வருகிறார். யுங்கின் வழியாகப் பார்த்தால் ‘பித்தில் பிறந்த போதம்’ சரியானதாகவே இருக்கும். இது நம் பண்பாட்டில் கூடுநனவிலியில் இருந்து நாம் உருவாக்கிக் கொள்ளும் குறியீடு, சடங்கு, வழிபாட்டு முறை.
2. // ஆண்குறி வழிபாடு குறித்த நம் எதிர்வினைகள்தான் அதைக் கொச்சைப்படுத்துகின்றன. லிங்க என்ற சொல்லுக்கு சம்ஸ்கிருத அகராதியே ஆணுறுப்பு என்றுதான் அர்த்தம் சொல்கிறது.//
இல்லை, இங்கு தான் மொழியைத் தாண்டிய புரிதல் முக்கியமாகிறது. இந்தியக் குறியீட்டு, படிம வெளிக்குள் புழங்காத மேற்கு மனம் மொழியில் இருந்து நேரடி அர்த்தத்தை மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும். அதை இந்துக்கள் நிராகரிப்பது, ‘ஆண்குறி’ என்பதை விக்டோரிய ஒழுக்கவியல் நோக்கில் சங்கடமான / வெட்கத்திற்குரிய ஒரு செயலாக எடுத்துக்கொண்டு எதிர்ப்பது ஆகாது. மாறாக அந்த குறுகிய புரிதலை மறுத்து, சிவ சக்தி ஐக்யம் என்னும் ஆழ்ந்த குறியீட்டை விளக்கும் முயற்சியே. இந்த சிவசக்தி ஐக்யம் என்பது இன்னும் பிரம்மாண்டமாக பல தளங்களில் விரியும் ஒரு படிமம். அதை விளங்காமல் தட்டையாக ஆண்குறி வழிபாடு என்று மேற்கத்தியர்கள் குறுக்கினால், நாம் அதை எதிர்ப்பது இயல்பே.
முதலில் லிங்கம் என்ற சொல்லிற்கு ஆண்குறி என்று பொருளல்ல. அடையாளம், குறியீடு என்பதே லிங்கத்தின் நேரடிப் பொருள். எடுத்துக்காட்டாக, பாலின அடையாளம் சம்ஸ்கிருதத்தில் புல்லிங்கம், ஸ்த்ரீ லிங்கம், நபும்ஸக லிங்கம் என்னும் சொற்களால் குறிக்கப்படும். ஸ்த்ரீ லிங்கத்தில் லிங்கத்தை ஆண்குறி என எடுத்துக்கொண்டால் அர்த்தமே மாறிவிடும். அதுபோலவே லிங்கத்துடன் தொடர்புடைய ஒற்றை வேரிலிருந்து கிளைத்த வார்த்தைகளே lingua -> language. லிங்கம் ஆண்குறி என்றால் மேற்கத்திய மொழியே பாலினக்குறியுடன் தொடர்புடையதுதானா?
சிவனின் உருவ வடிவம் -பரமேஸ்வரன், நடராஜர். உருவரு -லிங்க அடையாளம். அருவம் -ஒளி.
அதுபோலவே யோனி என்ற சொல்லும். அது படைப்பின் குவிமையத்தைச் சுட்டும் சொல். ஒரு கலைஞனின் படைப்பு மனத்தின் மையத்தைக் கூட அவர் யோனி என்று சொல்லலாம். அது பெண்ணுறுப்பிற்கும் சொல்லானது. அவ்வளவு தான்.
3. //காத்திரமான தற்கால இந்தியச் சிந்தனைக்கு வழி கோல பண்டை இந்தியச் சிந்தனையை மீட்டுப் புனருத்தாரணம் செய்வது வழியாக இராது. ஏனெனில் இயற்கைச் சூழலில் இருந்து துவங்கி, உடைகள், பண்டங்கள், உணவுகள் என்று எதிலும் தொடர்ச்சி இல்லாத ஒரு வாழ்வாகிப் போனதில் உலகச் சூழலுக்கு எதிரான இந்தியச் சூழலை நிறுவ முடியாது, அப்படி ஒரு இந்தியச் சூழலுக்கு உலகத்தோடு ஒத்திசைந்து இயங்காத தன்னிச்சை இயக்கம் என்பதும் கிட்டாது. ஊடுருவும் உலகச் சூழல்- பண்டம், ஆடை, பணம், கனிமங்கள், உணவுகள், ஊடகங்கள், ஆர்ப்பரிப்பான ஆசைகள், அழகியல் விழைவுகள், இலக்கியம், இசை என்று என்னென்னவோ பாய்ந்திருக்கிறதை வெளியேற்றி தூய்மைப்படுத்த முடியாத கலவை இங்கு உள்ளது.//
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தங்கள் மதத்தைச் “சுத்தப்படுத்தும்” வஹாபியம் போல் இல்லை இந்துமத புணருத்தாரணம். இந்து மதத்தைத் “தூய்மைப்படுத்துவது” என்ற பெயரில் அதன் பண்மைத் தன்மையை அழிப்பதோ, மாற்றங்களை வெறுப்பதோ, பழைமைவாதத்திற்குள் ஒடுங்கி மதத்தை இறுக்கமான நம்பிக்கைகளின் இருட்டுப் பெட்டியாக்குவதோ இல்லை என்பதில் முக்கியமான இந்து மத அறிஞர்கள் எக்காலத்திலும் தெளிவாகவே இருந்து வருகின்றனர். இந்துமத சீர்திருத்தம் என்பது வெறும் சம்பிரதாயமாக மாறிவிட்ட சடங்குகள், வழிபாடுகள் ஆகியவற்றிலுள்ள தத்துவப் பின்புலத்தை முக்கியத்துவப்படுத்தலும், அவற்றை சமூக தேக்கநிலையிலிருந்து மேலெடுத்து ஜனநாயகப்படுத்தலுமே. திரித்துவிளக்கப்படும் இந்து மத தொண்மங்களுக்கான பாரம்பரிய தத்துவார்த்தமான விளக்கத்தை அளிப்பதும் அதில் ஒன்று, அதன் அங்கமாகத் தான் லிங்கவழிபாடு போன்ற விவாதங்களில் இந்துமதத் தரப்பு மேற்கின் பார்வையை அதன் தொடக்கத்திலேயே நிராகரிக்க வேண்டியுள்ளது.
***
(லிங்கம், யோனி குறித்தான தத்துவார்த்த தகவல்கள் எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் அரவிந்தன் நீலகண்டன் ஆகியோரின் கட்டுரைகளில் இருந்தும், உரையாடல்களில் இருந்தும் அறிந்து கொண்டவை. அவர்கள் இருவருக்கும் என் நன்றிகளைச் சமர்ப்பித்துக் கொள்கிறேன்)
-பிரகாஷ் சங்கரன்

(நன்றி: சொல்வனம், இதழ் 85ல் வெளியானது)

Monday, April 15, 2013

மயக்கம் (சிறுகதை)


ee
ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
கட்டுக்கரும்பை முறிக்கும் ஆனை
காவேரித் தண்ணியை கலக்கும் ஆனை..
- அந்த வரி வந்ததும் ராமன் தன் வழக்கமான கவலையுடன், “என்னப்பா ஆனை.. போப்பா ஆனை.. காவேரித் தண்ணில எல்லாம் அலையப்டாது… ஜுரம் வரும்.. அப்புறம் டாக்டர் மாமாகிட்ட சொல்லி ஊசி போடச் சொல்லுவா, ரொம்ப வலிக்கும். சமத்தா இருக்கனும் சரியா?” என்றான். அகலமான பெரிய புத்தகத்தில் ஒரு குட்டியானை குறும்பாக அவனைப் பார்த்துச் சிரித்தது. யானைக் குட்டிக்கு பள்ளிக்கூடமே கிடையாது, தினமும் அம்மாவுடன் வீட்டிலேயே இருக்கலாம் என்று நினைத்ததும் அவனுக்கு ஏக்கமாக இருந்தது.
“கோந்தே.. டேய் யானைக்காரா.. அப்பாவோட வெத்தலப்பெட்டிய எடுத்துண்டு வாடாப்பா…சமத்தே..” அப்பாவின் குரல் ஒரு பெரிய ஏப்பத்தைத் தொடர்ந்து வந்தது. குட்டி யானை மேலேறி வெற்றிலைப் பெட்டியுடன் ராமன் சென்றபோது, தூணில் சாய்ந்து இடதுகாலை மடக்கி வலதுகாலை வீட்டின் கூடத்துக்குள் இருக்கும் நடுமுற்றத்தில் தொங்கவிட்டு நிதானமாக உட்கார்ந்தார் அப்பா. அகன்ற முற்றத்தின் மேல் பகுதி கம்பிகளாலான பெரிய இடைவெளியுள்ள கிராதி கொண்டு அடைக்கப்பட்டிருந்தது. மழையும் காற்றும் வெயிலும் நடுவீட்டில் கொட்டும் முற்றம் வான் நோக்கித் திறந்த சாளரம் போல இருந்தது. வெயிலின் சூட்டைக் குறைப்பதற்காக தென்னை ஒலையால் செய்யப்பட்ட பெரிய தட்டிகள் கிராதியின் மேல் போடப்பட்டிருந்தது.
சூடான சாப்பாடு வியர்வையைக் கிளப்பியிருந்தது. அப்பாவின் அடிக் கழுத்திலிருந்தும், மார்பின் ரோமங்களுக்குள்ளிருந்தும் வியர்வை பெருகி கோடுகளாக பெருத்த வயிற்றில் மெதுவாக இறங்கி, அங்கிருந்த முத்துத் துளிகளோடு சேர்ந்து கீழே இறங்கியது. நடுப்பகலின் ஓய்ந்துபோன அமைதி. இளம்பச்சை நிறத்தில் இருந்த சோழவந்தான் வெற்றிலையின் காம்பையும் நுனியையும் கிள்ளி, வெற்றிலையை நீளவாக்கில் குப்புற மடித்து நடுநரம்பை உரித்து, ரோஜாசெண்ட் போட்ட சுண்ணாம்பை வெற்றிலையின் பரப்பில் அங்குமிங்கும் தீற்றினார். வெள்ளரி விதையும், வாசனையும் சேர்த்த சாமுண்டிப் பாக்கை கொஞ்சம்போட்டு, முந்திரித் தூளும் இனிப்பும் கலந்து நெய்யில் வறுத்த சீவலையும் ஒரு விள்ளல் போட்டுக்கொண்டார். வெற்றிலையைப் பொட்டலமாக மடித்து கடைவாயில் அதக்கினார். ராமனுக்கும் உள்ளங்கையில் கொஞ்சம் நெய்சீவல் தந்தார்.
வாயில் போட்டான், இனிப்பாக இருந்தது. மென்று கொண்டே முற்றத்தின் வலது மூலைக்கு அப்பால் கூடத்திலிருந்து திறந்த வாசலுடன் கூடிய சமையல் அறைக்குப் போனான். அடுப்பு இருக்கும் இடத்திற்கு மேலே உயரத்தில் நூலாம்படை படிந்த ஜன்னலில் இருந்து கரிய கம்பிகளைத் தாண்டி வெயில் டார்ச் விளக்கு வெளிச்சம் போல நீண்டுவந்து சமையலறயின் வலதுபக்கச் சுவரில் பாதியும் மீதி ஒடிந்து தரையிலுமாக விழுந்து கிடந்தது. அம்மா ஒருகாலை குத்தவைத்து உட்கார்ந்து தட்டில் சாதத்தைப் போட்டு பிசைந்து கொண்டிருந்தாள். பருப்பு சாதத்தில் நிறைய நெய் ஊற்றிப் பிசைந்து, தட்டின் ஓரத்தில் கொஞ்சமாக வத்தல் குழம்பை ஊற்றி, சுட்ட அப்பளமும், வாழைக்காய் கறியும் பரிமாறியிருந்தாள். பார்த்தாலே தெரிந்தது-அது அவனுக்காகத் தான். பின்னால் போய் கழுத்தைக் கட்டினான். வியர்த்து, தலையிலிருந்து வழிந்த எண்ணையுடன் கலந்து பிசுபிசுவென்று இருந்தது. தலையில் இருந்து புசுபுசுவென முடி மூக்கில் வருடியது. “கசகசன்னு இருக்கு, கட்டிண்டுகொல்லாத அம்மாவ” இடது கையால் அவன் கைகளைப் பிரித்துவிட்டு, முன்னோக்கி அவனை இழுத்து உட்காரவைத்தாள். பருப்பு சாதத்தை ஒரு சிறிய கைப்பிடி எடுத்து வத்தல் குழம்பில் கொஞ்சம் தொட்டு அப்பளத்தை உடைத்து ஒரு துண்டுடன் அவன் முன் நீட்டினாள், வாயை அகலத் திறந்து வாங்கிக் கொண்டான். வாய்க்குள் எச்சில் ஊற சந்தோஷமாக மென்றான். அவன் வாய்க்குள்ளிருந்த சாதத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அம்மா அப்பளத்தில் இருந்து ஒரு துண்டு உடைத்துத் தன் வாயில் போட்டுக்கொண்டாள். அடுத்த முறை அப்பளத்தில் கைவைக்கும் போது கையைப்பிடித்தான், வாயில் சோற்றுடன், “என் அப்பளத்த பூரா தின்னுட்ட…” என்று பொய் அழுகையுடன் ஓலமிட்டான். “வேண்டாண்டி கோந்தே…என் தங்கமோன்னோ? அம்மா உன் அப்பளத்த சாப்பிடமாட்டேன். அழாமச் சாப்பிடு” என்றாள். “என் குட்டி ஆனைக்கு..?” என்று புத்தகத்தை விரித்து அம்மாவிடம் காட்டினான். சிரித்துக் கொண்டே ஒரு கவளத்தை யானைகுட்டிக்கு காட்டிவிட்டு அவன் வாயில் அடைத்தாள்.
கூடத்திலிருந்து அப்பாவின் குரல், “டேய் கோந்தே.. யானைக்காரா… ஒரு சொம்புல அப்பாவுக்கு மண் பானை ஜலம் கொண்டு வாடா…” விநோதமான சத்தத்துடன் கேட்டது. வாய் நிறைய வெற்றிலை இருக்கும் -மோவாயை வானத்தை நோக்கித் தூக்கிக் கொண்டு கூப்பிடுகிறார் என்று புரிந்தது.
அம்மா விறுவிறுவென சாதத்தட்டுடன் எழுந்து கூடத்திற்குச் சென்றாள், யானைக் குட்டியையும் அழைத்துக் கொண்டு பின்னாலேயே ஓடினான்.

“ஆனைக்காரனெல்லாம் உங்க ஆகத்தோட போட்டும்.. சும்மா எம்புள்ளய ஆட்டுக்காரன், ஆனைக்காரன்னு கூப்பிட்டு என் வாயப் புடுங்காதீங்கோ..” குரலில் கொஞ்சம் கோபம் தெரிந்தது.
அப்பா நிதானமாகச் சிரித்துக் கொண்டே, “அதென்ன எங்க ஆகம்? எல்லாம் தாயாதி வாசனை! அதான் ரத்தத்திலேயே வர்றது… சதா ஆனையக் கட்டிண்டு அழறானே…” மேலும் சிரித்துக் கொண்டே “டேய் கோந்தே… ஆனை டிரைவர்… நீ பெரியவனானதும் நன்னா சேப்பா ஒரு ஆனை வாங்கித் தர்றேண்டா அப்பா உனக்கு.. சரியா?” என்றார். புத்தகத்தை விரித்துக்காட்டி, “இதே மாதிரி குட்டி ஆனை தான் வேணும்” என்றான் சந்தோஷமாக.
எரிச்சலுடன் அம்மா புத்தகத்தைப் பிடுங்கி தரையில் விட்டு எறிந்தாள். புத்தகத்தை எடுக்க கத்திக் கொண்டே ஓடினான். அம்மா நாலே எட்டில் அவனை விரட்டிப் பிடித்து கையை இழுத்து தன்னுடன் சேர்த்துக்கொண்டு, தலையில் மெல்லக் குட்டினாள். அப்பாவிடம், “ஏ..பிராம்மணா.. உங்க வாய்ல தர்ப்பையைப் போட்டு பொசுக்க… என் குழந்தைய கெடுத்து குட்டிச் சுவராக்காதேள். ஆச்சாளுக்கு பீச்சாளாம் மதினிக்கு உடப்பிறந்தாளாம்.. என் பிள்ளைக்கு என்ன தாயாதி வாசனை வேண்டியிருக்கு? அதெல்லாம் உங்க தலைமுறையோட சரி. வேணும்னா சேப்பா ஒரு ஆனை வாங்கிண்டு நீங்க போங்கோ ஆனைக்காரனா” கீழ்த்தாடையை வலது தோளால் விரைவாக இடித்து வாயைக் கோணிக்காட்டினாள்.
அப்பா சிரித்துக்கொண்டே, “சமத்துக் குஞ்சு… வாசல்ல வெயில் வீணாப்போறதேடா கோந்தே, போய் தலைல வாங்கிக்கலையா?” என்றார் அவனைப் பார்த்து. வாயிலிருந்து சாதம் கூழாக வழிய, “சாப்டுட்டு விளையாடப் போணும்” என்றான். அம்மா அவன் காதைத் திருகினாள், “வெயில்ல வாசப்பக்கம் போனே.. உங்கப்பா மாதிரி கன்னங்கரேல்னு ஆயிடுவ. சமத்தா அம்மா பக்கத்துல தாச்சிண்டு தூங்கனும்” என்றாள்.
“சரிடி அம்மா பரதேவதே… உன் கைக்குழந்தைக்கு சாத்த ஊட்டித் தூங்கப்பண்ணு. சாயங்காலமா வெயில் தாழ ஆனைமேய்க்கப் போனுமே..” அப்பா கொஞ்சம் கூட கோபப்படாமல் வழக்கமான நக்கலுடன் சொல்லியபடியே அங்கவஸ்திரத்தால் மார்பையும் வயிரையும் ஒற்றிக் கொண்டார். பின்னர் அதைச் சுருட்டி தலைக்குக் கீழே வைத்துக் கொண்டு, “ஸ்வபாடா…அம்மா.. பரமேஸ்வரி” என்றவாறே படுத்துக் கொண்டார்.
*****
அப்பாவிடம் பலமுறை திரும்பத்திரும்ப சொல்லச்சொல்லி கேட்டது தான். சுந்தாச்சுச் சித்தப்பா யானையின் பின்னால் ஓடிப்போன கதை. எத்தனை முறை கேட்டாலும் ராமனுக்குச் சலிக்காது, அவன் அப்பாவிற்கும் சொல்லிச் சலிக்காது. ஒவ்வொரு முறையும் அவரின் மனநிலையைப் பொறுத்து பல கிளைக் கதைகளுடன் வளர்ந்துகொண்டே வந்தது.
பக்கத்து ஊரான மன்னாடிமங்கலத்தில் தூரத்துச் சொந்தத்தில் ராமனின் அப்பாவிற்குச் சித்தப்பா ஒருவர் இருந்தார். நடேச சாஸ்திரி. வேதம் படித்தவர். நல்ல படிப்பாளி, கூடவே கோபமும், பயங்கர ஆசாரமும். மனைவி, பிள்ளைகள் உட்பட ஊர் முழுதும் அத்தனை பேர் ஆசாரத்தையும் குறை சொல்லுவார். யாரையும் தொட விடமாட்டார். விளைவாக, மடி சாஸ்திரி என்று பெயர் வந்தது. பின்னர் அது மட சாஸ்திரியாக மறுவிற்று. அவரிடமே யாரோ ஒருவர் ஏன் அப்படி பெயர் வந்தது என்று கேட்கப்போக, “பின்னே? நான் தானே ஓய் நம்ம மடத்தோட ஆஸ்தான சாஸ்திரிகள்… அதான் எல்லாரும் வெறும்னே சாஸ்திரிகளேன்னு கூப்பிடாம மட சாஸ்திரிகள்னு மரியாதையா கூப்பிடறா” என்று சமாளித்தார். அவர் போன பிறகு, “சும்பப் பயல்.. வம்புக்கு கெடந்து அலையறான்” என்று பொருமினார்.
நடேச சாஸ்திரிக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர் பாலசுப்ரமணியன், அடுத்தது மூன்று வயது இளைய சுந்தர்ராஜன். வீட்டின் கடைக்குட்டி சாரதா. சின்ன அண்ணாவை விட நான்கு வருடம் சிறியவள்.
சாஸ்திரிகளின் மானத்தை வாங்குவதெற்கென்றே பாச்சுவும், சுந்தாச்சுவும் வேத பாடசாலையில் ஒழுங்காகப் படிக்காமல் ராவோடு ராவாக ஓடி வந்தார்கள். இளையவன் சுந்தாச்சு தான் பாச்சுவையும் சேர்த்து கெடுத்தான் என்று சாஸ்திரிகள் திட்டினார். “எவன்கிட்டயாவது அடிமை உத்யோகம் பாத்துத் தான் பொழைக்கனும்னு ஈஸ்வர சங்கல்பம்னா நான் என்ன பண்ணமுடியும்?” என்று திட்டிக்கொண்டே, கிராப் வைத்துக் கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையுடன் தலையில் கட்டுக்குடுமியோடு மறுபடியும் பழைய பள்ளிக்கூடத்திலேயே இருவரையும் சேர்த்துவிட்டார். ராமனின் அப்பாவும் அதே பள்ளியில் தான் படித்துக் கொண்டிருந்தார். இருவருமே ராமனின் அப்பாவை விட வயதில் இளையவர்கள். பள்ளியில் விடும் போது சாஸ்திரி அப்பாவிடம், “சுப்பு, சுந்தாச்சு மேல எப்பவும் ஒரு கண் வச்சுக்கோடாப்பா..” என்றார்.
ஒருநாள் ராமனின் அப்பா, பாச்சு, சுந்தாச்சு, -மூவரும், பள்ளிக்கூடம் விட்டு வரும் வழியில் பெரிய யானை ஒன்று வருவதைக் கண்டார்கள். பட்டை உரிக்கப்பட்ட கனத்த வேப்பமரக் கிளை போல முனை மழுங்கச் செதுக்கப்பட்ட பெரிய இரண்டு தந்தங்கள் கடைவாயில் இருந்து நீண்டு வளர்ந்திருந்தன. இதுவரை அந்தப் பகுதியில் வந்ததிலேயே மிகப்பெரிய யானை, அதிலும் இவ்வளவு பெரிய கொம்புள்ள யானையை யாரும் பார்த்ததில்லை. காது மடல்களின் விளிம்பும், துதிக்கையும் வெண்புள்ளிகள் படர்ந்து வெளுத்திருந்தது. நெற்றியிலும் காதுமடல்களிலும் சுண்ணாம்புக் கட்டியால் வரையப்பட்ட விபூதிப்பட்டை மற்றும் ஏதோ அலங்காரக் கோலங்கள். சிறிய பித்தளை மணிகள் கோர்க்கப்பட்ட இரும்புச் சங்கிலி ஒன்று கழுத்தில் மாலைபோல அணிவிக்கப்பட்டிருந்தது. இரு நுனியிலும் மணிகள் கொண்ட நீண்ட பித்தளைச் சங்கிலி ஒன்று யானையின் நடு முதுகில் போடப்பட்டிருந்தது. சங்கிலியில் மணி கோர்த்த நுனிகள் பக்கவாட்டில் இறங்கி வயிற்றின் அருகே தொங்கியது.
ஒவ்வொரு அடி எடுத்துவைக்கும் போதும் கழுத்து மணிகளும், பெருத்த வயிறு பக்கவாட்டில் அசைய, பித்தளைச் சங்கிலியில் தொங்கிய மணிகளும் வெவ்வேறு சுருதிகளில் ஒலி எழுப்பின. யானையின் கம்பீரத்தில் ஊர் வைத்த கண்வாங்காமல் பிரமித்துப் பார்த்தது. கிராமத்துப் பொடியன்களின் பட்டாளம் கிரங்கிப் போய் உற்சாகத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் பெரும் கூச்சலுடன் பின்னாலேயே ஓடிவந்தது. தெருநாய்கள் மிக ஜாக்கிரதையாக யானையிடம் இருந்து பத்தடி விலகி காதுகளை பின்னால் மடக்கி, வாலைப் பின்னங்கால்களுக்குள் செருகி, வயிற்றை எக்கி ஓயாது குரைத்தபடி இருந்தன.
யானை யாரையும் பொருட்படுத்தாமல் பெரிய வீட்டுப் பெண் போல நிதானமாக கம்பீரமாக நடந்து சென்றது. நீண்ட துதிக்கையின் நுனியை சுருட்டியும் நீட்டியும் காற்றில் அளைந்து கொண்டே இருந்தது. கண்கள் தரையைப் பார்ப்பது போலத் தாழ்ந்திருந்தது. ஆனால் உண்மையில் எதைப் பார்க்கிறது என்றே கணிக்க முடியவில்லை. ஒருவன் அதன் மத்தகத்தில், தன் தொடைமேல் குறுக்காக அங்குசத்தை வைத்துப் பிடித்துக் கொண்டு பெருமையாக அமர்ந்திருக்க, இன்னொருவன் ஒருகையால் தந்தத்தைத் பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் நீண்ட பிரம்புடன் யானையோடு நடந்து வந்தான். வீடுகள் தோறும் முறத்தில் வைத்துக் கொடுக்கப்படும் அரிசியையும் வெல்லத்தையும் உறிஞ்சி வாயில் போட்டுக்கொண்டு சில்லறைகளை பாகனிடம் தந்தது. வாளியில் வைக்கப்படும் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், தலையில் துதிக்கையை ஒற்றியெடுத்து ஆசீர்வதித்தும் அக்ரஹாரத்தையும் பெரிய தெருக்களையும் கடந்தது. அவர்கள் ஊரைக் கடக்கும் போது ராமனின் அப்பா, “டேய் ரொம்ப நாழி ஆனை பின்னாடி சுத்தாம ஆத்துக்குப் போங்கோ.. பெரியப்பா கோச்சுப்பார்” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குப் போய்விட்டார்.
கிராமத்து தெருநாய்கள் குரைத்தபடியே பின்னால் சென்று ஊர் எல்லையைத் தாண்டி வழியனுப்பிவிட்டு நிம்மதியாக வர, யானை மன்னாடிமங்கலத்துக்குள் நுழைந்தது. யானை அக்ரஹாரத்தைத் கடக்கும் போதே பாச்சு தம்பியை வீட்டிற்கு வரச்சொல்லி கையைப் பிடித்து பலவந்தமாக இழுக்க, அண்ணாவின் கையைக் கடித்து, புத்தகப் பையைத் தெருவில் தூர வீசி எறிந்துவிட்டு யானை பின்னால் ஓடினார் சுந்தாச்சு.
பாகன்கள் குடுமியுடன் இருந்த பிராமணப் பையனை விநோதமாகப் பார்த்தார்கள், வீட்டிற்குப் போகச் சொல்லி விரட்டினார்கள். விடாமல் யானையோடு ஊர் முழுதையும் சுற்றியடித்துவிட்டு, அடுத்த கிராமத்திற்கும் தொடர்ந்து சென்றார். பின்னர் பொழுது சாய்ந்து யானையை வைகையில் குளிப்பாட்டும் போதும் கூடவே இருந்தார். யானைப் பாகன்களிடம் கெஞ்சி அந்தக்கல்லை வாங்கி யானைக்குத் தேய்த்துவிட்டார். யானைக்கு தென்னை மட்டை வெட்டிப்போடுவதற்கு தோப்பிற்குக் கூட்டிப் போனார். பாகன்களுக்கு சாப்பாடுக்கடைக்கு வழிகாட்ட துணைக்குச் சென்றார்.
இருட்டியதும் பாகன்கள் பலவந்தமாக துரத்த வீட்டிற்கு சோகமாக முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு வந்தார். சாஸ்திரிகள் அங்கவஸ்திரத்தால் மார்பைப் போர்த்திக்கொண்டு நெற்றியில் விபூதிப் பட்டையுடன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் பாச்சுவும் நெற்றி, கைகால்களில் வரிவரியாக விபூதி பளிச்சிட ஏதோ புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். சுந்தாச்சு வீட்டின் முன் தயங்கி நின்றார். அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் சாஸ்திரிகள் முகம் சிவப்பாகத் தெரிந்தது. சாஸ்திரிகள் கையில் இருந்த வளைந்த பனையோலை விசிறியின் நிழல் யானையின் காது போலத் தெரிந்தது. சுந்தாச்சு எதையோ நினைத்துக்கொண்டார், முகத்தில் மெல்லச் சிரிப்பு படர்ந்தது. வெறிகொண்ட சாஸ்திரிகள், “என் மானத்தை வாங்கறதுக்குன்னே வந்து வாச்சிருக்கியா? நா ஊருக்கே உபதேசம் பண்றேன்.. ஆனா எம்புள்ளைக்கு ஒரு நல்ல பழக்கம் கிடையாது. வெக்கக்கேடு.. எல்லாம் என் பிராரப்தம். சாயங்கால வேளை, ஆத்துக்கு வந்து கைகால் அலம்பிண்டு சந்தியாவந்தனம் பண்ணி சுவாமி நமஸ்காரம் பண்ணிட்டு புஸ்தகத்த எடுத்து வச்சு ரெண்டு வார்த்தை வாசிக்காம, சூத்திரப் பசங்களோட சேந்துண்டு யானை பின்னால தெருத்தெருவா அலையறயேடா அசத்து… உனக்கு கடன் வாங்கி பூணூல் போட்ட காசுக்கு ரெண்டு பசுமாட்ட வாங்கியிருந்தாலாவது ஒரு புண்ணியமுண்டு…” கத்திக்கொண்டே திண்ணையிலும் தெருவிலுமாக துரத்தித் துரத்தி விசிறிக் காம்பால் சுந்தாச்சுவை அடித்துத் துவைத்தார். பிள்ளையின் அலறல் கேட்டு சாஸ்திரிகளின் மனைவி கமலம் அடுக்களையிலிருந்து நடுமுற்றத்தைச் சுற்றிக்கொண்டு அவ்வளவு பெரிய கூடத்தையும், இரண்டு ரேழிக்களையும் தாண்டி ஓடி வருவதற்குள் சுந்தாச்சுவின் உடல் எங்கும் விசிறிக்காம்பின் தடம் வரிவரியாகப் பதிந்து சிவந்து தடித்திருந்தது. சிறியவள் சாரதாவும் கையில் மரப்பாச்சி பொம்மையுடன் ஓடிவந்தாள், அப்பாவைப் பார்த்து பயந்து போய் அம்மாவின் பின்னால் ஒண்டிக் கொண்டாள். திண்ணையில் அழுது துடித்துக்கொண்டு கிடந்த மகனை வாரி எடுக்கப் போன மனைவியை பெருங்குரலில் ஒரே அரட்டலில் அரண்டு நடுங்கச் செய்தார். “புள்ளயக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கியிருக்கா அசமஞ்சம்… என்னக் கேக்காம இவன் ஆத்துக்குள்ள காலடி எடுத்து வைக்கப்டாது. இன்னைக்கு ராத்ரி அவனுக்கு சாதம் போடப்டாது. எவன் கூடப் போயி தெருப்பொறுக்கப் போனானோ அவன் கூடவே போகட்டும்… நீ போடீ உள்ள” என்று மனைவியை கோபமாக விரட்டினார்.
Courtesy : The Hindu
பசியெடுக்கும் போது தானாக திரும்ப வருவான் என்று அரிக்கேன் விளக்குடன் கூடத்தில் சாப்பிடாமல் காத்துக்கொண்டிருந்த சாஸ்திரிக்கு நேரம் ஆக ஆக மகன் வராததால் பயம் பற்றிக் கொண்டது. அழும் மனைவியையும் சமாதானப்படுத்த முடியவில்லை. பெரியவன் பாச்சுவை விட்டுத் தேடச் சொன்னார். தானும் அரிக்கேனுடன் இறங்கித் தேடினார். பாச்சு வியர்க்க விறுவிறுக்க சைக்கிளை மிதித்துக்கொண்டு வந்து, ராமனின் தாத்தாவிடம் விஷயத்தைச் சொன்னார். ராமனின் தாத்தாவும், அப்பாவும், பாச்சு சித்தப்பாவும் கோயில், ஆற்றங்கரை, குளக்கரை மண்டபம், தோப்பு என ஆளுக்கொரு பக்கமாகத் தேடினார்கள். எங்கும் சுந்தாச்சுவைக் காணவில்லை.
மறுநாள் விடிந்தது. ஒரு தகவலும் இல்லை. பக்கத்து வீட்டுப் பெண்கள் தைரியம் சொல்ல, சாஸ்திரிகளின் மனைவி அழுதுவீங்கிய முகத்துடன் பேசாமல் அமர்ந்திருந்தார். அன்று மாலை வரை பல இடங்களிலும் தேடினார்கள். பலனில்லை. சாஸ்திரிகள் தளர்ந்து விட்டார். மனைவியைப் பார்க்கவே அஞ்சினார். தெருக்காரர்கள் ஆளாளுக்கு அவருக்கு புத்திமதி சொன்னார்கள். பெண்கள் “இப்படிப் பண்ணிட்டாரே?” என்றார்கள். அன்று இரவு சாஸ்திரிகளின் மனைவி பேய் பிடித்ததுபோல கத்தினார். “என் புள்ளய தொலச்சிட்டியே மகாபாவி” என்று முட்டிக்கொண்டு அழுதார். மெல்ல மெல்ல அவர் பேசுவதே குறைந்தது. வீடே இறுக்கமானது.
சில நாட்கள் பொறுத்தார்கள். அக்கம் பக்கங்களில் சின்னப்பையன் யாரும் அனாதையாகத் திரியும் தகவல் எதுவும் இல்லை. கிணற்றிலோ குளத்திலோ சிறுவன் பிணம் எதுவும் கிடைக்கவில்லை. யானையுடன் ஓடிப்போயிருக்கலாம், எப்படியும் கண்டுபிடித்துவிடலாம் என்று அக்ரஹாரத்திலுள்ளவர்கள் சமாதானப்படுத்தினார்கள். வெளியூர்களில் உள்ள சொந்தக்காரர்களிடம் எல்லாம் சொல்லிவைத்தார்கள். ஏதாவது நல்ல செய்தி வரும் என துக்கத்தை அடக்கிக் கொண்டு காத்திருந்தார்கள்.
நாலைந்து வருடங்கள் ஓடின. சாஸ்திரிகள் புத்ர சோகத்திலும், குற்ற உணர்ச்சியிலும் ஆளே சுத்தமாக ஒடுங்கிப் போனார். பெரும்பாலும் அமைதியாக இருந்தார். ஜுரம்வந்து நலிந்த உடலுடன் சிலநாட்கள் இரண்டாம் ரேழியில் கிடந்தார், அதிகம் தாமதிக்காமல் சீக்கிரமே ஒருநாள் செத்துப்போனார்.
பாச்சுவையும், சாரதாவையும் அவர்கள் அம்மா கமலம் தான் அரும்பாடுபட்டு வளர்த்தார். அதிலேயே முழு மூச்சாக இருந்தார். சுந்தாச்சு ஓடிப்போனதை வீடே மறந்து விட்டது போல காணப்பட்டது. சாஸ்திரிகள் உயிரோடு இருந்தபோதும் சோற்றுக்குக் கஷ்டமில்லாமல் குடும்பம் நடந்து கொண்டிருந்தது, அவ்வளவு தான். சேமிப்போ, சொத்தோ எதுவும் இல்லை. இருக்கும் வீடும் மிகப்பழையது, ஆறு தாயாதிக் குடும்பங்களுக்குச் சொந்தமானது. வீட்டில் விற்க முடிந்த பொருட்களையெல்லாம் ஒவ்வொன்றாக விற்றார். சமையல் வேலைகளுக்குச் சென்றார். பிறந்த வீட்டிலும் தரித்திரம் தான். பெரிய உதவிகள் எதுவும் இல்லை. ராமனின் தாத்தாவும் ஏழ்மையில் தான் இருந்தார். தன் கஷ்டங்களுக்கு மத்தியில் சிறிய உதவிகள் செய்தார். ஓரிருவருடங்களில் பாச்சு சித்தப்பா படிப்பை நிறுத்திவிட்டு புரோகித்திற்கு உதவியாளராகச் சென்றார். ராமனின் அப்பாவும் பியுசி தோற்று படிப்பைக் கைவிட்டு தாத்தாவிடம் பிழைப்புக்குத் தேவையான வேதமந்திரங்களை மட்டும் கற்றுக்கொண்டு ஒருசிறிய கோயிலில் பூஜையும், புரோகிதமுமாக வாழ்க்கையை ஓட்டினார். ஓரளவு வருமானம் வந்தது. சமயங்களில் அப்பாவும், பாச்சு சித்தப்பாவும் சேர்ந்து பல இடங்களுக்குப் புரோகிதத்திற்குப் போனார்கள். யானையை, யானைக்காரர்களை, வீட்டைவிட்டு ஓடிப்போவதை திரும்பத் திரும்பப் பேசிக் கிண்டலடித்து, எதையோ மறக்க முயன்று கொண்டிருந்தார்கள்.
*****
சுந்தாச்சு சித்தப்பா யானையுடன் ஓடிப்போய் இருபது வருடங்கள் ஆகிவிட்டிருந்தது. அப்பாவிற்குக் கல்யாணம் முடிந்து ராமன் பிறந்து விட்டான். பாச்சு சித்தப்பா கல்யாணம் செய்து கொள்ளவில்லை, காரணம் சாரதா அத்தைக்கு இன்னும் கல்யாணம் அமையவில்லை. அப்பா இல்லாத குடும்பம், பையன் ஓடிப்போன சரித்திரம், திருமாங்கல்யம் கூட தங்கத்தில் செய்து தரமுடியாத வீட்டின் தரித்திரம் எனப் பல காரணங்கள். சாரதா அத்தைக்கு வயது இருபத்தி எட்டு ஆனது. இத்தனை வயதில் கல்யாணம் ஆகாத ஒரு பெண்ணும் அவர்கள் சொந்தத்திலோ ஊரிலோ இல்லை.
கமலம் சித்திப்பாட்டி மகளின் திருமணத்தை நினைத்து நினைத்து உருகினார். தெரிந்த எல்லா தெய்வங்களையும் காசு செலவில்லாத தெரிந்த எல்லா வகையிலும் தொழுதார். பித்துப் பிடித்தது போல பார்ப்பவர்களிடமெல்லாம் பெண்ணுக்கு தகுந்த வரன், ‘சுமாரான இடமாக இருந்தால் போறும், பாருங்கோ’ என்று வேண்டினார்.
ராமன் வளர்ந்து எட்டாம் வகுப்பு முழுப்பரிட்சை விடுமுறையில், குழந்தையாகவும் இல்லாமல் ‘பெரிய பையனாகவும்’ இல்லாமல் ரெண்டுங்கெட்டானாக ஊர் சுற்றிக் கொண்டு சந்தோஷமாக இருந்த போது கடைசியில் ஒரு வழியாக சாரதா அத்தையின் கல்யாணம் நிச்சயமானது. வத்தலக்குண்டு மாப்பிள்ளை. ஒரு பள்ளியில் உதவியாளர் வேலை. கருப்பாக, தெற்றுப் பல்லுடன், முழு வழுக்கையாக இருந்ததால் பெண் கிடைக்கவில்லை.
“கருப்பு தான் அழகு, காந்தல் தான் ருசி. மாப்ளைப் பையன் நன்னா சிரிச்ச முகமா இருப்பான். ஆம்பிளைக்கு அழகு என்னத்துக்கு? உத்யோகம் புருஷ லக்ஷணம். ஒன்னும் யோஜிக்காதேள்.. நல்ல இடம்” என்று வரன் பார்த்துக்கொடுத்த சம்பு ஐயர் சொன்னதும் அனைவரும் முடிவு செய்து விட்டனர். சாரதா அத்தை முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது. சித்திப்பாட்டி சமாதானமடைந்தாள். கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டுமென்ற அடுத்தகட்ட பிரார்த்தனைகளை ஆரம்பித்தாள். அவர்கள் அக்ரஹாரத்தின் இரண்டு மூன்று பணக்காரர்கள் திருமாங்கல்யத்திற்கும், கூரைப்புடவைக்கும், கல்யாணச் செலவில் கொஞ்சத்திற்கும் பொறுப்பேற்றுக் கொண்டதால் பாச்சு சித்தப்பாவிற்கு தைரியம் வந்தது. இருக்கும் காசையெல்லாம் வழித்துத் திரட்டினார், வெளியில் வட்டிக்குக் கொஞ்சம் கடன் வாங்கினார். ராமனின் அப்பாவும் கடன் வாங்கி கொஞ்சம் பணம் உதவி செய்தார்.
முடிந்தவரை சிக்கனமாக கல்யாண ஏற்பாடுகள் நடந்தது. சம்பிரதாயத்திற்கு கொஞ்சம் பத்திரிக்கைகள் அடிக்கப்பட்டன. பண உதவி செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பத்திரிக்கை அனுப்பப்பட்டது. பெரும்பாலும் ஏதாவது பணம் கொடுத்தார்கள். சொந்தங்களுக்கு மஞ்சள் தடவிய தபால் கார்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊர்க்காரர்களை குங்குமச் செப்புடன் அம்மாவும் ராமனும் போய் நேரில் அழைத்தார்கள். மூன்று நாள் கல்யாணம். மண்டபம் எல்லாம் கட்டுப்படியாகாது. பழங்கால நாலுகட்டு வீடு ஆகையால் வீடே போதும் கூட்டத்தைச் சமாளிக்க. வாசலில் எதிர்வீட்டையும் சேர்த்து பந்தல் போடப்பட்டது.
கல்யாணத்திற்கு முதல் நாள் அரசாங்க டவுன் பஸ்ஸை நாள் வாடகைக்குப் பிடித்து வத்தலக்குண்டில் இருந்து மாப்பிள்ளை வீட்டார் அழைத்துவரப்பட்டனர். முன்னரே ஏற்பாடு செய்திருந்த அக்ரஹாரத்து வீடுகளில் சிறிய குழுக்களாக தங்கவைக்கப்பட்டனர்.
விதவையாக தன் மகளின் கல்யாணத்தில் பங்குபெறாமல் சித்திப்பாட்டி வீட்டின் ஒரு அறைக்குள் இருந்து கொண்டு தொடர்ந்து ஜபித்துக் கொண்டு இருந்தாள். ராமனின் அப்பாவும், பாச்சு சித்தப்பாவும், ஆளுக்கு ஒரு பக்கமாக பறந்து கல்யாண வேலைகளில் மூழ்கியிருந்தனர். அம்மாவும் அண்டை வீட்டுப் பெண்களுமாக சாரதா அத்தையை அலங்கரிப்பதிலும், வந்தவர்களை உபசரிப்பதிலும் மும்முரமாக இருந்தனர்.
வாசல் பந்தலில் இருந்து திடீரென்று, “என்னங்கானும் நினைச்சுண்டிருக்கீர்? மாப்ளை ஆத்துக்காரான்னா கிள்ளுக்கீரையா?அவ்ளோ தூரம் யாத்ரை பண்ணி வந்து சேர்ந்தவாள ஒருவாய் காபி குடிக்கிறேளான்னு கேட்க ஒரு மனுஷா இல்லை” என்று அடிவயிற்றைத் தாக்கும் ஒரு கணீர்க்குரல் கிளம்பியது. அம்மா வாசலுக்கு ஓடினாள். பாச்சு சித்தப்பா வாசல் கட்டிலில் உட்கார்ந்திருந்த ஒரு பெரியவரிடம் பவ்யமாகக் குனிந்து மெதுவாகப் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். பேச்சில் பையனின் தாய்மாமா என்று தெரிந்தது. அம்மா திரும்பி கொல்லைப்புரத்திற்கு ஓடினாள். அங்கே பெரிய கோட்டை அடுப்பில் சமையல் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. பெரிய பித்தளை வட்டிலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த அப்பாவிடம் காதில் மெல்ல ஏதோ சொன்னாள். அப்பா அவசரம் அவசமாக அலுமனியக் கெட்டிலில் காபியை எடுத்துக்கொண்டு நாலைந்து தம்ளர்களையும் பொறுக்கிக் கொண்டு வாசலுக்குப் போனார். முழங்காலுக்கு மேலே மடித்து ஏற்றிக்கட்டியிருந்த வேட்டியை கீழே இறக்கிவிட்டு “நமஸ்காரம் மாமா, நான் பொண்ணுக்கு ஒன்னு விட்ட அண்ணா. காபி சாப்பிடுங்கோ” என்றார்.
அரைகுறையாக நரைத்த தலைமுடியை உச்சிக்குடுமியாக வைத்து, மயில்கண் வேஷ்டியை பஞ்சகச்சமாக கட்டி, ஜோடியாக அதே போல இருந்த ஆறுமுழம் மயில்கண் அங்கவஸ்திரத்தை மேலே போர்த்தியிருந்த கிழவர் அப்பாவை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்தார். சிவப்பு நிறத்தின் நடுவில் தேன் ஒழுகி உறைந்தது போன்ற வரிகள் இருந்த அகலமான ஃபிரேம்போட்ட தடித்த மூக்குக் கண்ணாடிக்குப் பின்னால் கருவிழிகள் பெரிய திராட்சை போல உருண்டு மின்னின. மூக்குப்பொடி போட்டு நாசித்துவாரங்கள் அகன்று புடைத்திருந்தன. மூக்கின் நுனியில் கரிய திரவமாக ஒரு சொட்டு எப்போதும் ஊசலாடிக் கொண்டிருந்தது. கண்ணாடி துடைக்க வைத்திருக்கும் மென் பஞ்சுப் பிசிறுகள் படர்ந்த மிருதுவான மஞ்சள் நிறத் துணியை கண்ணாடிக் கூடுக்குள்ளிருந்து எடுத்து மூக்கை அடிக்கடி பெரும் சத்தத்துடன் துடைத்தார். அந்தத் துணியே காபிக்கொட்டை நிறத்துக்கு மாறியிருந்தது. பூணூலால் முதுகை சொறிந்துகொண்டே, “சமையல்காரன்னு நினைச்சேன்”என்றார்.
அப்பா சட்டென்று தோளில் இருந்த அழுக்கான சிவப்புத் துண்டை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, “கொஞ்சம் கைவேலையா இருந்தேன்…” என்று அசடுவழியச் சிரித்தார். பெரியவர் சத்தம் போட்டு குலுங்கிச் சிரித்துக்கொண்டார்.
அம்மா ராமனை இழுத்து அவர் முன்னால் விட்டு, “கோந்தை…தாத்தாவுக்கு நமஸ்காரம் பண்ணுப்பா” என்றாள்.
பெரியவர், “கோட்டானாட்டம் வளர்ந்திருக்கான், இன்னும் என்ன கோந்தை வேண்டியிருக்கு?” என்றார். அம்மாவைப்பார்த்தான், முகம் கருத்துச் சுண்டியிருந்தது. என்னிடம், “நன்னா படிச்சு முன்னுக்கு வா’ என்று ஆசீர்வதித்தார்.
அடுத்த நிமிடத்திலிருந்து பத்து நிமிடத்துக்கு ஒருமுறை, ‘காபி சகிக்கலை, வெறும் சிக்கிரி, ஒரே காபியை சுடவச்சு சுடவச்சு கொடுக்கறான்’, ‘குளிக்க நல்ல தண்ணியில்லை’, ‘வேஷ்டி காயப்போட இடமில்லை’, ‘சந்தியாவந்தனம் பண்ண பஞ்சபாத்திரம் இல்லை’, ‘கொசு கடிக்கிறது’, ‘என்ன எழவு ஊர் இது? காற்றே அடிக்கலை, ஒரே புழுக்கம்’, ‘பிள்ளையாத்துக்காராள சரியா கவனிக்கலை’, ‘நிச்சயதார்த்தத்துக்கு சொன்னபடி மாப்பிள்ளைக்கு சீர் பண்ணலை’, ‘மாப்ளையோட தாய்மாமான்னு கொஞ்சம்கூட மரியாதை இல்லை’ என்று அசராமல் அடுத்தடுத்து ஏதாவது குண்டை வீசிக்கொண்டே இருந்தார். கல்யாண வீட்டை மிரளவைப்பதற்கென்றே தோதாக ஒரு வெண்கலக்குரல். வாசலில் கத்தினால் கடைசிக் கொல்லை கிணற்றடி வரை காதுகிழியும் படி துல்லியமாகக் கேட்கும். ஒரு முறை பாச்சு சித்தப்பா ஏதோ எரிச்சலில் அவருக்கு பதில் சொல்லாமல் நகர, “என்ன.. மாப்ளையாத்துல கேக்கறதுக்கு ஆளில்லன்னு நெனைச்சுண்டு இருக்கேளா? எங்க ரகு அரைக்காசுன்னாலும் அரசாங்க காசு சம்பளம் வாங்கறவன். ஆயிரம் பேர் பொண்ணு தரக் காத்துண்டிருக்கா. போனாப்போறதேன்னு நான் தான் இந்த சம்பந்தத்துக்கு ஒத்துக்கச் சொன்னேன். நான் சொன்னா இப்பவே கல்யாணத்த நிறுத்திட்டு கிளம்பிடுவா. ஜாக்ரதை” என்று ஒரு அஸ்திரத்தை ஏவினார். மாப்பிள்ளை வீட்டார் உட்பட மொத்த கல்யாண வீடும் அவர் குரலுக்குக் கீழே இருந்தது. ஒற்றை ஆளாக எல்லோரையும் பதறடித்து துவம்சம் செய்து கொண்டிருந்தார். குலை நடுங்கிப் போய் பாச்சு சித்தப்பா அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அதிலிருந்து பாச்சு சித்தப்பாவும், அப்பாவும், அம்மாவும் ஒருவர்மாற்றி ஒருவர் ஓடி அவர் முன்னால் விழுந்து கவனித்துக் கொண்டார்கள். சித்திப்பாட்டி வெளியிலேயே வராமல் பெண் கல்யாணம் எப்பாடுபட்டாவது நடந்து முடிய வேண்டும் என பதறியபடி பிரார்த்தனையில் இருந்தார்.
ஒருவழியாக மாப்பிள்ளை அழைப்பும் நிச்சயதார்த்தமும் முடிந்தது. இரவு உணவில், அரிசி அப்பளம் இடம்பெறவில்லை என்னும் கடைசிக் குற்றச்சாட்டுடன் பெண் வீட்டாரை ஒரு முறை முறைத்துவிட்டு பெரியவர் படுக்கச் சென்றார். ராமன் நன்றாகச் சாப்பிட்டான். சித்திப்பாட்டி, அம்மா, அப்பா, சித்தப்பா சாப்பிட்டார்களா என்று தெரியாது. கூடத்தில் வட்டமாக அமர்ந்து மறுநாள் முகூர்த்தம் முடிந்ததும் கல்யாணத்திற்கு வந்தவர்களுக்கு கொடுக்கவேண்டிய தாம்பூலப் பையில்வெற்றிலை, பாக்கு, பழம், ஒற்றை ரூபாய் நாணயம் எல்லாம் போடும் வேலையில் அம்மா, அப்பா, இன்னும் சில சொந்தக்காரர்கள் இருந்தனர். ராமன் அம்மா மடியில் படுத்துக்கொண்டே அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான். பெரும்பாலும் பேச்சு பெரியவரைப் பற்றித்தான் இருந்தது. ஆளுக்கு ஒருமுறை தங்களுக்குக் கிழவர் கொடுத்த குடைச்சலைப் பற்றிச் சொன்னார்கள். வட்டம் ஒருமுறை முடிந்ததும் அடுத்த குடைச்சல் கதையுடன் மறுபடியும் தொடர்ந்தது. பல சமயம் கிண்டலாகவே கடந்து போனது. அவனைக் ‘கோட்டான்’ என்று சொல்லிவிட்டதால் அவனும் ஏதாவது சொல்லவேண்டும் என்று ஆசையாக யோசித்தான்.
திடீரென்று பாச்சு சித்தப்பா அவசரம் அவசரமாக, “சுப்பண்ணா…” என அழைத்துக் கொண்டே ஓடி வந்தார். முகத்தில் சந்தோஷமும், அழுகையும், பதட்டமும், உடலெங்கும் நடுக்கமுமாக அப்பாவின் காதில் ஏதோ கிசிகிசுத்தார். தன் அப்பாவிடமும் அதே உணர்ச்சிகள் ஒவ்வொன்றாக ஏற்படுவதை ராமன் கவனித்தான். அப்பா விருட்டென்று தாம்பூலப் பைகளை கீழே வைத்து விட்டு எழுந்து சித்தப்பாவுடன் வாசலுக்கு ஓடினார். எல்லோரும் என்னவென்று தெரியாமல் குழப்பமும், பயமுமாக ஆளாளுக்கு எதையெதையோ சொன்னார்கள். வாசலில் இருந்து எந்த சத்தமும் இல்லை. எனவே பெரியவரின் பிரச்சனையாக இருக்காது. சிறிது நேரம் தாண்டியும் அப்பா வராததால் பொறுக்க முடியாமல் அம்மாவும் எழுந்தபோது மிகச்சரியாக மின்சாரம் நின்று விளக்குகள் அணைந்து வீடு இருளில் மூழ்கியது.
பழகிய வீடாதலால் அம்மா பெரிய தடுமாற்றம் இல்லாமல் வாசலை நோக்கி நடந்தாள், ராமனும் புடவையைப் பிடித்துக்கொண்டு பின்னாலேயே போனான். வாசல் பந்தலில் இரண்டு பெட்ரோமாக்ஸ் லைட்டுகள் ஆக்ரோஷமான நாகப்பாம்புபோல பெருமூச்சுடன் சீறியபடி மஞ்சள் ஒளியை கொட்டிக்கொண்டிருந்தன. ஒரு ஒல்லியான மனிதர் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. சித்தப்பா அப்பா தோளில் முகம் புதைத்திருந்தார், அவர் தோள்பட்டையும் முதுகும் குலுங்கியது. உற்றுக் கவனித்த போது அந்த மனிதர் கண்களில் நீர்கசிந்து கண்ணங்களில் ஓடிக் கொண்டிருந்தது தெரிந்தது. அப்பாவின் ஒரு கை அந்த மனிதரின் கைகளைப் பற்றியிருந்தது. அம்மா புரியாமல் ஒரு கணம் திண்ணையிலேயே நின்றாள். ராமன் அம்மாவின் பிடியை விட்டு ஓடி பந்தலுக்கு வந்தான்.
அவர் இந்தப் பக்கத்து ஆள் போலவே இல்லை. சிவப்பானவராக இருக்க வேண்டும், ஆனால் வெயிலில் கறுத்த சரீரம். எண்ணை பளபளக்கும் தலைமுடியை மொத்தமாக ஏற்றிச் சீவியிருந்தார். அடர்ந்த மீசை கீழிறங்கி தாடியுடன் இணைந்திருந்தது. கீழ் உதடு மீசைக்கு வெளியே கறுத்து காணப்பட்டது. கழுத்தில் மார்புக்கு கீழே தளர்வாக மாலை போல காவித்துண்டு போட்டிருந்தார். மேல் பட்டன்கள் போடாமல் திறந்த விடப்பட்டிருந்த வெள்ளைச் சட்டைக்கு உள்ளே கழுத்தை ஒட்டி நெருக்கமாக எதோ சாமி டாலர் கோர்க்கப்பட்ட கறுப்புக் கயிரும், ஓரத்தில் ஒரு தங்கச் செயினும் போட்டிருப்பது தெரிந்தது. அப்பா சித்தப்பா கைகள் போல் இல்லாமல், இறுக்கமாக நரம்புகள் புடைத்து உள்ளங்கை நோக்கி ஓடியது. மிட்டாய் ரோஸ் நிறத்தில், ஆங்காங்கே கிளிப்பச்சை நிறப்பூக்கள் போட்ட கைலி அணிந்திருந்தார்.
பந்தலில் வாசலுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இன்னொரு பெட்ரோமாக்ஸ் விளக்கு மந்தமாக ‘ஸ்ஸ்ஸ்..’ என்று முனகியபடி மங்கிய வெளிச்சத்தை வெளிவிட்டது. சற்றுத் தள்ளி தெரு ஓரத்தில் இருள் பழுப்பு மஞ்சளாக அசைவது போலத் தெரிந்தது. கண்கள் பழகியதும் ராமன் பரவசமானான், அது பெரிய யானை. சில நொடிகளில் ஒரு புதிய மிருக வாடை அடிப்பதைக் கூட உணர முடிந்தது. சட்டென்று புரிந்துவிட திண்ணைக்கு ஓடி அம்மாவிடம், “சுந்தாச்சு சித்தப்பா வந்துட்டா” என்றான். அம்மா பிரமிப்பும், திடுக்கிடலுமாக திண்ணையில் இருந்து இறங்கி பந்தலுக்கு வந்தாள்.
மூவரும் ஒரு கட்டிலில் அமர்ந்து கிசுகிசுப்பாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர் பேசுவது பிராமணப் பேச்சே இல்லை. தமிழை மூக்கால் பேசுவது மாதிரி தான் இருந்தது. திக்கித்திணறி தமிழ் பேசினார். அவர் பேச்சிலிருந்து அவனுக்கு ஓரளவுபுரிந்தது: பன்னிரெண்டு வயதில் யானையின் பின்னால் ஓடிப்போனவர் யானைப்பாகனோடு பாலக்காடு சென்று அவர்கள் வீட்டிலேயே வளர்ந்திருக்கிறார். இவரை வளர்த்தவர் ஏழெட்டு வருடங்களுக்கு பிறகு மன்னாடிமங்கலத்துக்கு யானையுடன் ஒருமுறை வர நேர்ந்த போது வீட்டின் நிலைமையை அறிந்து கொண்டு போய்ச் சொல்லியிருக்கிறார். ஆனால் குற்ற உணர்வினாலும், யாரையும் எதிர்கொள்ள முடியாத மனச்சங்கடத்தாலும் சுந்தாச்சு ஊருக்கு வருவதைத் தவிர்த்திருக்கிறார். அதிலிருந்து அவ்வப்போது மதுரைப்பக்கம் வரும் பாகன்களின் மூலமாக இங்கே நடப்பவைகளை விசாரித்துவரச் சொல்லி அறிந்து கொண்டு இருந்திருக்கிறார். தங்கையின் கல்யாணம் நிச்சயமானது தெரிந்ததும், தன் சம்பாத்தியத்தையெல்லாம் சேர்த்து எடுத்துக் கொண்டு வந்துள்ளார். இத்தனையும் சிறுசிறு விசும்பல்களுடன் குரல் தழுதழுக்க சொல்லிக்கொண்டிருந்தார். அவ்வளவு நேரமும் அவர் கை விரல்கள் பாச்சு சித்தப்பாவின் விரல்களைக் கோர்த்துப் பிடித்திருந்தது. அப்பா அவர் தோள் மேல் கைபோட்டு அணைத்தபடி பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். அப்பாவின் கண்களும் கலங்கி மூக்கு சிவந்திருந்தது. அம்மா என்ன சொல்வது என்று தெரியாமல் தயங்கியபடி அப்பாவின் தோளைத் தொட்டு பின்னால்நின்றாள். தெருப் பெரியவர்கள் மூன்றுபேர் நின்று அதிசயமாகப் பார்த்துக் கொண்டு இடையிடையே அவரைக் கேள்விகள் கேட்டபடி இருந்தனர். ராமன் சுந்தாச்சு சித்தப்பாவின் அருகில் உட்கார்ந்து அவர் கையில் இருந்த செப்புக்காப்பை நோண்டிக்கொண்டிருந்தான். அவர் அழுகையினூடே அவனைப் பார்த்து மெலிதாகச் சிரித்து, அவன் தலை முடியை நீவினார். அம்மா மெல்ல ராமனை இழுத்து அவளுடன் வைத்து இறுக்கிக் கொண்டாள்.
கூடத்தில் யாரோ இருட்டில் தடுமாறி பெரிய பித்தளைத் தாம்பாளத்தைத் தட்டிவிட அது கீழே உருண்டு அலையலையாக சத்தம் எழுப்பி ஓய்ந்தது. ரேழி அறையில் இருந்து சித்திப்பாட்டி மெல்ல பதுங்கி வெளியில் எட்டிப்பார்த்து, “என்னடிம்மா அது சத்தம்? ஒன்னும் ஆயிடலியே… தாயே.. மஹாமாயே எல்லாம் நல்லபடியா நடக்கணும்மா” என்றபடியே தடுமாறிக்கொண்டு வெளியில் வந்தாள். அதுவரை விசும்பிக் கொண்டிருந்த பாச்சு சித்தப்பா அடக்க முடியாமல், “அம்மா..” என்று பெருங்குரல் எடுத்து அழுதார். சித்திப்பாட்டி ஒன்றும் புரியாதவளாக, “என்னடா பாச்சு… ஒன்னும் தப்பிதமா ஆயிடலியே..?”என்றபடி குரல் நடுங்க பதறினாள். அப்பா பாச்சு சித்தப்பாவை அமைதிப்படுத்த முயலும் போதே சட்டென்று சுந்தாச்சு சித்தப்பா, “அம்மா..” என்று தொண்டை கரகரக்க கதறியபடி எழுந்து ஓடிச் சென்று சித்திப்பாட்டி காலில் விழுந்தார்.
அப்பா எழுந்து சித்திப்பாட்டியைப் பிடித்துக் கொண்டு, “சித்தி நல்ல சமாச்சாரம் தான். அமைதியா கேளுங்கோ… பகவான் உங்க பிரார்த்தனையை கேட்டுட்டான், நம்ம சுந்தாச்சு வந்திருக்கான்” என்றார். ஒருநிமிடம் திக்பிரமை பிடித்தவள் போல் இருந்துவிட்டு அடுத்த நொடி, “சுந்தாச்சு… என் அப்பா…” என்று பாட்டியும் குழறி அழ ஆரம்பித்தாள். எழுந்து ஒரு கணம் தயங்கி அப்படியே தன் அம்மாவை இறுகக் கட்டிக்கொண்டார் சுந்தாச்சு. ராமனின் அம்மா ஒன்றும் செய்யத் தோணாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சுந்தாச்சு தன் கையில் வைத்திருந்த சிறிய பையைத் திறந்து இரண்டு மூன்று கட்டு பணமும், இரண்டு தங்க வளையல்களும்,ஒரு தங்கச் சங்கிலியையும் எடுத்து சித்திப்பாட்டியின் கையில் கொடுத்தார். சித்திப்பாட்டி அவரை மீண்டும் கட்டிப்பிடித்துக் கொண்டு கிறீச்சிட்டு அழ ஆரம்பித்தாள். அப்பா யாரைச் சமாதானம் செய்வதென்று தெரியாமல் மாற்றி மாற்று ஒவ்வொருவரையாக தட்டி “சத்தம் போடாதேள்..” என்றார். அம்மா சித்திப்பாட்டியின் தோளை மெதுவாகக் குலுக்கி, “அம்மா சந்தோஷமா இருங்கோ..அழாதேள்.. மாப்ளையாத்துக்காரா முழுச்சுண்டுடப் போறா” என்றாள்.
அப்போது தான் அனைவருக்கும் நினைவிற்கு வந்தது. பாச்சு சித்தப்பா அப்படியே சத்தத்தை மென்று முழுங்கினார். சித்திப்பாட்டி சத்தத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மகனைக் கட்டிக் கொண்டே கண்ணீரைக் கொட்டினாள். கூடத்தில் இருந்து மேலும் சில உறவுக்காரர்கள் வாசலுக்கு வந்துவிட்டிருந்தனர். அனைவருக்கும் நடப்பது என்ன என்று புரிய சில நிமிடங்கள் பிடித்தது.
elephant6
“அடாடாடாடா… மனுஷாள நிம்மதியாத் தூங்க விடாம ப்ராணனை வாங்கறேளே… ஒரே அமக்களமான்னா இருக்கு.. கேக்கறதுக்கு ஆள் இல்லைன்னு நினைச்சுண்டு இருக்கேளா…” கொல்லைப்புறத்தில் இருந்து வெண்கலப்பானையில் இரும்புக்கரண்டி விழுந்தது போல சத்தம் கிழித்துக் கொண்டு வந்தது. பாச்சு சித்தப்பா அடித்தொண்டையில் கெஞ்சும் குரலில் படபடப்பாக, “அம்மா.. அம்மா… சத்தம் போடாதம்மா.. அந்த சம்பந்தியாத்து பிராமணன் முழிச்சுண்டுடுத்தும்மா.. சுந்தாச்சு யானைக்காராளோட போன விஷயம் நாம சொல்லவே இல்லம்மா… இப்போ தெரிஞ்சதுன்னா அந்தக் கெழம் என்ன பண்ணும்னே தெரியாதும்மா.. கல்யாணத்த நிறுத்தினாலும் நிறுத்திப்டும்மா… சொல்றதக்கேளு, தயவுபண்ணி அழாத. கண்ணைத் துடைச்சிக்கோ. இல்லேனா எல்லாமே கெட்டுப் போயிடும்மா.. சாரதா பாவம்மா.. அழறத நிப்பாட்டும்மா” தூங்குபவரை எழுப்புவது போல பிடித்து உலுக்கினார்..
அங்கவஸ்திரத்தை தலையில் உருமாலாகக் கட்டி, பஞ்சகச்சத்தை அவிழ்த்து வேட்டியை இடுப்பில் டப்பா கட்டாகச் சுற்றி, காலர் இல்லாத பழைய அரைக்கைச் சட்டை ஒன்றை அணிதுகொண்டு, தூக்கம் கலைந்த வெறியில் கண்ணாடியின் தடித்த லென்ஸ் வழியே முழிகளை உருட்டிக் கொண்டு, டார்ச் வெளிச்சத்தில் வந்து சேர்ந்தார் பெரியவர். “என்ன ஓய் அக்ரமம் பண்றீர்… வயசானவாள சித்த நாழி கண்ணசர விடாம பொண்ணாத்துக்காராளா சேர்ந்துண்டு ஜாமக்கோடாங்கி மாதிரி கத்திக் கூப்பாடு போடறேள்…” கத்திக்கொண்டெ இருந்தவர் சட்டென்று நிறுத்தி ஒரு நிமிடம் என்னெவென்று புரியாமல் அங்கே திரண்டிருந்த சிறு கும்பலைப் பார்த்தார். சித்திப்பாட்டியின் கையில் இருந்த பணத்தையும், நகைகளையும் பார்த்தார். எதிரில் இருந்த கைலி அணிந்த -பிராமணரல்லாத தோற்றத்திலிருந்த ஆளை மேல் கீழாக நோட்டம் விட்டார். அதிருப்தியுடன் தன் குரலில் ஆரம்பித்தார், “என்ன நடக்கறது இங்க? அர்த்தராத்ரில பணத்தையும் நகையையும் வச்சிண்டு என்ன பண்றேள் எல்லாரும்? யார்டா நீ. நோக்கு இவா கூட என்ன ஜோலி? இப்போ நேக்கு எல்லாம் தெரிஞ்சாகணும். கேக்கறதுக்கு ஆள் இல்லைன்னு நெனைச்சேளா?” சித்திப்பாட்டியை சுற்றிக்கொண்டே டார்ச்சுடன் சுந்தாச்சு அருகே வந்தார். பாச்சு சித்தப்பா “அவ்வளவுதான்” என்கிற தொணியில் செயலற்று நின்றிருந்தார்.
சித்திப்பாட்டி ஒரிரு முறை செருமினாள். பெரியவர் திரும்பி பாட்டியைப் பார்த்தார். பாட்டி கண்ணை மூடிக்கொண்டே மயங்கி அம்மா மீது சரிந்தாள். பெரியவர், “என்னாச்சு, போயிடுத்தா?” என்று கேட்டபடியே பாட்டியை நோக்கி டார்ச்சைத் திருப்பிக் கொண்டு ஓடினார். அப்பா சுதாரித்துக் கொண்டு சட்டென்று பாட்டி மடியில் கிடந்த நகை மற்றும் பணத்தை அள்ளி எடுத்து பெரியவர் கையில் திணித்தார், “வாசல்ல எதேர்ச்சையா யானை வந்தது. அம்மா நகை, பணத்தையெல்லாம் விக்னேஸ்வரர்கிட்ட ஆசீர்வாதம் பண்ணி வாங்கிக்கனும்னு சொன்னா” பேச்சினூடே நகைகளுக்கு மத்தியில் இரண்டு நீண்ட யானைவால்முடி இருப்பதைக் கவனித்தார், அதை எடுத்து, “திடீர்னு தோணித்து…அப்படியே மாப்ளைக்கு யானைவால் மோதிரம் ஒன்னு பண்ணிப்போட்டுடலாம்னு.. அதான் யானைப்பாகனை கூப்பிட்டு விலை பேசிண்டிருந்தோம். மாப்ளையோட தாய்மாமாவுக்கும் வாங்கனும்னு அம்மா சொன்னா, சரின்னு சேர்த்து ரெண்டா வங்கிட்டோம்” ஒருமாதிரி சிரித்துக்கொண்டே பவ்யமாக அவர் கையில் கொடுத்தபடியே மெல்ல வீட்டிற்குள் நகர்த்திச் சென்றார். பெரியவர் டார்ச் அடித்துப் பார்த்தார். பெருமையாகச் சிரித்தார். “பேஷ்… பேஷ்… ஆனாலும் மஸ்தகத்திலேர்ந்து முடி வெட்டித் தரச் சொல்லி கேட்டிருக்கனும். மஸ்தக ரோமம் தான் ரொம்ப விசேஷம். அதுக்குத்தான் என்னைக் கூப்பிட்டு யோஜனை கேக்கணுங்கறது…” அப்பாவுடன் மெல்ல வீட்டிற்குள் செல்கையில் அவர் சொல்லிக்கொண்டே நடப்பது கேட்டது.
ராமன் வாசலைப் பார்த்தான். நகரும் பழுப்பு மஞ்சள் பரப்பாக யானை நிதானமாக பின் பக்கத்தை அசைந்த படிவீட்டிலிருந்து மெல்ல விலகி நடந்து சென்றது. பழுப்பு நிறம் கூடிக்கூடி வந்து கறுப்பானது. யானை இருட்டுக்குள் கரைய, அந்தரத்தில் சுந்தாச்சு சித்தப்பாவின் வெள்ளைச் சட்டை மட்டும் சில நிமிடம் தெரிந்தது. அது மறைந்து சில நிமிடம் எங்கோ ஆழத்தில் மணிச்சத்தம் மட்டும் மெலிதாகக் கேட்டது. அதுவும் தேய்ந்து கரைந்த பின்னர் அங்கே கருமை மட்டுமே மிச்சம் இருந்தது.
Ooo0ooO
-பிரகாஷ் சங்கரன்

(நன்றி: சொல்வனம், இதழ் 84ல் வெளியானது

Friday, April 12, 2013

பௌத்தமும் வேதாந்தமும்


(ஆசான் ஜெயமோகன் எழுதிய அம்பேதகரின் தம்மம் என்னும் அற்புதமான நீள்கட்டுரை தொடர்பாக நான் அவருக்கு எழுதிய கடிதமும் அவரது பதிலும்)

அன்புள்ள ஜெ,
அம்பேத்கரின் தம்மம் கட்டுரை அற்புதமாக இருந்தது. பௌத்த தரிசனத்தை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள உதவியது. சரளமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பல சொற்களை நின்று கவனிக்க வைத்தது. இந்தக் கட்டுரையை ஒரே வீச்சில் படித்து விட முடியவில்லை. நிறுத்தி நிறுத்தி, படித்த வரிகளையே மீண்டும் படித்து மனதில் இருத்திக் கொண்டு தான் தொடர்ந்து போக முடிந்தது. கட்டுரையின் பொருள் செறிவு ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணம், கட்டுரை பேசும் முக்கியமான சில விஷயங்களைப் பற்றி ஏற்கனவே உங்கள் தளத்திலும் (முக்கியமாக கீதை உரை), வேறு நூல்களிலும் படித்துச், சிந்தித்து வைத்திருந்த கருத்துக்கள் இடைமறித்ததால்.
குறிப்பாக “தர்மம்” என்னும் சொல் குறிக்கும் பொருள் பற்றி விளக்கங்கள்.
//பௌத்தம் பேசும் தம்மம் என்பது என்ன? நான் முன்னர் சொன்ன அத்தனை நிலைகளிலும் இருக்கும் ஒன்று. என்னுள் இருந்து என்னை உருவாக்கும் நியதி. இவையனைத்தையும் ஆளும் நெறி. காலத்தையும் வெளியையும் உருவாக்கி நிறுத்தும் விதி. அனைத்துமாக ஆகி நிற்கும் பிரபஞ்சமெனும் ஒழுங்கு. அதுவே பௌத்த தம்மம். (அம்பேத்கரின் தம்மம்-பகுதி-1)//
ஆம், வேதங்களின் ஆப்தவாக்கியங்கள் போல, பௌத்த தரிசனம் ‘தர்மம்’ என்பதை தனது ஆப்த வாக்கியம் போலவே – தர்மம் சரணம் கச்சாமி- என முக்கியத்துப்படுத்தி முன்னிறுத்தியிருக்கிறது.
பௌத்தம் பேசும் இந்த மகாதர்மத்திற்கான அடிப்படை இந்து மதம்/வேதாந்த மரபிலும் ஏற்கனவே இருந்த ஒன்றாகவே நான் கருதுகிறேன். குறிப்பாக உங்கள் கீதை உரையைப் படித்ததில் இருந்து.
//கீதையின் முதல் சொல்லே ‘தர்மஷேத்ரே’ என்று இருக்கிறது. ”அறநிலமாம் குருநிலத்தில்” என்று தொடங்கும் கீதை குருஷேத்ர களத்தை அறம் திகழ் மண்ணாகக் குறிப்பிடுகிறது. அது உண்மையா என்ன? அது அறத்திற்கும் அதற்கு எதிரான சக்திகளுக்கும் இடையேயான போர் என்று கூறுவதுகூட சற்று மிகைதான். பாண்டவர் தரப்பிலும் அறமீறல்கள் பல உள்ளன. அப்படி யோசிக்கும்போது இங்கு கூறப்படும் அறம் என்பது சாமானிய தளத்தில், நீதி என்ற பொருளில், நாம் குறிப்பிடும் மானுட அறம் அல்ல என்றே கொள்ள வேண்டும். பிரபஞ்சப் பேரியக்கத்தின் நியதியாக உள்ள ‘மகாதர்மம்’தான் இங்கே அறம் என்று கூறப்பட்டது. அதை மானுடம் சார்ந்த நன்மை தீமைகள், சரிதவறுகள் மூலம் அளக்க இயலாது. அது எளிய தர்க்க நியாயங்களுக்கு அப்பாற்பட்டது. ‘பிரபஞ்ச நியதியின் களமேயான குருஷேத்ர ரணபூமியில்’ என்று கீதை தொடங்குகிறது என்று வாசிக்கலாம். (கீதை:1 மகத்தான மனத்தடுமாற்றம்)//
மகாபாரதத்தின் குருக்ஷேத்ர யுத்தம் – தர்ம யுத்தம் என்றே அழைக்கப்படுகிறது. மகாதர்மத்தின் ஒரு பகுதியாக நடந்த யுத்தம், அதில் அர்ஜுனன் உள்ளிட்டோரின் சுதர்மமும் அடங்கும். குருமார்களையும், சொந்தங்களையும் கொன்றாவது நிலை நிறுத்தியாக வேண்டிய மகாதர்மத்தின் பொருட்டே ஒவ்வொருவரின் சுதர்மமும் செயல் பெறுகிறது. இந்த தர்ம யுத்தத்தில், தர்மம் என்பது ‘இவை அனைத்தையும் ஆளும் நெறி’ என்று பொருள் கொள்ளப்படும் போதே, அதனுள் ஒவ்வொருவரின் சுதர்மமும் அடங்குவதைப் புரிந்து கொள்ளமுடிகிறது.
அதே பாரதத்திலேயே பீஷ்மர் (பீஷ்மோபதேசம் ) சொல்கிறார், “தர்மோ ரக்ஷதி ரக்ஷித: தர்மமேவ ஹதோ ஹந்தி” – தர்மத்தைக் காப்பவனை தர்மம் காக்கும், தர்மத்தை அழிப்பவனை அதுவே அழிக்கும். தன்னறம் அல்லது சாமான்ய தளத்தில் கூறும் மானுட அறத்தை காக்காததினால் ஒருவன் அழிவான் என்பதை விட இந்த வாக்கியம் முழுமையான பொருளைத் தருவது “இந்தப் பிரபஞ்சம் உட்பட இங்குள்ள அனைத்தையும் நிலைநிறுத்தியிருக்கும் நியதி காக்கப்பட்டால் அதுவே அதன் அங்கமான நம்மையும் காத்துக் கொள்வதாகும், அதை அழித்தால் அது நமது அழிவாகத் தான் இருக்கும்” என்று பொருள் கொள்ளும் பொழுது தான்.
பௌத்த தரிசனத்தின் சில விஷயங்களை என்னால் வேதாந்த தரிசனத்திலிருந்து மாறுபட்டிருப்பதாக நினைக்க முடியவில்லை, அதன் இன்னொரு கோணமாகத் தான் எனக்குத் தெரிகிறது.
உதாரனமாக,
//நிர்வாணம் என்பது அனைத்தையும் களைந்துவிடல் அல்ல என்று அம்பேத்கர் சொல்கிறார். நிர்வாணம் என்பது அறிவின் நெருப்பில் நம்மைக் களைந்து எரிப்பது மூலம் அடையப்பெறுவது. ஒரு தூய்மையாக்கல் அது. ஆனால் அந்நெருப்பில் அனைத்தையும் எரிப்பதைப்பற்றி புத்தர் பேசவில்லை. அதில் திருஷ்ணையை- ஆசைகளை – எரிப்பதைப்பற்றியே பேசுகிறார். ஆம், அனைத்தையும் துறந்து அமைவதல்ல நிர்வாணம். அது இங்கே இந்த வாழ்க்கையில் ஆசைகள் மீதான அறிவின் கட்டுப்பாட்டுடன் வாழும் முழுமையான வாழ்க்கை மட்டுமே (அம்பேத்கரின் தம்மம், பகுதி-3)//
என்னும் பௌத்த சிந்தனை, பகவத் கீதையின் நாலாம் அத்தியாயமான ஞான கர்ம சந்யாச யோகம் கூறும் ‘செயலின் பலன் மீதான விருப்பத்தைத் துறந்த (கர்ம பல சந்யாசம்) நிலையை’ப் போன்று தான் எனக்குத் தோன்றுகிறது. குறிப்பாக இந்த அத்யாயத்தின் 14வது ஸ்லோகத்தில் இருந்து கடைசியான 42வது ஸ்லோகம் வரை, அதிலும் முக்கியமாக, ” எவனுடைய செய்கைத் தொடக்கங்களெல்லாம் விருப்ப நினைவு தவிர்ந்தனவோ, அவனுடைய செயல்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவாம்; அவனை ஞானிகள் அறிவுடையோனென்கிறார்கள் (கீதை, 4:19)” என்னும் ஸ்லோகம் மேலே சொன்ன பௌத்த சிந்தனைக்கு மிகவும் நெருங்கியது.
மேலும், //பௌத்தம் சொல்லும் ஆசைகளைத் துறத்தில் என்பது இயல்பான உலகியலாசையை நிராகரித்தல் அல்ல. பேராசையைத் துறத்தல் மட்டுமே. ஏனென்றால் பேராசை அறிவுத்தேடலுக்கு எதிரானது. அறிவு அளிக்கும் விடுதலையை மறுப்பது. பௌத்தமோ அறிவின்விளைவான விடுதலையைப்பற்றிப்பேசும் ஒரு ஞானப்பாதை (அம்பேத்கரின் தம்மம், பகுதி-4) என்னும் பௌத்த சிந்தனையை, உங்கள் கீதை உரையில்
 //பற்றில்லாமல் பலன் கருதாமல் செயலை ஏன் செய்ய வேண்டும் என்பதற்கான காரணம் கீதையிலேயே தொடர்ந்து மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. வெற்றியிலும் தோல்வியிலும் நிலை குலையாத சமநிலைக்காகவே. இங்கே வரும் ‘விருப்பத்தால் கறைபடிந்த அறிவு’ என்ற சொல்லாட்சி தத்துவார்த்தமாகச் சிந்திக்கும் பழக்கம் உள்ளவர்களை வெகு தொலைவுக்கு இட்டுச் செல்லக் கூடியதாகும். வெறுப்பால் கறைபடிந்த அறிவு இழிந்தது. ஏனெனில் அது ஒரம் சார்ந்தது. நடுநிலை இல்லாததனாலேயே அது அதிதமான உணர்ச்சி வேகத்தையும் தீவிரத்தையும் கொண்டிருக்கும். அது அழிவுச்சக்தி. இதை ஒவ்வொருவரும் அறிவர்.( செயலெனும் யோகம் சாங்கிய யோகம் 4) // 
   -என்று நீங்கள் விளக்கியிருந்ததுடன் தொடர்புபடுத்திப் புரிந்துகொள்கிறேன். 
கைவல்ய உபநிஷதம், “ந கர்மணா, ந ப்ரஜயா, தனே ந, த்யாகேனைகே அம்ருதத்வமானசு:” என்கிறது- “கர்மங்களால் அல்ல, மக்கட்பேறால் அல்ல, செல்வத்தினால் அல்ல, தியாகத்தாலேயே அமரத்துவம் எய்தப்படுகிறது” -இதுவும் கீதையும், பௌத்தமும் சொல்லும் அதே மனநிலையைத் தான் பேசுகிறது.
சூன்யவாதம் குறித்தும் மிகவும் புதிதான ஒரு கோணத்தில் (சூனிய வாதம் வெறுமையைச் சொல்வதல்ல, அறியமுடியாமையைச் சொல்வது) இந்தக் கட்டுரையின் மூலம் அறிந்து கொண்டேன் (இருந்தாலும் என் மனதின் இயல்பிற்குப் வேதாந்தத்தின் பூரணத்துவமே நெருக்கமாக இருக்கிறது).
மொத்தத்தில் இந்தக் கட்டுரைத் தொடர், என்னளவில், என்னை மிகவும் யோசிக்க வைத்த, ஒவ்வொரு சொல்லிலும் என் கற்பிதங்களைப் புரட்டிப் போட்ட, நான் வாசித்த மிக முக்கியமான கட்டுரை. அதற்காக மிக்க நன்றிகள் ஜெ.
இந்தக் கடிதத்தை எழுதும் முன் ஒருவாரத்திற்கும் மேலாக எழுதுவதா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்தேன். இந்து/வேதாந்த மரபில் இருப்பதாக என் மனதில் படுவதைச் சொல்ல வேண்டும் ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் இந்திய ஞான மரபில் பௌத்த தரிசனத்தின் தாக்கத்தையும், பங்களிப்பையும் குறைத்துச் சொல்லிவிடக் கூடாது என்ற எண்ணமே காரணம். எனக்கு புத்தர் மீது பெரும் பக்தி உண்டு. நான் சங்கர வேதாந்த மரபைச் சேர்ந்தவன். சங்கரரே பௌத்தம், மீமாம்ஸை, ஸாங்கியம், நியாயம் எல்லாவற்றையும் ஒரு நிலையில் முரண்பட்டு இன்னொரு நிலையில் ஏற்றுக்கொண்டு, இவற்றின் சிறந்த அம்சங்களையெல்லாம் வேதாந்த ஞானத்துடன் தொகுத்துக் கொடுத்தவர் தானே?
கடைசியாக சுவாமி விவேகனந்தரின் வார்த்தைகளுடன் இந்தக் கடித்தை முடித்துக் கொள்கிறேன். “சாக்கிய முனி ஹிந்துமதத்தை அழிக்க வந்தவரல்ல, அவரே அதை முழுமை செய்தவரும், அதன் தர்க்கபூர்வமான நிறைவும், வளர்ச்சியும் ஆவார். இந்து மதமும், பௌத்தமும் ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்க முடியாது. ஹிந்து மதத்தின் அற்புதமான மெய்ஞான மூளையும், பௌத்தத்தின் மனிதாபிமானமும் கருணையும் மிக்க இதயமும் பிரிந்ததனால் தான் இந்தியா வீழ்ந்தது. இவை இரண்டும் மீண்டும் ஒன்றிணையட்டும்”
என் புரிதல்களில் பிழை இருந்தால் பொறுத்துக் கொண்டு, அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
நன்றி,
அன்புடன்
பிரகாஷ் சங்கரன்.
(பி.கு. – ஒரு சிறிய தகவல்- வேதங்களின் முதல் பாகமாகிய கர்மகாண்டத்தின் ஸம்ஹிதையில் சொல்லப்பட்டுள்ள கர்மங்களை விளக்கும் ‘பிராம்மணங்கள்’ என்னும் விளக்க நூல்களை அடியொற்றி எழுந்ததால் தான் பூர்வமீமாம்ஸை ‘பிராம்மண மதம்” என்றழைக்கப்படுகிறது. அது யாகங்கள் முதலான சடங்குகளைச் சொல்வதால் பிராமணர் என இன்று அழைக்கப்படும் சாதியினருடைய மதம் என்று பொதுவில் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது).


அன்புள்ள பிரகாஷ்,
இந்தியாவின் தத்துவ- ஞான விவாதமென்பது ஓர் ஒற்றைப்பெரும்பரப்பு. அதிலுள்ள எல்லா கருதுகோள்களும் தொடர்ந்து நிகழ்ந்த உரையாடல் மூலம் கொண்டும் கொடுத்தும் வளர்ந்துவந்தவை. ஆகவே பொது அம்சங்களை தேடிப்பார்க்க ஆரம்பித்தால் வந்துகொண்டே இருக்கும்.
நம்முடைய நோக்கம் என்ன என்பதே பார்வையை தீர்மானிக்கவேண்டும். உதாரணமாக ஒருவர் இந்தியாவின் சிந்தனை மரபுகளுக்குள் எந்த விதமான உறவும் இல்லை, அவை ஒன்றையொன்று கொல்லத்துடித்தவை என்று சொன்னாரென்றால் நாம் அவற்றுக்குள் உள்ள ஒற்றுமையைச் சுட்டிக்காட்டுகிறோம். அதேசமயம் ஒவ்வொன்றையும் அவற்றின் தனித்தன்மையுடன் அறிய விரும்பினோமென்றால் வேறுபாடுகளை கவனப்படுத்துகிறோம்
நாராயணகுருவிடம் இதைக் காணலாம். கேரளத்தின் ஆசாரவாதிகள் வேதாந்தத்தை ஆசாரவாதம் நோக்கி கொண்டுசென்று அங்கே அதை முளையடித்துக் கட்டியிருந்த காலகட்டத்தில் குரு வேதாந்தத்தை பௌத்தம் நோக்கி நகர்த்தினார். குருவின் ஆடை, அவருக்கு வைக்கப்பட்டிருக்கும் சிலை, அவர்களின் கொடி உள்ளிட்ட அனைத்திலும் உள்ள பௌத்த செல்வாக்கு வெளிப்படையானது. வேதாந்தத்துக்கும் பௌத்ததுக்கும் உள்ள பொதுத்தன்மைகளை அதிகமாக குரு முன்வைத்தார். அவரது வெதாந்தநூல்களின் வாசிப்பு அந்த இயல்பு கொன்டது
ஆனால் வேதாந்தமும் பௌத்தமும் தத்துவ அணுகுமுறையிலும் மையத்தரிசனத்திலும் நுட்பமான வேறுபாடுகள் கொன்டவை. அந்தவேறுபாடுதான் அவற்றை இருவேறு தத்துவக்கட்டுமானங்களாக நிலைநிறுத்துகிறது. அம்பேத்கரின் தம்மம் கட்டுரையில் அந்த வேறுபாடுகளை நான் சுட்டிக்காட்டியபடியே செல்கிறேன். அவை இரண்டும் பயன்படுத்தும் கலைச்சொற்கள் அனேகமாகக ஒன்றே. ஆனால் அவற்றுக்கிடையே அழுத்தமான ஆனால் மிக மெல்லிய பொருள் வேறுபாடு உண்டு. அந்த வேறுபாட்டை கவனித்தாலொழிய அவற்றை சரியாகப்புரிந்துகொள்ள முடியாது
உதாரணமாக தர்மம் என்ற சொல். வேதாந்தமும் பிரபஞ்சதர்மம் பற்றிப் பேசுகிறது. ஆனால் அது வேதாந்த நோக்கில் மகாபிரம்மத்தின் ஒரு லீலை. பிரம்மத்தின் ஒரு வெளிப்பாடு. பௌத்தம் மகாதர்மம் பற்றிப்பேசுகிறது. ஆனால் அங்கே அதை மீறிய ‘சத்’ஏதும் இல்லை. மகாதம்மம் என்பது மட்டுமே முதல்முடிவானது. அது எதன் லீலையும் அல்ல. அது நிகழ்வதனால் அது இருக்கிறது.
இப்படிச் சொல்லலாம். பம்பரம் சுழல்கிறது. அப்போது ஒரு மையம் உருவாகிறது. அது சுழல்வதனால் அந்த மையம் உருவாகிறது. சுழற்ச்சியின் ஆதாரவிதியே அந்த மையம். அவ்வளவுதான். நாம் சுழற்சியைப்பார்க்கிறோம். ஆகவே நமக்கு மையம் என்ற அனுபவம் உள்ளது. மற்றபடி அங்கே மையமென ஒன்றுண்டா என்பதெல்லாம் நம் அறிதலுக்கு அப்பாற்பட்டவை- இது பௌத்தம். சுழற்சியின் மையம் என்பது பம்பரத்தின் ஆதாரமான அமைப்பு, சுழற்சியை நிகழ்த்துவதே அதுதான் – இது வேதாந்தம். இருவேறு தரிசனங்கள்
இவ்வாறு எல்லாவற்றிலும் வேறுபாடுண்டு. பௌத்தம் பொருளை நிராகரிப்பதில்லை. பொருண்மை என்ர நிகழ்வாக அது பொருளை அணுகுகிறது என்று சொல்லலாம். இகம் அதைப்பொறுத்தவரை பொருள்வயமானதே. ஆனால் வேதாந்தம் பிரம்ம சத்யம் ஜகன் மித்யை என உணரக்கூடியது. பொருள்வய பிரபஞ்சமென்பது வேதாந்த நோக்கில் பிரம்மம் அளிக்கும் மயக்கநிலைதோற்றம் மட்டுமே.
ஆனால் வேதாந்தத்துக்கும் பௌத்ததுக்கும் நடுவே மிகச்சிறந்த ஓர் ஒருமையை நாம் கண்டடையவும் முடியும். பிரம்மம் என்பதை சத் என்றல்லாமல் தத் என்று புரிந்துகொண்டால் அது பௌத்ததை அடைந்துவிடுகிறது என்று நாராயனகுரு சொல்லியிருக்கிறார். நடராஜ குருவும் நித்ய சைதன்ய யதியும் அதை விரிவாகவே விளக்கியிருக்கிறார்கள். விவேகானந்தர் முதலிய எல்லா நவீன வேதாந்திகளிலும் அந்த சமன்வய நோக்கை நாம் காணமுடியும்
நாராயணகுரு பௌத்தத்துக்கும் வேதாந்தத்துக்கும் நடுவே ஒரு சமரசவேதாந்தத்தை உருவாக்கியவர். வேதாந்தம் கயிற்றரவு என்கிறது. அது கயிறு என நாம் தெளியும்போது அங்கே பாம்பு இல்லை. ஆனால் நாராயணகுரு மலரும் மாலையும் என்கிறார். மலரைப்பார்க்கையில் மாலை இல்லை. மாலையைப் பார்க்கையில் மலர் தெரிவதில்லை, ஆனால் இருக்கத்தான் செய்கிறது
இப்படிச் சொல்கிறேன். வேதாந்தம் பௌத்தம் சமணம் போன்றவற்றை கற்கையில் அவற்றுக்கிடையேயான வேறுபாடுகளை கவனித்து கற்பதே தேவையானது. ஆனால் நம் அகத்தில் இறுதியில் ஓர் ஒருங்கிணைவுநோக்கு உருவாகி வரவேண்டும் — சமன்வய நோக்கு
கவனிக்கவும், கடைசியில்தான் அது உருவாகவேண்டும்
ஜெ