Wednesday, December 7, 2011

ஃப்ளோரன்ஸ் - ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தொட்டில் - (பகுதி 2)


பெர்சீயஸின் மெடூசா வதம்

 

கிரேக்க தொண்ம நாயகன் பெர்சீயஸ்பாம்புக் கூந்தல் கொண்டமக்களைக் கல்லாக மாற்றும் அரக்கி மெடூசாவின் தலையை அறுத்துமுகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் கட்டுப்படுத்திக் கொண்டு நிற்கும் காட்சி -பதினாறாம் நூற்றாண்டு ஃப்ளோரன்ஸ் சிற்பி பென்வெனுடோ செல்லினியின் படைப்பில் வெண்கலச் சிலையாக. இந்தச் சிலையை தொடர்ந்து 10 வருடம் செய்ய முயன்றுமுடியாமல் தோல்வியடைந்துஒருநாள் தன் வீட்டு சாமன்களையெல்லாம் எரி உலையில் போட்டு வெண்கலத்தை உருக்கி சிலையை வார்த்தபோதுஅதிசயமாக சிலை முழு உருப்பெற்றது. வலதுகாலில் மூன்று விரல்கள் மட்டும் பின்னால் சேர்க்கப்பட்டது

நாடும் நாட்டு மக்களும்
அதிகாலை ஃப்ளோரன்ஸ் 'சாண்டா மரியா நோவெல்லா' ரயில்நிலையத்தை வந்தடைந்த போது 5.30 மணி. வெளியேறி, வாடகைக் கார்களைத் தாண்டி ரோட்டில் இறங்கிய போது மெல்ல விடிந்து கொண்டிருந்தது. குளிர் அவ்வளவாக இல்லை. முன்னரே லாட்ஜைச் சென்றடையும் வழியை அச்சிட்டு கையில் வைத்திருந்தாலும், அதிகாலை மயக்கத்தில் முன்னால் பிரிந்து சென்ற நான்கு பெரிய சாலைகளில் எதில் செல்ல வேண்டுமென்பதில் குழப்பம் வந்தது. சரி, மக்களின் பொறுமை எப்படி என்று சோதித்துத் தெரிந்துகொள்ள வேண்டியது தான் என முடிவு செய்து, யாராவது சிக்குவார்களா என தேடினேன். தன் பெட்டிக் கடையை திறந்து, தினசரிகளை தொங்கவிட்டும், பொருட்களை எடுத்து வெளியில் வைத்து அடுக்கிக் கொண்டும் இருந்த பெரியவரிடம், ஹோட்டல் முகவரியைக் காண்பித்து உலகப் பொது மொழியில் (சைகை!) கேட்டேன். பொறுமையாக வழி சொன்னார் -இத்தாலியனில்! ஒன்றும் புரியவில்லை, இருந்தாலும் என் சோதனையில் தேறிவிட்டமையால் அவரது திருப்திக்காக மண்டையை வெகு விவரமாக ஆட்டிவிட்டு, நன்றி சொல்லி, பெட்டியை உருட்டிக் கொண்டு நடந்தேன். சிறிய கருங்கற்கள் பதிக்கப்பட்ட நடைமேடையில் பெட்டியின் சக்கரம் ‘கடபுட’வென சத்தம் போட்டு காலை வேளையின் அமைதியைக் கெடுத்தது, இருந்தாலும் இறக்கமில்லாமல் தரதரவென இழுத்துச் சென்றேன். ஐம்பது மீட்டருக்குள் மறுபடியும் சந்தேகம், இம்முறை ஆளரவமில்லாத பனிபொழிந்து ஈரமான சாலையைப் பெருக்கும் பணிப்பெண் சிக்கினார். அவரிடம் தெருப்பெயரைப் புரியவைக்க பத்து நிமிடமும், ஹோட்டல் பெயரை புரியவைக்க பத்து நிமிடமும் முதலீடு செய்தேன். என் உச்சரிப்பு ஒரிஜினல் பெயருக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் இருந்திருக்கவேண்டும். ஆனால் நானே விட்டாலும், அவர் விடுவதாய் இல்லை. என்னை நிற்கச் சொல்லிவிட்டு அந்த அரை இருட்டில் இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் பத்தடி நடந்தார். அப்புறம் சைகை காட்டி விட்டு என்னைத் திரும்பிப் பார்க்கச்சொன்னார். எதிரே வலப்பக்கம் நான்கு கட்டிடம் தள்ளி விடுதி! வழிந்து சிரித்துக் கொண்டு போய்ச்சேர்ந்தேன், மக்கள் நல்லவர்கள் தான் போல என சமாதானம் செய்தபடி!

பொதுவாக சுற்றுலாத் தலங்களில் வசிப்பவர்கள் இந்தமாதிரி வழி சொல்லி அலுத்துப் போயிருப்பார்கள். இந்தியாவில் அதை பொழுதுபோக்காக எடுத்துக் கொண்டு, கூடவே கூட்டிச்சென்று விடும் நல்ல உள்ளங்கள் எல்லா ஊரிலும் உண்டு. ஆனால் ஐரோப்பாவின் நியூட்ரினோ வேக வாழ்க்கையில், அடுத்தவர்களுக்காகச் செலவழிக்கும் ஒவ்வொரு மைக்ரோ நொடியும் பேரிழப்பாகத் தோன்றுவது போலிருக்கும். யாரையும் கவனிக்காமல் ஓடிக்கொண்டே இருப்பார்கள்.

செக் குடியரசில் வெள்ளையர்களைத் தவிர வேறு இன, நிற மக்கள் மிகமிகக் குறைவு. தலைநகரான பிராகில் கூட அப்படித்தான். மங்கோலிய முக அமைப்புடைய வியட்நாமியர்களை விட்டால் வேறு நாட்டு மக்கள் அதிகம் பார்க்க முடியாது. ஐரோப்பவின் அனைத்து நாடுகளிலும், பெருநகரங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆப்பிரிக்கர்கள் பிராகில் விரல் விட்டு எண்ணிவிடும் அளவு தான் இருக்கிறார்கள். பிராகை விட்டு தள்ளி ஏதாவது சிறு நகரங்கள், கிராமப்புறங்களுக்குச் சென்றால் இந்திய நிறத்தைப் பார்த்த்தும் சட்டென்று ஒரு அதிர்ச்சி முகத்தில் பரவி, அந்தக்கனமே அதைச் சமாளிக்கும் மக்களைப் பார்த்திருக்கிறேன். அசட்டு வெள்ளையில் இருக்கும் வட இந்தியர்களை சமயங்களில் ரோமா என்றழைக்கப்படும் ஜிப்ஸி இன மக்களுடன் குழப்பிக் கொள்வார்கள். அவர்களுக்கு ஜிப்ஸிக்களைக் கண்டால் ஆகாது. 

ஆனால் ஃப்ளோரன்ஸில் ஆப்பிரிக்கர்களும், மத்தியக் கிழக்கு நாட்டினரும், பங்களாதேசிகளும், இலங்கைத் தமிழரும், சிங்களரும் நிறைய இருக்கிறார்கள். பங்களாதேசிகள் மற்றும் ஆப்பிரிக்கர்கள் எண்ணிக்கையில் அதிகம். பெரும்பாலும் தெருக்கடைகள், சிறு வியாபாரம், துப்புரவுப் பணி போன்றவற்றைச் செய்கிறார்கள். ஆகவே வெவ்வேறு நிற மக்களைப் பார்த்துப் பழகிப் போன கண்களுக்கு யாரும் வித்தியாசமாகப் படுவதில்லை. ஒரு நாள் ஊர் சுற்றி விட்டு இரவு பதினொன்னரை மணிக்கு ஒருவரிடம் வழி கேட்டேன். இளம்பெண், ஐந்தே முக்கால் அடி உயர டார்க் சாக்லேட் நிறத்தில் இருக்கும் என்னிடம் எந்தத் தயக்கமும் இல்லாமல் அருகில் வந்து பதில் சொன்னாள். உணவகங்கள், சுற்றுலாத் தளங்கள், பேருந்துகள் என எல்லா இடங்களிலும் அப்படியே.

நகரின் பெரும்பகுதியும், குறிப்பாக பழைய நகரப்பகுதி முழுவதும் கருங்கல்லாலான ரெனையசென்ஸ் பாணி கட்டிடங்களே இருக்கின்றன. கற்பாறைகளைச் செவ்வக வடிவத்தில் பெருங்கற்களாகச் செதுக்கி அதை ஒன்றின் மீது மற்றொன்று அடுக்கிக் கட்டப்படும் கட்டிடம். வெளிப்புறமிருந்து பார்க்க செவ்வக வடிவ கட்டம் கட்டமாகத் தெரியும். எல்லாம் திட்டமிட்டு கட்டியது போல ஒரே அமைப்பும், நான்கு மாடி உயரமுமாக இருக்கிறது. வண்ணம் பூசப்பட்ட கட்டிடங்களும் இருக்கின்றன. சிவப்பு, மஞ்சள், பச்சை என்று பளீர் வண்ணங்கள் இருந்தாலும் அவற்றின் மங்கலான 'ஷேட்'களே பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கட்டிடங்கள் ஒன்றையொன்று அடுத்து வரிசையாக நதியின் இருகரைகளிலும், தெருக்களிலும், சதுக்கங்களின் நாற்புறமும் சுற்றி நின்று கண்களுக்கு கலவையான அழகைக் காட்சிவைக்கின்றன. இதுவே பொதுவாக ஐரோப்பாவின் எந்த நகரத்துக்குப் போனாலும் பொதுவான அமைப்பு.

பிரதான சாலைகள் கூட அகலமில்லாமலும், குறுக்குச் சாலைகள் அதை விட நெருக்கலாகவும், சந்துகள் இரண்டு பேர் மட்டும் நடக்கக் கூடிய அளவிற்கு குறுகலாகவும் இருக்கிறது. இந்தக் குறுகிய சந்தில் நடக்கும் போது தலைக்கு மேலே பல கட்டிடங்கள் எதிர்ப்புறமுள்ள கட்டிடத்தை இனைத்துக் கட்டப்பட்டிருக்கிறது. கட்டிடங்களின் கூரை கேரள, தமிழ்நாட்டு பழைய வீடுகளைப் போல ஓடு வேயப்பட்டு, உள்புறம் மரச் சட்டங்களால் தாங்கப்பட்டுள்ளது. 










பெரும்பாலும் எல்லா பழைய சாலைகளும் செங்கல் அளவுள்ள கருங்கற்களால் பாவப்பட்டிருக்கிறது. அதில் சுற்றுலாப் பயணிகளை ஊர் சுற்றிக் காட்ட அழைத்துச் செல்லும் இரண்டு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டிகள் தடதடத்துப் போகும் போதும், குதிரைகளின் இரும்பு லாடம் அடித்த குளம்படியின் டக்டக் சத்தமும், குறிப்பாக அந்தி சாய்ந்த பிறகு, கண்ணை உறுத்தாத ஆரஞ்சு பொன் நிறத்து விளக்கொளியில் ஏதோ 16ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவில் இருப்பது போல ஒரு பிரமையை உண்டாக்குகிறது. கட்டிடங்கள் அவற்றின் பழமை மாறாமல் பேணப்படுகிறது. அந்தப் பழமை தான் இந்நகரின் சுற்றுலா மூலதனம். அதை பெயிண்ட் அடித்தும், இடித்துவிட்டு கண்ணாடி ஒட்டிய ஜிஜிகு உயர கட்டிடங்கள் கட்டியும் நாறடிக்கவில்லை.

தடுக்கி விழுந்தால் ஒரு மியூசியம் அல்லது பழைய சர்ச், இல்லாவிட்டால் காபி – பிஸா கடைகளில் தான் விழவேண்டும். நகரமெங்கும் காபி மணம் அடித்துக் கொண்டே இருக்கிறது. இத்தாலியர்களுக்கு காபி என்றால் நல்ல ஸ்ட்ராங்கான கடுங்காப்பி, சர்க்கரை இல்லாமல், ஒரு மடக்கு – அவ்வளவு தான். அந்த வாசனையும், கசப்பும் பல மணி நேரம் தங்கும். நான் 30மில்லி அளவுள்ள அந்தக் காப்பியைக் குடித்துவிட்டு கசப்பு தலைக்கேறி கபாலத்தை இடிக்க, சாமி வந்தது போல தலையைச் சிலுப்பிக் கொண்டு உட்கார்ந்துவிட்டேன். மூச்சு, நாடி, நரம்பெல்லாம் காபி ஓடுவது போலிருந்தது. நமக்கு 'ஆத்துல கலந்த பசுமாட்டுப் பாலில், டிகாஷன் சேர்த்து, வட்ட டபராவில் நுரைவர ஆற்றிக் குடிக்கும் நரசூஸ் காபி தான் பேஷ்..பேஷ்..' என நினைத்துக் கொண்டேன். வீட்டுக்கு வருபவர்களுக்கு இந்தக்காபி கொடுப்பது பாரம்பரியமான விருந்தோம்பல். மற்றபடி கப்புசினோ, பால் காபி (கஃபே லாட்டே), இத்யாதிகள் அவர்கள் விரும்புவதில்லை. அதெல்லாம் இத்தாலி பெயரைச் சொல்லி வெளியே பிரபலம். 

ஸ்பாகெட்டி, பாஸ்தா, பிஸா, லஸான்யா என்று இத்தாலிய உணவுகள் எல்லாம் உலகம் முழுதும் பரவி விட்டது. நம் மக்களிடம் அதைச் சாப்பிட்டால் விஞ்ஞானி ரேஞ்சுக்கு ஒரு தற்பெருமையும், அறியாதவர்களை ‘அபிஷ்டு’க்களாகப் பார்க்கும் தொணியும் வந்துவிட்டது. மைதா மாவு அப்பளம் போல இருக்கும் மெல்லிய வஸ்துவை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, ஒவ்வொரு அடுக்கின் நடுவிலும் கீரை, காய்கறி, சீஸ் வைத்து நிரப்பி வேக வைத்து, உப்பிலிட்ட ஆலிவ் காய்கள் மற்றும் தக்காளி சாஸுடன் பரிமாறப்படும் சைவ லஸான்யா பிடித்திருந்தது. பாகிஸ்தானிய மற்றும் இந்திய உணவகங்கள் இருந்தது, சரி தமிழ்வாணன் போல இட்லி தேடி அலைந்து தமிழ் மானம் காக்க மனமில்லாமல் பிஸா, பழம், காபியென்றே நான்கு நாளும் ஓட்டிவிட்டேன்.

தங்கநகைக் கடைப் பாலம்

இரவில்...
பதிணான்காம் நூற்றாண்டில் ஆரன் நதியின் குறுக்கே கட்டப்பட்ட இந்தக் கல்ப்பாலத்தில் (ponte vecchio - பழைய பாலம்) ஆரம்ப காலத்தில் முழுவதும் கசாப்புக் கடைகள் தான் இருந்திருக்கிறது, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மாறி சிறுவியாபாரம், வட்டிக்கடை என்று வளர்ந்து இப்போது வரிசையாக தங்க நகைக்கடைகள் தான் இருக்கின்றன.

பகலில்...
ஆங்கிலத்தின் Bankrupt என்ற வார்த்தை உருவாக இந்தப் பாலம் தான் காரணம். அந்தக்காலத்தில் வியாபாரிகள் தங்கள் கடைச்சரக்கை பரப்பி வைக்கும் மர மேசையை (banco), அவர்கள் தரவேண்டிய கடன் தொகையைத் தர முடியாமல் போனால், அரசாங்க ஆட்கள் அடித்து நொறுக்குவார்களாம் (rotto). மேசை உடைந்தால் வியாபாரம் செய்ய முடியாது. இந்தச் செயலே bankruptcy என்றானது. கடைகளின் பழைய தோற்றத்தை மாற்றாமல் வியாபாரம் செய்கிறார்கள். இன்று இந்தப் பாலம் ஃப்ளோரன்ஸின் முக்கியமான காட்சித்தலம்.



பகுதி -1                                                                                                                                   பகுதி -3





No comments:

Post a Comment

உங்கள் எண்ணங்கள், விமர்சனங்களைப் பகிர்ந்துகொள்ள...