Friday, September 20, 2013

தரிசனம்

சனிக்கிழமை (14.09.2013) கலந்துகொண்ட திரு தலாய் லாமா அவர்களின் உரையின் போது அரங்கில் அவர் இருந்த இடத்தில் இருந்து தள்ளித் தான் எனது இருக்கை. முன்வரிசையில் அமரும் நுழைவுச்சீட்டிற்கு அதிக பணம். அப்போது நினைத்துக்கொண்டேன், நெருக்கமாக அவரைப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைக்குமாவென்று. அங்கே இருந்த கூட்டம், கெடுபிடியில் அது சாத்தியமல்ல என சர்வநிச்சயமாகத் தெரிய, மனதைத் தேற்றிக்கொண்டேன்.

மறுநாள் செக் இணைய இதழ்களை பார்த்துகொண்டிருந்த போது, எதேர்ச்சையாக திபேத்தியர்களுடன் எனது சக ஆய்வாளர் (இந்தப் பெண்மனியைப் பற்றி என் செக் குடியரசு குறித்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்) ஒருவரும் தலாய் லாமாவுடன் இருக்கும் ஒரு குழுபுகைப்படம் பார்க்க நேர்ந்தது. தலாய் லாமா தங்கியிருக்கும் இடம் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. அவரிடம் எப்படி சந்திக்க முடிந்தது என்று கேட்டபோது, திபேத்தியர்களுடன் சென்று தலாய் லாமா தங்கியிருக்கும் இடத்தில் பார்த்ததாகத் தெரிவித்தார். இந்தப் பெண்மனிக்கு திபேத்திய மொழி தெரியும், ஆஸ்திரியாவில் இருந்து வந்திருந்த அவரது திபேத்திய நண்பர்களுக்கு பிராஹாவில் உதவிக்காகச் சென்றிருந்தார். என் ஆர்வத்தை அறிந்து, தலாய் லாமா தங்கியிருக்கும் ஹோட்டலின் பெயரைச் சொல்லி, அதிகாலை சென்று காத்திருந்தால் ஒருவேளை அவர் கிளம்பும் போது பார்க்க வாய்ப்பு கிடைக்கலாம் என்றார். 

இன்று தலாய் லாமா பிராஹாவில் இருக்கும் கடைசி நாள், மாலை கிளம்புகிறார். மூன்று நாட்களாகவே மிகுந்த கூட்டம், பத்திரிக்கையாளர்கள், மக்கள், திபேத்திய அகதிகள் என சந்திக்கக் காத்திருப்பவர்கள் அதிகம். எனவே சந்திப்பது சிரமம் என்றார். என்ன ஆனாலும் போய்ப் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தேன். மாணவர் விடுதியில் உள்ள இன்னொரு தமிழ்நாட்டு ஆய்வுமாணவர் லோகநாதன் என்பவரிடம் திட்டத்தைச் சொன்னேன், அவரும் ஆர்வத்துடன் வருவதாகச் சொன்னார்.

நேற்று இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை. அருகில் பார்க்க வாய்ப்புக் கிடைக்குமா, இல்லை பெரிய நட்சத்திர ஹோட்டல் அது, அனுமதிக்க மறுத்துவிடுவார்களோ என்று ஒரே குழப்பம். பேசவெல்லாம் வேண்டாம், அமைதியாகப் பார்க்கமட்டும் அனுமதி கிடைத்தால் கூடப்போதும் என்று வேண்டியபடி இருந்தேன். தூங்க முடியாமல் இணையதில் ஃபோட்டோகிராஃபி பக்கங்களில் மேய்ந்து கடைசியில் இரண்டரை மணிநேரம் உறங்கி, அதிகாலையிலேயே குளித்து கிளம்பினேன். கூட தமிழ் நண்பரும் வந்தார். காலை ஏழேகாலுக்கெல்லாம் தலாய்லாமா அவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலை அடைந்து வாசலில் காத்திருந்தோம்.

சிறிது நேரம் கழித்து என் ஆய்வாளர் தோழியும் வந்தார். அவர் ப்ரோட்டஸ்டண்ட் கிருஸ்துவர், இயேசுவைத் தவிர போப் உட்பட எந்த மனிதப் புனிதரையும் வழிபாட்டு மனநிலையில் வணங்க மாட்டேன் என்று சொன்னார். ஆனால் தலாய் லாமா மீது மரியாதை உண்டு. தலாய் லாமாவைச் சந்திக்கும் எனது மிகுந்த ஆர்வத்தினால் உதவும் பொருட்டு வந்திருந்தார். திபெத்திய வழக்கப்படி, தலாய் லாமாவைச் சந்திக்கும் போது மரியாதை நிமித்தமாக கையில் வைத்துக் கொள்ள வேண்டிய 'கதா' என்னும் வெண்பட்டு அங்கவஸ்திரங்கள் கொண்டுவந்திருந்தார். 

ஹோட்டலின் வரவேற்புப் பகுதியில் காத்திருந்தோம். வேறு யாரும் இல்லை. குழப்பமாக இருந்தது. ஹோட்டல் ஊழியர்கள் எந்தத் தகவலும் தர மறுத்துவிட்டார்கள். ஒருமணி நேரம் காத்திருந்தும் வேறு கூட்டமே வரவில்லை. பார்க்கமுடியாதோ என்று மறுபடியும் பயம். பார்த்தே ஆகவேண்டும் என்று உள்ளூர தனியாத ஆவல். ராத்திரி முழுவதும் அவரிடம் சொல்ல வேண்டிய வாக்கியத்தை கற்பனை செய்து உருப்போட்டு வைத்திருந்தேன். சரி, கொடுப்பினை இருந்தால் பார்க்கலாம் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு, வெளியில் சாதாரனமாகப் பேசிக்கொண்டிருந்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து ஒரு லாமா (மேடையில் கூடவே இருந்தவர்) வந்தார். அவரிடம் சென்று வணங்கி தலாய் லாமாவைச் சந்திக்க காத்திருப்பதைச் சொன்னேன். இந்தியாவா? என்று கேட்டார். மகிழ்ச்சியாகச் சிரித்துக்கொண்டே தாரளாமாகச் சந்திக்கலாம், பொறுங்கள் என்று சொன்னார். நிம்மதியானது மனம். சரியாக ஒன்பது மணிக்கு தலாய் லாமா வந்தார். எங்களைத் தவிர, தலாய் லாமாவின் காரியதரிசி, சில சிப்பந்திகள், ஹோட்டல் ஊழியர்கள், பாதுகாப்பு அதிகரிகள், வேறு ஓரிருவர் மட்டும் இருந்தனர். அனைவரும் வெள்ளையர்களாக இருந்த அந்த இடத்தில் நாங்கள் மட்டும் தனித்துத் தெரிந்தோம். குர்தாவும், நெற்றியில் குங்குமமுமாக கையில் வெண்பட்டு வைத்துக் கொண்டு நான். பக்கத்தில் நண்பர் ஒரு வெண்பட்டுடன்.

தலாய் லாமா மெல்ல நடந்து வரும் போதே எங்களைப் பார்த்துவிட்டார். புருவத்தை உயர்த்தி, சிரித்துக் கொண்டே நேராக எங்களை நோக்கி வந்தார். நான் மனப்பாடம் பண்ணி வைத்திருந்த வாக்கியம் மறந்துபோய்விட்டது. "நமஸ்தே ஹோலினெஸ்" என்றேன். "நமஸ்தே" என்று அவரும் சொன்னார்.  கைகூப்பியபடி சிரம் தாழ்த்தி வணங்கி, திக்கும் குரலில் "நாங்கள் இந்திய மாணவர்கள். இங்கே பி.எச்.டி படிக்கிறோம்" என்று சொன்னேன். மெல்லப் புண்ணகைத்தபடியே பக்கத்தில் வந்து கூப்பிய கைகளை எடுத்துப் பற்றிக் கொண்டார். வெதுவெதுப்பாக, மெண்மையாக இருந்தது அந்தப் பிடி. "குட்" என்றார். "என்ன துறையில் ஆய்வு செய்கிறீர்கள்?" என்று விசாரித்தார். சொன்னேன். ஒருவேளை பதற்றம் அல்லது பரவசம் காரணமாக என் குரல் கம்மியிருக்கக் கூடும். அவருக்குச் சரியாகப் புரியாததால் இரண்டு மூன்று முறை மீண்டும் கேட்டார். ஒருவாறு சமாளித்துச் சொன்னேன். சிரித்துக் கொண்டே "நல்லது" என்று என் கையில் வைத்திருந்த வெண்பட்டை வாங்கிக் கொண்டு திரும்பவும் என் கழுத்தில் அணிவித்தார். நான் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தக் கனத்தை மறக்கக்கூடாது என்று கவனமாக இருக்க முயன்றேன். என் ஒரு கையையும், கூட இருந்த  நண்பரின் ஒரு கையையும் தன் இருகரங்களில் வைத்துக் கொண்டார். புகைப்படக்காரர்கள் சூழ்ந்தபோது எங்களோடு சேர்ந்து திரும்பி நின்று புகைப்படத்திற்கு நின்றார். 


நான் மெல்ல சொற்களைத் திரட்டி, "எப்போதும் உங்கள் வாழ்த்தும் ஆசிகளும் என்னுடன் இருந்து நல்வழியில் நடத்த வேண்டும்" என்று விண்ணப்பித்தேன். சரியாகத் தெளிவாகச் சொன்னேனா என்று தெரியாது. அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். அவர் சிரித்துக் கொண்டே, கைகளை மேலும் இறுகப் பற்றி உள்ளங்கைகளுள் வைத்துக் கொண்டார். ஆசிர்வதித்தார். அந்தக் கணத்தில் இருந்த நிறைவும், மகிழ்ச்சியும் விவரிக்கும் அளவிற்கு எனக்குப் போதவில்லை.


"நமஸ்கரிக்க விரும்புகிறேன் நான்" என்றேன், சிரித்துக் கொண்டே "பரவாயில்லை, வேண்டாம் வேண்டாம்" என்று தடுத்தார். கண்களைப் பார்த்துச் சிரித்து கைகுலுக்கிவிட்டு, மெதுவாக நகர்ந்தார். இன்னொரு பெண்மனியிடம் கைகுலுக்கி விட்டு அங்கே இருந்த சிலருக்கு புண்ணகையை தந்துவிட்டு மெல்ல வாயில் நோக்கி நடந்தார்.


தற்செயல்களுக்கு பொருள் விளக்கி, காரணம் கற்பித்துக் கொண்டிருக்கக் கூடாது என்று ஜெ சொன்ன ஞாபகம். அப்படியானால் இந்தச் சந்திப்பிற்கான சாத்தியம் எப்படி ஒவ்வொரு வாயிலாக முட்டித் திறந்து என்னை வந்தடைந்தது என்று என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. நேற்று வரை கற்பனைகூட செய்ய முடியாததாக இருந்தது. ஆனால், நடந்தே விட்டது. 'அப்படி என்ன நடக்கச் சாத்தியமில்லாத சந்திப்பா?' என்றால் எனக்கு பதில் தெரியாது. நான் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் நான் ஆழ்மனதில் மிக உண்மையாக அவரைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பினேன், என் குருநாதர்களைப் பிரார்த்தித்தேன். 

கடைசியில் அவர் சகஜமாக என் கையைப் பிடித்துக் கொண்டு சிலநிமிடங்கள் பேசி, நான் விரும்பிய புண்ணகையைத் தந்து, ஆசிர்வதித்துவிட்டுச் சென்றார். 

(இது போல் ஆர்வமாகக் காத்திருந்த ஒரு ஆளுமையைப் பார்த்த சம்பவம் சமீபகாலங்களில் ஒரு முறை நடந்தது. இதே சந்தோஷம் அன்றும். அது கொஞ்சம் தனிப்பட்ட அனுபவம்)

-பிரகாஷ் சங்கரன்.





(தொடர்புடையவை : ஆசான் ஜெ வின் தளத்தில் வந்த குறிப்பு http://www.jeyamohan.in/?p=39856 )

No comments:

Post a Comment

உங்கள் எண்ணங்கள், விமர்சனங்களைப் பகிர்ந்துகொள்ள...