Saturday, November 16, 2013

அயல் கலாச்சாரம் (பகுதி -2)


தொடர்ந்து கிட்டத்தட்ட 500 ஆண்டுகள் அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்த நாடு. முதலில் ஜெர்மானிய மொழி திணிக்கப்பட்டது, பின்னர் கம்யூனிஸ்ட் காலத்தில் 40 வருடம் ரஷ்ய மொழி கட்டாயமாக இருந்தது, இத்தனையையும் மீறி இன்று மருத்துவம், அறிவியல், உயர் தொழில் நுட்பம் என அனைத்தும் செக் மொழியிலேயே பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் காலத்தில் மாற்றப்பட்ட இடம், தெருப் பெயர்கள் எல்லாம் மீண்டும் பழைய செக் பெயர்களாக மாற்றப்பட்டுள்ளது. தங்கள் பாரம்பரிய நினைவுச் சின்னங்களைப் பத்திரமாகப் பேணுகிறார்கள். கைவிடப்பட்ட பழம்பெரும் சர்ச்சுகள் புணரமைக்கப்பட்டு சுற்றுலாத் தளங்களாக மக்களைக் கவருகிறது. ஐரோப்பிய யூனியன் நிதி பெற்றுப் பாழடைந்த பழைய ஊர்களெல்லாம் மீண்டும் புதுப்பொலிவு பெறச்செய்கிறார்கள். இவ்வளவும் இந்தக் குறுகிய காலத்தில்.
முன்னேறிய மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலவே செக் குடியரசிலும், குடிமை ஒழுக்கம் சிறப்பாக இருக்கிறது. பொதுவெளியில் மக்கள் குப்பை கொட்டுவதில்லை, அசுத்தம் செய்வதில்லை, விதிகளை மதிக்கிறார்கள் அதே சமயம் பேச்சு- எழுத்து சுதந்திரம் அபாரமாக உள்ளது, பெண் உரிமை ஆணுக்குச் சமமாக இருக்கிறது, குற்றங்கள் மிகக் குறைவு, நடுராத்திரியிலும் நடமாட பயம் இல்லை, கல்வி பரவலாக உள்ளது, கட்டும் வரிக்குத் தகுந்த சிறப்பான சேவைகள் -போக்குவரத்து, மருத்துவம், பாதுகாப்பு, இன்றியமையாத பிற அனைத்தும் – அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கிறது, அரசு அலுவலகங்கள் மக்களை மாட்டு மந்தை போல நடத்துவதில்லை, வாடிக்கையாளர் சேவைக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது…இப்படி ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் கவனித்து வியக்கும் புறவயமான எல்லா விஷயங்களும், பண்புகளும் உண்டு.
மேலை நாட்டின் விஞ்ஞான பாய்ச்சலும் அவர்களின் குடிமை ஒழுக்க முறைகளும் தான் இங்கு வாழும் இந்தியர்களைத் துணுக்குறச் செய்கிறது. நமது ஐயாயிர வருட பாரம்பரியம், தத்துவம், ஞானம், கலாச்சாரம் எல்லாம் பழங்கதை மட்டும் தானா? நம்மால் ஐரோப்பியச் சமூகத்தைப் போன்ற முன்னேறிய முற்போக்கான சமூகமாக ஆகவே முடியாதா என்ற ஏக்கமும், அதற்குத் தோதாக இந்தியாவில் நடக்கும் சம்பவங்களும், படிக்கும் ஊழல் கொழிக்கும் கீழான அரசியல் செய்திகளும் அவநம்பிக்கையையும் ஏமாற்றத்தையும் தருவதாகவே உள்ளன. ஜெயிடம் அப்படிக் கேட்கப்படும் கேள்விகளைப் பார்க்கலாம். உண்மையில் ஐரோப்பாவிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியதும் உண்டு. சந்தேகமில்லை.
ஆனால்… நாம் காணும் ஐரோப்பா, நாம் கேட்கும் ஐரோப்பிய செய்திகள் எல்லாம் இதன் வெற்றி பெற்ற பக்கங்கள் மட்டும் தான். அதிநவீன அறிவியலில் முன்னோடியாக, பொது நாகரீகமும், விழிப்புணர்வும் கொண்ட சமூகமாக மட்டும் பொதுவில் அறியப்படும் ஐரோப்பா. ஒருவகையில் இது வரலாற்றெழுத்து போல – வெற்றி பெறவனின் கதை மட்டுமே வரலாறாகிறது. எதை இழந்து இந்த வெற்றி பெறப்படுகிறது? வெற்றிகரமான இந்தச் சமூகத்தில் வாழும் ஒவ்வொரு தனிமனிதரும் இழந்த, அல்லது அடைய விரும்பும் அகமகிழ்வு என ஒன்று உண்டா? இந்த வசதிகளால் உண்மையிலேயே அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து திருப்தியாக இறக்கிறார்களா? ஆரம்பகால விதந்தோதல் மற்றும் வியப்புகளுக்குப் பின் எனக்கு இருந்த கேள்வி இது தான்.
இந்தக் கேள்விக்குப் பதில் தெரியவேண்டுமானால் நாம் அவர்களுடன் மிக நெருங்கிப் பழக வேண்டும். அதன் சாத்தியங்களை மேற்கில் வாழ்பவர்கள் நன்றாகவே உணர்ந்திருப்பார்கள். கிட்டத்தட்ட அது இரும்பு முட்டையைப் புல்லால் துளைக்க முயல்வது போலத்தான். எத்தனை வருடம் கூட வேலை பார்த்தாலும், வசித்தாலும், பழகினாலும் பொதுவான சில விஷயங்களுக்கு அப்பால் தனிப்பட்ட எந்த விஷயத்தையும் பேசிவிடவே முடியாது. அது இணைக்க முடியாத பெரும் அகழி. நம்மிடம் மட்டுமல்ல, அவர்களுக்குள்ளும் கூட அப்படித்தான். மிகமிக நெருக்கமான ஓரிருவருடன் மட்டுமே சொந்த விஷயங்களைப் பகிர்வார்கள். அப்போது மட்டுமே நாம் உண்மையான உள் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள சாத்தியம்.
எனக்கு அப்படி சிலருடன் பேசிப் பழக வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் மூலம் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் கதையையும் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆகவே என் கருத்துக்கள் என்பது நான் நெருங்கிப் பழகியதன் மூலம், அதனால் அவர்கள் மனந்திறந்து சொன்ன விஷயங்கள் மூலம் உருவான நேரடி அவதானிப்புகள். புறவயமாக கவனித்து ஊகித்து உருவாக்கிக் கொண்டதல்ல.
ஐரோப்பியரின் பல குண இயல்புகளை வடிவமைத்ததில் இங்கிருந்த கடுங்குளிர் காலநிலையும், மதத்தின் பெயராலும், அதிகார அரசியலாலும் நடந்த கொடும் யுத்தங்களும், மரணங்களும் முக்கிய பங்கு வகித்தன. ஒரு அறுநூறு, ஆயிரம் வருட முந்தைய ஐரோப்பாவைக் கற்பனை செய்து பார்த்தால், உறைபனி கொட்டத் தொடங்கும் காலத்திற்கு முன்பே எல்லாப் பெரிய கட்டுமானங்களையும், பணிகளையும் செய்து விடவேண்டும். பின்னர் குளிர் காலம் முழுக்க வெளியில் ஒரு வேலையும் செய்ய முடியாது. ஆகவே சூரியனின் பிரகாசமும், வெப்பமும் இருக்கும் மாதங்களுக்குள் விரைந்து வேலைகளைச் செய்ய வேண்டும். வேலையில் குளறுபடி உண்டானால் தவறுகளைத் திருத்தி மறுபடியும் முதலில் இருந்து செய்ய முடியாது, ஆகவே கச்சிதமான திட்டம், நேரந்தவறாமல் பணியைத் தொடங்குதல், வேலை செய்யும் நேரத்தில் வேறெந்தப் பேச்சும் இல்லாத மும்முரமாகப் பணி புரிதல் போன்றவை அப்படி காலநிலை உருவாக்கிய நெருக்கடிகளால் உருவாகியிருக்கலாம். மதத்திற்காக நடந்த சண்டைகளும் உயிர்ப்பலிகளும், போர்களும் -மிக முக்கியமாக பேரழிவுகளை விளைவித்த இரண்டு உலகப் போர்களைச் சந்தித்த சமூகத்தில் உண்டான மனித வாழ்க்கை குறித்தான பார்வையும், மனநிலை மாற்றங்களும் எத்தகையதாக இருக்கும் என்பதையும் ஊகிக்கலாம். இந்த வலிகள் இன்றைய ஐரோப்பிய தலைமுறைகளிடம் காணமுடியாது, இதையெல்லாம் சதா நினைத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் அதன் விளைவுகள் இயல்புகளாக உருமாறி தலைமுறைகளாக கைமாறி வந்து சேர்ந்திருக்கிறது. இன்று அவர்கள் நாம் வியக்கும் “தனிமனிதர்கள், வெற்றியாளர்கள், பண்பாளர்கள்”.
இந்தியர்களுக்கு ஐரோப்பா வந்ததும் கவனத்தைக் கவரும் இன்னொரு விஷயம் மதம் மற்றும் கடவுள். இங்கு மதம் என்பது மிகவும் நீர்த்துப்போன ஒன்றாக உள்ளதும், நாம்தான் மதத்தையும் கடவுளையும் இறுகப்பிடித்து திண்டாடிக் கொண்டிருப்பதாகவும் தோன்றும். பிராக் நகரில் ஒவ்வொரு இருநூறு மீட்டருக்கும் ஒரு பெரிய கிறிஸ்தவ தேவாலயம் இருக்கிறது. ஆனால் 80 சதவீதம் மக்கள் மதத்தைப் பின்பற்றாதவர்கள். ரோமன் கத்தோலிக்க விசுவாசிகள் 39 லிருந்து 10 சதவீதமாகவும், புரோட்டஸ்டண்ட்கள் 3.7லிருந்து 0.8 சதவீதமாகவும் குறைந்து விட்டார்கள். தேவாலயங்கள் எல்லாம் பகலில் சுற்றுலாப் பயணிகளுக்காகவும் மாலை வேளைகளில் இசைக் கச்சேரிக்காகவும் திறக்கப்படுகிறது.
வரலாற்றில் அதிகாரமயமாக்கப்பட்ட கிறிஸ்தவம், அதை எதிர்த்த சீர்திருத்த இயக்கம், அதனால் உண்டான போர்கள் என்று மதமும் தொடர்ந்த இழப்புகளுக்கும் விரக்திக்கும் காரணமாகவே இருந்துவந்துள்ளது. பாப பரிகாரத்திற்கு போப் விற்பனை செய்யும் (இண்டல்ஜன்ஸ்) ஒரு வகை பரிகாரச் சீட்டுக்களை வாங்கிக் கொள்ளலாம், கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப அதிக/ நீண்ட நாள் பாபம் மன்னிக்கப்படும். தேவாலயங்களில் வழிப்பாட்டுக்கு பிறகு கிறிஸ்துவின் சதை, இரத்தம் ஆகியவற்றின் குறியீடாக வழங்கப்படும் அப்பமும், ஒயினும் பாதிரிமார்களுக்கு மட்டுமே உரியது, சாதாரன மக்கள் அதைப் பெறும் தகுதி அற்றவர்கள் எனப்பட்டது. பெரும்பாலும் பிரபுக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களே போப்பாக ஆனார்கள், அதிகாரம் கைவிட்டுப் போகாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. போப்கள் அரசியல் அதிகாரத்தாலும், மதத்தலைமை என்னும் அதிகாரத்தாலும் ஆட்டிப்படைத்தனர். எதிர்த்தவர்களை சிலுவைப்படை கொண்டு ஒடுக்கினர்.
இந்த சீர்குலைந்த கிறிஸ்துவத்தையும், போப்பையும் எதிர்த்து 15ஆம் நூற்றாண்டில் செக் தேசத்தில் பெரும் கிளர்ச்சி எழுந்தது. கிளர்ச்சிக்கு காரணமான ‘யான் ஹூஸ்’ என்னும் சீர்திருத்தவாதியை ரோமன்கத்தோலிக் அதிகார பீடம் உயிரோடு கொளுத்தியது. அது அவரது கிளர்ச்சிக்கு வலு சேர்த்தது, ஆதரவாளர்களை சிலுவைப்படை கொண்டும் அடக்கமுடியவில்லை. பின்னர் பல போப்கள் மாறிய பிறகு செக் நாட்டு தேவாலயங்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை வழங்கப்பட்டது, அங்கே அப்பமும் ஒயினும் அனைவருக்கும் உண்டு. ஆனால் சீர்திருத்தவாதிகளும் ஒரு அதிகார நிறுவனமாகி கத்தோலிக்கர்களுக்குக் கொடுமைகள் நிகழ்த்தத் தொடங்கினார்கள். இந்த வரலாற்று நிகழ்வுகளாலும், கூடவே நாற்பது வருட கம்யூனிசத்தாலும் கிறிஸ்தவ மதம் பெருத்த பின்னடைவைச் சந்தித்துள்ளது.
வெவ்வேறு காரணங்கள் வழியாக மொத்த ஐரோப்பாவுக்கும் இது பொருந்தும் என நினைக்கிறேன். எனக்கு இப்படித் தோன்ற இன்னொரு காரணமும் உண்டு. பெரும்பாலான ஐரோப்பிய தத்துவவாதிகள், அறிவியலாளர்கள் கிறிஸ்தவத்தைக் கடுமையாக விமர்சித்திருந்ததைப் படித்தேன். ஜெயமோகன் சொல்வது போல கான்ஸ்டண்டைன் கிறிஸ்துவிலிருந்து ஆன்மீக கிறிஸ்துவை மீட்டெடுத்து மக்களுக்கு ஆற்றுதலும் ஆசுவாசமும் அளிக்கும் ஒரு ஞானி தோன்றியிருக்கக் கூடாதா என்று நினைக்கத் தோன்றும். எந்த நாடாக இருந்தாலும் வாழ்க்கையைக் கவனிக்கும் அறிவுஜீவிகளுக்கு, அதன் விதியைப் புரிந்துகொள்ள முயல்பவருக்கு மதமோ, சடங்கோ, கடவுள் நம்பிக்கையோ அவ்வளவு முக்கியமல்ல. ஆனால் சர்வநிச்சயமாக எல்லா ‘வெள்ளைக்காரர்களும் அறிவுஜீவிகள் இல்லை. வாழ்க்கையைப் புரட்டிப்போடும் இழப்புகள், தோல்விகள், தாங்கமுடியாத துக்கங்கள் எனப்பல நிகழ்வுகளிலும் துவண்டு திசைமாறிவிடும் சாமானியர்கள்தான் பெரும்பாலும். வீடற்றவர்களாக, அழுக்கு உடையுடன், சதா குடித்து தெருவில் வாழும் பெரும்பாலானவர்களுக்கு இம்மாதிரி ஏதாவது ஒரு கதை இருக்கிறது. இவர்களுக்குச் சேவை புரியும் அமைப்புடன் தொடர்புள்ள நண்பரிடமிருந்து நான் கேட்டறிந்தவரை புள்ளிவிவரங்கள் அவர்களில் சரிபாதிக்கும் மேல் பல்கலைக்கழக கல்வி கற்றவர்கள் என்கிறது. பேராசிரியர்கள், இசைக்கலைஞர்கள், உட்பட வெற்றியாளர்களும் உண்டு. அம்மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் ஒரு பாதை, மனதிற்கு உரமூட்டும் ஒரு வல்லமை இல்லாதது ஒரு சமூக இழப்பு. மதத்தின் இழப்பு, ஆன்மீக வறட்சி ஆகியவை ‘வாழ்க்கைக்கு ஒரு பொருளுமில்லை. பிறந்தோம், அனுபவிப்போம், இறப்போம்’ என்ற விட்டேத்தியான மனநிலைக்குக் கொண்டு விடுகிறது. இதனால் வாழ்வில் ஒரு சாரமற்ற ஆன்மீக வறுமை உணரப்படுகிறது. இதை நிரப்ப பாகனிசம், ஆப்பிரிக்க ஷாமானிஸம், இந்துமதம், பௌத்தம் போன்றவற்றை அறிந்துகொள்வதில் ஆர்வமாக உள்ளனர். மதம் என்பது சிந்தனையைக் கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பு என்று நினைத்திருந்தவர்கள் அது முன்னோர்களின் அனுபவங்களிலிலிருந்து சேகரித்த சிந்தனைக் கருவூலம் என்னும் உண்மை புதிய வாசலைத் திறக்கிறது என்பதைக் கண்டடைந்து ஆச்சரியப்படுகிறார்கள். இருந்தாலும் இன்னும் பெரும்பாலானோர் எந்த நம்பிக்கையும் அற்றவர்களாகவே உள்ளனர். பி.தொ.நி.குரலில் கம்யூனிஸம் மதத்தின் தேவையை உணர்ந்துகொள்ளாமல் புறக்கணித்ததை அதன் பெரும் குறையாகச் சொல்லும் இடத்தை நினைத்துக்கொள்கிறேன்.
***
எனக்கு செக் நாட்டின் மத, அரசியல், வரலாற்றுத் தகவல்கள் மற்றும் சமகால நிகழ்வுகளை அறிந்துகொள்வதற்கும், விவாதித்து அலசுவதற்கும் பெரும் உதவியாக இருப்பவர் என்னுடன் வேலை செய்யும் 57வயது செக் பெண்மணி. செக், ஆங்கிலம், ரஷ்யன், ஜெர்மன், திபெத்தியன் என ஐந்து மொழிகள் பேச, எழுத, படிக்கத் தெரிந்தவர். உண்மையான, தீவிர கிறிஸ்தவர். 20வருடங்களுக்கும் மேல் செக்நாட்டின் பகுதிகளிலும், ஆஸ்திரியாவிலும் இவாஞ்சலிக்கல் சர்ச்சின் பாஸ்டராக ஊழியம் செய்தவர். சொந்தக் காரணங்களுக்காக அமைப்பை விட்டு வெளியேறிக் கடந்த மூன்றரை வருடங்களாக எங்கள் ஆய்வுக்கூடத்தில் தொழில்நுட்ப உதவியாளராகப் பணிபுரிந்து கொண்டே சொந்த ஆர்வத்தால் இன்னும் கிறிஸ்தவ மதச்சேவை புரிந்து கொண்டிருப்பவர். ரோம, கிரேக்க, கிறிஸ்தவ தொன்மங்களில் விஷய ஞானமும், வரலாற்றுப் புரிதலும் உள்ளவர்.
அநேகமாக நான் இங்கு மேற்கொண்ட எல்லாப் பயணங்களும் இவருடன் தான். கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாகப் பதில் சொல்வார். இவருடைய அம்மாவிற்கு 84 வயதாகிறது. செக், ரஷ்யன், பிரஞ்சு என மூன்று மொழிகள் தெரிந்தவர். அவரும் கிறிஸ்தவ நம்பிக்கை உடையவர். இளவயதில் செக் ஆசிரியையாகப் பணி புரிந்தவர். அவர்களுடைய வீட்டிற்குச் சென்று முதன் முறை சந்தித்துப் பேசிய போது காளிதாசன், இராமாயணம், பாரதம், வேதங்கள், தமிழ், இலக்கியம், நமது கலாச்சாரம், எனது குடும்பம் எனப் பலவற்றைப் பற்றி உரையாடினார்கள். ஐம்பதுவருடங்களுக்கு முன்பு செக் நாளிதழில் வந்திருந்த தாகூர் மற்றும் காளிதாசன் பற்றிய செய்திகளை கத்தரித்து வைத்திருந்ததைக் காட்டினார். பழந்தமிழ்ச் செய்யுள், வேதப்பாடல்கள் போன்றவற்றைச் சொல்லச்சொல்லி அவை அவர் காதிற்கு எவ்வகையான உணர்வுகளை எழுப்புகிறது என அனுபவித்துத் தெரிந்துகொண்டார். அது ஒரு நல்ல உறவாக வளர்ந்தது. என்னைத் தன் தத்துப் பேரன் என்று சொல்லிக்கொள்வார். அடிக்கடி அவரை வீட்டிற்குச் சென்று சந்திக்கிறேன். ஒவ்வொரு முறையும் கட்டித் தழுவிக்கொண்டு அன்புடன் வரவேற்பார். நான் போகாத மாதங்களில் அவர் தன் கையால் உண்டாக்கிய செக் பிஸ்கட்டுகளை மகளிடம் தந்தனுப்புவார். மூன்று வருடங்களாக நான் இல்லாமல் அவர்கள் வீட்டில் கிறிஸ்துமஸ், ஈஸ்டர் உட்பட எந்தக் கொண்டாட்டமும் இல்லை. செக் மொழியில் பாட்டி என்றே அழைப்பேன். இப்படி ஒரு செக் குடும்பத்துடன் நெருங்கிப் பழகிய எந்த இந்தியரும் எனக்குத் தெரிந்து ப்ராகில் இல்லை. இந்த நெருக்கமான பந்தத்தை எனது பெருமையாகவும், ஒப்பற்ற அனுபவமாகவுமே நான் கருதுகிறேன்.
ஆனால் இங்கே நிச்சயமாக இதை வெற்றுப்பெருமைக்காகச் சொல்லவில்லை. இந்த நெருக்கம் அவ்வளவு எளிதாக வாய்ப்பதல்ல, எனவே இந்த அன்பும் நெருக்கமும் ஒரு கொடுப்பினை தான். அவரது சொந்தப் பெயரன்கள் கூட உட்கார்ந்து அவருடன் இவ்வளவு உரையாடியதில்லை. இந்த அளவுக்கு பழக வாய்ப்புகிடைத்ததால் தான் என்னால் மேலோட்டமான புரிதல்களைத் தாண்டி இந்தக் கலாச்சாரமும், வாழ்க்கை முறையும் தெருவைத் தாண்டி வீடுகளுக்குள் நுழைகையில் என்னவாக இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இரண்டாம் உலகப் போரின் கொடூர கணங்களிலிருந்து, ரஷ்ய லிபரேஷன் ஆர்மி (செம்படை) பிராக் நகருக்குள் வந்ததிலிருந்து, கம்யூனிச ஆட்சியின் காலம் என வரலாறாக வெளியில் இருக்கும் தகவல்களை, அந்தச் சமயங்களில் வாழ்ந்த ஒருவரது அனுபவமாக நேரடியாகக்கேட்டுத் தெரிந்துகொள்ள முடிகிறது. எனவே வெறுமனே ஊகங்களிலிருந்து கருத்துக்களை உருவாக்கிக் கொள்ளாமல், உண்மையான புரிதல்களிலிருந்து பெற்றுக்கொண்ட சித்திரத்தைத் தைரியமாகச் சொல்லமுடிகிறது.
இவாஞ்சலிக்கல் பாஸ்டராக வேலை பார்த்த என் தற்போதைய சக ஊழியர் ஐரோப்பாவின் திருமண பந்தங்களின் உள்ளீடற்ற தன்மையைக் கவலையோடு பகிர்ந்துகொள்வார். எளிய காரணங்களுக்காக சிதையும் குடும்பங்களை அறிவார், அதனால் அந்தச் சமூகத்தின் எதிர்காலம் எவ்வளவு பாதிப்புக்குள்ளாகும் என பேசுவார். அவர் தனிப்பட்ட முறையில் பல குடும்பங்களை ஒன்றாக சேர்த்து சின்னச்சின்னக் குடும்ப நிகழ்வுகள், விளையாட்டுக்கள், பாடல்கள், பிரார்த்தனைகள் என ஏற்பாடு செய்து ஊடே குடும்ப ஒற்றுமை, கனவன்-மனைவி, பெற்றொர்-குழந்தைகள் உறவு ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தி உரையாடல்களை நிகழ்த்துகிறார். சர்ச்சுகள் மூலம் நிலையான திருமண பந்தம், குடும்பம் என்னும் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கப் பாடுபடுகிறர்கள். அதன் பலன் மிகமிக குறைவு. நமது நாட்டில் எவ்வளவு இயல்பாக இந்தக் குடும்பம் என்கிற அமைப்பு உள்ளது, அதன் பலம் பிள்ளைகளுக்கும், சமூகத்திற்கும் எவ்வளவு நலம் சேர்க்கிறது என்றெல்லாம் என்னை வைத்துக்கொண்டே சில சமயம் பேசியிருக்கிறார். பெருமையாக அமைதியுடன் கவனித்துக் கொண்டிருப்பேன்.
இங்குள்ளவர்களிடம் பொதுவாக இந்தியக் குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேசினால் ஒருவித ஏக்கப் பெருமூச்சு விடுவதைக் காணமுடியும். “இங்கும் நூறாண்டுகளுக்கு முன்னால் இப்படித் தான் இருந்தது. காலம் மாறிவிட்டது, இனி இது சாத்தியமா என தெரியவில்லை” என்று வருத்தத்துடன் என்னிடம் கூறியிருக்கிறார்கள். இது எதுவுமே அறியாமல், எந்த நேரடி அனுபவமும் இல்லாமல், ஒப்பேறாத உள்நோக்கமுள்ள புள்ளிவிவரங்கள், கருத்து நிலைப்பாடுகளை வைத்துக் கொண்டு நமது நாட்டில் சில ‘அறிவுஜீவிகள்’ ஒட்டுமொத்தக் குடும்ப அமைப்புமே சுரண்டலும் வன்முறையும் நிறைந்த வதைமுகாம்கள் என்பது போலப் பேசுவதும், இதை ஒழித்து சுதந்திரமான தனிநபர்களாக ஆனால் தான் மேற்கைப்போல முன்னேற முடியும் என்று எழுதுவதும் இந்த தேசத்திற்குச் செய்யும் ஒப்பற்ற தீங்கு என்பது என் எண்ணம்.

குடும்ப வன்முறை இங்கு இருக்கலாம், சுரண்டலும் இருக்கலாம், குறைவான சதவீதத்தில் இருக்கும் அவற்றை ஊதிப் பெரிதாக்கி ஒட்டுமொத்தமாக குடும்பம் என்கிற கருத்தையே சிதைக்க நினைப்பவர்கள் அடுத்த ஜன்மத்தில் மேற்கில் பிறந்து இதை அனுபவிக்கவேண்டும், அப்போது தான் தெரியும்.
தனிமனிதன் என்னும் நிலைப்பாடைப் பற்றிப் பேசினால் அதற்காக இவர்கள் சுயநலம் மட்டுமே கொண்டவர்கள், குழுவாக இயங்கும் மனப்பாண்மை இல்லாதவர்கள் என்று அர்த்தமல்ல. அப்படி இருந்தால் இந்தசமூகம் என்றைக்கோ அழிந்திருக்கும். ஒரு வெளியைச் சகமனிதனுடன் பகிர்ந்துகொண்டு வாழ வேண்டியிருப்பதால் அங்கே கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்க விதிகளை ஏற்றுக்கொண்டு அதை உண்மையாகக் கடைப்பிடித்து வாழ்கிறார்கள். அதனால் தான் ஒரு சிறந்த பொதுச்சமூகம் இங்கே சாத்தியமாகிறது. இது குடிமை உணர்ச்சியால் விளைவது. ஆனால் இது மேலோட்டமானது, இந்த விதிகள் பொதுவெளியில் செல்லுபடியாகுமே தவிர அந்தரங்க வாழ்க்கையில் செல்லுபடியாகாது. அங்கேதான் அவர்கள் தனிமனிதனாகிறார்கள். ஆற்றுமணல் போன்றது இந்தச் சமூகம். விலகி நின்று பார்க்கையில் மொத்தமாக சேர்ந்திருப்பது போல இருக்கும். கையில் அள்ளினால் ஒவ்வொன்றும் தனித் தனியான துகளாக உதிர்ந்து போகும்.
- பிரகாஷ் சங்கரன்

(பகுதி -1)                                                                                                                             (பகுதி -3)

No comments:

Post a Comment

உங்கள் எண்ணங்கள், விமர்சனங்களைப் பகிர்ந்துகொள்ள...