Showing posts with label இத்தாலி. Show all posts
Showing posts with label இத்தாலி. Show all posts

Sunday, March 4, 2012

ஃப்ளோரன்ஸ் - ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தொட்டில் - (பகுதி 5)


நுண்கலைக்கழக அருங்காட்சியகம் (Accademia Gallery)

ஃப்ளோரன்ஸ் நகரின் மற்றொரு முக்கியமான அடையாளம் அல்லது ஃப்ளோரன்ஸ் என்ற சொல்லிற்கே இணைச் சொல்லாகிவிட்ட மைக்கேலேஞ்சலோவின் உன்னதப் படைப்பான ‘டேவிட்’. யூதர்களின் இரண்டாம் அரசனாக அறியப்படுபவர். ஆபிரகாமிய மதங்களான யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் மூன்றிலும் முக்கிய ஆளுமையாகப் போற்றப்படுகிறார் டேவிட் (கி.மு 1040 – 970). இயேசு கிறிஸ்து அவருடைய தந்தை யோசேப் மற்றும் தாய் மரியாள் இருவரின் வழியிலும் டேவிடின் உதிர வம்சத்தின் தொடர்ச்சி என நம்பப்படுகிறார்.

ஃபிலிஸ்தீனியர்களின் சார்பாக அவர்களுள் ராட்சத உருவம் கொண்ட பலசாலியான ‘கோலியாத்’ என்பவன் இஸ்ரேலியர்களை நேருக்கு நேர் சண்டைக்கு சவால் விடுகிறான். இஸ்ரேலியர்களில் ஆடுமேய்க்கும் கீழ்குலத்தைச் சேர்ந்த இளம் டேவிட், தான் கோலியாத்துடன் ஒற்றைக்கு சண்டையிட அரசன் சௌலிடம் அனுமதி பெறுகிறான். எதிர்பாராத நேரத்தில், வலிமையான கோலியாத்தின் நெற்றியில் தன் கவனைச் சுழற்றி கல்லாலடித்து வீழ்த்துகின்றான். அது முதல் டேவிடின் புகழ் இஸ்ரேலியர்கள் மத்தியில் பரவத்தொடங்குகின்றது. அரசனால் தளபதியாக நியமிக்கப்பட்ட டேவிட் பின்னர் தலைமையேற்று நடத்திய போர்களில் எல்லாம் வெற்றி பெற, ஒரு கட்டத்தில் சௌல் மன்னனே டேவிடின் புகழுக்கு அஞ்சி அவனை கொல்லத் திட்டமிடுகிறான். அதிலிருந்து தப்பிய டேவிட், பின்னர் அரசனது வாரிசுகள் இறந்ததும் யூதர்களில் குலமூத்தோர் வேண்டிக்கொண்டபடி இஸ்ரேலிய சாம்ராஜ்யத்தின் அரசனாக பதவியேற்கிறார்.

டேவிடின் சிற்பம் மைக்கேல் ஏஞ்சலோவுக்கு முன்னும் பின்னும் பல சிற்ப மேதைகளால் வடிக்கப்பட்டுள்ளது. எல்லாம் பெரும்பாலும் கோலியாத்துடன் டேவிட் போர் புரியும் நிலையைக் காட்சிப்படுத்தியது. ஆனால் மைக்கேலேஞ்சலோவின் டேவிட், நீண்ட தோல் வாரால் ஆன கவனை இடது தோளிலிருந்து இடுப்பின் வலது பக்கம் வரை  முதுகுக்குப்பின் மறைத்துப் பிடித்துக் கொண்டு, இளைஞனுக்குரிய அலட்சியப்பார்வையுடன், கொஞ்சம் கூட பயமே முகத்தில் காட்டாமல் கோலியாத்தை முறைப்பது போல வடிக்கப்பட்டுள்ளது. பதினேழு அடி உயர வெள்ளை சலவைக் கல்லால் ஆனது டேவிட்டின் சிற்பம்.

வெற்றி நாயகனான டேவிட்டின் சிலை முதலில் ஃப்ளோரன்ஸின் செல்வாக்கு மிக்க பிரபுக் குடும்பமான மெடிஷிக்கும் மற்றும் சுற்றியுள்ள மற்ற சக்திவாய்ந்த மன்னராட்சிப் பகுதிகளுக்கும், ரோமின் ஆளுகைக்கும் எதிராக சுதந்திரக் குடியரசான ஃப்ளோரன்ஸின் குடிமைச்சமூகம் விடுக்கும் எச்சரிக்கையின் குறியீடாக ரோமின் திசை நோக்கி சைனோரியா சதுக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் 1873ல் இப்போதுள்ள அருங்காட்சியக்கத்திற்கு மாற்றப்பட்டது. இதன் போலி சைனோரியா சதுக்கத்தில் வைக்கபட்டுள்ளது.

அகடமியா காலரியில் மைக்கேலெஞ்சலோவின் டேவிட் சிற்பமும், இன்னும் ஃப்ளோரன்ஸ் நகரெங்கும் பல சிற்பிகளால் வடிவமைக்கபட்ட கட்டிடங்கள், தேவாலயங்கள், சிலைகள் போன்றவற்றின் மூல மாதிரிகளும், ஓவியங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சில அதிவீர சைவர்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு சன்னதியையும் திரும்பிக்கூடப் பார்க்காமல் நேராக சொக்கநாதரை மட்டும் வணங்கிவிட்டு, மீனாட்சி அம்மையைக் கூட தரிசிக்காமல் வெளியேறி விடுவார்கள். அது போல அகடமியா காலரிக்கு வெளியே நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்து, 10 யூரோ பணம் கொடுத்து டிக்கட் வாங்கி, டேவிட்டை மட்டும் ஒருமணி நேரம் பல்வேறு கோணங்களில் கண்ணாரக் கண்டுவிட்டு வேறெதையுமே பார்க்காமல் ஒரு பெருமூச்சுடன் அமைதியாக வெளியேறியவர்களைக் கவனித்தேன்.

புகைப்படங்களில் பலமுறை இந்தச் சிற்பத்தைக் கண்டிருக்கிறேன். நேரில் பார்க்கும் போது அதன் பிரும்மாண்ட உருவம் உருவாக்கும் பிரமிப்பும், வியப்பும், நெகிழ்ச்சியும் அயிரம் மடங்கு அதிகம். டேவிடின் நிற்பில் தெரியும் அந்த அலட்சிய தோரணையும், முகத்தின் இளமையும், கண்களில் சுடரும் தைரியமும் இவன் எதிர்காலத்தில் இஸ்ரேலியர்களின் சக்ரவர்த்தியாக ஆவான் என்று குறியிட்டுக் காண்பிப்பது போலிருக்கும்.

உஃபிஸி கலைக்கூடம் (Uffizi Gallery)

ஃப்ளோரன்ஸின் மிகப்பிரம்மாண்டமான, மிக முக்கியமான, ஏன் உலகிலேயே மிக மிக முக்கியமான, புகழ்பெற்ற கலை அருங்காட்சியகம் இது. லியனார்டோ டா வின்ஸி, மைக்கேல் ஏஞ்சலோ, ரஃபேல், சாண்ட்ரோ போர்ட்டிசெல்லி, ரெம்ப்ராண்ட், ஃபிலிப்பொ லிப்பி முதலான பல பெரும் படைப்பாளிகளின் ஓவியங்கள், சிற்பங்கள் இங்கே சேகரித்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் மிகப்பழைய கலை அருங்காட்சியகளுள் இதுவும் ஒன்று. ஆரன் நதிக்கரையில் ‘ப’ வடிவத்தில் கி.பி.16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது (1560-1586). இன்று ஃப்ளோரன்ஸ் நகரின் மிக முக்கியமான சுற்றுலா கவர்ச்சி இந்த அருங்காட்சியகம்.

மிக நீண்ட வரிசைகளில் சுற்றுலாப் பயனிகள் காத்திருந்து உள்ளே செல்கிறார்கள். சில சமயங்களில் 5 மணி நேரம் வரை உள்ளே நுழையக் காத்திருக்க வேண்டிவருமாம். நான் சென்றிருந்த சமயத்திலும் மிக நீண்ட வரிசை இருந்தது. ஏறத்தாழ ஒரு மணி நேரம் நின்றுவிட்டு நகர்ந்து விட்டேன்.

அதற்குக் காரணம் இருந்தது.  தனியனாக ஃப்ளோரன்ஸில் சுற்றிக்கொண்டிருந்த போது, பளிங்கு தேவாலயங்கள், பிரம்மாண்டமானதும், நுண்ணிய வேலைப்பாடு கொண்டதுமான அதன் தூண்கள், உயர்ந்த, ஓவியங்கள் செறிந்த விதானங்கள், உயிர்ப்பான ஒரு கனத்தில் உறைந்துவிட்டன போன்ற ஊணர்ச்சி ததும்பும் சிற்பங்கள் என ஒவ்வொன்றையும் சூழல் நினைவே அற்று முழுமையாக அனுபவித்துப் பார்த்துக்கொண்டிருக்கையில், திடீரென்று ஒரு மென்சோகம், விரக்தி கலந்த வெறுப்பு மனத்தைப் பீடிக்க பாதியிலேயே திரும்பி விடுதி அறைக்குள் வந்து படுத்துக் கொண்டேன். மகிழ்ச்சியாக இருக்கும் போதே வந்த இந்த மனக்குழப்பத்தின் காரணம் புரியாமல் தவித்தேன். 

அங்கே இருந்த நான்கு நாட்களும், பார்க்கும் ஒவ்வொரு சிற்பமும் முந்தைய சிற்பத்தை விட பேரழகும், முழுமையும் இருப்பதாகத் தோன்றும். "இதற்கு மேல் எதுவும் இல்லை, ஐயோ இப்படி கண்ணை குருடாக்குகிற அழகா? உயிரைக் குழைச்சு செதுக்கி இருக்கிறானே படுபாவி சிற்பி" என்று தனிமையில் வாய்விட்டு புலம்பிய படியே இருந்தேன். அமைதியாக இருப்பதை விட அந்தப் புலம்பல் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. 

பின்னர் எதேர்ச்சையாக இணையத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது இந்த விஷயம் தெரியவந்தது.

இது ஒரு வகைக் 'கலைப்பித்து'. ஆம், மகத்தானதும், அதியழகும், அற்புதமுமான கலைப் படைப்புகளையோ, இயற்கை காட்சியையோ ஒரே இடத்தில் தொடர்ந்து காண நேரும்போது, மனம் களிவெறியில் பிதற்றும் ஒரு வகை நோய்க்கூறு. இதற்கு "ஃப்ளோரன்ஸ் சிண்ட்ரோம்" என்று பெயர். இதனால் இதயம் அதிவேகமாகத் துடிப்பதும்குழப்பமும்உருவெளிக்காட்சிகளும்,  மயக்கமும் வரும்.  ஃபிரஞ்சு எழுத்தாளர் ஸ்டெண்தால் என்பவர் 1817 இல் ஃப்ளோரன்ஸ் நகரைச் சுற்றிப் பர்க்கையில், குறிப்பாக அங்குள்ள 'உஃபிஸி' கலைக்கூடத்தை (இங்கே பிக்காசோ, லியனார்டோ டவின்ஸி, மைக்கேல் ஏஞ்சலோ உள்ளிட்ட பெரும் கலைஞர்கள் அத்தனைபேரின் மிகச்சிறந்த படைப்புகளும் உள்ளது) பார்வையிடும் போது இவ்வகை அனுபவங்கள் ஏற்பட்டதாக தனது Naples and Florence: A Journey from Milan to Reggio என்னும் நூலில் பதிந்துள்ளார். அதனால் இது 'ஸ்டெண்தால் சிண்ட்ரோம்' என்றும் அழைக்கபடுகிறது. 

பின்னர் ஜெயமோகனின் ‘அருகர்களின் பாதை’ பயனக்குறிப்பைப் படித்துக்கும் போது, அவரும் ஒவ்வொரு கோயிலிலும், ஒவ்வொரு சிற்பங்களின் முன்னும், சமனர் ஆலயங்களைக் காண மலைமுகடுகளுக்கு ஏறி அங்கிருந்து விரிந்து பரந்து கிடக்கும் சமவெளியையும் பார்க்கும் போதும் ‘ஆனால் இந்த அழகுபிதற்றச்செய்கிறது இந்த பிரம்மாண்டம். இத்தனை பேரழகையும் மனிதன் எதற்காகத் தேடுகிறான்? அவனுள் இருக்கும் அழகுக்கான தாகம் இத்தனை பிரம்மாண்டமானதா என்ன? இத்தனை கட்டிய பின்னும் அது அப்படியே இன்னும் எஞ்சுகிறதா என்ன? , என்று எழுதியதை வாசித்தேன்.

அதுவே மிகச்சரியாகச் சொல்லப்பட்ட வாக்கியம் என்று தோனியது. ஒருவேளை அவருடன் பயணம் சென்றிருந்தால்  ஏதாவது ஒரு கோயிலில் நான் நிச்சயம் மனச்சமன் குலைந்திருப்பேன் என்றே நினைத்துக் கொண்டேன். இப்போது தோன்றுகிறது, அப்படியே குலைந்தால் தான் என்ன? சாதாரண மனத்தின் கற்பனை எல்லைக்கு வெளியே காலத்தைத் தாண்டி நிற்கும் அற்புதங்களின் முன் பித்தானால் தான் என்ன? பெயர், ஊர், குடி என தனது அடையாமாக எதையும் வெளிக்காட்டாமல், ஒரு புதிர்போலத் தன் படைப்புக்குள் ஒளிந்து கொண்டு வசீகரிக்கும் கலைஞனின் இருப்பை, நம் மனம் சுயத்தை மறந்து பித்து கொள்ளும் ஒவ்வொரு தருனமும் மீண்டும் மீண்டும் நியாயம் செய்யும் என்று தோன்றுகிறது.

ஃப்ளோரன்ஸில் இருந்து மிக அருகில் ஒருமணி நேரப் பயணத்தில் ‘பிஸா’ நகரம் இருக்கிறது. அங்குள்ள புகழ்பெற்ற சாய்ந்த கோபுரத்தையும், மிகப்பிரம்மாண்டமான தேவாலயத்தையும், கல்லறைத் தோட்டத்தையும், பிஸா நகர அருங்காட்சியகத்தையும் பார்த்தேன். மீண்டும் மீண்டும் பளிங்குக் கல்லின் ஆயிரம் ஆயிரம் மெய்நிகர் சிற்பங்கள். வரும் வழியில் ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் மூன்று தினங்கள் தங்கிச் சுற்றிப் பார்த்தேன். விடாது தொடர்ந்து வந்தன வெண்பளிங்குச் சிற்பங்கள். விதிவசத்தால் வரும் வினைகளை எந்த எதிர்ப்பும் இல்லாமல் தலையில் வாங்கிக் கட்டிக் கொள்வது போல, பேச்சுமூச்சின்றி சிற்பங்களிலும், ஓவியங்களிலும், கட்டுமானங்களிலும் அமிழ்ந்தேன். திரும்பத் திரும்ப உணர்ச்சிவசப்பட்டு புகழ்ந்து, வியக்க உடம்பிலும் மனசிலும் இனி திராணியில்லை. வெண் பளிங்குச் சிற்பங்களாகக் கொட்டும் வெள்ளை அருவியில் தலையை நீட்டிவிட்டது போல வெறுமனே அனுபவித்துக் கொண்டு சொல்லற்று இருந்தேன். திரும்பி பிராக் வரும் போதும், வந்த பின்னரும் நாலைந்து நாள் நகரம் பெரிய சலன ஓவியமாகவும், மக்கள் அனைவரும் அசையும் சிற்பங்களாகவும் கனவிலும் நனவிலும் குழப்பியடித்தது. வகைதெரியாத ஒரு மயக்கம். சந்தோஷமாக ஏற்றுக் கொண்டேன்.

எனக்கு அதிகம் பரிச்சயமில்லாத ஒரு மண்ணையும், மக்களையும், அவர்கள் வாழ்வையும், தொண்மங்களையும், பிரதிபலிக்கும் கலையே இந்த அளவுக்கு என்னை உள்ளிழுக்குமென்றால், ஆயிரமாயிரம் தலைமுறைகளாக என் முன்னோர் வாழ்ந்து ஊறிய மண்ணின் பண்பாட்டை, அதன் இதிகாஸ, புராணங்களை, ஐதீஙகங்களை, நம்பிக்கைகளை, தெய்வங்களைப் பிரதிபலிக்கும் கலை எனக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கும்? அது தரும் மன எழுச்சியும், நிறைவும் எவ்வளவு உணர்வுப் பூர்வமானதாக இருக்கும்? திடீரென்று என் நாட்டு மீதும், என் சொந்த ஊர் மீதும் பாசம் மிகுதியாகப் பெருகியது போல உணர்ந்தேன். என் தேசத்தின் ஒவ்வொரு மூலைக்கும் காலாற அலைந்து, அதன் செழுமையை அனுபவிக்க வேண்டும் என்று முடிவுசெய்து கொண்டேன். உண்மையில் இந்த பயணத்தின் விளைவாக என்னுள் ஏற்பட்ட முக்கிய மாற்றம் என்பதே இது தான் என்று தோன்றுகிறது.
---------
நிறைவு.

< பகுதி - 4                                                 

ரசிக்க :)

சிலை வைத்துப் பழிவாங்குறது
சிங்கத்தின் வாயில் இளஞ்சிங்கம் -டேவிட்
உதர நிமித்தம் பஹு க்ருத வேஷம்
சிலை போல வேஷம் - வயிற்றுப்பாடு


நிழல் வரைந்த மண்டபம்..

Monday, December 12, 2011

ஃப்ளோரன்ஸ் - ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தொட்டில் - (பகுதி 4)


மைக்கேலேஞ்சலோ (1475 – 1564)


ஃப்ளோரன்ஸுக்கு அருகிலுள்ள ஊரில் பிறந்தவர் மைக்கேலேஞ்சலோ. மிக இளம் வயதிலேயே அவரது கலைத்திறன் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது. ஃப்ளோரன்ஸ் வந்து டொமினிகோ கிர்லாண்டயோ என்னும் ஓவியரின் கீழ் பயின்றார். அவரால் அறிமுகப்படுத்தப்பட்டு, செல்வாக்கு மிக்க மெடிஷி குடும்பத்தின் தத்துப் பிள்ளையாக ஆனார். பொறியியல், ஓவியம், சிற்பம், கட்டிட வடிவமைப்பு, கவிதை என்னும் பல்வேறு துறைகளிலும் தனிச்சிறப்புடன் விளங்கினார். லோரென்சோ மெடிஷி இளம் மைக்கேலேஞ்சலோவின் திறமை மேல் அபார நம்பிக்கையும், அன்பும் கொண்டிருந்தார். அவரின் முதல் கலைப்படைப்புகளுக்கு ஆனையும், பொருளுதவியும் கொடுத்தவரும் மெடிஷி தான்.

பிற்காலத்தில் வளர்ந்து புகழ்பெற்று பெரும் கலைஞனாக வெனிஸ், ரோம், பொலோன்யா என்று பல இடங்களிலும் வேலை செய்து, பொக்கிஷங்களாக புகழப்படும் கலைப்படைப்புக்களை உலகில் அவரின் கலை, கற்பனை மற்றும் அறிவுத்திறனின் சாட்சியமாக நிறுவிவிட்டிருந்தார். போப் உட்பட ரோமின் முக்கியமானவர்களின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவராயிருந்தார். ரோமின் புகழ்பெற்ற புனித பீட்டர் தேவாலயக் கட்டுமானத்தில் தலைமை சிற்பி, வடிவமைப்பாளராக இருந்தார். அவர் உயிருடன் இருந்த போதே அவரின் வாழ்க்கை வரலாறு எழுதி வெளியிடப்பட்டது. ஒரு கலைஞனுக்கு அவன் வாழ்நாளில் கிடைக்கக்கூடிய அதிகபட்ச அங்கீராம் அனைத்தும் குறைவிலாது கிடைத்தது.

ஆனாலும் மைக்கேலேஞ்சலோ எப்போதும் தனித்து, உள்முகமாக ஒடுங்கியவராக, சோகம் ததும்பும் முகத்துடன் இருந்தார். பணமிருந்தும் ஏழை போல தோற்றமளித்தார். தன்னுடைய 57வது வயதில் தொமாஸோ டி காவிலியெரி என்னும் 23 வயது இளைஞன் மேல் மிகுந்த காதல் கொண்டார். அந்த இளைஞனைக் குறித்து முன்னூறுக்கும் மேற்பட்ட காதல் கவிதைகளை எழுதியுள்ளார். அந்த உறவு ஓரினச்சேர்க்கை என்று சொல்லப்பட்டாலும், மைக்கேலேஞ்சலோவைப் பொருத்தவரை ஒரு சிற்பியாக, ஓவியராக அவரது படைப்பூக்கத்தைப் பெருக்கும் - அழகான உடலை ஆராதிக்கும், தூய பிளாட்டோனிய (பாலுணர்ச்சியை மீறிய) காதல் என்றார். இறப்பதற்கு முன் அவர் வரைந்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான சிற்ப, கட்டிட மாதிரிகளை எரித்தார்.

இத்தனைக்கும் மீறி இன்றும் மறுமலர்ச்சிக் காலத்தின் அசல் முன்மாதிரியாக மைக்கேல்லேஞ்சலோவும், அவரது சம காலத்திய இன்னொரு மாமேதையான லியானோர்டோ டாவின்சியும் போற்றப்படுகிறார்கள். டேவிட், தி பியதா (The Pieta), இறுதித் தீர்ப்பு நாள் (the last Judgement), the creation of Adam, Adam and Eve in Eden garden, சிஸ்டின் சாப்பலின் மேற்கூரை ஓவியம் (முன்னூறுக்கும் மேற்பட்ட உருவங்கள் அடங்கியது – 4 ஆண்டுகள் ஆனது வரைந்து முடிக்க) என் இன்னும் எண்ணற்ற அவருடைய புகழ் பெற்ற சிற்பங்களும், ஓவியங்களும் உலகின் முக்கியமான தேவாலயங்களையும், அருங்காட்சியகங்களையும் அலங்கரிக்கிறது. மிகுந்த தெய்வபக்தியும், தீவிர கத்தோலிக்க கிறித்தவ நம்பிக்கையும் உடையவரான மைக்கேலேஞ்சலோ இரண்டு முறை கடுமையாக நோய்வாய்ப்படு ம்ரணத்தின் விளிம்பிலிருந்து உயிர் பிழைத்தார். “நான் மிகச்சாதாரனமானவன், கலையின் மூலமாக கடவுளுக்கு ஊழியம் செய்வதற்காக எனக்கு ஆயுளை நீட்டித்தந்துள்ளார்” என்றார். எண்பத்தி எட்டாவது வயதில் ரோமில் உயிரிழந்தார். அவரது இறுதி விருப்பப்படி உடல் ஃப்ளோரன்ஸுக்கு கொண்டுவரப்பட்டு, சாண்டா கிராஸ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

யாருடனும் அதிகம் பழகாத, வாழ்நாள் முழுதும் தனித்து ஒதுங்கி வாழ்ந்து மறைந்த அந்த உன்னதக் கலைஞனின் கல்லறையில் நின்ற போது எனக்குள் எழுந்த கேள்வி, எது மனிதனை உள்ளொடுங்கி, தனக்கான ஒரு உலகைக் கற்பனையில் கட்டி, அதை ஓவியமாகவும், சிலையாகவும் கலைவடிவமாக வெளிப்படுத்த வைக்கிறது? கடவுளா, தனி மனித இயல்பா, அவன் அகம் மட்டும் அறியும் இன்ப துன்பங்களின் உச்சகட்டங்களா, அவன்  விரும்பிய ஆனால் இழந்த உறவுகளா, வெளித்தெரியாத வேறு ஏதாவதா... எது கலையாகிறது?

உயர்ந்த தூண்களின் உச்சியில் வளைந்த கூம்பு விதானங்கள், அப்பால் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த வண்ணக் கண்ணாடி ஓவியத்துக்கு சூரியன் உயிர் கொடுக்க, நீண்ட பிரார்த்தனைக் கூடத்தில் சுற்றுலாப் பயணிகளின் கிசுகிசுவென பேச்சு சப்தத்துகிடையே கேமராக்கள் கண்சிமிட்ட, கல்லறையின் முன்னால் நெடு நேரம் நின்று கொண்டிருந்தேன்.   பளிங்குச் சமாதியில் குளிர்ந்த வெண் பளிங்குச் சிலையாக மூன்று பெண்கள் சோகமாகத் தலை குணிந்து அமர்ந்திருக்க உள்ளே மௌனமாக மைக்கேலேஞ்சலோ அவருக்குப் பிடித்த தனிமையில் இருப்பது போலத் தோன்றியது.
மைக்கேலேஞ்சலோவின் கல்லறை

கலிலியோ கலிலி (1564 -1642)

பிஸா நகரத்தில் பிறந்து ஃப்ளோரன்ஸ் நகரத்தில் வளர்ந்தவர் கலிலியோ. கணிதம், இயற்பியல், வானவியல், தொழில்நுட்பம், தத்துவம் என்று பல அறிவுசார் துறைகளில் மேதையாகத் திகழ்ந்து பல புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். மறுமலர்ச்சியின் அறிவியல் புரட்சிக்கு வித்திட்டவர். ஐன்ஸ்டீனால் நவீன அறிவியலின் தந்தை எனப் புகழப்பட்டவர். கோபர்நிகஸின் சூரியமையக் கோட்பாட்டை ஆதரித்ததால் கிறித்தவ மத அதிகாரபீடங்களின் எதிர்ப்புக்கு ஆளானார். பைபிளில் சொல்லப்பட்டுள்ள புவிமையவாதம் பொய், சூரியன் அசையாமல் மையத்தில் இருக்க பூமி தான் சூரியனைச் சுற்றி வருகின்றது என்றார். மதவிசாரனைக்கு உட்படுத்தபட்ட போதும் தன் கருத்துக்களில் பின் வாங்காததால் “மத நம்பிக்கைகளுக்கு எதிரான கடுமையான சந்தேகவாதி” என முத்திரை குத்தப்பட்டார். அதன்பின் வாழ்நாளின் இறுதி வரை ஃப்ளோரன்ஸுக்கு அருகிலுள்ள அவருடைய வீட்டில் சிறை வைக்கப்பட்டார். மூன்று வருடங்கள் தொடர்ந்து வாரம் ஒருமுறை பைபிளின் ஏழு பாவ மன்னிப்பு பகுதிகளையும் படிக்க வேண்டும் என தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்தக் காலத்தில் தனது அறிவியல் கண்டுபிடிப்புக்களை விளக்கி நூல்கள் எழுதினார்.  தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு 77 ஆம் வயதில் மரணமடைந்தார். முதலில் வெளியில் புதைக்கப்பட்ட அவரது உடல் பின்னர், மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு சாண்டா கிராஸ் தேவாலயத்தின் உள்ளே அடக்கம் செய்யப்பட்டு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.
கலிலியோவின் கல்லறை

கலிலியோவுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வானவியலின் பல உண்மைகளைக் கண்டுபிடித்துவிட்ட இந்தியாவின் பாஸ்கரர், இன்றும் பாஸ்கராச்சாரியர் என்று ஞானியாக, ஆசிரியராகப் போற்றப்படும் நமது பண்பாடு நினைத்து பெருமைப்படாமல் இருக்க நான் “பகுத்தறிவு” பாசறையைச் சேர்ந்த புத்திசாலிமூடனா என்ன?? தான் கண்டடைந்த உண்மையை துணிச்சலாக முன்வைத்து மதக்குருடர்களை எதிர்த்து நின்ற அறிவியல் அறிஞனுக்கு மனதார வணக்கம் செய்துவிட்டு நகர்ந்தேன்.

மக்யாவெல்லி (1469 – 1527)

ஃப்ளோரன்ஸில் பிறந்த அரசியல் தத்துவ சிந்தனையாளர். மெடிஷி குடும்பத்தை விரட்டிவிட்டு குடியரசு மலர்ந்த போது, 29 வயதில்  ஃப்ளோரன்ஸின் நிர்வாக சபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மீண்டும் மெடிஷி குடும்பம் ஃப்ளோரன்ஸைக் கைப்பற்றியபோது சிறையில் கொடுமைகள் அனுபவித்து, பின்னர் குறுகிய காலத்தில் விடுவிக்கப்பட்டார். மீண்டும் அரசியலில் தீவிரமாக ஈடுபட வாய்ப்பில்லாமல் எழுத்தில் கவனம் செலுத்தினார். அவ்வப்போது நெருங்கிய அரசியல் நண்பர்களுடன் தொடர்பில் இருந்தார். தனது புகழ்பெற்ற அரசியல் சிந்தாந்த நூலான ‘தி பிரின்ஸ்’ ஐ எழுதினார். உன்னத அரசியலுக்கும், நடைமுறைக்குச் சாத்தியமான அரசியலுக்கும் உள்ள அடிப்படையான முரனை முன்வைத்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் வழிமுறைகளைப் பேசினார். தனிப்பட்ட ஒழுக்கம், பொது ஒழுக்கம் இரண்டையும் குழப்பாமல் பிரித்துக்கொள்ள வேண்டும், எந்தப் பிண்ணனியும் இல்லாமல் ஒரு முற்றிலும் புதிய அரசனாக அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்புபவன் சில ஒழுக்க/நேர்மை மீறல்களைச் செய்தாக வேண்டும் என்றார். கற்பணையான உன்னதச் சமூகம் ஒருபோதும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் அரசனுக்கு முன் மாதிரியாக இருக்காது என்பது அவர் கொள்கை. 58 ஆவது வயதில் ஃப்ளோரன்ஸில் மரணமடைந்தார். சாண்டா கிராஸில் அடக்கம் செய்யப்பட்டு, நினைவுச் சின்னத்தில் “புகழ்ச்சிக்கு இன்னொரு சொல் ஈடில்லாத பெயருடையவர்” என்று இத்தாலியனில் பொறித்து வைத்துள்ளார்கள்.
மக்யாவெல்லியின் கல்லறை

இன்னும் ஃப்ளோரன்ஸைச் சேர்ந்த பல சிற்பிகள், ஓவியர்கள், மதகுருமார்கள், இலக்கியவாதிகள் போன்றோரின் கல்லறையும் நினைவுச் சின்னங்களும் இங்கே இருக்கிறது. தேவாலயத்தின் வெளியே உயர்ந்த பீடத்தில் பெரிய பளிங்குச் சிலை வைத்திருக்கிறார்கள் தாந்தேவுக்கு. சாகும் வரை பிரியமான ஊருக்குள் வரவிடாமல் செய்த ஃப்ளோரன்ஸ் நகரின் குற்ற உணர்வு, பாவமன்னிப்புக் கேட்டு வைத்திருப்பது போல இருந்தது. பஸிலிக்காவின் உள்ளும் புறமும் பெரும்பாலும் வெள்ளைப் பளிங்கும் பிற வண்ணப் பளிங்குக் கற்களையும் கொண்டு இழைத்திருக்கிறார்கள். உட்புறச் சுவர்களில் இருபதுக்கு இருபது அடி அளவில் எல்லாப் பக்கமும் பைபிள் காட்சிகள், ஃப்ளோரன்ஸ் வரலாற்று நிகழ்வுகள், ரோமத் தொண்மங்களை நிஜ அளவுள்ள ஓவியங்களாக வரைந்து வைத்துள்ளனர். ஒவ்வொரு தூணிலும், சிறிய ‘ஆல்டர்’களிலும் பளிங்குச் சிலைகள். இண்டு இடுக்களில் எல்லாம் ஓவியங்கள், சிற்பங்கள், போதாததற்கு மாபெரும் ஜன்னல்களில் கண்ணாடி ஓவியங்கள். வழிப்பாட்டுத் தலமாக இல்லாமலிருந்தால் இதுவும் ஒரு அருங்காட்சியகம் தான்.
சுவர் ஓவியங்கள், சாண்டா கிராஸ் பசிலிக்காவின் உள்புறம்...
சுவர் ஓவியங்கள், சாண்டா கிராஸ் பசிலிக்கா
சந்தேகத் தாமஸ்.. சாண்டா கிராஸ் பசிலிக்கா


இதமான குளிர், மரவேலைப்பாடுகள் மிகுந்த உயர்ந்த மேற்கூரை, ஒவ்வொரு படத்தின் முன்பும் ஆடாமல் நின்றெரியும் மெழுகுவர்த்திகள், அதன் முன் மண்டியிட்டு வணங்கும் வெள்ளை முகங்கள், குறிப்பாக கண்மூடி அசையாமல் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் முகம் பொண்ணாக மினுங்க, பிரார்த்தனை மரப்பெஞ்சில் உட்கார்ந்து உற்று ரசித்தேன்.

மிதமான விளக்கு வெளிச்சம் ஆரஞ்சு வண்ணத்தில் பரவிக் கிடக்க, தங்க முலாம் பூசப்பட்டுள்ள ஆல்டரும், அலங்கார வளைவுகளும், பூ வேலைப்பாடுகளும், ஓவியங்களும் ஜொலித்தது. மொத்த தேவாலயமுமே ஒரு பெரிய முப்பரிணாம ஓவியம் போலவும், அதனுள் ஒரு ஓவியக் கதாபாத்திரமாக நானும் இருப்பது போல பிரமை வந்தது.

ஒருபுறம் அதி நுணுக்கமாக செதுக்கப்பட்டு, ஆடை மடிப்புகள், பறக்கும் கூந்தல், நீட்டிய கைகள், எடுத்த பாதம் என உயிர்-நிகர் உடல் அசைவின் கனங்கள், முக பாவனைகள் என்று பளிங்குச் சிலைகள் உயிருடன் எழுந்து வருவது போலிருக்க, மறுபுறம் முகத்தில் ஏதேதோ உணர்ச்சிகள் உறைந்த பாவனையில், மூடிய இமைகளுக்குள் மெல்ல உருளும் விழிகள், சிற்பம் போல் அசையாமல் கண்மூடி பிரார்த்திக்கும் சிவந்த இதழுள்ள பெண்கள் உயிரற்ற சிலைகள் போலத் தோன்றும் முரனை எண்ணி நகைத்தபடி வெளியேறினேன்.
பெயர் மறந்து போன ஏதோ பளிங்கு தேவதை..
ஒரு பெரிய சதுக்கத்தின் முன் வானைத் துளாவும் கூம்பு வடிவ கோபுரங்களுடன் நிற்கிறது சாண்டா கிராஸ் தேவாலயம். சதுக்கத்தில் ஒரு பெண் தெருக்கலைஞர் தனியளாக நின்று வயலின் வாசித்தபடி கீச்சுக் குரலில் ஏதோ பாடிக் கொண்டிருந்தாள், நெளிந்து நெளிந்து மேலேறி குரல் உச்ச சுருதியில் எங்கோ உயரத்தைத் தொட்டபோது எதுவோ கைதவறி விழுந்து உடையப் போவது போல் எனக்குப் பதட்டமாக இருந்தது. வயலின் கம்பியின் நாதம் எது, அவள் குரல் எது என்று பிரித்தறிய முடியவில்லை. அவள் அப்படியே குரலை நீட்டிப் பிடித்து கொஞ்சம் மேலேயே தங்கிவிட்டு பின் அழகாக வழுக்கிக் கொண்டு இறங்கி வந்து இயல்பான குரலில் பாடினாள். பாடி முடித்ததும் கூடி இருந்தவர்கள் பலத்த கைதட்டலில் உற்சாகப் படுத்தினார்கள். சுற்றிலும் இருந்த பெரிய கட்டிடங்களில் குரல் எதிரொலித்து அவள் பாடுவதை வெட்டவெளியிலும் நன்றாகக் கேட்கக் கூடிய ஒலியமைப்பை உண்டாக்கியது.

சுற்றிலும் சிறிதும், பெரிதுமான பரிசுப்பொருட்கள் விற்கும் கடைகள், காபிக் கடைகள். பளீரென்ற வெளிச்சம், நீல வானம். சுற்றுலாப் பயனிகளுக்கேற்ற காலநிலை. மக்கள் உற்சாகமாகக் கூட்டம் கூட்டமாக பேசிச் சிரித்தபடி நகர்ந்து கொண்டிருந்தார்கள். எனக்கு சட்டென்று ஐநூறு ஆண்டுகள் முன்னால் வந்து குதித்தது போலிருந்தது. ஒரு கோகோ–கோலா வாங்கிக் குடித்து 2011 க்கு வந்தேன்.


பகுதி-3                                                            பகுதி-5

Saturday, December 3, 2011

ஃப்ளோரன்ஸ் - ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தொட்டில் - (பகுதி 1)




அக்டோபர் இறுதியில் ஒரு அறிவியல் கருத்தரங்கில் கலந்துகொள்ள இத்தாலியிலுள்ள ஃப்ளோரன்ஸ் நகரத்திற்குச் சென்றேன். பிராக்கில் இருந்து வியன்னா, வெனிஸ் வழியாக நீண்ட ரயில் பயணம். ஐரோப்பாவில் விமானப்பயணத்தை விட மிகவும் சௌகரியமானது ரயில் பயணம். ஏசுவைப் போல ரெண்டு கையையும் நீட்டி ‘நம்புங்க துரை..நான் அப்படிப்பட்டவனில்லீங்க’ என்று சாட்சியம் சொல்லும் பாதுகாப்பு சோதணை கிடையாது, கூட்டம் இருக்காது, அமரவும் கால் நீட்டிக் கொள்ளவும் வசதியான நல்ல அகலமான இருக்கைகள், விமானத்திற்கு இணையான துயமையான கழிவறை வசதிகள், வண்டி ஓடும் தடதட சத்தமே இல்லாமல் இருக்கும் அமைப்பு, உள்ளே புகைபிடித்து அடுத்தவர்களுக்கு கேன்சர் அன்பளிப்பு அளிக்க அனுமதியில்லை, நிலப்பரப்புகளை நன்றாக காணும்படியான அகலமான கண்ணாடி ஜன்னல்கள்... என்ன ஒன்று நம் ஊர் போல உடனே பேசக்கிளம்பி இறங்கும் போது, ‘மறக்காம மெயில் பண்ணுங்க’ என்று ஆரத்தழுவிப் பிரியும் ‘ரயில் ஸ்னேகம்’ உருவாகும் வாய்ப்பு இல்லை. நேரம் பெரியவிஷயம் இல்லை என்றால், பேச்சுத் துணைக்கு ‘ஆள்’ இருந்தால் அல்லது ‘பராக்கு’ பார்ப்பதிலும், தண்டிதண்டியான புத்தகத்துள் முகம் புதைத்து மூக்கால் உழும் பழக்கமும் இருந்தால் ரயில் பயணமே சுகமானது.

ஃப்ளோரன்ஸ்

அழகிய ‘ஆரன்’ நதியின் கரையில் அமைந்திருக்கும் ஃப்ளோரன்ஸ், இத்தாலியின் துஸ்கானி மாகாணத்தின் தலைநகரம்,. இத்தாலிய மொழியில் ‘ஃபியரென்ஸ்’ என்றும் லத்தீனில் ‘ஃப்ளோரென்ஸியா’ என்றும் அழைக்கப்படுகிறது.

நகரத்தின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மையப் பகுதி முழுவதும் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. ஒரு நகரம் ஒட்டுமொத்த பகுதியும் உலகப் பொக்கிஷமாகக் கருதப்படும் அளவிற்கு என்ன சிறப்பு அங்கே இருக்கிறது?

ஃப்ளோரன்ஸ் – இத்தாலி மற்றும் மொத்த ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலகட்டத்தின் (Renaissance) பிறப்பிடம். பதினாலாம் நூற்றாண்டில் ஃப்ளோரன்ஸிலிருந்து தான் அறிவியல், தத்துவம், சமயம், அரசியல், இசை, ஓவியம் என எல்லா துறைகளிலும் ஒரு கலாச்சாரப் புரட்சி அலை கிளம்பி ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் 17ஆம் நூற்றாண்டு வரை அதன் அனைத்துத் தளங்களிலும் புதிதாகப் புரட்டிப் போட்டது.

ஃப்ளோரன்ஸில் வாழ்ந்த மேதைகளின் பட்டியலைப் பார்த்தால் மலைப்பு வரும், அதுவே அந்நகரம் ஏன் ஐரோபிய வரலாற்றில் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் விளக்கும். சுருக்கமான ஒரு பட்டியல்: பலதுறை மாமேதையான லியனார்டோ டாவின்சி, கலைமேதை மைக்கேல் ஏஞ்சலோ, அரசியல், தத்துவ சிந்தனையாளர் மாக்கியவில்லி, ஐரோப்பாவின் தலைசிறந்த கவியான தாந்தே, வானவியலாளர் மற்றும் தத்துவவாதியான கலிலியோ கலிலி, செவிலியர்களின் முன்மாதிரியான ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் என்று இன்னும் நீண்டு கொண்டே போகிறது.

மெடிஷி குடும்பம்

ஃப்ளோரன்ஸைச் சேர்ந்த ‘மெடிஷி’ என்னும் பிரபுக்குடும்பம் ஐரோப்பா முழுமையிலும் செல்வாக்குடன் இருந்திருக்கிறது. அந்த ஒற்றைக் குடும்பத்தில் இருந்து மட்டுமே நான்கு கத்தோலிக்க ‘போப்’கள் உருவாகியிருக்கின்றனர், இரண்டு ஃபிரெஞ்சு அரசிகள் மற்றும் ஆஸ்திரிய நாட்டின் மன்னரின் பட்டத்தரசி இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். ஃப்ளோரன்ஸின் நுண்கலைகள் மற்றும் கட்டிடக்கலைக் கலைஞர்களை ஆதரித்து கலைகளின் வளர்ச்சிக்கும் பரவலுக்கும் காரணமானவர்களும் இந்தக் குடும்பத்தினர் தான். வங்கித்துறையில் நுழைந்து அரசியல், மதம் என மெல்ல மெல்ல வளர்ந்த சாதாரண விவாசாயக் குடும்பம் இது.  ஃப்ளோரன்ஸை மையமாக்கி 14-18 ஆம் நூற்றாண்டு வரையில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர்களாக இருந்திருக்கிறார்கள். கடைசியில் 18ஆம் நூற்றாண்டில் வாரிசில்லாமல் முடிவுக்கு வந்திருக்கிறது மெடிஷி குடும்பம்.

புனித மேரி கதீட்ரல் (Cathedral of St. Mary of the Flower)

13ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்து படிப்படியாக 15ஆம் நூற்றாண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த கிறிஸ்தவ ஆலயம் முழுவதும் பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இதன் கவிந்த அரைக்கோள வடிவ மையக்கும்மட்டம் ஒருகாலத்தில் உலகின் மிகப்பெரிய கும்மட்டமாக இருந்துள்ளது. 

அகலமான உயர்ந்த வாயில்களின் இருபக்கத்தையும் அலங்கரிக்கும் சுருள் வடிவ பளிங்குத் தூண்கள் கவனிக்கப்படவேண்டியது. ஒவ்வொரு சுருள் வடிவமும் வேறுபட்டவை. இடையில் வெவ்வேறு நிற பளிங்குக்கல்லை இழைத்து எப்படி இந்தச் சுருள் வடிவங்களை வடித்தார்களோ சிற்பிகள்? 









காலை மற்றும் மாலையில் இளஞ்சூரியன் வண்ணக்கிரண விரல்களால் இந்த பளிங்கு ஆலயத்தின் சுவர்களில் வருடி விளையாடும் காட்சியும், இரவில் முழுநிலவு மௌனமாக குளிர் வெண் ஒளியைப் பொழிந்து வட்ட முகம்மலர விண்ணிலிருந்து ரசித்திருப்பதையும் கண்டபோது ஒருவித பரவசம் மனதைக் கரைத்தது.








முன்பக்கத்தைத் தவிர மற்ற பக்கங்கள் அழுக்கும் பிசுக்கும் படிந்து பளிங்கின் பளபளப்பு மங்கிக் கிடந்தது. ஒரு வயதான அமெரிக்கர் என்னிடம், “இது பரவாயில்லை இருபது வருடம் முண்டு நான் வந்த போது இதைவிடக் கேவலமாக இருந்தது” என்றார். புதுப்பிக்கும் பணி மிகுந்த பொருட்செலவில் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.




சைனோரியா சதுக்கம்

வெக்ஹியோ அரண்மனை
ஃப்ளோரன்ஸின் மையத்தில் அமைந்துள்ள இந்தச் சதுக்கத்தில் ‘வெக்ஹியோ அரண்மனை’ (Vecchio palace) மற்றும் அழகிய மேற்கூரை வளைவுகள் கொண்ட சைனோரிய அரங்கம் இருக்கிறது. இங்கிருக்கும் சிலைகள் ஒவ்வொன்றும் ஒரு அற்புதம். எல்லாம் பளிங்குச் சிலைகள் சிலையின் முப்பரிணாம வடிவத்தின் அனைத்து சாத்தியங்களையும் உச்சபட்ச திறமையுடன் பயன்படுத்தியுள்ளார்கள். 360 கோணமும் சுற்றி வந்து நுணுக்கமாக ரசித்தால் மட்டுமே கலைஞனின் உழைப்புக்கும், திறமைக்கும் மதிப்புக் கொடுத்த்தாகும். எல்லாம் கிரேக, ரோம தொண்மங்களில் இருந்து எடுக்கப்பட்ட சம்பவங்கள், சிலையாக உறைந்து நூறாண்டுகள் தாண்டி நிற்கின்றது. 

பாலிக்சீனாவின் பலி

ட்ரோஜான் போர் முடிந்ததும், அக்கிலிஸின் ஆவி கிரேக்கர்களின் முன் தோண்றி, அவர்கள் கப்பல் மீண்டும் ஹெல்லாஸ் சென்றுஅடைய காற்று வீச வேண்டுமானால் மனித பலி கொடுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறான். அக்கிலிஸின் கல்லறையில் கன்னியான பாலிக்ஸீனாவைப் பலி கொடுக்க வேண்டுமென்கிறான். பாலிக்ஸீனா அடிமையாய் சாவதைக் காட்டிலும் பலியாய் மடிவதை விரும்புகிறாள். அக்கிலிஸின் மகன் நியோப்டோலமஸ் அவள் கருத்தை அறுத்துக் கொல்கிறான். பாலிக்ஸீனாவின் தாய் ஹெக்குபா தனது மகளின் முடிவை என்னிக் கண் கலங்குகிறாள்.ஹோமரின் இலியட்டில் இந்தக் கதை வரவில்லை, என்றாலும் யூப்ரிடிஸ் என்பவர் எழுதிய ட்ரோஜான் பெண், ஹெக்குபா என்னும் நாடகங்களில் வருகிறது. பியோ ஃபெடி என்னும் சிற்பி மனத்தில் கண்டதை பளிங்கில் அற்புதச் சிலையாக உருவாக்கி நிறுத்தியிருக்கிறான் சைனோரிய சதுக்கத்தில். சிலைகளின் முகத்தில் உணர்ச்சிகள், ஆடை, கூந்தல் ஆகியவற்றின் நுண்மையான, தத்ரூபமான செதுக்கல், கடைசிப் படத்தில் ஹெக்குபாவின் கண்ணில் இருந்து கண்ணீர்த் துளி வருவதைக் கூட செதுக்கியிருக்கிறான் மகாகலைஞன்!!





ஆடை மற்றும் கூந்தல் இழைகளின் நுணுக்கம்...
கண்ணீர்த் துளியை கவணிக்கவும்...



                                                               பகுதி - 2