Sunday, December 11, 2011

ஃப்ளோரன்ஸ் - ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தொட்டில் - (பகுதி 3)


சாண்டா கிராஸ் தேவாலயம்
சாண்டா கிராஸ் பசிலிக்கா, ஃப்ளோரென்ஸ்
ஐரோப்பிய கிறிஸ்தவ மதவரலாற்றில் மிகமுக்கியமான ஆளுமையாகப் போற்றப்படும் புனித ஃபிரான்ஸிஸ் (12-13ஆம் நூற்றாண்டு) தோற்றுவித்ததாகச் சொல்லப்படும் சாண்டா கிராஸ் பசிலிக்கா, பதிமூன்றாம் நூற்றாண்டில் இறுதியில் மீண்டும் முழுவதும் வெள்ளைப் பளிங்கினால் கட்டப்பட்டு, படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டு பொ.வ.1442ல்  போப் நாலாம் யூஜீனால் திறந்து வைக்கப்பட்டது.  ஃப்ளோரன்ஸ் நகரின் முக்கியமான வரலாற்றுச் சின்னம் இந்த தேவாலயம். இங்கு தான் மறுமலர்ச்சிக் காலத்தைக் கட்டியெழுப்பிய மைக்கேல் ஏஞ்சலோ, மாக்கியவில்லி, கலிலியோ உட்பட பலரின் பூத உடல் புதைக்கப்பட்டுள்ளது.

Interior - Santa Cross Basillica, Florence
இவர்கள் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் இந்நகரத்தின் வரலாற்றிலிருந்தும், கலாச்சாரப் புரட்சிக்கான அவர்களின் பங்களிப்பிலிருந்தும் பிரிக்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொருவரும் மிகுந்த நுண்ணுணர்வும், மிக மெல்லிய இதயமும் கொண்ட படைப்பாளிகள். அவர்களின் சொந்த இன்ப துன்பங்களின் தாக்கம் தான் அவர்களது கலை வெளிப்பாடு. அது தான் மறுமலர்ச்சியின் வேர். இவர்கள் ஃப்ளோரன்ஸில் வாழவும், வெளியேறவும் காரணமாயிருந்த நிகழ்வுகள் ஒருவகையில் மறுமலர்ச்சி வெளியில் பரவவும் காரணமாயிருந்தது. இவர்களின் வாழ்க்கைக் குறிப்பை அறிந்து கொள்வதே ஃப்ளோரன்ஸ் நகரை, அதன் பொக்கிஷங்களைத் தங்கள் அகத்திலிருந்து உருவாக்கி அளித்த கலைஞர்களின் ஆத்மாவோடு சேர்த்து முழுமையாக அறிந்து கொள்வதாகும்.

தாந்தே (1265 – 1321)

தாந்தேயின் சிலை....
ஐரோப்பாவின் மகாகவியாகப் போற்றப்படும் தாந்தே அலிகியெரி பிறந்தது ஃப்ளோரென்ஸில். அப்போது ஐரோப்பாவில், குறிப்பாக இத்தாலியில் உச்சத்திலிருந்த போப்பரசர் ஆதரவாளர்கள் மற்றும் புனிதரோமாபுரிப் பேரரசரின் ஆதரவாளர்களுக்கு இடையில் தொடர்ந்து அதிகார மோதல்கள் ஏற்பட்டது. போப்பின் ஆதரவாளர்கள் ‘கெல்ஃப்’ என்றும், ரோமப் பேரரசரின் ஆதரவாளர்கள் ‘கிப்பெல்லைன்’கள் என்றும் அழைக்கப்பட்டனர். தாந்தே கெல்ஃப்களின் சார்பாகப் போர்களில் பங்கு பெற்றார். 


போப்பின் ஆதரவாளர்களான கெல்ஃப்கள் வென்றனர், பின்னர் அவர்களுக்குள்ளேயே பிளவு ஏற்பட்டது. ஃப்ளோரன்ஸ் நகரத்தின் நிர்வாகத்தில் போப்பின் முழுத்தலையீடும் வேண்டும் என்று நினைத்தவர்கள் ‘கருப்பு கெல்ஃப்கள்’ என்றும், ரோமின் அதிக தலையீடில்லாத சுதந்திரமான ஃப்ளோரன்ஸை ஆதரித்தவர்கள் ‘வெள்ளை கெல்ஃப்கள்’ என்றும் பிரிந்து மோதிக்கொண்டனர். இப்போது தாந்தே வெள்ளை கெல்ஃப்கள் பக்கம் இருந்தார். முதலில் ஜெயித்த வெள்ளை கெல்ஃபுகளை பின்னர் ரோமிலிருந்து வந்த போப்பின் படை வென்று துரத்தியது. அந்தச் சமயம் அமைதி உடன்படிக்கைக்காக ரோமில் போப்பைச் சந்திக்கச் சென்றிருந்த தாந்தேவை ஃப்ளோரன்ஸில் இருந்து இரண்டு வருடங்களுக்கு நாடு கடத்தப்பட்டதாக அறிவித்து, பெரிய தொகையையும் அபராதமாக விதித்தனர் புதிய ஆட்சியர்கள். மீறி ஃப்ளோரன்ஸ் நகரத்தில் கால் வைத்தால் உயிருடன் கொளுத்தப்படுவார் என்றூம் எச்சரித்திருந்தனர். பின்னர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டால் அனுமதி தரப்படும் என்ற போது அதை நிராகரித்து வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்தார்.


தனது பிரியத்திற்குரிய நகரமான ஃப்ளோரன்ஸுக்கு தான் திரும்பவே முடியாதென்ற ஏக்கம் அவர் இறப்பு வரை இருந்தது. மேலும் அவரது இளமையில் 9 வயதான போதே பீட்ரைஸ் என்னும் சிறுமியை கண்டவுடன் காதல் வந்திருந்தது. பீட்ரைஸ் வளர்ந்து இளம்பெண்ணான போது அவர் காதலும் வளர்ந்தது, அடிக்கடி ஃப்ளோரன்ஸ் நகரத் தெருக்களில் சந்திருக்கிறார். 

ஆனால் தாந்தேயின் பெற்றோர் அவர் 12 வயதாக இருக்கும்போதே இன்னொரு பெண்ணுக்கு மணம் முடிப்பதாக ஒப்பந்தம் செய்து விட்டனர். பின்னர் அவரையே திருமணம் செய்து கொள்ளவேண்டியிருந்தது. ஐரோப்பாவிலும் அந்தக் காலத்தில் பால்ய விவாகம் இருந்திருக்கிறது! வெகு இளம் வயதிலேயே பீட்ரைஸ் இறந்ததும் தாந்தேயின் கவிமனதை ஆழமாகப் பாதித்தது. இந்தக் காலங்களில் ஃப்ளோரன்ஸுக்கு வெளியில் தான் தனது உலகப் புகழ்பெற்ற ‘டிவைன் காமெடி’ என்கிற கவிதைக் காவியத்தை இயற்றினார்.

பீட்ரைஸின் உருவமும், அவரது இளம் வயது காதல் நினைவுகளும் மீண்டும் மீண்டும் தாந்தேயின் மனத்தில் எழும்ப, அந்த எழுச்சியினால் உந்தப்பட்டு எழுத அரம்பித்தது தான் டிவைன் காமெடி. தாந்தே தன்னையே கதாப்பாத்திரமாக உருவகித்துத் தான் இறந்து நரகத்திற்கும், பின்னர் சிறிய தண்டனை/ பக்குவப்படுத்தல் காலத்தைக் கடந்து, கடைசியாக சொர்க்கத்திற்குச் செல்வதையும் மிக நுணுக்கமான, ஆழந்து தத்துவார்த்தமாகப் பொருள் கொள்ளும் விதத்தில் எழுதி, அதன் வழியாக ஒவ்வொரு மனிதனின் ஆன்மீகமான வாழ்க்கைப் பயணத்தை காவியமாக்கினார். 

அவரது காவியமே இத்தாலியன் மொழி உண்டாகி வளரக் காரணம். இத்தாலியன் மொழியையே ‘தாந்தேயின் மொழி’ என்று குறிப்பிடும் வழக்கம் இருந்தது. கடைசி வரை தான் மிகவும் விரும்பிய தன் சொந்த ஊருக்குப் போக முடியாமலேயே 1321ல் ராவென்னா என்னும் ஊரில் மரணமடைந்தார். அங்கேயே அவரது உடல் புதைக்கப்பட்டது. பின்னர் ஃப்ளோரன்ஸ் தவறை உணர்ந்து, அவரது உடலின் மிச்சங்களைப் பலமுறை கேட்டும் ராவென்னா சபை மறுத்துவிடவே, ஃப்ளோரன்சின் சாண்டா கிராஸ் தேவாலயத்தில் தாந்தேயின் நினைவு ஸ்தூபம் அமைக்கப்பட்டு, அந்த வெற்று நினைவுச் சினத்தின் மேல் “காலத்தின் மிகச்சிறந்த கவிக்கு, மரியாதையுடன்...’ என்று அவரது காவியத்திலிருந்தே வரியை மேற்கோள் எடுத்து பொறித்துவைத்துள்ளனர்.
தாந்தேயின் நினைவுச் சின்னம், சாண்டா கிராஸ் தேவலயத்தினுள்....


பகுதி-2                                                          பகுதி-4

No comments:

Post a Comment

உங்கள் எண்ணங்கள், விமர்சனங்களைப் பகிர்ந்துகொள்ள...