Monday, July 25, 2011

மூன்று கவிதைகள்





பெய்யெனப் பெய்யும்...

உறங்கி விழித்தேன்
முன்னிரவில்
மழை பெய்திருக்க வேண்டும்
என் பங்கை
வாங்கி வைத்திருந்து 
தலையில் தெளித்துச் 
சிரித்தது 
நான் நட்ட வேம்பு!




அறிதல்

காலம்....
முடிவற்ற பெருங்கடலாய்
அகன்ற பிரவாகமாய்
குறு நதியாய்
ஓடையாய்
சிற்றோடையாய்
துளிகளாய்
துளியாய்
என்
உள்ளங்கையில்
நின்றபோது
உணர்ந்தேன்
நானே அதுவென்று!


















சிந்தனை

உங்கள் 
கணத்த சுவர்களுள்ள 
சதுர அறைகளுக்குள்
திட்டவட்டமாக 
நான்கு திசைகள் உண்டு.
என் 
வட்டக் கூடாரத்திற்கோ
எல்லாமே திசைகள் தான்
அல்லது - 
திசைகளே கிடையாது.













- பிரகாஷ் சங்கரன்.

No comments:

Post a Comment

உங்கள் எண்ணங்கள், விமர்சனங்களைப் பகிர்ந்துகொள்ள...