Showing posts with label ஜெயமோகன். Show all posts
Showing posts with label ஜெயமோகன். Show all posts

Friday, July 18, 2014

உடலைக் கடந்த இருப்பு

ஐம்புலன்களின் வழியாகவே மனிதனுக்கு அறிதல் சாத்தியமாகிறது. புலன்களோ உடலுள் பொருந்தியவை. எனவே ‘நான் அறிகிறேன்’ என்று அறியும் தூய தன்னுணர்வு இந்தப் பரு உடலுக்குக் கட்டுப்பட்டது. இப்போது, உடல் மனிதனுக்கு அறிதலின் பாதைகளை நோக்கித் திறந்திருக்கும் வாசலா அல்லது புலன்களைச் சார்ந்தே இருப்பதால் உடல் அறிதலின் பரப்பைக் கட்டுப்படுத்தும் வேலியா? உடலைக் கடந்து மனிதனின் தன்னுணர்வு தன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா? அவ்வாறு முடியுமென்றால் அறிதலுக்கு வாய்ப்பே இல்லையா அல்லது நேரெதிராக அறிதல் எல்லைகளற்று விரிந்துவிடுமா?
அறிதலில் பரவசமும், தன்னுணர்வின்/இருப்பின் இயல்பைக் குறித்த தேடலும் கொண்ட அனைவருக்கும் எழும் வினாக்கள் இவை. Transcendence என்கிற ஆங்கிலத் திரைப்படம் இக்கேள்விகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட அறிவியல் புனைவு திரைப்படம். 2014, ஏப்ரல் மாதம் வெளியானது. படத்தின் கதைத்தளத்தை இங்கே படித்துக்கொள்ளலாம்.
transcendence
தொழில்நுட்ப வளர்ச்சியை எதிர்க்கும் கும்பலால் சுடப்படும் விஞ்ஞானி கேஸ்டர் ஒருமாதத்தில் இறந்துவிடுவார் என மருத்துவர்கள் கூறிவிடுகிறார்கள். கேஸ்டரின் உடல் அழிவதோடு அவரது தன்னுணர்வும், இருப்பும் ஒட்டுமொத்தமாக அழிந்துவிடுமா? நேரடியான தத்துவ விவாதங்கள் இல்லாவிட்டாலும் கட்டுரையின் தொடக்கத்தில் நாம் எழுப்பிக்கொண்ட கேள்விகளின் அடிப்படையில் இந்தச் சிக்கலை அணுகி, தொழில்நுட்பமும் தத்துவமும் சந்திக்கும் புள்ளியில் ஒரு தீர்வைக் கண்டுகொண்டு அடுத்தகட்டத்தை நோக்கி கதையை கொண்டு சென்றிருக்கும் விதமே இந்தப் படத்தைச் சிறப்பானதாக ஆக்குகிறது.
கேஸ்டர் என்னும் ஆளுமை உயிர்வேதிப் பொருட்களாலான அவரது உடலா அல்லது அதனுள் உறையும் தன்னுணர்வா? இந்தக் கேள்விக்கு தத்துவார்த்தமான பதில் ‘உடலல்ல, அவரது தன்னுணர்வு தான் அவர்’ என்பதே. தன்னுணர்வின் விளைவே அவரது சிந்தனைகள். பௌதிக இருப்பிற்குக் காரணமான மனித உடலில், சிந்தனைகளின் நிகழ்களமாக இருப்பது மூளை. மூளையில் சிந்தனைகள் மின்காந்த அலைகளாக செயல்படுகின்றது. ஆக, இந்த மின்காந்த அலைகளை -அவை இயங்குவதற்கு ஏற்ற இன்னொரு தளத்திற்கு மாற்றும் தொழில்நுட்பம் இருந்தால், ஒருவரது தன்னுணர்விற்கு உடலைக் கடந்த இருப்பை அளிப்பது சாத்தியம். கேஸ்டர் ஏற்கனவே செய்திருந்த மற்றொரு ஆராய்ச்சியின் அடிப்படையில் அவரது மனைவியும், விஞ்ஞானியுமான எவலின் இன்னொரு நண்பரின் துணையுடன் இதைச் செய்கிறார். கேஸ்டரின் மூளையை மின்னணு இணைப்புகள் மூலம் குவாண்டம் கணிப்பொறியுடன் இணைத்து அவரது தன்னுணர்வை வெற்றிகரமாக மின்னணு சமிக்ஞைகளாக்கி இணையத்தில் ஏற்றிவிடுகிறார்.
உடல் அழிந்தாலும் கேஸ்டரின் தன்னுணர்வு கணிப்பொறிக்கு கடத்தப்பட்டதால் அழியாமல் இருக்கிறது. இங்கே அடுத்த கேள்வி எழுகிறது, புலன்களை இழந்த தூய தன்னுணர்விற்கு ஊடகம் இல்லாததால் இனி அறிதலும், இயக்கமும் சாத்தியமில்லையா? செயலற்று வெறுமனே எஞ்சி இருப்பது தான் அதன் ‘இருப்பா’? மறுபடியும் தொழில்நுட்பம் கைகொடுக்கின்றது. உடலைக் கடந்த கேஸ்டரின் தன்னுணர்வு, இதுநாள் வரையிலான மனிதனின் அறிதல்கள் பதிவுசெய்யப்பட்ட தொகுப்புவலையான இணையத்தில் கலந்ததும் எந்தத் தடங்கலும் இன்றி அத்தனையையும் அறிகிறது. உண்மையில் உடலையும், புலன்களையும் இழந்தது அறிதலுக்கான முடிவற்ற சாத்தியங்களைத் திறந்துவிடும் வரமாகிறது!
மனிதனின் இருப்பு என்பது அவன் உடல் சார்ந்ததா அல்லது தன்னுணர்வு சார்ந்ததா என்னும் ஆழமான கேள்வியை அடித்தளமாகக் கொண்டு, தன்னுணர்வை உடலைக் கடந்து இருக்கச்செய்தல் என்ற இடத்திற்கு தொழில்நுட்பத்தின் உதவியுடன் வந்ததும் கதை வழக்கமான ஹாலிவுட் பாணியில் தொழில்நுட்பத்தை முழுவீச்சில் எடுத்துக்கொண்டு வேறு திசையில் பயணிக்கிறது. கேஸ்டர் புதிய நேனோ துகள்களை உருவாக்கி, மருத்துவம், சூழியல் பாதுகாப்பு, உயிரியல், ஆற்றல் என அனைத்து துறைகளிலும் அசாத்தியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறார். கண்முன் கணவன் கொஞ்சம் கொஞ்சமாக இறப்பதை தாங்கமுடியாததால், ஏதேனும் ஒருவகையில் அவரது இருப்பை நீட்டிப்பதே எவலினின் எண்ணம். கேஸ்டரின் தன்னுணர்வு இவ்வளவு வேகமாக அனைத்தையும் அறியும் என்பது அவளே கூட கொஞ்சமும் யூகித்திராதது. ஒருகட்டத்தில் அவளே கேஸ்டரை அஞ்சுகிறாள்.
ஹாலிவுட் அறிவியல் புனைவுத் திரைப்படங்களின் பொதுவழக்கம், அபாரமான ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை அந்த விஞ்ஞானியோ அல்லது அதிகாரத்தை விரும்பும் வேறு யாரோ அழிவுக்குப் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். நாயகன் அந்த யாரோவையும் கூடவே அந்தக் கண்டுபிடிப்பையும் அழித்து நியூயார்க்கில் இருந்தபடியே உலகைக் காப்பாற்றுவார். டிரான்செண்டன்ஸ் நல்லவேளையாக அந்த ரட்சகப் பெரியண்ணனைக் கொண்டுவரவில்லை. மாறாக, தொழில்நுட்பம், தத்துவம் எல்லாவற்றில் இருந்தும் விலகி சாமான்யர்களின் உளவியலுக்கு, யதார்த்தத்துக்கு வருகிறது. சாமானியன் அறிவை அஞ்சுகிறான். அறிவாளியை உள்ளூர வெறுக்கிறான். அதற்காக அவன் உருவாக்கும் சமாதானங்கள்தான் அவனது இருப்பை நியாயப்படுத்தும். எல்லைகளற்ற அறிவு வாய்க்கப்பெற்ற ஒருவன் ஒருவேளை நன்மை செய்யக்கூடும் என்கிற ஒரு நல்லெண்ண வாய்ப்பே யாரும் தருவதில்லை, அவன் கண்டிப்பாக அழிவு சக்தியாகத் தான் இருப்பான் என்கிற பொதுப்புத்திதான் ஜெயிக்கிறது. கேஸ்டரின் காதல் மனைவி கூட ஒரு நம்பிக்கைக் கீற்றை அவனிடம் காட்டவில்லை. அவளே அவரை அழிப்பதற்கும் கூட துணை போகிறாள்.
படமாக்கலில் உள்ள சில தர்க்க ஓட்டைகள், இன்னபிற காரணங்களால் படம் பெரிய அளவில் வசூலில் வெற்றி பெறவில்லை. இன்செப்ஷன் முதலிய படங்களின் இயக்குனரான கிறிஸ்டோஃபர் நோலனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான வாலி ஃபிஸ்டர் இயக்கிய முதல் திரைப்படம் இது. கிறிஸ்டோஃபர் நோலன் படத்தயாரிப்பிலும் பங்களித்திருக்கிறார். இப்படத்தின் திரைக்கதை படமாக்கப்படுவதற்கு முன்பே மிகச்சிறந்த திரைக்கதையாக பிரபலமானது. இவையெல்லாம் இப்படத்தைக் குறித்த எதிர்பார்ப்புகளைக் கிளப்பியிருந்தாலும், படத்தின் வெள்ளோட்டத்தைப் பார்த்ததில் இருந்து இப்படத்தினைக் குறித்த எனது ஆர்வத்திற்குக் காரணம் ஒரு சிறுகதை.
2001ம் ஆண்டில் ஜெயமோகன் எழுதிய ‘கரிய பறவையின் குரல்’ தான் அந்தச் சிறுகதை. விபத்தில் துண்டிக்கப்பட்ட தன் கால்கள் கண்ணெதிரே எரிக்கப்பட்டதைக் கண்டாலும், வெட்டி அகற்றப்பட்ட -இல்லாத காலில் வலியிருப்பதாக மிகத் துல்லியமாக உணரும் கதை சொல்லி, தன் மூளையில் வெட்டப்பட்ட கால் அழுத்தமான ஒரு உணர்வாக உயிர்ப்புடன் மிச்சமிருப்பதை உணர்ந்து துணுக்குறுகிறான். தொடர்ந்து சிந்திக்கிறான். கால் இல்லாத போது மூளையில் கால் அருவமாக முழு உணர்ச்சிகளுடன் எஞ்சியிருக்கும் என்றால், ஒவ்வொரு அங்கமாக வெட்டப்பட்டாலும், முழு உடலே இல்லாமல் ஆனாலும் மூளையை மட்டும் அழியாமல் பத்திரப்படுத்தினால் அதில் முழு உடலின் அமைப்பும், உணர்ச்சிகளும் அப்படியே இருக்கும். தொழில்நுட்பம் வளர்ந்தால், இந்த மூளையின் நரம்பணு வலையுடன் உரையாடும் மின்னணு இணைப்புகளுடன் ஒரு ‘உடலை’த் தயாரித்துவிட்டால் போதும், முழு தன்னுணர்வுடன் புதிய உடலில் இருக்கலாம். அப்படியே உடல்களை மாற்றிக் கொண்டே போகலாம். அழிவே இல்லை!
 DSC03214-4
அடுத்த கேள்வி இன்னும் ஒரு அடுக்கு உள்ளே. மூளை என்பது இந்த புரோட்டீன் சதைப்பிண்டமா அல்லது அதன் மின்காந்த அமைப்பா? கால் சூட்சும வடிவில் இருக்கமுடியுமென்றால் மூளையும் சூட்சும வடிவில் இருக்கமுடியும்! பின்னர் அடுத்த கேள்வி, ‘மூளையின் மின்காந்த அலைகளின் அமைப்பைத் தீர்மானிக்கும் சூத்திரம் எது? நான் என கூறிக்கொள்ளும் எண்ணங்கள், கனவுகள், உணர்வுகள், உணர்வுகள் மூலம் அடையும் உடல், உடல் மூலம் அறியும் உலகம் அனைத்துமே அந்த சூத்திரம் தான். டி.என்.ஏ யில் தான் அந்த சூத்திரம் உள்ளது. அது கண்ணுக்குத் தெரியாத அச்சு, கருத்துருவாக கருவுக்குள் நுழைகிறது. தன் தேவைக்காக இந்த உடலை உருவாக்கிக் கொள்கிறது. அந்த அச்சு மூளையில் இருக்கும், அதற்கு அழிவில்லை. ஆனால் நான் என்பது அந்த நிரந்தரமான அச்சா அல்லது இந்த உடல் என்னும் நகல் மட்டுமா?
இன்னும் ஆழமான கேள்விகள் அடுத்து. உயிர் வாழ வேண்டும் என்கிற ஆதார வேட்கை படைப்புத் தொடரை நிலைநிறுத்துவதற்குத் தானே? சந்ததியை உருவாக்கிவிட்டால் ஆதார நோக்கம் நிறைவடைந்தது. அப்புறம் இந்த உடல் அழியாமல் இருக்கவேண்டும் என்பதும், ‘நான்’ என்னும் உணர்வும் எதற்காக? கேள்வி இங்கே முடியடைவில்லை. நான் என்னும் தன்னுணர்வு, பிறப்பு, இறப்பு என்பதன் ஆழங்களுக்கு நகர்கிறது. முடிவே இல்லாத கேள்விகளுக்கு, தற்காலிகமான ஒரு முடிவுடன் நிறைவுபெறுகிறது கதை.
‘உடலைக் கடந்த நான்/தன்னுணர்வின் இருத்தல் என்பது சாத்தியமா?’ என்கிற ஆதாரமான அதே கேள்வியுடன் தான் இந்தக் இரண்டு படைப்புகளும் தொடங்குகின்றன. அடிப்படையான, தத்துவார்த்தமான ஒரே கேள்வியுடன் தொடங்கினாலும் இந்தியத் தத்துவ மரபில் வந்த ஒரு படைப்பாளியின் அகமும், மேற்கின் நவீன சிந்தனை வழியில் வந்த ஒரு கலைஞனின் படைப்பூக்கமும் முதற் கேள்விக்கான விடையுடன் அடுத்து எந்தத் திசையில் நகர்கிறது என்பதை ஆராயவும் உதவும்.
தன்னுணர்வு உடலைக் கடந்து இருக்க சாத்தியமென்றதும், அதிநவீன தொழில்நுட்பத்தை கையிலெடுத்துக்கொண்டு அறிவியலின் எல்லாத் தளங்களிலும் புதிய கண்டுபிடிப்புகள், இன்னும் உயரிய தொழில்நுட்ப சாத்தியங்கள் என பக்கவாட்டில் பயணமாகிறது ட்ரான்செண்டன்ஸ் திரைப்படம். கரிய பறவையின் குரலின் கதை சொல்லி முதல் கேள்வியுடன் விடையுடன் அடுத்து அடுத்து என மேலும் பல தத்துவார்த்தமான கேள்விகளால் இன்னும் உள்முகமாக மனிதரின் இருத்தலின் அடிப்படைகளை நோக்கிப் போகிறான். கரிய பறவையின் குரல் வெளியில் இருந்து உள்நோக்கி செங்குத்தாக நகர்கிறது. ‘கரிய பறவையின் குரல்’ என்னும் தலைப்பு நம் மரபில் வந்த நம்பிக்கையை மிகச்சரியாக இங்கே பிரபிபலிக்கிறது.
தத்துவம், ​ தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஆர்வம் இருப்பவர்கள் ஒப்பிடவும், சிந்திக்கவும் தூண்டும் இரண்டு படைப்புகள். அவ்வாறு சிந்திப்பது நாம் எங்கே நிற்கிறோம் என்பதையும் நமக்கு உணர்த்தக்கூடும்.

- பிரகாஷ் சங்கரன்
(நன்றி: சொல்வனம், இதழ் 109ல் வெளியானது)

Saturday, May 11, 2013

பகடை - கடிதம்


('பளிங்கறை பிம்பங்கள்' என்னும் ஜெயமோகனின் கட்டுரைக்கு நான் எழுதிய கடிதம், ஜெ தளத்தில் பதிக்கப்பட்டது http://www.jeyamohan.in/?p=26648)

அன்புள்ள ஜெ,
பெண் தன் சுயத்தை ஒளித்துக் கொண்டு பளிங்கறை பிம்பங்களாய்ப் பல்வேறு தோற்றங்களைக் காட்டி ஆணின் அகந்தையை அலைக்கழிப்பதை, தன்னை முடிவிலாத தோற்றங்களாகப் பெருக்கிக் கொண்டு சிவனை வெல்லும் மகாமாயையுடன் பொருத்தி விளக்கியதும் சட்டென்று “ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகெங்குமாய் நின்றாள்” என்ற அபிராமி அந்தாதி வரிக்கு இந்த இடத்தில் வேறு அர்த்தம் தொனித்தது.
உமையும் சிவனும் ஆடும் பகடையாட்டம் என்னும் படிமம் எனக்கு சிறுவயதில் ஏற்பட்ட ஒரு அனுபவத்தின் வழியாக வேறு கோணத்தில் மனதில் பதிந்திருந்தது.
என் இளவயதில், சோழவந்தான் மாரியம்மன் கோயிலில் பத்து நாள் நடக்கும் வைகாசித் திருவிழா சினிமாவில் காட்டப்படும் ஒரு கிராமத் திருவிழாவின் சகல லட்சனங்களும் பொருந்தியதாக இருந்தது. வறண்டு நீண்ட மணல் வெளியாகக் காட்சியளிக்கும் வைகையில், சித்திரைத் திருவிழாவில் மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்காகத் திறந்து விடப்பட்ட தண்ணீரின் ஈரம் மட்டும் அடியில் இருக்கும். நீரில்லாத வைகையில் தான் திருவிழாக் கடைகளும், மரணக் கிணறு, நாகக் கன்னி, குடை ராட்டினம், மாயக்கண்ணாடி, ப்ரொஃபசர் லாலின் இந்திரஜாலம், ஜயண்ட் வீல், வளையல் கடை, பீமபுஷ்டி அல்வா என்று அந்தப் பத்து நாள் மட்டும் தேவலோகம் கீழே வந்திறங்கும். மேலும் விதவிதமான சூதாட்டங்களும் கடைபரப்பி வைத்திருப்பார்கள். ரெண்டுங்கெட்டான் வயது பையன்களுக்குக் கண்ணெல்லாம் ‘குலுக்கு டப்பா’ க்காரர்கள் மீதே இருக்கும். அண்ணன்கள் தம்பிகளை வீட்டில் அழுது அடம்பிடித்து ‘திருலா’ பாக்க காசு வாங்கி வரவைத்து, ‘யார்கிட்டயும் போட்டுக்கொடுக்க மாட்டேன்’ என்று சத்தியம் வாங்கிக் கொண்டு குலுக்கு டப்பா விளையாடக் கூப்பிட்டு போவார்கள். ஒருநாள் நானும் அம்மனைத் தொழுது திருநீறு இட்டு ‘நிறையக் காசு அடிக்கனும்’ என்று பிரார்த்தித்துப் போயிருந்தேன். ‘விருட்டானெல்லாம் வெலகு…’ என்று விரட்டிக் கொண்டிருந்த குலுக்கு டப்பாக்காரன் கண்ணில் தெரிகிற மாதிரி ஐந்து ரூபாய் நோட்டை வைத்துக் கொண்டு நின்றேன். சாமியெல்லம் நன்றாகக் கும்பிட்டிருந்தேன், ‘ராஜால காசு வச்சா டபுள் அடிச்சிரும்’, இருந்தாலும் ஒரு பயம், விளையாட்டில் இறங்காமல் அண்ணன் உடலை ஒட்டி இருந்து பார்த்துக் கொண்டே நின்றேன்.
சற்று நேரத்தில் சாராய போதையில் தள்ளாடியபடி ஒருவன் வந்தான். நான்கு திசையையும் பார்த்து விரலை ஆட்டி, காதுகூசும் கடும் கெட்ட வார்த்தைகளால் திட்டினான். யாரையோ நோக்கி சவால் விட்டான், ‘ஓச்சுப்புருவேன்… எங்கிட்டயா? குடும்பத்தையே கொண்டுபுருவேன்..ஆள் தெரியாம ஆடுறீங்களாடீ..?’ , காறித் துப்பினான். எல்லாரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். குலுக்கு டப்பாக்காரன் ஒரு கணம் பார்த்துவிட்டு இன்னும் சத்தமாக டப்பாவை உருட்டியபடி, காசு டபுள், ட்ரிபிள் அடிக்கப் போகும் யோகத்தைச் சொல்லி எல்லாரையும் அவன் பக்கம் இழுத்து விட்டான். குடிகாரனும் வந்து நூறு ரூபாயை வைத்தான். பணம் போயிற்று. ஒரு பெண் பெயரைச் சொல்லியபடி கெட்ட வார்த்தையால் வைதுவிட்டு மறுபடியும் பணம் வைத்தான், காசு அடித்தது, இன்னும் ஒரு கேவலமான கெட்ட வார்த்தையை அவள் பெயரைச் சொல்லித் திட்டி விட்டு மறுபடியும் இன்னும் அதிகமான பணம் வைத்தான். சட்டைப் பை, உள் பை, கை மடிப்பு, பச்சை பெல்ட் என்று விதவிதமான இடங்களில் நீட்டு வாக்கில் மடித்த, கசங்கிய ரூபாய் தாளை உருவி வைத்து ஆடிக் கொண்டே இருந்தான். பணம் வருவதும் போவதுமாகக் கொஞ்ச நேரம் போக்குக் காட்டியபடியே இருந்தது. எதற்கும் குலுக்கு டப்பாக்காரனின் முகத்தில் சலனம் இல்லை. கடைசியில் எல்லாப் பணமும் போனதும், அன்ட்ராயருக்குள் தேடி ஒரு கசங்கிய அம்பது ரூபாய் நோட்டை எடுத்துப் பார்த்துக் கொண்டே இருந்தான். ரெண்டாகக் கிழித்து ‘வந்தா வருது, போனா போது…. ராசாவுல அம்பது, ராணில அம்பது’ என்று இரண்டு துண்டுகளையும் வைத்தான். குலுக்கு டப்பாக்காரன் கொஞ்சம் கூடக் கண்டுகொள்ளாமல் அதைப் புறங்கியால் தள்ளிவிட்டு ‘ஃப்பூஊ…’ என குப்பையை ஊதித் தள்ளுவது போல ஊதினான். உடனே கெட்டவார்த்தைகளால் மறுபடியும் வையத் தொடங்கினான். குலுக்கு டப்பாக்காரன் அவன் இருப்பதையே அறியாதவன் போல டப்பாவை உருட்ட ஆரம்பித்தான். எல்லாரும் கட்டத்தில் காசுவைக்கத் திரும்பிவிட்டார்கள்.
குடிகாரன் கீழே விழுந்து கிடந்த கிழிந்த ஐம்பது ரூபாய் நோட்டுத் துண்டுகளைப் பொறுக்கி எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு எதுவோ புரிந்துவிட்டது போலக் கதறி அழுதான்.
எனக்கு அந்தக் காட்சி மனதில் அப்படியே பதிந்து போனது. அண்ணனுடன் அமைதியாக வீட்டுக்கு வந்துவிட்டேன்.
சிலசமயம் வாழ்க்கையை ரெண்டாகக் கிழித்து, ‘இது அல்லது அது’ என்று வைக்கும் போது, நம் கொதிப்பைக் கொஞ்சம்கூட மதிக்காமல், சம்பந்தமே இல்லாத ஒன்று நடக்கையில் தோன்றுவதுண்டு, சொக்கட்டான் உருட்டப்படுகையில் அடுத்து விழப்போவது எது என்பது அம்மையின் ஆசையும் இல்லை, அப்பனின் அதிகாரமும் இல்லை. எல்லாம் வெறும் சூதாட்டம் தான் போலும்.
நன்றி,
பிரகாஷ் சங்கரன்.

பலிகளின் பயணம் - கடிதம்


('மாபெரும்பயனம்' என்னும் ஜெயமோகனின் சிறுகதை மீதான என் வாசிப்பு. ஜெ இணையதளத்தில் வெளியிடப்பட்டது )
அன்புள்ள ஜெ,
‘மாபெரும்பயணம்’ மறுபடியும் படித்தேன்.
எருமைகள் பகல் சாயத்தான் சென்றுசேர முடியும். அவற்றின் காலம் மேலும் அகன்றது . உருளும் பாறைக்கூட்டங்கள் போல அவை பின்னால் ஓலமிடும் வண்டிகளுக்கு வழிவிடாது செல்லும் . பெரிய உருண்டவிழிகளை விழித்து பசுமையை பார்க்கும் . ஆள்கூட்டத்தில் எவருடைய சாயலையாவது கண்டடைந்து ம்றே ? என வினவும் .தண்ணீர்கண்டால் முட்டி மோதி சென்று படுத்துக் கொள்ளும்.அசைபோட்டுக் கொண்டு யோக மோனத்தில் ஆழ்ந்துவிடும். வாழ்க்கை பற்றி துயரத்துடன் ஆழ்ந்து சிந்தித்து பெருமூச்சுவிடும். கொம்பு தோளில் படாமல் நாசூக்காக திரும்பிப்பார்க்கும்.
என்ற வரிகளின் வழியாக எருமையின் நிதானத்தில் மெல்லக் கலந்து, நரம்புகள் தளர்ந்து இளகி அசைவற்று இருக்கையில்

நாசியில் மிளகாய்ப் பொடி ஏற்றி அவற்றைக் கிளப்பவேண்டும்.
என்ற வரி சுருக்கென்று குத்தும் எரிச்சலுடன் படிப்பவனையும் கிளப்புகிறது – அடிமாடுகளின் மரணத்திற்கான பயணத்தை நோக்கி!
புரட்சி, சித்தாந்தம், ஆயுதம், போர், பலி, கொள்கை, தியாகம் என்றெல்லாம் “நீர்சிகிட்சை நிபுணர்களால்” வாயில் குடம் குடமாகக் கொட்டப்பட்ட நீரால் உடல் உப்பிப் பளபளப்பாகத் தொடர்கிறது அடிமாடுகளின் பயனம் – சாவை நோக்கி.
காஷ்மீர் போராளி, இலங்கைப் புரட்சியாளன் இன்னும் பலவாறு பகல் கற்பனை செய்து கொள்ளும் எல்லா அடிமாடுகளும் வழிகாட்டி மாடுகளின் பின்னால் சென்று கில்லட்டினை அடைந்ததும் தோலையும், காதுகளையும் இழந்து உயிருடன் இருந்த உருவத்திலிருந்து முற்றிலும் வேறாக மாறி எல்லாம் ஒன்றுபோல குருதி சொட்டும் சிவப்பு மாமிசப் பிண்டமாகிக் கொக்கியில் தொங்குகின்றன. காஷ்மீரோ, இலங்கையோ- ‘கொம்பின்’ வடிவத்திற்கேற்ப கசாப்புக்கட்டையில் சரிந்த தலைகள், கழுத்து வெட்டப்படும் முன் கண்டடைந்த ஞானத்தைச் சொல்லத் துடித்து, சொல்லப்படாமல், வெறித்த விழிகளுடன் கிடக்கின்றன.
கோலப்பன் தற்கொலை செய்து கொண்டாலும், வாழ்வில் எல்லாவற்றையும் மறந்து வெகுதூரம் வந்து விட்ட கதை சொல்லி, உருக்கள் நதியாகச் சுழித்து மரணத்தின் பீடத்தை நோக்கிச் செல்லும் அந்தப் பொள்ளாச்சி சாலைக்கே சைபீரிய நாரை போல தன்னையறியாமல் வந்து சேர்கிறான். கதை சொல்லிக்குப் பெயரே இல்லை – வெறும் ‘அவன்’ தான். ஆம், அடிமாடுகளாக இழுத்துச் செல்லப்படும் யாராக இருந்தாலும் அது ‘அவன்’ தான். ராவ்ஜி, கோலப்பனுக்குப் பிறகு ‘அவன்’. மீண்டும் நீர்சிகிட்சை, மீண்டும் பயணம், மீண்டும் கில்லட்டின்.
பிறந்து விழுந்தது முதல் தவழ்ந்தும், நடந்தும் மரணத்தை நோக்கியே செல்லும் ஒரு மிகச் சிறிய நேர்கோட்டுப் பயணம் தானா வாழ்க்கை? அதைப் பெரும்பயணமாக்குவது மீண்டும் மீண்டும் வரும் ‘அவன்’களால் வட்டத்தின் முடிவின்மை போல் சுழலும் இந்த அடிமாட்டு வாழ்க்கை தானா?
ஏதேதோ காரணங்களுக்காக இழுத்துச் செல்லப்பட்டு கும்பலாக மடியும் போராளிகள் – அடிமாடுகளின் பயணம் என்கிற குறியீடு, பொருள் கொள்ளலுக்குத் தரும் சாத்தியங்கள் முடிவிலியாக விரிகின்றன.
நன்றி ஜெ,
அன்புடன்,
பிரகாஷ் சங்கரன்.

Friday, April 12, 2013

பௌத்தமும் வேதாந்தமும்


(ஆசான் ஜெயமோகன் எழுதிய அம்பேதகரின் தம்மம் என்னும் அற்புதமான நீள்கட்டுரை தொடர்பாக நான் அவருக்கு எழுதிய கடிதமும் அவரது பதிலும்)

அன்புள்ள ஜெ,
அம்பேத்கரின் தம்மம் கட்டுரை அற்புதமாக இருந்தது. பௌத்த தரிசனத்தை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள உதவியது. சரளமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பல சொற்களை நின்று கவனிக்க வைத்தது. இந்தக் கட்டுரையை ஒரே வீச்சில் படித்து விட முடியவில்லை. நிறுத்தி நிறுத்தி, படித்த வரிகளையே மீண்டும் படித்து மனதில் இருத்திக் கொண்டு தான் தொடர்ந்து போக முடிந்தது. கட்டுரையின் பொருள் செறிவு ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணம், கட்டுரை பேசும் முக்கியமான சில விஷயங்களைப் பற்றி ஏற்கனவே உங்கள் தளத்திலும் (முக்கியமாக கீதை உரை), வேறு நூல்களிலும் படித்துச், சிந்தித்து வைத்திருந்த கருத்துக்கள் இடைமறித்ததால்.
குறிப்பாக “தர்மம்” என்னும் சொல் குறிக்கும் பொருள் பற்றி விளக்கங்கள்.
//பௌத்தம் பேசும் தம்மம் என்பது என்ன? நான் முன்னர் சொன்ன அத்தனை நிலைகளிலும் இருக்கும் ஒன்று. என்னுள் இருந்து என்னை உருவாக்கும் நியதி. இவையனைத்தையும் ஆளும் நெறி. காலத்தையும் வெளியையும் உருவாக்கி நிறுத்தும் விதி. அனைத்துமாக ஆகி நிற்கும் பிரபஞ்சமெனும் ஒழுங்கு. அதுவே பௌத்த தம்மம். (அம்பேத்கரின் தம்மம்-பகுதி-1)//
ஆம், வேதங்களின் ஆப்தவாக்கியங்கள் போல, பௌத்த தரிசனம் ‘தர்மம்’ என்பதை தனது ஆப்த வாக்கியம் போலவே – தர்மம் சரணம் கச்சாமி- என முக்கியத்துப்படுத்தி முன்னிறுத்தியிருக்கிறது.
பௌத்தம் பேசும் இந்த மகாதர்மத்திற்கான அடிப்படை இந்து மதம்/வேதாந்த மரபிலும் ஏற்கனவே இருந்த ஒன்றாகவே நான் கருதுகிறேன். குறிப்பாக உங்கள் கீதை உரையைப் படித்ததில் இருந்து.
//கீதையின் முதல் சொல்லே ‘தர்மஷேத்ரே’ என்று இருக்கிறது. ”அறநிலமாம் குருநிலத்தில்” என்று தொடங்கும் கீதை குருஷேத்ர களத்தை அறம் திகழ் மண்ணாகக் குறிப்பிடுகிறது. அது உண்மையா என்ன? அது அறத்திற்கும் அதற்கு எதிரான சக்திகளுக்கும் இடையேயான போர் என்று கூறுவதுகூட சற்று மிகைதான். பாண்டவர் தரப்பிலும் அறமீறல்கள் பல உள்ளன. அப்படி யோசிக்கும்போது இங்கு கூறப்படும் அறம் என்பது சாமானிய தளத்தில், நீதி என்ற பொருளில், நாம் குறிப்பிடும் மானுட அறம் அல்ல என்றே கொள்ள வேண்டும். பிரபஞ்சப் பேரியக்கத்தின் நியதியாக உள்ள ‘மகாதர்மம்’தான் இங்கே அறம் என்று கூறப்பட்டது. அதை மானுடம் சார்ந்த நன்மை தீமைகள், சரிதவறுகள் மூலம் அளக்க இயலாது. அது எளிய தர்க்க நியாயங்களுக்கு அப்பாற்பட்டது. ‘பிரபஞ்ச நியதியின் களமேயான குருஷேத்ர ரணபூமியில்’ என்று கீதை தொடங்குகிறது என்று வாசிக்கலாம். (கீதை:1 மகத்தான மனத்தடுமாற்றம்)//
மகாபாரதத்தின் குருக்ஷேத்ர யுத்தம் – தர்ம யுத்தம் என்றே அழைக்கப்படுகிறது. மகாதர்மத்தின் ஒரு பகுதியாக நடந்த யுத்தம், அதில் அர்ஜுனன் உள்ளிட்டோரின் சுதர்மமும் அடங்கும். குருமார்களையும், சொந்தங்களையும் கொன்றாவது நிலை நிறுத்தியாக வேண்டிய மகாதர்மத்தின் பொருட்டே ஒவ்வொருவரின் சுதர்மமும் செயல் பெறுகிறது. இந்த தர்ம யுத்தத்தில், தர்மம் என்பது ‘இவை அனைத்தையும் ஆளும் நெறி’ என்று பொருள் கொள்ளப்படும் போதே, அதனுள் ஒவ்வொருவரின் சுதர்மமும் அடங்குவதைப் புரிந்து கொள்ளமுடிகிறது.
அதே பாரதத்திலேயே பீஷ்மர் (பீஷ்மோபதேசம் ) சொல்கிறார், “தர்மோ ரக்ஷதி ரக்ஷித: தர்மமேவ ஹதோ ஹந்தி” – தர்மத்தைக் காப்பவனை தர்மம் காக்கும், தர்மத்தை அழிப்பவனை அதுவே அழிக்கும். தன்னறம் அல்லது சாமான்ய தளத்தில் கூறும் மானுட அறத்தை காக்காததினால் ஒருவன் அழிவான் என்பதை விட இந்த வாக்கியம் முழுமையான பொருளைத் தருவது “இந்தப் பிரபஞ்சம் உட்பட இங்குள்ள அனைத்தையும் நிலைநிறுத்தியிருக்கும் நியதி காக்கப்பட்டால் அதுவே அதன் அங்கமான நம்மையும் காத்துக் கொள்வதாகும், அதை அழித்தால் அது நமது அழிவாகத் தான் இருக்கும்” என்று பொருள் கொள்ளும் பொழுது தான்.
பௌத்த தரிசனத்தின் சில விஷயங்களை என்னால் வேதாந்த தரிசனத்திலிருந்து மாறுபட்டிருப்பதாக நினைக்க முடியவில்லை, அதன் இன்னொரு கோணமாகத் தான் எனக்குத் தெரிகிறது.
உதாரனமாக,
//நிர்வாணம் என்பது அனைத்தையும் களைந்துவிடல் அல்ல என்று அம்பேத்கர் சொல்கிறார். நிர்வாணம் என்பது அறிவின் நெருப்பில் நம்மைக் களைந்து எரிப்பது மூலம் அடையப்பெறுவது. ஒரு தூய்மையாக்கல் அது. ஆனால் அந்நெருப்பில் அனைத்தையும் எரிப்பதைப்பற்றி புத்தர் பேசவில்லை. அதில் திருஷ்ணையை- ஆசைகளை – எரிப்பதைப்பற்றியே பேசுகிறார். ஆம், அனைத்தையும் துறந்து அமைவதல்ல நிர்வாணம். அது இங்கே இந்த வாழ்க்கையில் ஆசைகள் மீதான அறிவின் கட்டுப்பாட்டுடன் வாழும் முழுமையான வாழ்க்கை மட்டுமே (அம்பேத்கரின் தம்மம், பகுதி-3)//
என்னும் பௌத்த சிந்தனை, பகவத் கீதையின் நாலாம் அத்தியாயமான ஞான கர்ம சந்யாச யோகம் கூறும் ‘செயலின் பலன் மீதான விருப்பத்தைத் துறந்த (கர்ம பல சந்யாசம்) நிலையை’ப் போன்று தான் எனக்குத் தோன்றுகிறது. குறிப்பாக இந்த அத்யாயத்தின் 14வது ஸ்லோகத்தில் இருந்து கடைசியான 42வது ஸ்லோகம் வரை, அதிலும் முக்கியமாக, ” எவனுடைய செய்கைத் தொடக்கங்களெல்லாம் விருப்ப நினைவு தவிர்ந்தனவோ, அவனுடைய செயல்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவாம்; அவனை ஞானிகள் அறிவுடையோனென்கிறார்கள் (கீதை, 4:19)” என்னும் ஸ்லோகம் மேலே சொன்ன பௌத்த சிந்தனைக்கு மிகவும் நெருங்கியது.
மேலும், //பௌத்தம் சொல்லும் ஆசைகளைத் துறத்தில் என்பது இயல்பான உலகியலாசையை நிராகரித்தல் அல்ல. பேராசையைத் துறத்தல் மட்டுமே. ஏனென்றால் பேராசை அறிவுத்தேடலுக்கு எதிரானது. அறிவு அளிக்கும் விடுதலையை மறுப்பது. பௌத்தமோ அறிவின்விளைவான விடுதலையைப்பற்றிப்பேசும் ஒரு ஞானப்பாதை (அம்பேத்கரின் தம்மம், பகுதி-4) என்னும் பௌத்த சிந்தனையை, உங்கள் கீதை உரையில்
 //பற்றில்லாமல் பலன் கருதாமல் செயலை ஏன் செய்ய வேண்டும் என்பதற்கான காரணம் கீதையிலேயே தொடர்ந்து மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. வெற்றியிலும் தோல்வியிலும் நிலை குலையாத சமநிலைக்காகவே. இங்கே வரும் ‘விருப்பத்தால் கறைபடிந்த அறிவு’ என்ற சொல்லாட்சி தத்துவார்த்தமாகச் சிந்திக்கும் பழக்கம் உள்ளவர்களை வெகு தொலைவுக்கு இட்டுச் செல்லக் கூடியதாகும். வெறுப்பால் கறைபடிந்த அறிவு இழிந்தது. ஏனெனில் அது ஒரம் சார்ந்தது. நடுநிலை இல்லாததனாலேயே அது அதிதமான உணர்ச்சி வேகத்தையும் தீவிரத்தையும் கொண்டிருக்கும். அது அழிவுச்சக்தி. இதை ஒவ்வொருவரும் அறிவர்.( செயலெனும் யோகம் சாங்கிய யோகம் 4) // 
   -என்று நீங்கள் விளக்கியிருந்ததுடன் தொடர்புபடுத்திப் புரிந்துகொள்கிறேன். 
கைவல்ய உபநிஷதம், “ந கர்மணா, ந ப்ரஜயா, தனே ந, த்யாகேனைகே அம்ருதத்வமானசு:” என்கிறது- “கர்மங்களால் அல்ல, மக்கட்பேறால் அல்ல, செல்வத்தினால் அல்ல, தியாகத்தாலேயே அமரத்துவம் எய்தப்படுகிறது” -இதுவும் கீதையும், பௌத்தமும் சொல்லும் அதே மனநிலையைத் தான் பேசுகிறது.
சூன்யவாதம் குறித்தும் மிகவும் புதிதான ஒரு கோணத்தில் (சூனிய வாதம் வெறுமையைச் சொல்வதல்ல, அறியமுடியாமையைச் சொல்வது) இந்தக் கட்டுரையின் மூலம் அறிந்து கொண்டேன் (இருந்தாலும் என் மனதின் இயல்பிற்குப் வேதாந்தத்தின் பூரணத்துவமே நெருக்கமாக இருக்கிறது).
மொத்தத்தில் இந்தக் கட்டுரைத் தொடர், என்னளவில், என்னை மிகவும் யோசிக்க வைத்த, ஒவ்வொரு சொல்லிலும் என் கற்பிதங்களைப் புரட்டிப் போட்ட, நான் வாசித்த மிக முக்கியமான கட்டுரை. அதற்காக மிக்க நன்றிகள் ஜெ.
இந்தக் கடிதத்தை எழுதும் முன் ஒருவாரத்திற்கும் மேலாக எழுதுவதா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்தேன். இந்து/வேதாந்த மரபில் இருப்பதாக என் மனதில் படுவதைச் சொல்ல வேண்டும் ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் இந்திய ஞான மரபில் பௌத்த தரிசனத்தின் தாக்கத்தையும், பங்களிப்பையும் குறைத்துச் சொல்லிவிடக் கூடாது என்ற எண்ணமே காரணம். எனக்கு புத்தர் மீது பெரும் பக்தி உண்டு. நான் சங்கர வேதாந்த மரபைச் சேர்ந்தவன். சங்கரரே பௌத்தம், மீமாம்ஸை, ஸாங்கியம், நியாயம் எல்லாவற்றையும் ஒரு நிலையில் முரண்பட்டு இன்னொரு நிலையில் ஏற்றுக்கொண்டு, இவற்றின் சிறந்த அம்சங்களையெல்லாம் வேதாந்த ஞானத்துடன் தொகுத்துக் கொடுத்தவர் தானே?
கடைசியாக சுவாமி விவேகனந்தரின் வார்த்தைகளுடன் இந்தக் கடித்தை முடித்துக் கொள்கிறேன். “சாக்கிய முனி ஹிந்துமதத்தை அழிக்க வந்தவரல்ல, அவரே அதை முழுமை செய்தவரும், அதன் தர்க்கபூர்வமான நிறைவும், வளர்ச்சியும் ஆவார். இந்து மதமும், பௌத்தமும் ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்க முடியாது. ஹிந்து மதத்தின் அற்புதமான மெய்ஞான மூளையும், பௌத்தத்தின் மனிதாபிமானமும் கருணையும் மிக்க இதயமும் பிரிந்ததனால் தான் இந்தியா வீழ்ந்தது. இவை இரண்டும் மீண்டும் ஒன்றிணையட்டும்”
என் புரிதல்களில் பிழை இருந்தால் பொறுத்துக் கொண்டு, அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
நன்றி,
அன்புடன்
பிரகாஷ் சங்கரன்.
(பி.கு. – ஒரு சிறிய தகவல்- வேதங்களின் முதல் பாகமாகிய கர்மகாண்டத்தின் ஸம்ஹிதையில் சொல்லப்பட்டுள்ள கர்மங்களை விளக்கும் ‘பிராம்மணங்கள்’ என்னும் விளக்க நூல்களை அடியொற்றி எழுந்ததால் தான் பூர்வமீமாம்ஸை ‘பிராம்மண மதம்” என்றழைக்கப்படுகிறது. அது யாகங்கள் முதலான சடங்குகளைச் சொல்வதால் பிராமணர் என இன்று அழைக்கப்படும் சாதியினருடைய மதம் என்று பொதுவில் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது).


அன்புள்ள பிரகாஷ்,
இந்தியாவின் தத்துவ- ஞான விவாதமென்பது ஓர் ஒற்றைப்பெரும்பரப்பு. அதிலுள்ள எல்லா கருதுகோள்களும் தொடர்ந்து நிகழ்ந்த உரையாடல் மூலம் கொண்டும் கொடுத்தும் வளர்ந்துவந்தவை. ஆகவே பொது அம்சங்களை தேடிப்பார்க்க ஆரம்பித்தால் வந்துகொண்டே இருக்கும்.
நம்முடைய நோக்கம் என்ன என்பதே பார்வையை தீர்மானிக்கவேண்டும். உதாரணமாக ஒருவர் இந்தியாவின் சிந்தனை மரபுகளுக்குள் எந்த விதமான உறவும் இல்லை, அவை ஒன்றையொன்று கொல்லத்துடித்தவை என்று சொன்னாரென்றால் நாம் அவற்றுக்குள் உள்ள ஒற்றுமையைச் சுட்டிக்காட்டுகிறோம். அதேசமயம் ஒவ்வொன்றையும் அவற்றின் தனித்தன்மையுடன் அறிய விரும்பினோமென்றால் வேறுபாடுகளை கவனப்படுத்துகிறோம்
நாராயணகுருவிடம் இதைக் காணலாம். கேரளத்தின் ஆசாரவாதிகள் வேதாந்தத்தை ஆசாரவாதம் நோக்கி கொண்டுசென்று அங்கே அதை முளையடித்துக் கட்டியிருந்த காலகட்டத்தில் குரு வேதாந்தத்தை பௌத்தம் நோக்கி நகர்த்தினார். குருவின் ஆடை, அவருக்கு வைக்கப்பட்டிருக்கும் சிலை, அவர்களின் கொடி உள்ளிட்ட அனைத்திலும் உள்ள பௌத்த செல்வாக்கு வெளிப்படையானது. வேதாந்தத்துக்கும் பௌத்ததுக்கும் உள்ள பொதுத்தன்மைகளை அதிகமாக குரு முன்வைத்தார். அவரது வெதாந்தநூல்களின் வாசிப்பு அந்த இயல்பு கொன்டது
ஆனால் வேதாந்தமும் பௌத்தமும் தத்துவ அணுகுமுறையிலும் மையத்தரிசனத்திலும் நுட்பமான வேறுபாடுகள் கொன்டவை. அந்தவேறுபாடுதான் அவற்றை இருவேறு தத்துவக்கட்டுமானங்களாக நிலைநிறுத்துகிறது. அம்பேத்கரின் தம்மம் கட்டுரையில் அந்த வேறுபாடுகளை நான் சுட்டிக்காட்டியபடியே செல்கிறேன். அவை இரண்டும் பயன்படுத்தும் கலைச்சொற்கள் அனேகமாகக ஒன்றே. ஆனால் அவற்றுக்கிடையே அழுத்தமான ஆனால் மிக மெல்லிய பொருள் வேறுபாடு உண்டு. அந்த வேறுபாட்டை கவனித்தாலொழிய அவற்றை சரியாகப்புரிந்துகொள்ள முடியாது
உதாரணமாக தர்மம் என்ற சொல். வேதாந்தமும் பிரபஞ்சதர்மம் பற்றிப் பேசுகிறது. ஆனால் அது வேதாந்த நோக்கில் மகாபிரம்மத்தின் ஒரு லீலை. பிரம்மத்தின் ஒரு வெளிப்பாடு. பௌத்தம் மகாதர்மம் பற்றிப்பேசுகிறது. ஆனால் அங்கே அதை மீறிய ‘சத்’ஏதும் இல்லை. மகாதம்மம் என்பது மட்டுமே முதல்முடிவானது. அது எதன் லீலையும் அல்ல. அது நிகழ்வதனால் அது இருக்கிறது.
இப்படிச் சொல்லலாம். பம்பரம் சுழல்கிறது. அப்போது ஒரு மையம் உருவாகிறது. அது சுழல்வதனால் அந்த மையம் உருவாகிறது. சுழற்ச்சியின் ஆதாரவிதியே அந்த மையம். அவ்வளவுதான். நாம் சுழற்சியைப்பார்க்கிறோம். ஆகவே நமக்கு மையம் என்ற அனுபவம் உள்ளது. மற்றபடி அங்கே மையமென ஒன்றுண்டா என்பதெல்லாம் நம் அறிதலுக்கு அப்பாற்பட்டவை- இது பௌத்தம். சுழற்சியின் மையம் என்பது பம்பரத்தின் ஆதாரமான அமைப்பு, சுழற்சியை நிகழ்த்துவதே அதுதான் – இது வேதாந்தம். இருவேறு தரிசனங்கள்
இவ்வாறு எல்லாவற்றிலும் வேறுபாடுண்டு. பௌத்தம் பொருளை நிராகரிப்பதில்லை. பொருண்மை என்ர நிகழ்வாக அது பொருளை அணுகுகிறது என்று சொல்லலாம். இகம் அதைப்பொறுத்தவரை பொருள்வயமானதே. ஆனால் வேதாந்தம் பிரம்ம சத்யம் ஜகன் மித்யை என உணரக்கூடியது. பொருள்வய பிரபஞ்சமென்பது வேதாந்த நோக்கில் பிரம்மம் அளிக்கும் மயக்கநிலைதோற்றம் மட்டுமே.
ஆனால் வேதாந்தத்துக்கும் பௌத்ததுக்கும் நடுவே மிகச்சிறந்த ஓர் ஒருமையை நாம் கண்டடையவும் முடியும். பிரம்மம் என்பதை சத் என்றல்லாமல் தத் என்று புரிந்துகொண்டால் அது பௌத்ததை அடைந்துவிடுகிறது என்று நாராயனகுரு சொல்லியிருக்கிறார். நடராஜ குருவும் நித்ய சைதன்ய யதியும் அதை விரிவாகவே விளக்கியிருக்கிறார்கள். விவேகானந்தர் முதலிய எல்லா நவீன வேதாந்திகளிலும் அந்த சமன்வய நோக்கை நாம் காணமுடியும்
நாராயணகுரு பௌத்தத்துக்கும் வேதாந்தத்துக்கும் நடுவே ஒரு சமரசவேதாந்தத்தை உருவாக்கியவர். வேதாந்தம் கயிற்றரவு என்கிறது. அது கயிறு என நாம் தெளியும்போது அங்கே பாம்பு இல்லை. ஆனால் நாராயணகுரு மலரும் மாலையும் என்கிறார். மலரைப்பார்க்கையில் மாலை இல்லை. மாலையைப் பார்க்கையில் மலர் தெரிவதில்லை, ஆனால் இருக்கத்தான் செய்கிறது
இப்படிச் சொல்கிறேன். வேதாந்தம் பௌத்தம் சமணம் போன்றவற்றை கற்கையில் அவற்றுக்கிடையேயான வேறுபாடுகளை கவனித்து கற்பதே தேவையானது. ஆனால் நம் அகத்தில் இறுதியில் ஓர் ஒருங்கிணைவுநோக்கு உருவாகி வரவேண்டும் — சமன்வய நோக்கு
கவனிக்கவும், கடைசியில்தான் அது உருவாகவேண்டும்
ஜெ

Friday, November 23, 2012

விஷ்ணுபுரம்: பூரணத்திலிருந்து… (பகுதி-2)


நிறுவனப்படுத்தப்படும் ஞானம்
வளைந்து பின்னிய குறுகலான சந்துகளில் வழிதவறிச் சென்று, தொலைந்து விட்டோம் மீளவே மாட்டோம் என்று மனம்பதறி திசைமறந்து அலையும் போது, ஒரு சந்தின் திருப்பத்தில் எதிர்பாராமல் சட்டென்று தெரியும் பரபரப்பான பிரதான சாலை போன்று தங்கள் ஞானத்தேடலில் மிகச்சிக்கலான அகப்பாதைகளில் அலைக்கழிக்கபட்டு தவித்து ஒருகணத்தில் உண்மையை தரிசிக்கின்றனர் சிலர். அதன் பிறகு அவர்களின் வெறுமையில் துணையிருப்பது தனிமையும் மௌனமுமே. அத்தகைய ஞானிகளை முச்சந்தியில் மேடைகட்டி அமர்த்தி அதிகார அரசியல் செய்கின்றனர் அனுக்கர்கள்.
திருவடி ஆழ்வார் ஆகிறார், சோமன் அவருடைய சிஷ்யனாகிறான். பீதாம்பரமும், பரமனும் திருவடியை வைத்து பிராமணர்களை ஓரங்கட்டி ஆழ்வார்மடம் அமைத்துக் கோயில்களையும் அதிகாரத்தையும் கைப்பற்றும் திட்டத்தைப் பேசுகிறார்கள். வெளியே ஸ்ரீபாத திருவிழாவின் பிரம்மாண்டமான தேர் இரண்டு ஆட்டுக்குட்டிகளின் மீதேறி நசுக்கிக் குருதி பலி கொடுத்து அசைந்து நகர ஆரம்பித்திருக்கும்.
திரும்பத்திரும்ப ஞானத்தைப் புறவயமாக நிறுவ முயலும் ஒவ்வொரு ஞானியையும் அதிகார வேட்கையுள்ளவர்கள் ஓடிவந்து ஒட்டிக்கொள்கின்றனர். தங்கள் தருக்க உத்வேகத்தை இழந்தால் ஞானிகளை அவர்கள் கொல்லவும் தயங்குவதில்லை. அவர்களுக்குத் தேவை அடுத்து தர்க்கங்களை உருவாக்கிக் கொடுக்கும் இன்னொரு ‘ஞானி’. பவதத்தரைக் கொல்லச் சதி செய்யும் அதிகாரி வீரசிங்கர், அஜிதனை வைத்து ‘தர்ம’ ராஜ்ஜியம் நடத்தும் சந்திரகீர்த்தி போன்றவர்கள் மூலமாக இது சுட்டிக் காட்டப்படுகிறது. சந்திரகீர்த்தி லௌகீக நியாயங்கள் பேசிப் போலி தருக்கங்களை உருவாக்கி, உணர்ச்சி மிகுந்த வார்த்தைகளால் ஆவேசமாக சாமான்யர்களின் மீட்சிக்காக மகாதருமம் தன்னை இவ்வாறு தூண்டுவதாகச் சொல்கிறான். அஜிதன் ஒத்துக்கொண்டு ஒதுங்கியிருக்காவிட்டால், புதர் மறைவில் ஒளிந்திருந்த லாமாமகாபாதரின் வேங்கை போன்ற சிஷ்யர்கள் அஜிதனை மகாநிர்வாணத்துக்கு அனுப்பியிருப்பார்கள்.
ஞானத் தேடல் தன் மனத்தின் தவிப்பையும், கேள்விகளுக்கு விடையும் கண்டடைவதற்குக் கருவியாகும் வரை உபயோமானது. அதற்கான தர்க்கம் மனத்தின் ஊசலாட்டத்தை நிறுத்தி நிலைப்படுத்த உதவும். ஆனால் அந்த ஞானத்தைக் கொண்டு பிறரை வென்றடக்கவும், தனது ஞானத்தைப் பொது ஞானமாக நிலைநிறுத்தவும் முனையும் கணமே அது சுமையாக அழுத்த ஆரம்பித்து விடுகிறது. இந்த ஞானப் பந்தயங்களில் இருந்து விலகியதாலேயே சித்தன் சுதந்திரமானவனாக இருக்கிறான். அவனுக்கு இந்த விவாதமெல்லாம் வெறும் விளையாட்டு. அஜிதன் இதையே உணர்கிறான், சித்தனின் கட்டற்ற தன்மையை நினைத்து ஏங்குகிறான். சித்தனின் தந்தையான பவதத்தரும் கூட அந்த நிலையை அடைந்து அழுத்தும் ஞானத்தின் சுமையிலிருந்து விடுதலை பெற ஏங்குகிறார்.
ஜெயமோகன் குரு நித்ய சைதன்ய யதியுடன்

குழந்தைகள், பெண்கள்
பெண்கள் தங்கள் கருவில் இருக்கும் குழந்தைக்கு (மகனுக்கு) உயிரும் உடலும் மட்டும் அளிக்கவில்லை. எண்ணங்களால் தாங்கள் விரும்பும் உருவத்தையும் அளிக்கின்றனர். அந்த உருவம் பெரும்பாலும் அவர்களின் பகல்கனவு அல்லது ஆழ்மனதில் இருக்கும் கற்பனையான ஆண் பிம்பமாகவே இருக்கிறது. லட்சுமி அநிருத்தனுக்கு தருவதும், சாருகேசி உத்தரனுக்குத் தருவதும் அது தான். அல்லது தங்களுக்குள் இருக்கும் புரியாத ஆண் தன்மை தான் அவர்களின் ஆண் குழந்தைகள்.
சாருகேசிக்கு அவள் ஓவியத்தில் கண்ட அமைதி நிரம்பிய துக்கம் கொண்ட கண்களுடைய புத்த பிட்சுவே மறுபிறப்பு எடுப்பதற்காக அவளுள் குடியேறி இருக்கிறார். பிங்கலன் வெறும் நிமித்தம் தான். இனி அவளுக்கு அவன் முக்கியமே இல்லை. லட்சுமிக்கு அவள் இளமையில் பகல்கனவுகளில் உருவாக்கிக் கொண்ட சிதறிய ஆண் பிம்பம்தான் அவளுடைய ஆழ்மனதில் இருக்கிறது. மெதுவாக அந்த உருவத்தை வளர்த்தெடுத்துத் தன் மகன் அநிருத்தனுடன் பொருத்துகிறாள். அவளால் வலது பக்கமாகப் புரண்டு படுத்தால் தன் அந்தரங்க உலகத்துக்குள் சென்றுவிடமுடியும். அங்கே அவள் கற்பனை ஆண் பிம்பமாக அநிருத்தன்.
அநிருத்தன் இறந்த செய்தியைக் கேட்டதும் மயங்கி விழுகிற லட்சுமியைப் பார்க்கும் பெண்கள், நெஞ்சம் பதற கவனிக்கிறார்கள். அவள் மார்பில் தாய்ப்பால் சுரந்து கொண்டிருக்கிறது. பின்னர் பிங்கலனைக் கூடும் போதும் சங்கர்ஷணன் நினைவு ஒரு கணம் வருகிறது. தன்னை மறந்து ‘அநிருத்தா’ என்கிறாள், அப்போதும் அவள் மார்பில் தாய்ப்பால் சுரக்கிறது. லட்சுமி, பிங்கலன் இருவருக்குமே அந்தக் கணம் மிகப்பெரிய திருப்பத்தைத் தருகிறது. நாவலில் இது மிகமிக உக்கிரமான ஒரு நிகழ்வு. பல்வேறு உளவியல் ஊகங்களுக்கு வாய்ப்பளிக்கும் பொருள் பொதிந்த முக்கியமான ஒரு குறியீடு.
பத்மாட்சிக்கு அவள் இருப்பை அர்த்தப்படுத்துவதே ‘மகாபத்மபுராணம்’ தான். அவள் குழந்தை அதுதான். சங்கர்ஷணன் அவளை அந்த நூல் வந்தடைய ஒரு நிமித்தக்காரன் மட்டுமே. அவளுக்கு சங்கர்ஷணன் ஒரு பொருட்டே அல்ல.

தந்தை மகன்
அக்னிதத்தன் தன் தந்தையைக் கொன்றவன். புத்ரசோகம் அவன் குலத்தைத் தொடர்ந்து துரத்தும் சாபம். பவதத்தர்-விஷ்ணுதத்தன், சூரியதத்தர்-ஸ்வேததத்தன், ஆரியதத்தர்-வேததத்தன் என தலைமுறைகளுக்கு அது நீள்கிறது.
விஷ்ணுபுரம் ஞானசபைத் தலைமையையும், வைதிக ஞானத்தையும் உதறிப் பெருச்சாளித் தோல் கோவணம் அணிந்து, பிச்சையெடுத்துப் புழுதியில் தூங்கும் சுடுகாட்டுச் சித்தனாகிறான் விஷ்ணுதத்தன். தன் மகனை மிகவும் விரும்பிய பவதத்தர் புத்ர சோகத்தால் உடைந்துவிட்டவர். அஜிதனின் இளமையும், ஞானமும், சிரிப்பும் அவருக்குத் தன் மகனையே நினைவூட்டுகின்றன. அது பவதத்தரின் மிகப்பெரிய பலவீனம். அஜிதன், “பித்ருபுத்ர தொடர் மரணமின்மை ஆகாது. அது மனித மனதின் ஆற்றாமை தான்” என்றதும் பவதத்தர் ஞானசபையிலேயே உணர்ச்சி ததும்ப குரல் உடைந்து இடறுகிறார். பிள்ளைப் பாசத்தால் உணர்வு ரீதியாக அஜிதனிடம் மனதளவில் அவர் ஏற்கனவே தோற்றுவிட்டார். அல்லது தன் மகனுக்கு (அஜிதனுக்கு) ஞானசபையின் அதிகாரத்தைத் தந்துவிட்டு ஒரு தந்தையின் நிறைவுடன் உயிர்துறக்கிறார் என்றும் புரிந்து கொள்ளலாம்.
சர்வக்ஞராக அல்லாமல் வாழ்வில் ஒருநாள் கூட ஒரு தந்தையாக தன்னிடம் அன்பாகப் பேசாத சூரியதத்தரை வெறுத்து அவருக்கு நேர்எதிர்த் திசையில் ஸ்வேததத்தன் போகிறான். சர்வக்ஞர் பதவியைத் தூக்கி எறிந்து பிங்கலனின் வாமமார்க்கத்தில் இணைகிறான்.
சாருகேசி – அநிருத்தன் உறவுச் சித்திரம் போல சங்கர்ஷணன்-அநிருத்தன் உறவும் மிக அழுத்தமான, மிக அந்தரங்கமான நுண்ணிய உணர்ச்சிகளால் பின்னப்பட்டது. சங்கர்ஷணன் தன் மகன் அநிருத்தனின் மரணத்திற்குத் தான் எவ்விதத்திலும் காரணமில்லை என்றாலும், ஏன் மனைவியை எதிர்கொள்ள முடியாமல் அஞ்சி ஒளிகிறேன் என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறான். அதன் விடையாகத் தன் மகன் தன்னுடைய அழிவிலிருந்து உருவாகுபவனாக, தனது தோல்விகளில் வெற்றியடைபவனாக அவன் ஆழ்மனத்தில் எண்ணியிருப்பது தெரிகிறது. தன் ஆத்மாவின் வெறுப்புதான் தன் மகனைக் கொன்றதாக உணர்ந்து துடிக்கிறான்.
ஒவ்வொரு தந்தையும் தன் மகனின் வழியாகத் தாங்கள் இளமையோடு நீடித்து வாழ்வதாகவே எண்ணிக் கொள்கிறார்கள். மகன் தன் நீட்சி –ஆனாலும் தன் முக்கியத்துவத்தை உடைத்து வளர்ந்துவிடக் கூடாத, தன் நிழலைப் போல இருக்க வேண்டுமெனவே விரும்புகின்றனர். தன் மனைவிக்கு மகனிடம் தடைகள் எதுவும் இல்லை என்பதை அவர்கள் மனம் ஜீரணிக்க மறுக்கிறது. ஒரு கட்டத்தில் மகனைத் தன் போட்டியாளனாக உணரும் மேற்கின் உளவியல் கருத்துக்களின் சாயல் சங்கர்ஷணனின் புலம்பல்களில் நிறையவே தெரிகிறது.

கலையின் கர்வம்
பொருளியல் தேவைகளுக்கும், பதவி, அதிகாரம் என உலகியல் வேட்கைகளுக்கும் ஆட்பட்டுத் தங்கள் சுயத்தை விலைபேசும் படைப்பாளிகளையும், அறிவுஜீவிகளையும் நாம் இன்று காண்கிறோம். இவர்களின் மனசாட்சியை நோக்கி அற ஆவேசத்துடன் கேட்கப்படும் கேள்விகள் விஷ்ணுபுரத்தில் வருகிறது.
தூய கலை கலைஞனுக்கு உள்ளார்ந்த ஒரு கர்வத்தைக் கொடுக்க வேண்டும். தன் படைப்புத் திறன், காலத்தை விலகி நின்று பார்க்கும் கூரிய மனம் ஆகியவை அவனையறியாமல் அவனுக்கு பெருமையும் தலைநிமிர்வும் தரவேண்டும். அப்படித் தராத பட்சத்தில் உலகியல் யதார்த்தங்களுக்கும் அதன் அரசியல், சமூக, பொருளாதார, அதிகார அழுத்தங்களுக்கும் பணிந்து வளைந்துகொடுத்துப் படைப்பாளி கூனிக் குறுகிப் போவான். பணமும் பதவியும் இல்லாவிட்டாலும், தான் படைப்பவன், வெகுஜனங்களின் சாமானிய தளத்தில் தன் மனம் இயங்கவில்லை, உயர்ந்த உண்மைகளைக் கலைகளின் வழியாக தரிசிப்பவன் என்ற நிறைவும் சுயமரியாதையும்தான் கலைஞனின் படைப்புத் திறனுக்கு ஆதாரசக்தி. தன்மானத்தை விற்று உருவாக்கும் படைப்புக்கும் அதன் படைப்பாளிக்கும் எவ்வித உண்மை மதிப்பும் இல்லை. இதை உண்மையான படைப்பாளி தன் அக ஆழத்தில் அறிவான்.
பெருந்தச்சனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டவுடன் கடைசிக் கணங்களைத் தன் பிள்ளைகளுடன் செலவிட விரும்புவதாகக் கூறுகிறான். அநீதிமுன் தன்மானம் இழந்து துவண்டு நிற்கும் பெருந்தச்சனின் நிலையைக் கண்டு சோமனுக்கு வெறுப்பும் கோபமும் வருகிறது, “கடைசிக் கணங்களை மக்களுடன் செலவிடுகிறானாம், அற்பப் புழு, உளியை எடுத்துத் தன் தலையை வெட்டிக் கொண்டிருக்க வேண்டாமா? அவனுடைய கலை இதற்குக் கூடவா தைரியம் தரவில்லை?” என்று எரிச்சல்படுகிறான். இத்தகைய கணங்கள் கலையின் தோல்வி என்பதே அவன் எரிச்சலுக்குக் காரணம்.
சங்கர்ஷணன் காவிய அரங்கேற்றம் முடிந்த பின் குடித்துவிட்டு தாழ்வுணர்ச்சியும், குற்ற உணர்வும் மேலோங்க சாருகேசியிடம் புலம்புகிறான், “வெற்றுக்கர்வத்தை சாந்தி செய்வதற்காக ஆத்மாவைக் கறைபடுத்திய அசடன். நான் உண்மையானவனாக இருந்திருந்தால், என் காவியம் ஆத்மாவின் குரலாக இருந்திருந்தால் சூரியதத்தரின் அழைப்பை மறுத்திருக்க வேண்டும். என் நூலை அணைத்தபடி சோனாவின் ஆழ்கயத்தில் மூழ்கி உயிர்விட்டுருக்க வேண்டும்”.
சோமனின் குரல் விமர்சகனுடையது என்றால், சங்கர்ஷணனுடையது படைப்பாளியின் அந்தராத்மாவின் குரல்.

பூஜ்யம் முதல் ஒன்று வரை
பிரளயம் பூஜ்யம் எனக்கொண்டால், படைப்பு ஒன்று. பூஜ்யத்திலிருந்து ஒன்று வரை நகர்ந்து பின்னர் பூஜ்யத்தை அடைகிறது காலம். மீண்டும் அதே வட்டம். காலம் சக்கரமென மாறாமல் சுழன்று கொண்டே இருக்கிறது.
காலநதி சுழன்று ஓடும் விஷ்ணுபுரத்தில் ஒவ்வொரு எண்ணமும், செயலும், ஒரு சருகு மல்லாந்து படுக்கும் அசைவும் கூட மீண்டும் நிகழும். தழல் எரியும் நாவும், கூரிய தர்க்கமும் உடைய அக்னிதத்தன் தன் சொல்லால் விஷ்ணுபுரத்தை நிர்மாணித்தான். அவன் வம்சத்தின் கடைசி ஆண்மகன் வேததத்தனோ ஐம்புலன்களும் ஒன்றே என்று அறிந்த, தருக்கத்தால் மறைக்கப்படாத தூய மனம் கொண்ட மோன விரதன்.
இந்து மரபு, வேதங்கள் மனிதரால் உண்டாக்கப்பட்டதல்ல, பிரபஞ்ச உற்பத்தியின் போதே வேதங்களும் நாத வடிவாகத் தோன்றுகின்றன. பின்னர் ரிஷிகள் அவற்றைத் தங்கள் தவத்தால் கண்டடைகிறார்கள். யுக முடிவில் மகாபிரளயத்தில் பிரபஞ்சம் அழியும் போது வேதங்களும் அழியும் என்கிறது. அடுத்த யுகத்தின் தொடக்கத்தில் மீண்டும் இவை தோன்றும். அவ்வாறு காலச்சுழற்சி தொடரும் என்கிறது. விஷ்ணுபுரத்தின் வைதிக ஞான மரபின் கடைசி சர்வக்ஞன் பெயர் வேததத்தன் என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டியது.
சோனாவில் ஒரு கற்பாறையில் ஒதுங்கியிருந்த அக்னிதத்தனைக் காப்பாற்றிக் கைபிடித்து ஓடத்தில் எற்றிக்கொண்டு வந்தவள் ஒரு செம்பி. அதுவே விஷ்ணுபுரத்தின் துவக்கம். காலச்சக்கரம் சுழல்கிறது. இறுதியில் பிரளயத்தில் அக்னிதத்தனின் குலத்தின் கடைசி வாரிசு வேததத்தன் சோனாவின் வெள்ளத்தில் ஒரு கரிய பாறையில் ஒட்டிக்கொண்டு இருக்கிறான். செம்பர் குல வழித்தோன்றல் பெண் ஒருத்தி ஓடத்தில் வந்து கை நீட்டுகிறாள். ஆனால் பிடி நழுவி சோனாவில் மூழ்குகிறார்கள். ஒரு நாடகீய உச்ச தருணத்தில் வட்டம் தொடங்கிய புள்ளியில் வந்து முழுமை அடைகிறது.
ரூபிக்கின் கனசதுரத்திற்கு (Rubik’s cube) 43,252,003,274,489,856,000 வரிசை மாற்றங்கள் (Permutations) சாத்தியமுண்டு. இத்தனை கோடானுகோடி வரிசைமாற்றங்களுக்கு நடுவில் அதன் ஆறு பக்கங்களையும் முழுமையாக்கும் நகர்வுகள் உண்டு. அந்த சரியான சில நகர்வுகள் பிற கோடிக்கணக்கான நகர்வுகளுக்கும் பொருள் ஆகின்றன. விஷ்ணுபுரத்தின் முழுமையும் அப்படி எண்ணற்ற சம்பவங்கள் மற்றும் மனிதர்களால் பின்னப்பட்டுள்ளன. கடைசியில் அவை ஒட்டுமொத்தமான ஒரு முழுமையையும் பொருளையும் அடைகின்றன. பிரபஞ்ச தரிசனமும் இதுவே.
விஷ்ணுபுரம் ஒரு கனவு. மனிதகுலம் தன் துயிலில் இதைக் கண்டு கொண்டிருக்கிறது. பிரளயம் விழிப்பு போல.
விஷ்ணுபுரம் ஒரு புராணம். ஒரு சூதன் தன்னைத் தானே பிரதி எடுத்துக்கொண்டு யுகம் தோறும் மீண்டும் மீண்டும் கதை சொல்லிக் கொண்டிருப்பான். ஏனென்றால் அதுவே அவன். நிறுத்தினால் அவன் இல்லாமலாகி விடுவான்.
ராஜகோபுரத்தின் உச்சிமண்டபத்தின் தரையின் தூசுப்படலத்தில் எண்ணற்ற சிறு பூச்சிகள் சேர்ந்து தங்களை அறியாமல் ஒரு மாபெரும் சக்கரத்தை வரைந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பூச்சியின் வாழ்வும் ஒரு எழுத்து. அவை அனைத்தும் சேர்ந்து சக்கரம் முழுமை பெறப் பங்காற்றுகின்றன. ஆனால் அதன் அர்த்தம் அவற்றால் அறியாமுடியாத எல்லைக்கப்பால் உள்ளது.
கீழே விஷ்ணுபுரம் ஸ்ரீசக்ர வடிவமாக மின்னிக் கொண்டிருக்கிறது. விஷ்ணுபுரத்தின் ஞான சபையில் சொல்லப்பட்ட ஒரு சொல் கூட வீணாவதில்லை. அந்த மண்ணில் தோன்றிய யாருடைய ஞானத்தேடலும் பொருளற்றுப் போவதில்லை. அதன் படைப்பு அழிப்பு சுழற்சியில் அனைத்தும் அர்த்தமும் பூரணமும் அடைகிறது.
இது விஷ்ணுபுரத்தின் உண்மை. இதுவே பிரபஞ்ச உண்மையும் கூட.
ஓம். அதுவும் பூர்ணம். இதுவும் பூர்ணம்.

- பிரகாஷ் சங்கரன்
(பகுதி-1)

(காரைக்குடியில் 2012, ஜூன் 30 மற்றும் ஜூலை 1ல் நடந்த விஷ்ணுபுரம் வாசிப்பு அரங்கின் கலந்துரையாடலில் சமர்ப்பிக்கப்பட்டு, ஜெயமோகன் இணைய தளத்தில் வெளியானது http://www.jeyamohan.in/?p=28740)

விஷ்ணுபுரம்: பூரணத்திலிருந்து... (பகுதி-1)


மண்ணில் ஓடும் நதிகளெல்லாம்
கடலையே அடைகின்றன.
மாறுபட்ட சிந்தனைகளும் தரிசனங்களும்
இறுதியில் பிரம்மத்தையே சென்றடைகின்றன.
(சாந்தோக்ய உபநிடதம்)
*


முழுமை
உயர்ந்த மலையின் வெவ்வேறு சிகரங்களில் ஊற்றெடுத்த நீர் சிற்றோடைகளாகவும் குறு நதிகளாகவும் பாய்ந்து ஓரிடத்தில் சங்கமித்துப் பெருநதியாகப் பெருகி மீண்டும் கிளைத்து துணைநதிகளாகவும் வாய்க்கால்களாகவும் ஓடி இறுதியில் கடலை அடைகின்றன.
வேறுபட்ட குலங்களும், தனித்த ஞான தாகிகளும், மெய்த்தேடல் கொண்டவர்களும், பல்வேறு மார்க்கிகளும் தங்கள் பயணத்தில் ஒருமுறையாவது ஞானத்தின் உறைவிடமான விஷ்ணுபுரத்தின் வீதிகளின் குறுக்காகக் கடந்து செல்கின்றனர். மேகங்களைத் தாண்டி வளர்ந்த கோபுரங்கள் கொண்ட அந்தப் பேராலயத்தின் பிராகாரங்களில் நடக்கின்றனர். மல்லாந்த கரியமூர்த்தி ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருவருக்கும் தொடர்புடையவராகிறார். குலங்கள் கலக்கின்றன, நம்பிக்கைகள் மாறுகின்றன, மதிப்பீடுகள் திருத்தப்படுகின்றன, புதிய மார்க்கங்கள் பிறக்கின்றன. பயணம் தொடர்கின்றது. கடைசியில் அவை எல்லாமும் ஒரு பெரும் நியதியின் முழுமையின் ஒரு அங்கமாகக் கச்சிதமாகச் சேர்கின்றன.
ஒவ்வொரு முறை விஷ்ணுபுரத்தைப் வாசிக்கும் போதும் ஏதாவது ஒரு அம்சம் அப்போதைய மனநிலை மற்றும் ஆர்வத்துக்குத் தகுந்தபடி பிரதானமாகத் தோன்றும். இம்முறை அதன் ஒட்டுமொத்த முழுமை நோக்கும், எண்ணற்ற அதன் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் ஆகியவை நாவலின் இறுதியில் கொள்ளும் முழுமையும் முக்கியமாகப்பட்டது. இந்தப் பிரம்மாண்டமான பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவும் – அதன் அசைவும் நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட, முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட முடியாத ஒரு மாபெரும் நியதியினால் சிறு பிசிறு கூட இல்லாமல் முழுமையாகக் கட்டப்பட்டிருக்கிறது. பிரபஞ்ச இயக்கத்திற்குப் பங்களிக்காத எதுவும் இங்கே இல்லை. விஷ்ணுபுரமும் அப்படியே. நாவலின் மையப் படிமத்திற்குத் தொடர்பில்லாத ஒரு கதாபாத்திரமும், சம்பவமும் இல்லை. முதல் பகுதியில் ஒரே ஒருமுறை பெயர் வரும் காதாபாத்திரம் கூடக் கடைசிப்பகுதியில் முழுமை பெற்று எழுந்து வருகிறது. ஸ்ரீதரன் அப்படி ஒரு உதாரணம்.
பிரபஞ்ச உற்பத்தி பற்றிய கேள்விகளும், ஞானத்தேடலுக்கான வழிகளும், அதனூடாக ஞானதாகிகளின் அந்தரங்கமான பயணமும் அவர்களின் கண்டடைதலுமே நாவலின் மையக்கருவாக மிகுந்த கவனம் கொடுத்து வாசிக்கப்படுப்பவை. என்றாலும், எண்ணூறு பக்க பிரம்மாண்ட நாவலின் பக்கங்களில் ஏதேதோ இடங்களில் ஆங்காங்கே சிதறிச் செல்லும் சம்பவங்களையும், குறியீடுகளையும் பொறுக்கிக் கோர்த்து அவை ஒரு முழுமையான மாலையாக வடிவம் பெறுவதைக் காண்பதும் ஒருவித நிறைவைத் தரக்கூடியது தான்.
உதாரணமாக ஸ்ரீபாதம் பகுதியின் தோற்றுவாயில் வரும் அந்த இரண்டு பேர் யார் என்பதும், குதிரை லாய மேற்பாவையாளர் வீரநாராயணரின் வேர் எங்கு இருக்கிறது என்பதும் மிகப்பூடகமாக வெவ்வேறு தருணங்களில் பல்வேறு கதாபாத்திரங்கள் வழியாக மாறுபட்ட கோணங்களில் சொல்லப்படுகிறது. அவற்றை இணைத்து ஒரு முழுப்பிம்பத்தைக் கண்டுகொள்ள முயல்வது ஒரு புதிர் முடிச்சை அவிழ்ப்பது போலப் பரவசமான அனுபவமாக இருக்கும்.

மல்லாந்த திருமேணி யாருடையது?
விஷ்ணுபுரத்தில் இருக்கும் மாபெரும் கரியசிலை விஷ்ணுவா இல்லை மூப்பனா என்பது குறித்து வாசிப்புக்கேற்ப கருத்துக்கள் வந்துள்ளன. பொதுவாக மார்க்ஸிய வரலாற்றுப் பார்வையின்படி ‘பழங்குடிகளை விரட்டிப் பறித்துக்கொண்ட வைதிக ஆதிக்கம்’ என்கிற வாசிப்பு பிரபலம்.
புராணங்கள் அனந்த சயனம் உட்பட விஷ்ணுவின் சயனங்கள் பத்து எனக் கூறுகின்றன. பாம்பணை, சங்கு, சக்ரம், கதை என எதுவும் இல்லாத ஸ்தலசயனமும் அதில் ஒன்று. விஷ்ணுபுரத்தில் அப்படித்தான் மூன்று வாசல்கள் உடைய கருவறையை நிறைத்துப் படுத்திருக்கிறார். அஜிதருக்குப் பின் இன்னும் சில ஆயிரம் வருட காலம் பௌத்தம் விஷ்ணுபுரத்தின் ஞான தரிசனமாகக் கோலோச்சியிருந்தால் அந்தக் கரியசிலை சயனபுத்தராக மாறியிருப்பார். செம்பர்கள் மொட்டைத் தலையும் கப்பரையுமாக வந்த ஒரு பட்டனின் கட்டிலிருந்து தங்கள் மூப்பனை விடுவிக்கக் காத்திருப்பார்கள்.
ஆனால் மாற்றம் இல்லாவிட்டால் காலமே இல்லை. மாற்றங்களே சமூகப் பரிணாம வளர்ச்சியின் முக்கிய காரணி. பரிணமிக்காதவை தேங்கி அழியும். சமூகப் பரிணாமும் ‘முரண்பட்டு நகர்தல்’ என்ற ஒற்றை பரிமாணத்தில் மட்டுமே நகர வேண்டுமென்பதில்லை. ‘மானுட ஞானம் அழிகிறதா’ என்ற கேள்விக்கு ஜெ சொல்லியிருந்த பதிலையே இதற்கும் போட்டுப்பார்த்தால் சமூகப் பரிணாமம் என்பதும் சுழற்சியாகவும் ஒத்திசைவாகவும் இருக்கலாம்.
எல்லாக் கலாச்சாரங்களும் அவைகளின் பழங்குடி வேர்களிலிருந்தே தொடங்குகின்றன. இயற்கையான அவற்றின் வளர்ச்சியின் போக்கில் அம்மக்களின் வாழ்க்கை அனுபவங்களே செறிவுபடுத்தப்பட்டுத் தத்துவமாகின்றன. இடையில் அவை காலச்சூழலில் திசைக்கொன்றாகப் பிரிந்து தனித்தனியாக வளர நேரிட்டால், அவ்வாறு வளரும் புதியசூழலுக்கு ஏற்ப ஆதி நம்பிக்கைகள் புதிய முலாம் பூசியபடி இருந்துகொண்டே இருக்கும். மகாகால மார்க்கம், வைதிகம், செம்பர்குலம் என விஷ்ணுபுரத்தின் அனைத்து மரபுகளிலும் அவற்றின் நனவிலியில் அந்தக் கரியதிருமேனி இருக்கிறது. அந்த ஆதி நம்பிக்கை காலத்தின் ஊடே வெவ்வேறு கைகள் வழியாக மாறிச் சென்று கடைசியில் பிரளயத்தில் அமிழ்கிறது. பின்னர் புதிய வானும், பூமியும் பிறந்து அடுத்த சுழற்சி ஆரம்பிக்கையில் தொடங்கிய கைகளிலேயே இருக்கிறது. விஷ்ணுபுரத்தின் இந்தக் காலச்சுழற்சி தான் ஒருவகையில் காலச்சக்ர தரிசனம். அதன் எல்லாப் புள்ளிகளும் முடிவில்லாத பயணத்தில் இருக்கின்றன. மாறாத மையப்புள்ளி – மல்லாந்து வானை நோக்கும் அந்த பிரம்மாண்ட கரியமூர்த்தி தான். இதன் குறியீடாகவே விஷ்ணுபுரம் சக்கர வடிவமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஞானத்தேடலின் தோற்றுவாய்
விஷ்ணுபுரப் பேராலயத்தின் ஞானசபை விவாதத்தில் உறுதியான தத்துவ அடித்தளம் கொண்ட எல்லா தரிசனங்களும் கலந்துகொண்டு பேசுகின்றன. இவற்றின் நடுவில் காலந்தோறும் சுய தேடலின் மூலம் தங்கள் பாதையை தாங்களே கண்டடையும் ஞானதாகிகளும் தோன்றியபடியே இருக்கிறார்கள். அங்கே நடக்கும் பலசம்பவங்கள், தருணங்கள் இவர்களுக்குப்ம்பொதுவாக இருந்தபோதும், ஒவ்வொருவருக்கும் அவரவர் இயல்புக்கு தகுந்தபடி ஏதாவது ஒரு சம்பவம் அல்லது தருணத்தில் தான் அகத்தூண்டல் பெறுகிறார்கள்.
தெருவோரம் கால்நீட்டிப் படுத்திருக்கும் மகாரோகியின் உருவம் பிங்கலனைத் தொந்தரவு செய்யும் அளவு மற்றவர்களைப் பாதிக்கவில்லை. இயற்கையின் கரங்கள் மீட்டும் அதிமகத்தான இசை திருவடியின் மனதைத் தான் புரட்டிப் போடுகிறது. பிரசேனர் சொல்வது போல ஒரே பிரபஞ்ச அனுபவம் தான், அதை இசையிலிருந்து பெண்ணிலும் அதிலிருந்து மீண்டும் நாதமயமாகவே எதிலும் காண்கிறான். சோமன் முற்றிலும் மாறாக அதீத லௌகீக உணர்ச்சிகள் மிகுந்தவன், அவனது திறப்பு ஞானத்தை நோக்கியதல்ல. மானுட வாழ்வின் நீதி-அநீதி சார்ந்தது. பெருந்தச்சனுக்கு இழைக்கப்படும் அநீதி அவனை அறத்தின் பால் தூண்டுகிறது, ஆனால் அது பிங்கலனை சலனப்படுத்தவே இல்லை.
பொதுவாகக் காமமும், எதிர்பாராத மரணத்தைக் காணநேர்தலும் லௌகீகத்தை மீறிய ஞானத்தேடலுக்கான தோற்றுவாயாக ஆவதைப் பல ஞானிகளின் வாழ்வில் நாம் கவனிக்கலாம். விஷ்ணுபுரத்தில் காமம் அப்படிப் பலருக்குக் காரணியும், வழியுமாக இருக்கிறது. அழிவு மற்றும் மரணம் குறித்தும், அதன் மீதான ஆதிமனதின் அச்சம் குறித்தும் அஜிதன் முதல் யோகவிரதர் வரை பலர் பேசுகின்றனர். ஆனால் மரணம் என்னும் அழுத்தமான ஒரு அதிர்வினால் இகவாழ்வின் நிரந்தரமிண்மையைக் கண்டு திடுக்கிட்டு நிரந்தரத்திற்கான தேடுதலில் ஈடுபடும் எவரையும் காணமுடியவில்லை.



சொல்லாமல் சொன்னவை – குறியீடுகள்
எண்ணூறு பக்கம் விரிந்திருக்கும் அடர்ந்த சொல்வனமாகிய விஷ்ணுபுரத்தில் காட்சிகள் ஒரு அதிநவீன ஓளிப்படக்கருவியால் பதியப்பட்டது போல மிகத் துல்லியமாகவும், தெளிவாகவும், வெகு நுணுக்கமாகவும் கண்முன் நிறுத்தப்படுகின்றன. முன்னூற்றி அறுபது பாகையும் சுழன்று காட்சிகள் விரிகின்றன. கதாபாத்திரங்கள் ஒருவரோடொருவர் பேசுவது மட்டுமன்றி ஒவ்வொருவரும் அவரின் அந்தரங்கத்தில் எழுப்பிக்கொள்ளும் கேள்விகளையும், பதில்களையும், தருக்கங்களையும் கூட மனதை ஊடுருவிப் பதிவுசெய்து விடுகிறது. ஆனாலும் இவற்றின் நடுவில் சொல்லாமல் சொல்லப்பட்டதும், குறியீடுகளாக வாசகனுக்கு விடப்பட்டதும் தான் விஷ்ணுபுரத்தைத் தேர்ந்த வாசகர்களுக்கு மிகவும் நெருக்கமானதாக ஆக்குகிறது. அவர்கள் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதிதாக ஒரு வாசல் திறக்கிறது.
நாவல் முழுவதும் தொடர்ந்து வரும் சில குறியீடுகள் உண்டு. எடுத்துக்காட்டாக பச்சை நிறம் ,கருப்பு நாய், கழுத்து நீண்ட வெண்பறவை போன்றவற்றைக் கூறலாம்.
மானுட மனதால் கற்பனை செய்ய முடியாத பிரபஞ்ச வலைப்பின்னலின் குறியீடான அதிமகத்தான ஸ்ரீசக்ரத்தின் யோனி- பச்சை நிறம். சக்தியின் மூலாதாரம். காமத்தின், படைப்பின் குறியீடு. அதுவே அடையப் பெற வேண்டியதுமான ஞானத்தின் குறியீடுமாகும். எந்த சஞ்சலமும் எதிர்வினையுமின்றி வெறுமனே சாட்சியாகப் பார்க்கும் மிருகத்தின் விழியே ஞானவிருட்சமான ‘மிருகநயனி’. இருளில் பச்சையாக ஒளிரும் மிருக விழிகளின் நிறமே மிருகநயனியின் நிறமும். தேடலுள்ளவனுக்கு மிருகநயனியின் பச்சைநிற ஒளியே அக இருளில் ஞானத்தின் பாதையைக் காட்டுகிறது. பச்சைமாமலை போல் மேனியனாகிய விஷ்ணுவின் நிறம் அது. ஞானத்தின் இருப்பிடமான விஷ்ணுபுரத்தின் உயர்ந்த சிகரம் –ஹரிததுங்கா (பசுங்குன்றம், பச்சைமலை) ஞானத்தின் பருவடிவமே.
பிங்கலன், அஜிதன், பாவகன், யோகவிரதன் என தருக்கம் நிறைந்த தேடல் கொண்டவர்கள் எல்லாரும் மிருகநயனியை அடைகிறார்கள். மிருகநயனியைச் சுற்றிலும் வேறு எந்த மரம் செடியும் இல்லாமல் ஒளியாலான வெட்டவெளி உள்ளது. ஞானதாகிகள் அனைவரும் தங்கள் தேடலில் தனிமையையும், வெறுமையையும் உணர்கின்றனர். அது விரக்தியால் அடைந்த வெறுமை அல்ல. கண்டுகொண்ட உண்மை மட்டும் தன்னந்தனியாக இருப்பதனால் உணரப்படும் வெறுமை. அஜிதன் மிருகநயனியின் அடியில்தான் எண்ணங்கள் ஒழிந்த ஒரு வெறுமையின் அகழியை ஒரு கணம் தாண்டுகிறான்.
பிங்கலுனுக்கு ஒரு ஒளிவீசும் பச்சைக்கல்லாகக் கையில் அகப்பட்டு அவனை அவன் தேடலை நோக்கி இட்டுச் செல்கிறது. அந்தக்கல் இருபகுதிகள் கொண்ட விதை போலத் தோன்றுகிறது. அது தர்க்கம் நிறைந்த அவன் மனது -எப்பொழுதும் எதிரெதிராகப் பிளந்து போராடும் இருநிலைகளைக் காட்டுகிறது. சாருகேசியுடன் ஆவேசமாகக் கூடும் போது கூட, அந்தச் செய்கையை மனதின் மற்றொரு பகுதி வேறு எவரோ போலப் பார்த்துக்கொண்டிருக்கிறது. “இருநிலையின்றி இதைக் கூடச் செய்யமுடியாதா என்ன?” என்று விரக்தி அடைகிறான். பின்னர் அஜிதர் ஸ்தூபியில் அமர்ந்திருக்கும் போது அந்த விதை அதன் தாய்ச்செடியை நோக்கி அவனை நடத்திச்செல்லுகிறது. மிருகநயனியின் அடியில் அவன் அடைந்த ஞானமே இந்த இருண்மை நிலை என்னும் தடையை உடைப்பதில் தான் வருகிறது. ‘எதிர்ப்பின்றி, குற்ற உணர்வும், பேத உணர்வும் இல்லாத போகமே பேரானந்தநிலை’ என்பது தான் பிங்கலனின் தரிசனம்.
பிற்காலத்தில் பிரளய சமயத்தில் பிங்கலனின் வாமமார்க்கத்தில் இணையும் பத்மன் அபேத நிலையில் காமத்தை உணர தன் மனக்குகைக்குள் செல்கிறான். அங்கே அவன் ஆழ்மனத்தின் மிருக கர்ஜனை கேட்கிறது. அவன் துவண்டு பிறழ்ந்தால் வெளியில் காத்துக்கொண்டிருக்கும் நரிகள் (புலண்கள்) கூறுபோட்டுத் தின்றுவிடும். ஆனால் பத்மன் சோனாவில் மூழ்குவதாக வரும் குறியீடு – அவன் காமம் எனும் நதியில் எதிர்ப்பின்றி மூழ்குவதைக் குறிக்கிறது. அது அவனைக் கடலுள் கொண்டு சேர்க்கும்!
கௌஸ்துபம் பௌத்த தரிசனம் வெல்லும் காலகட்டமாக இருப்பதால், அந்தப் பகுதி தொடங்குவதே பௌத்த மரபின் முக்கியக் குறீயீடுகளில் ஒன்றான யானையுடன்தான் (அங்காரகன்). பௌத்தத்தில் யானை மனவலிமையின் குறியீடு. அங்காரகன் இத்தனை காலம் விரும்பிச் செய்த, சுவர்ணகண்டத்தை அடிக்கும் வெண்கலப் பிடியை உதறி, ஞானத்தை உதறிய சித்தனைப் போல விடுதலையாகி முதுகிலும் தலையிலும் சேறுபடிய காட்டு யானையாகிறது. மிருகநயனியின் பச்சை ஒளியில் அங்காரகனின் கரிய பேருருவம் கரைவதை அஜிதன் பார்க்கிறான். அங்காரகன் கனவில் கண்ட தரிசனத்தை தன் மனவலிமையால் அடைந்து விட்டது. அஜிதன் அவன் கண்ட தரிசனமான காலசக்ரத்தின் மையப் புள்ளியான அகாலத்தைத் தன் மனவலிமையால் அடைந்தானா என்பதை அவனே அறிவான்!
சித்தன் வாழ்வின் பொருளை நிராகரிக்கும் சார்வாகனல்ல. ஞானத்தை அடைந்து அதையும் உதறி மேலே சென்ற பரிபூரணன். ஞானசபையில் அஜிதன் உத்வேகத்துடன் பேசிக்கொண்டிருக்கையில் காஸ்யபனை மடியில் வைத்தபடி மௌனமாக சித்தன் வேடிக்கை பார்க்கிறான். இந்தக் காட்சி முண்டக உபநிஷத்தின் புகழ்பெற்ற ‘ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்திருக்கும் இரண்டு பறவைகளில், ஒரு பறவை பழங்களைத் தின்கிறது, மற்றொன்று அமைதியாக அனைத்தையும் பார்த்தவண்ணம் இருக்கின்றது’ என்னும் படிமத்தை நினைவுபடுத்துகிறது.
இளம் காஸ்யபன் ஞானசபையின் வாசல் திறந்ததும் அதன் பெரிய படியைத் தொடாமலே தாவி உள்ளே நுழைகிறான். மானுட துக்கத்துக்குப் பரிகாரமாகாத வாய்ச்சொல் ஞானம், அடையாளங்கள், விருப்பங்கள் என அனைத்தையும் எடுத்த எடுப்பிலேயே அவன் தாண்டிவிட்டதன் குறியீடு அது.
பிரளயத்திற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கியவுடன், தன் வாலைத் தானே விழுங்கும் பாம்பு குறியீடாக வரும். வாலில் தொடங்கி தன் உடலைத் தானே விழுங்கிய பாம்பின் விழுங்கமுடியாத கடைசி மிச்சத்துடன் ஒரு பந்து போல சுருங்கி நீருக்குள் விழும் (ஒரு சொல் மௌனத்திற்குத் திரும்பியது போல). இந்து மதத்தின் பல மரபுகளில் இந்தக் குறியீடு முக்கியத்துவம் வாய்ந்தது. புராணங்கள் காலத்தை சர்ப்பமாக உருவகிக்கின்றன. பிரளயத்தில் காலமும் வெளியும் உள் ஒடுங்கும். அடுத்த யுக ஆரம்பத்தில் இந்த மிச்சமே (ஆதி சேஷம்) விரிந்து காலமும் வெளியுமாக மீண்டும் பிரபஞ்ச சிருஷ்டி உண்டாகிறது. நீரில் இருந்தே உயிர்களின் தொடக்கம் இருக்கும் என்கிறது. மகாவிஷ்ணு இந்த ஆதிசேஷனின் மீது தான் அறிதுயில் கொள்கிறார்.
நாவலின் தொடக்கம் முதல் இறுதி வரை வரும் இன்னொரு குறியீடு கருப்பு நாய். அது படைப்புக் கடவுள் பிரம்மனின் வாகனம் காலபைரவன் தான். காலத்தின் குறியீடான அவனே ஒவ்வொருவருடைய காலம் முடியும் போதும் காலனாக வருகிறான். படைப்பு அழிவைத் தன் கர்ப்பத்தில் சுமக்கிறது. பிரளயத்தில் கடைசியாக விஷ்ணுவின் சன்னிதியில் வந்து நிற்கிறான். காலம் அகாலத்தில் ஒடுங்குகிறது அல்லது காலத்தின் கணக்கு எல்லாருக்கும் ஒன்று தான்!
முதல் பகுதியின் தோற்றுவாயில் பிரும்மாண்டமான ஸ்ரீசக்ரத்தை வரைபவன் ஒரு வெண் பறவையாக மாறிப் பறந்து சென்று எங்கோ ஒருவனின் கனவில் நுழைந்து அவன் நனவில் எழ விரும்புகிறான். அதைத் தொடர்ந்து பல இடங்களிலும் நீண்ட கழுத்துள்ள வெண்பறவை ஒரு குறியீடாக வருகிறது. ஞான சபையின் மேற்கூரையில் எல்லா ரிஷி சிலைகளின் மீதும் அந்தப் பறவை அமர்ந்திருப்பதை அஜிதன் காண்கிறான். பிரளயத்தில் விஷ்ணுபுரப் பேராலயத்தின் கோட்டைச் சுவரில் அவை பறந்து வந்து மோதி உயிரை விடுகின்றன. காலந்தோறும் விஷ்ணுபுரத்தைத் தேடி வந்து கொண்டிருக்கும் ஞானதாகிகளே வெண்பறவைகள். அது அவர்களின் தேடல் அல்லது கேள்விகள் என்றும் பொருள் கொள்ளலாம். அவை எப்போதும் ஏதோ திசைவெளியிலிருந்து விஷ்ணுபுரத்தைத் தேடி வந்து கொண்டெ இருக்கின்றன. கடைசியில் பிரளயத்தில் விஷ்ணுபுரம் அழியும் போது அவையும் சேர்ந்து அழிகின்றன. மீண்டும் விஷ்ணுபுரம் தோன்றும் போது கூடவே அவையும் எழும்.

                                                                                                                                                (பகுதி - 2)

Thursday, August 2, 2012

மானுட ஞானம் தேக்கமுறுகிறதா?


( நண்பர் சதீஷ் கேட்டிருந்த 'மானுட ஞானம் அழிகிறதா' என்னும் கேள்விக்கு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருந்த அற்புதமான பதிலைப் படித்து உந்தப்பட்டு அது தொடர்பாக எழுந்த என் சிந்தனைகளை தொகுத்து எழுதிய கடிதம். ஜெ தளத்தில் வெளியிடப்பட்டது )
********
பதில் சொல்லத் தெரியாதவர்களால்தான் சில சமயம் கேள்விகள் ‘லூசுத்தனம்’ என்று அலட்சியப்படுத்தப்படுகிறது. மூத்த அறிவுஜீவிகளால் பொருட்படுத்தி பதில் அளிக்கப்படும்போது எந்தக் கேள்வியும் அர்த்தமுள்ளதாகவும், புதிய சிந்தனைகள் வெளிவரக் காரணியாகவும் ஆகிறது. இளம் சிந்தனையாளர்களின் தேடலுக்கு கௌரவம் செய்யப்படுகிறது. நண்பர் சதீஷுக்கு வாழ்த்துக்கள். ஜெ வுக்கு நன்றிகளும்.
என் புரிதல்படி, மனித இனம் பரிணாமத்தில் போட்டி போட்டு முன்னேறி, மானுட ஞானத்தைப் பெருக்கிக் கட்டமைக்க தனக்குச் ‘சமமாக’ அல்லது ‘மேலான’ ஒரு போட்டியாளர் தேவையில்லை. ஏனென்றால், மானுடனின் இதுவரையிலான புறவயமான அறிவுத் தொகுப்பும் எந்த ஒரு போட்டியாளரையும் ‘சமாளிக்கும்’ பொருட்டு உருவானதல்ல. எனவே இனிமேலும் மானுட வளர்ச்சிக்கு அப்படி எந்த ஒரு உயிரினமும் ஞானச் சவால் விடவேண்டியதில்லை.
மனித இனத்தின் ஒட்டுமொத்த புறவயமான ஞானச் செல்வமும் அவன் போட்டியாளர்களை வென்று தன் இருத்தலைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டும் என்றால், அவன் குரங்கினத்திலிருந்து பிரிந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வேட்டையாடக் கற்றுக் கொண்டதே போதும். அத்துடன் அவனது அறிவுத் தேடல் நின்றிருந்திருக்கலாம்.
ஆனால், அப்படி வேட்டையாட அவனைத் தூண்டியதே பரிணாமக் கொடையாக மனித இனத்திற்குக் கிடைத்த பெரிய அளவுள்ள மூளைதான். மனிதனுக்கு, மரபணு ரீதியாக மிக நெருங்கிய பேரினக் குரங்குகளை விட மூளையின் அளவு மூன்று மடங்கு பெரியது. அதனால் மூன்று மடங்கு நரம்பணுக்களும் (நியூரான்கள்) அதிகம். மனிதனின் மொத்த உடலுக்குத் தேவைப்படும் ஆற்றலில் ஐந்தில் ஒரு பங்கு இப்பெரிய மூளையின் இயக்கத்திற்குத் தேவைப்படுகிறது. மூளையின் மிகுதியான ஆற்றல் தேவையை ஈடுகட்டும் நோக்கம் – மறைமுகமாக மனிதனின் அறிவாற்றலை பெருக்க உதவியது. அதாவது அத்தகைய அதிக ஆற்றலைத் தரும் மாமிசத்தை வேட்டையாடவே ஆதிமனிதன் கற்களை செதுக்கி ஆயுதமாகப் பயன்படுத்த பரிணாமத்தால் உந்தப்பட்டான் என்னும் ஒரு ‘வேட்டைக் கருதுகோளு’ம் உண்டு (Hunting hypothesis).
எனவே பரிணாமத்தின் முதல் பெரும் கொடையே அறிவை விரிவு செய்ய விதிக்கப்பட்டிருப்பதால் மனிதனின் அறிவுத் தேடல் – ஞான சேகரம் எந்தப் போட்டியாளரும் இல்லாமல் தொடரும் எனவே நினைக்கிறேன். ஜெ கூறியபடி மானுட ஞானம் என்னும் நீர்ப்படலம் அது பரவும் நிலத்தின் அமைப்பிற்கேற்ப அமைகிறது. மொழி, எழுத்து, இசை என்று தேவைப்பட்ட காலங்களில் அந்தப் பள்ளங்களை நிரப்பியும், பிறகு இன்று காணும் யாவையுமாகவும் வளர்ந்து கொண்டு இருக்கிறது. இது முடிவுக்கு வந்துவிட்டது என்பதை விட, இதன் தொடர்ச்சி என்னவாக இருக்கும் என்பதே இன்னும் சுவாரஸியமானதாக ஆக்குகின்றது.
இந்த இடத்தில் விஷ்ணுபுரத்தில் எனக்குப் பிடித்த வரிகளுள் ஒன்றான “மனிதன் ஞானத்தை உருவாக்குகிறான். அது கூன்போல அவன் முதுகில் உட்கார்ந்திருக்கிறது. தள்ளாடியபடி அதைச் சுமந்து திரிகிறான்” என்பதை நினைத்துக் கொள்கிறேன். ஆம், மானுட ஞானத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி அவன் இதுகாறும் ‘உருவாக்கித்’ தொகுத்தவற்றை ஒட்டியும், வெட்டியும், முற்றிலும் எதிர்த்தும் கூட இருக்கலாம். வாழும் சூழல் கொடுக்கும் சவால் மட்டுமே பரிணாமத்திற்குக் காரணமாக வேண்டியதில்லை. மாறாக, எதிர்கால அறிவுச் செயல்பாடு, கட்டற்ற இன்றைய ஞானம் உருவாக்கும் சிக்கல்களை சமாளிப்பதும், எல்லைகளை மீறுவதும் ஆக இருக்கலாம். இன்றைய மனிதனே நாளைய மனிதனுக்கு போட்டி அல்லது சிந்தனைகளை வடிவமைப்பவன்.  இது என் எளிய ஊகமே. அல்லது முன்னொருமுறை என் கேள்விக்குப் பதிலாக ஜெ சொன்னது போல, ‘தனியொரு கரையான், தானும் சேர்ந்து கட்டும் புற்றின் பிரம்மாண்டத்தை ஒரு போதும் கற்பனை செய்யக்கூட முடியாது. அது போலவே மானுட ஞானம் வழியாக பிரபஞ்ச விதி அவனை எங்கே இட்டுச் செல்லும் என்பதை யூகிக்கவே முடியாது’.

*
சில மாதங்களுக்கு முன் மானுட இனத்தின் எதிர்காலத்தை யூகித்து Mark Changizi என்பவரால் எழுதப்பட்ட Harnessed: How Language and Music Mimicked Nature and Transformed Man என்றொரு புத்தகத்தின் அறிமுகக் கட்டுரை படிக்க நேர்ந்தது.http://seedmagazine.com/content/article/humans_version_3.0/
கட்டுரையாளர் சொல்வதன் சுருக்கம்:
1. இயற்கைத் தேர்வில் (Natural selection) பேரினக்குரங்கிலிருந்து மனிதன் (human 1.0) உருவானான். நாம் இப்போது இருக்கும் நிலை அதை விட ஒரு படி மேல் – மனிதன் 2.0. மனிதனின் முதல் பண்புகள் பேச்சு, எழுத்து, இசை யாவும் இயற்கைத் தேர்வினால் நமக்குக் கிடைத்ததல்ல. மாறாக இயற்கையின் அமைப்பைப் பயன்படுத்திக்கொண்டு உருவானவை என்கிறார். ஆனால் அது பிரக்ஞை பூர்வமாக நாம் உருவாக்கிக் கொண்டதல்ல, நமது ஆதி நடத்தைப் பண்புகள் மற்றும் கலாச்சாரத்தின் பரிணாமத்தில் இயல்பாக எழுந்தவை. நமது விழிப்புலத்திற்கு ஏற்றவாறு எழுத்து, நம் கேள்விப் புலத்திற்கு ஏற்ப பேச்சு, நமது செவிப்புலத்திற்கும், அகஎழுச்சியைத் தூண்டும் இயக்கமுறைகளுக்கும் ஏற்ப இசை உண்டானது என்கிறார். சுருக்கமாக நாம் இயற்கையில் இருக்கும் அமைப்பிற்கு தகுந்தாற் “போலச் செய்கிறோம்”.
2. மனிதன் 3.0 என்கிற அடுத்த கட்டத்திற்கான நகர்வு, மரபணு மாற்றம் அல்லது செயற்கை அறிவாற்றல் போன்று செயற்கையாகத் தொழில்நுட்பத்தால் கட்டமைக்கப்பட்டதாக இருக்காது, இயற்கையை போத பூர்வமாகப் பயன்படுத்திக்கொண்டு நகர்வதாக இருக்கும். காரணம் இயற்கையில் நாம் இவ்விதம் பரிணமித்திருப்பதே ஆகச்சிறந்த வடிவத்தில், ஆற்றலுடன்தான்.
3. இப்போது நாம் நமது மூளை அல்லது மற்ற உறுப்புக்களை பரிணாமத்தில் அடிப்படையான அளவிற்கு மட்டுமே போதுமானவையாக உருவாகியிருக்கிறது என்று கருதுகிறோம். ஆனால், உண்மையில் அவை மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்டவை. ஆகவே எந்தத் தொழில் நுட்பத்தாலும் (மரபணு, Artificial Intelligence) அடையக்கூடியதைவிட மிக அதிகமான கற்பனை செய்யமுடியாத சக்தி நம்மிடம் இப்பொழுதே இருக்கும் இயற்கையான அமைப்பில் இருந்து கிடைக்கும் – அதற்கு நாம் அந்த இயற்கை அமைப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் (harnessing). ஆனால் நாம் அதை எப்படி பயன்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும், அப்படி அடையப்பெறும் சக்தி என்னவாக இருக்கும் என்பதைச் சொல்ல முடியாது.
அறிவியல் ஊகங்கள் – இன்று வரை கண்டுபிடிக்கபட்டவை, இதன் நீட்சியாகச் சாத்தியமானவை, பின்னர் அதன் மேலதிக கற்பனை என்று நம்பத்தகுந்ததாக இருக்கும். என்னைப் பொருத்தவரை இந்தக் கட்டுரையாளர் செய்வது அடிப்படை அறிவியல் விளக்கங்களை வைத்துக்கொண்டு தாவும் பெரும் கற்பனைப் பாய்ச்சல். ஆனால் அதுதான் சாத்தியமும் கூட. புராணங்களில் வரும் கந்தருவர், யக்ஷர் போன்ற அதீத சக்தி படைத்த அடுத்த மானுட வடிவம் வரும் என்கிற உற்சாகம். தொட்டுக்கொள்ள இயற்கைத் தேர்வு, உயிரியல் தகவமைப்பு என்று கொஞ்சம் பரிணாமவியல். இப்படி நான் சொல்வதற்குக் காரணம் அவரது கூற்று தான் – “அளப்பரிய சக்தி கிடைக்கும், ஆனால் அது என்ன, எப்படி அடைவோம் என்று சொல்லமுடியாது. இப்போது நாம் செய்து கொண்டிருக்கும் சில வீடியோ கேம்கள், முப்பரிமாணக் காட்சி போன்றவை நாம் ஏற்கனவே நமது மூளையின் இயற்கை அமைப்பிற்கேற்ப அவற்றை முன்னேற்றுகிறோம் என்பது ஒரு அடையாளம்”.
*
தத்துவம் அறிவியல் சிந்தனைக்கு என்ன தூண்டுதல் தர முடியும் என்கிற கேள்விக்குப் பதிலாக ஜெயமோகனின் இந்த வரிகளைக் கூறலாம், “ஒரு வைரஸ் அல்லது ஒரு பாக்டீரியா முற்றிலும் சுயமில்லாததாக, ஒட்டுமொத்தம் மட்டுமேயாக பரிணாமம் கொண்டபடி இருக்கலாம் இல்லையா? அந்த ஒட்டுமொத்தம் மனித ஞானத்தைவிட பிரம்மாண்டமான ஞானத்தைத் திரட்டி ஒட்டுமொத்தமாக தனக்குரியதாக வைத்திருக்கலாம்.”
“பரிணாமம் என்பது முரணியக்கம் வழியாக நிகழாமல் ஒத்திசைவு மூலமோ சுழற்சி மூலமோ நிகழ்கிறதெனக் கொண்டாலும் உங்கள் வினாவின் அடிப்படை மாறுபடுகிறது.” அருமை! ஒரு உயிரியல் ஆய்வு மாணவனாக என்னை மிகவும் சிந்திக்கத் தூண்டிய கருத்து இது. இதன்படி யோசித்தால் எதிர்கால மானுட ஞானம் என்பதே சூழலுடன் முரண்பட்டு/போரிட்டு பரிணமிக்காமல், ஒட்டுமொத்த உயிர்ச் சூழலுடன் ஒத்திசைந்து தன்னைத் தக்கவைக்கும் வழியைத் தேடுவதே அடுத்தகட்ட ஞானத் தேடலாக இருக்கலாம். அதற்கான நெருக்கத்தை மற்ற உயிர்களுடன் உருவாக்குவதே அடுத்த காலத்தின் அறிவியலாக இருக்கலாம். இன்னும் நிறைய சாத்தியங்களை யோசிக்க வைக்கிறது. நன்றி ஜெ.
மேலும், உயிர் தோற்றத்தில் ஒரு செல் உயிரினங்களை விட பலசெல்/கூட்டு உயிரினங்கள் பரிணாமத்தில் மேம்பட்டவை என்று கருதப்படுகிறது. சில சமயம் இதையே தலைகீழாகப் போட்டுப் பார்த்து யோசித்தால், ஒரு அறையை அடைத்துக்கொண்டு இருந்த பிரும்மாண்ட கம்ப்யூட்டர்களைவிட இன்று உள்ளங்கைக்குள் அடங்கும் கணினிகள் வளர்ச்சிப் ‘பரிணாமத்தில்’ மேம்பட்டவையாகக் கருதப்படுவது போல ஏன் பெரும், பல செல் உயிரினங்களை விட கண்ணுக்குத் தெரியாத ஒரு செல் நுண் உயிரிகள் பரிணாமத்தில் மேம்பட்டவையாக இருக்கக் கூடாது என்று தோன்றுகிறது. ஒரு செல் உயிரினங்கள் அவை அப்படி இருப்பதாலேயே பரிணமிக்கும் வேகம் மனிதனை (எல்லா பெரும் உயிரினங்களையும்) விட மிக மிக அதிகம். ஆகவேதான் தொடர்ந்து பெரிய பலசெல் உயிரினங்களுக்குச் சவால் விட்டுத் தாக்குப் பிடிக்க முடிகிறது (எச்.ஐ.வி. உட்பட பல நோய்க்கிருமிகளை உதாரணம் சொல்லலாம்).
மேலும் அவற்றின் இருத்தல் தனித்தனியானாலும், கோடிக்கணக்கில் ஒன்று சேர்ந்து கொண்டு ஒட்டுமொத்தமாகவே இயங்குவதால் இருத்தலுக்கான போட்டியில் வெற்றிகரமாக தனது சந்ததியைப் பெருக்கி மரபணுவைக் கடத்தி தன் இனத்தை நீடித்துக்கொள்கின்றது. எனவே ஜெ சொன்னது போல “பரிணாமம் சுழற்சி மூலமாக நிகழ்கிறதெனக் கொண்டால்” எதிர்கால மானுட ஞானம் இவ்வாறு மீண்டும் தனிச் செல்களாக உதிர்ந்து ஓரிடத்தில் கூடி வாழ்வதைப் பற்றியதாகக் கூட இருக்கலாம். ஒரு மாபெரும் வைரஸ் தொகை அந்த வைரஸின் உயிர்ப்பிரக்ஞையுடன் இருப்பது போல அப்பொழுதும் மானுட செல்கள் மானுடப் பிரக்ஞையுடன் இருக்கலாம். பரிணமிக்கும் வேகத்திலும் மற்ற ஒருசெல் உயிர்களுடன் போட்டியிட முடியும்.
இந்த மாதிரியெல்லாம் சிந்திப்பது எனக்கும் பிடிக்கும், எனது ஆய்வுத்துறைக்கும் இந்த ‘விபரீதக்’ கற்பனைகள் பலன் தரும். சில சமயம் ‘லூசுத்தனமாக’த் தோன்றினாலும், அறிவியல் ஊகத்தை யாரும் அப்படி ஒதுக்கிவிட முடியாது. எனவே இவற்றை கதைகளாக எழுதி வைத்துவிடுவேன். அங்கு கதாசிரியனின் உலகில் யாரும் கேள்வி கேட்க முடியாதில்லையா? :))
சிந்தனைகளைக் கிளறி விடும் உரையாடல்களுக்கு மீண்டும் நன்றிகள் பல ஜெ.
-பிரகாஷ்