Friday, September 20, 2013

தரிசனம்

சனிக்கிழமை (14.09.2013) கலந்துகொண்ட திரு தலாய் லாமா அவர்களின் உரையின் போது அரங்கில் அவர் இருந்த இடத்தில் இருந்து தள்ளித் தான் எனது இருக்கை. முன்வரிசையில் அமரும் நுழைவுச்சீட்டிற்கு அதிக பணம். அப்போது நினைத்துக்கொண்டேன், நெருக்கமாக அவரைப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைக்குமாவென்று. அங்கே இருந்த கூட்டம், கெடுபிடியில் அது சாத்தியமல்ல என சர்வநிச்சயமாகத் தெரிய, மனதைத் தேற்றிக்கொண்டேன்.

மறுநாள் செக் இணைய இதழ்களை பார்த்துகொண்டிருந்த போது, எதேர்ச்சையாக திபேத்தியர்களுடன் எனது சக ஆய்வாளர் (இந்தப் பெண்மனியைப் பற்றி என் செக் குடியரசு குறித்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்) ஒருவரும் தலாய் லாமாவுடன் இருக்கும் ஒரு குழுபுகைப்படம் பார்க்க நேர்ந்தது. தலாய் லாமா தங்கியிருக்கும் இடம் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. அவரிடம் எப்படி சந்திக்க முடிந்தது என்று கேட்டபோது, திபேத்தியர்களுடன் சென்று தலாய் லாமா தங்கியிருக்கும் இடத்தில் பார்த்ததாகத் தெரிவித்தார். இந்தப் பெண்மனிக்கு திபேத்திய மொழி தெரியும், ஆஸ்திரியாவில் இருந்து வந்திருந்த அவரது திபேத்திய நண்பர்களுக்கு பிராஹாவில் உதவிக்காகச் சென்றிருந்தார். என் ஆர்வத்தை அறிந்து, தலாய் லாமா தங்கியிருக்கும் ஹோட்டலின் பெயரைச் சொல்லி, அதிகாலை சென்று காத்திருந்தால் ஒருவேளை அவர் கிளம்பும் போது பார்க்க வாய்ப்பு கிடைக்கலாம் என்றார். 

இன்று தலாய் லாமா பிராஹாவில் இருக்கும் கடைசி நாள், மாலை கிளம்புகிறார். மூன்று நாட்களாகவே மிகுந்த கூட்டம், பத்திரிக்கையாளர்கள், மக்கள், திபேத்திய அகதிகள் என சந்திக்கக் காத்திருப்பவர்கள் அதிகம். எனவே சந்திப்பது சிரமம் என்றார். என்ன ஆனாலும் போய்ப் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தேன். மாணவர் விடுதியில் உள்ள இன்னொரு தமிழ்நாட்டு ஆய்வுமாணவர் லோகநாதன் என்பவரிடம் திட்டத்தைச் சொன்னேன், அவரும் ஆர்வத்துடன் வருவதாகச் சொன்னார்.

நேற்று இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை. அருகில் பார்க்க வாய்ப்புக் கிடைக்குமா, இல்லை பெரிய நட்சத்திர ஹோட்டல் அது, அனுமதிக்க மறுத்துவிடுவார்களோ என்று ஒரே குழப்பம். பேசவெல்லாம் வேண்டாம், அமைதியாகப் பார்க்கமட்டும் அனுமதி கிடைத்தால் கூடப்போதும் என்று வேண்டியபடி இருந்தேன். தூங்க முடியாமல் இணையதில் ஃபோட்டோகிராஃபி பக்கங்களில் மேய்ந்து கடைசியில் இரண்டரை மணிநேரம் உறங்கி, அதிகாலையிலேயே குளித்து கிளம்பினேன். கூட தமிழ் நண்பரும் வந்தார். காலை ஏழேகாலுக்கெல்லாம் தலாய்லாமா அவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலை அடைந்து வாசலில் காத்திருந்தோம்.

சிறிது நேரம் கழித்து என் ஆய்வாளர் தோழியும் வந்தார். அவர் ப்ரோட்டஸ்டண்ட் கிருஸ்துவர், இயேசுவைத் தவிர போப் உட்பட எந்த மனிதப் புனிதரையும் வழிபாட்டு மனநிலையில் வணங்க மாட்டேன் என்று சொன்னார். ஆனால் தலாய் லாமா மீது மரியாதை உண்டு. தலாய் லாமாவைச் சந்திக்கும் எனது மிகுந்த ஆர்வத்தினால் உதவும் பொருட்டு வந்திருந்தார். திபெத்திய வழக்கப்படி, தலாய் லாமாவைச் சந்திக்கும் போது மரியாதை நிமித்தமாக கையில் வைத்துக் கொள்ள வேண்டிய 'கதா' என்னும் வெண்பட்டு அங்கவஸ்திரங்கள் கொண்டுவந்திருந்தார். 

ஹோட்டலின் வரவேற்புப் பகுதியில் காத்திருந்தோம். வேறு யாரும் இல்லை. குழப்பமாக இருந்தது. ஹோட்டல் ஊழியர்கள் எந்தத் தகவலும் தர மறுத்துவிட்டார்கள். ஒருமணி நேரம் காத்திருந்தும் வேறு கூட்டமே வரவில்லை. பார்க்கமுடியாதோ என்று மறுபடியும் பயம். பார்த்தே ஆகவேண்டும் என்று உள்ளூர தனியாத ஆவல். ராத்திரி முழுவதும் அவரிடம் சொல்ல வேண்டிய வாக்கியத்தை கற்பனை செய்து உருப்போட்டு வைத்திருந்தேன். சரி, கொடுப்பினை இருந்தால் பார்க்கலாம் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு, வெளியில் சாதாரனமாகப் பேசிக்கொண்டிருந்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து ஒரு லாமா (மேடையில் கூடவே இருந்தவர்) வந்தார். அவரிடம் சென்று வணங்கி தலாய் லாமாவைச் சந்திக்க காத்திருப்பதைச் சொன்னேன். இந்தியாவா? என்று கேட்டார். மகிழ்ச்சியாகச் சிரித்துக்கொண்டே தாரளாமாகச் சந்திக்கலாம், பொறுங்கள் என்று சொன்னார். நிம்மதியானது மனம். சரியாக ஒன்பது மணிக்கு தலாய் லாமா வந்தார். எங்களைத் தவிர, தலாய் லாமாவின் காரியதரிசி, சில சிப்பந்திகள், ஹோட்டல் ஊழியர்கள், பாதுகாப்பு அதிகரிகள், வேறு ஓரிருவர் மட்டும் இருந்தனர். அனைவரும் வெள்ளையர்களாக இருந்த அந்த இடத்தில் நாங்கள் மட்டும் தனித்துத் தெரிந்தோம். குர்தாவும், நெற்றியில் குங்குமமுமாக கையில் வெண்பட்டு வைத்துக் கொண்டு நான். பக்கத்தில் நண்பர் ஒரு வெண்பட்டுடன்.

தலாய் லாமா மெல்ல நடந்து வரும் போதே எங்களைப் பார்த்துவிட்டார். புருவத்தை உயர்த்தி, சிரித்துக் கொண்டே நேராக எங்களை நோக்கி வந்தார். நான் மனப்பாடம் பண்ணி வைத்திருந்த வாக்கியம் மறந்துபோய்விட்டது. "நமஸ்தே ஹோலினெஸ்" என்றேன். "நமஸ்தே" என்று அவரும் சொன்னார்.  கைகூப்பியபடி சிரம் தாழ்த்தி வணங்கி, திக்கும் குரலில் "நாங்கள் இந்திய மாணவர்கள். இங்கே பி.எச்.டி படிக்கிறோம்" என்று சொன்னேன். மெல்லப் புண்ணகைத்தபடியே பக்கத்தில் வந்து கூப்பிய கைகளை எடுத்துப் பற்றிக் கொண்டார். வெதுவெதுப்பாக, மெண்மையாக இருந்தது அந்தப் பிடி. "குட்" என்றார். "என்ன துறையில் ஆய்வு செய்கிறீர்கள்?" என்று விசாரித்தார். சொன்னேன். ஒருவேளை பதற்றம் அல்லது பரவசம் காரணமாக என் குரல் கம்மியிருக்கக் கூடும். அவருக்குச் சரியாகப் புரியாததால் இரண்டு மூன்று முறை மீண்டும் கேட்டார். ஒருவாறு சமாளித்துச் சொன்னேன். சிரித்துக் கொண்டே "நல்லது" என்று என் கையில் வைத்திருந்த வெண்பட்டை வாங்கிக் கொண்டு திரும்பவும் என் கழுத்தில் அணிவித்தார். நான் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தக் கனத்தை மறக்கக்கூடாது என்று கவனமாக இருக்க முயன்றேன். என் ஒரு கையையும், கூட இருந்த  நண்பரின் ஒரு கையையும் தன் இருகரங்களில் வைத்துக் கொண்டார். புகைப்படக்காரர்கள் சூழ்ந்தபோது எங்களோடு சேர்ந்து திரும்பி நின்று புகைப்படத்திற்கு நின்றார். 


நான் மெல்ல சொற்களைத் திரட்டி, "எப்போதும் உங்கள் வாழ்த்தும் ஆசிகளும் என்னுடன் இருந்து நல்வழியில் நடத்த வேண்டும்" என்று விண்ணப்பித்தேன். சரியாகத் தெளிவாகச் சொன்னேனா என்று தெரியாது. அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். அவர் சிரித்துக் கொண்டே, கைகளை மேலும் இறுகப் பற்றி உள்ளங்கைகளுள் வைத்துக் கொண்டார். ஆசிர்வதித்தார். அந்தக் கணத்தில் இருந்த நிறைவும், மகிழ்ச்சியும் விவரிக்கும் அளவிற்கு எனக்குப் போதவில்லை.


"நமஸ்கரிக்க விரும்புகிறேன் நான்" என்றேன், சிரித்துக் கொண்டே "பரவாயில்லை, வேண்டாம் வேண்டாம்" என்று தடுத்தார். கண்களைப் பார்த்துச் சிரித்து கைகுலுக்கிவிட்டு, மெதுவாக நகர்ந்தார். இன்னொரு பெண்மனியிடம் கைகுலுக்கி விட்டு அங்கே இருந்த சிலருக்கு புண்ணகையை தந்துவிட்டு மெல்ல வாயில் நோக்கி நடந்தார்.


தற்செயல்களுக்கு பொருள் விளக்கி, காரணம் கற்பித்துக் கொண்டிருக்கக் கூடாது என்று ஜெ சொன்ன ஞாபகம். அப்படியானால் இந்தச் சந்திப்பிற்கான சாத்தியம் எப்படி ஒவ்வொரு வாயிலாக முட்டித் திறந்து என்னை வந்தடைந்தது என்று என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. நேற்று வரை கற்பனைகூட செய்ய முடியாததாக இருந்தது. ஆனால், நடந்தே விட்டது. 'அப்படி என்ன நடக்கச் சாத்தியமில்லாத சந்திப்பா?' என்றால் எனக்கு பதில் தெரியாது. நான் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் நான் ஆழ்மனதில் மிக உண்மையாக அவரைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பினேன், என் குருநாதர்களைப் பிரார்த்தித்தேன். 

கடைசியில் அவர் சகஜமாக என் கையைப் பிடித்துக் கொண்டு சிலநிமிடங்கள் பேசி, நான் விரும்பிய புண்ணகையைத் தந்து, ஆசிர்வதித்துவிட்டுச் சென்றார். 

(இது போல் ஆர்வமாகக் காத்திருந்த ஒரு ஆளுமையைப் பார்த்த சம்பவம் சமீபகாலங்களில் ஒரு முறை நடந்தது. இதே சந்தோஷம் அன்றும். அது கொஞ்சம் தனிப்பட்ட அனுபவம்)

-பிரகாஷ் சங்கரன்.





(தொடர்புடையவை : ஆசான் ஜெ வின் தளத்தில் வந்த குறிப்பு http://www.jeyamohan.in/?p=39856 )

Thursday, September 19, 2013

சிரிக்கும் புத்தர்



(காந்தி-இன்று தளத்தில் வெளியான என் கட்டுரை. நன்றி காந்தி-இன்று இணையதளம்) 

மதிப்பிற்குரிய தலாய் லாமா ஐரோப்பா சுற்றுப்பயணத்தின் பகுதியாக செக் குடியரசில் மூன்று நாட்கள் இருக்கிறார். சனிக்கிழமை (14-09-2013) பொதுமக்களுக்கான உரை. பெரிய விளையாட்டு உள்ளரங்கில் நடைபெற்றது. நானும் கலந்துகொண்டேன். 2011ல் அவர் இங்கே வந்த போது பழைய செக்கோஸ்லோவாகியாவின் கடைசி அதிபரும், புதிய செக் குடியரசின் முதல் அதிபரும், தலாய் லாமாவின் நெடுங்கால நெருங்கிய நண்பருமான வாட்ஸ்லாவ் ஹவேல் தள்ளாத வயதில் சக்கர நாகாலியில் வந்து வரவேற்றார். இந்த முறை அரசாங்க தரப்பில் இருந்து எந்த ஒரு பிரதிநிதியும் வரவேற்கவோ, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவோ இல்லை. உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் சீனாவுக்குப் பயந்து கையாலாகமல் தலாய் லாமாவை சந்திப்பதைக் தவிர்க்கின்றனர். இந்தக் கையாலாகாத்தனத்தை விமர்சித்து செக் இணையத்திலும் கண்டித்து எழுதப்பட்டிருந்ததை இன்று படிக்கமுடிந்தது. இன்னொரு நிகழ்ச்சியில் ஆங் சான் சூ கி யும் தலாய் லாமாவுடன் சேர்ந்து பங்கேற்கிறார். 


தலாய் லாமா மேடையேறியதும் கூடியிருந்த பிரும்மாண்ட கூட்டத்தை வணங்கி வாழ்த்திவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தார். ஹவேல் உடனான தன் நட்பு பற்றி நினைவு கூர்ந்துவிட்டு, செக் குடியரசைக் குறித்த தன் எண்ணங்களை கொஞ்ச நேரம் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, சட்டென்று நினைவு வந்தவராக, "என்ன தலைப்பில் நான் பேச வேண்டும்?" என்று பக்கத்தில் இருந்த இன்னொரு லாமாவிடம் சிரித்துக் கொண்டே கேட்டார். அவரது அந்தச் வாய்விட்டுச் சிரிக்கும் சிரிப்பு ஒரு தொற்று போல அரங்கத்தில் கூடி இருந்தவர்களிடம் பரவியது. கடைசி வரைக்கும் அந்தச் சிரிப்பு அரங்கத்தில் இருந்து கொண்டே இருந்தது. "என்னை நான் ஒருபோதும் புனிதமானவராக, தனிச்சிறப்பு வாய்ந்தவரக, உயர்ந்தவராக எல்லாம் கருதிக் கொள்வதில்லை. நான் சாதாரன மனிதன். நாட்டு தலைவர்கள், தொழிலதிபர்கள், மதத் தலைவர்கள், விஞ்ஞானிகள், பிச்சைக்காரர்கள் என விதவிதமான மக்களைச் சந்திக்கிறேன். இந்த நீண்ட வாழ்நாளில், என் அனுபவத்தில் அறிந்துகொண்டதையே பிறருக்குச் சொல்கிறேன். கடைசியில் அதை ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டியது நீங்கள் தான்" என்றார்.

"நான் முன் கூட்டியே தயாரித்துக் கொண்டெல்லாம் பேசமாட்டேன், அந்த நேரத்தில் மனதின் ஆழத்தில் இருந்து வருவது எதுவோ அதுதான். அதுதானே உண்மையாக இருக்கும்?" என்ற படியே மறுபடியும் சிரித்தார். ஒருசிறிய தாளில் எழுதியிருந்த தலைப்பைப் படித்துப் பார்த்தார். மிகத்திரளான பொதுமக்கள் பங்கு பெரும் கூட்டங்களில் தத்துவார்த்தமான உரை ஆற்றுவதற்கான சாத்தியமில்லை, அன்பை, கருணையை வலியுறுத்தும் எளிய நீதி போதனைபோலவே இருக்கும் என்று உணர்ந்தே தான் போயிருந்தேன். அவர் வீற்றிருக்கும் அரங்கில் இடம்பெற வேண்டும் என்பதே என் எண்ணம். உரைக்கான தலைப்பும் அப்படிப்பட்ட பொதுவான விஷயம் குறித்து தான்.

"உண்மையான மார்க்சிஸ சமூக பொருளாதார சிந்தனை, நாட்டின் எல்லா வளங்களும் எல்லோருக்கும் சமமாகப் பிரித்துக்கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்வதாகவே நான் புரிந்துவைத்துள்ளேன். அப்படிப் பார்த்தால் நானும் மார்க்ஸிஸ்ட் தான். ஆனால் லெனினியத்தை முற்றாக எதிர்க்கிறேன். அது அடக்குமுறையையும், அதிகாரத்தையும் அடிப்படையாகக் கொண்டது" என்று ஆரம்பித்தார். அன்றைய உரை முழுவதும் சுயமைய சிந்தனையை எதிர்த்தும் அதற்கு மாற்றாக சமூகத்தின் போக்காக சகமனிதரிடத்து கருணை இருக்கவேண்டும் என்பது பற்றியே இருந்தது. அதற்குக் கருவியாக நல்ல கல்வியே தேவை என்றும், இளம் தலைமுறைக்கு இந்தச் செய்தி கல்வி வழியாக போய்ச்சேர வேண்டும் என்றார். 

"புற அழகு நல்லது தான், ஆனால் அக அழகு அதைவிட நல்லது இல்லையா? புறத்தூய்மை அவசியமானது தான், அகத்தூய்மை அதைவிடவும் அவசியமானது. இதைத் தருகின்ற கல்வி தான் உண்மையான கல்வி" என சகிப்புத் தன்மையையும், கருணையையும் வளர்க்கும் கல்வியே மேலானது என்று பேசினார்.

நீண்ட நேரம் ஆங்கிலத்தில் பேசிவிட்டு, திடீரென்று பக்கத்தில் காத்திருந்த செக் மொழிபெயர்ப்பாளர்க் குறித்து நினைவு வந்ததும், நீண்ட நேரம் பேசிவிட்டதற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். மொழிபெயர்ப்பாளர் செக் மொழியில் உரையை மொழிபெயர்த்துப் பேசிக்கொண்டிருக்கும் போது கிடைத்த நேரத்தில்உதவிக்கு கூட இருந்த லாமா ஒருவர் தலாய் லாமாவுக்கு ஒரு கண்ணாடித் தம்ளரில் குடிக்கத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தார். உடனே தலாய் லாமா தன் இருக்கைக்கு எதிரே போடப்பட்டிருந்த இரண்டு சிறிய மேசைகளில் ஒன்றை எடுத்து மொழிபெயர்ப்பாளர் அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிரே போடச் சொன்னார். ஒரு தண்ணீர் பாட்டிலையும், தனக்கு லாமா ஊற்றிக் கொடுத்த தண்ணீர் தம்ளரைய்ம் மொழிபெயர்ப்பாளர் முன் போடப்பட்ட மேசையில் தானே வைத்தார். இன்னும் நேரம் இருந்த போது, தனக்கு எதிரே உள்ள சிறிய மேசையில் வைக்கப்பட்டிருந்த பீங்கான் குவளை, சிறிய டீப்போத்தல், ஃபிளாஸ்க் ஆகியவற்றைச் சிறுவனைப் போல் ஆர்வமாக கையில் எடுத்துப் பார்த்துவிட்டு திரும்ப வைத்தார். மேலே சிறிய குமிழி போல வைக்கப்பட்டிருந்த பீங்கான் குவளையின் மூடி குல்லா போல இருந்தது. அதைப் பக்கத்திலிருந்த லாமாவிடம் காட்டிவிட்டு, தன் தலையில் குல்லா போல வைத்துக் கொண்டு கூட்டத்தைப் பார்த்து சிரித்தார். அந்த இடுங்கிய கண்கள் கோடுகளாக, கண்ணக் கதுப்புகள் சிவந்து மேலேற குதூகலமாக, சத்தமாக அவர் சிரித்தது தான் எனக்கு செய்தியாக இருந்தது. சுற்றீ அமர்ந்திருந்த செக் மக்களின் உணர்ச்சிகளைக் கவனித்தேன். அவர்கள் உற்சாகமாக, மனம் விட்டுச் சிரித்தார்கள். அவரைப் புகழ்ந்துகொண்டார்கள்.

"சில கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தவர்கள் பிற மதங்களை மிகவும் காழ்ப்புடன் அனுகுகின்றனர். அது மிகத் தவறு. மதச்சார்பற்ற அரசு என்றால் மதங்களை வெறுக்க வேண்டும் என்பதல்ல அர்த்தம். எல்லா மதங்களையும் சமமாக நடத்துவது தான். மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்கிய காந்தி, நேரு, அம்பேத்கர் போன்றோர் தனிப்பட்டமுறையில் மத நம்பிக்கையாளர்கள் தான். இது தான் இந்தியப் பாரம்பர்யத்தின் சிறப்பு. சாங்கிய தரிசனம் போன்ற மிகப்பழைய தத்துவங்களின் தேசம் அது. ஏன், பண்டைய காலத்திலேயே இந்தியாவில் கடவுள் மறுப்புக்கும் கூட சமமான இடம் மரபாகவே இருந்துவந்துள்ளது" என்றவர் ஒவ்வொரு விஷயத்திலும் சுயமையப் பார்வையக் கண்டித்தே அதிகமும் பேசினார். மனிதன் ஒரு சமூக விலங்கு தான், இதை யாரும் மறுக்க முடியாது. யாரும் தனித்து சந்தோஷமாக வாழ முடியாது. கருணை இருந்தால் போதும், சகமனிதனை அடக்கியாளாமல் கருணையோடு இருந்தால் போதும், உலகம் மகிழ்ச்சியாக இருக்கும்' என்றார்.

கடைசியில் சில கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது  "நான் சிறுவனாக குடும்பத்துடன் இருந்த நாட்களில் இருந்து வீட்டைப் பற்றிய ஞாபகம் என் அன்னை மட்டுமே. மிகமிக அன்பானவர் என் அம்மா, எனக்கு நன்றாக நினைவுள்ளது. அதற்கப்புறம் லாசாவிற்கு தலாய் லாமாவாக அழைத்துவரப்பட்டேன். கருணை செய்வதில், கருணையோடு இருப்பதை சமூகத்தில் பரவச் செய்வதில் பெண்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும். இயல்பாகவே கருணை மிக்கவர்கள் பெண்கள்" என்றார். 

க்யூபாவிலிருந்து வந்திருந்த ஒருவர், தங்கள் நாட்டுக்கு என்ன செய்தி சொல்கிறீர்கள் என்று கேட்டபோது, ஒரு பெருமூச்சுவிட்டு, "துப்பாக்கியின் பலம் கொஞ்ச நாட்கள் மட்டும் தான். உண்மையின் பலம் எப்போது இருக்கும், அதுவே கடைசியில் ஜெயிக்கும். நம்பிக்கையைத் தளரவிடாதீர்கள், அமைதியாகப், பொறுமையாக இருங்கள். உண்மை மட்டுமே ஜெயிக்கும்" என்றார். எனக்கு அவர் தனக்குத் தானே ஒரு முறை அந்த நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லிக்கொள்வது போலப்பட்டது. வியன்னாவிலிருந்து பாரம்பரிய ஆடைகள் அணிந்து குழுக்களாக வந்திருந்த நிறைய திபெத் அகதிகள் கைகளைக் கூப்பியபடி அவரையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

-பிரகாஷ் சங்கரன்.

(தொடர்புடையவை : ஆசான் ஜெ அவரது இளையதளத்தில் வெளியிட்டிருந்த குறிப்பு : போதிசத்வரின் புன்னகை )

Friday, May 17, 2013

இடும்பைகூர் வயிறு





ஐந்து வருடங்களுக்கு முன், ஒரு வசந்த காலத்தின் மத்தியில் பிராக் வந்து இறங்கிய போது எனக்கு வயிறு இருப்பதே மறந்துபோய்விட்டது. எங்கு திரும்பினாலும் என் கண்களை நிறைக்கும் புதிய நிலப்பரப்பு, புதிய மக்கள், கட்டிடங்கள், கலாச்சாரம், காலநிலை... எல்லாமே வேறுவகையானவை. ஐரோப்பாவின் வசந்தகாலம் எண்ணற்ற நிறத்தில் வாரியிறைத்த பூக்களாலும், புல் முதல் பெருமரங்கள் வரை இளவெயிலில் குளித்து பசுமையில் மினுக்கிக்கொண்டு இருக்கும். ‘க்விஷ்க்...ஸ்விஸ்க்..’ என்று காதருகே தோட்டா பாய்வது போல ஒரு ஒலி ‘செக்’ மொழிக்கு. நெகிழ்ந்து, உருகி, வியந்து, ஒப்பிட்டு விழிகள் உருள மனம் ஒவ்வொன்றாய்த் தொட்டு ஓடிக்கொண்டே இருந்தது. கண்களிலும், செவிகளிலும் உயிரின் ஆற்றல் முழுவதும் குவிந்திருந்தது போல உணர்ந்தேன். என்னை விமான நிலையத்தில் இருந்து கூட்டிக்கொண்டு போக என் ஆய்வு வழிகாட்டியான பேராசிரியர் வந்திருந்தார். காரில் உட்கார முன் சீட்டின் இடது பக்கத்து கதவை திறக்கப் பாய்ந்த போது சிரித்தார், அப்போதே தெரிந்துவிட்டது இங்கே பலதும் தலைகீழ் என்று. சுற்றிவந்து வலது பக்கத்து இருக்கையில் உட்கார்ந்துகொண்டேன்.


மாணவர் விடுதியின் அறைக்கு கொண்டு வந்து விட்டார், பெட்டிகளை இறக்கி வைத்துவிட்டு குளித்து தயரானேன், இரண்டுமணி நேரத்தில் திரும்ப வந்து இந்திய ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று உணவு வாங்கிக் கொடுத்தார். வந்த முதல் நாளே ஊர்ப்பாசம் பொங்க ஹோட்டல்காரரிடம் அவர் குடும்ப புராணம் வரை அனைத்தையும் கேட்டேன். மறுநாளும் வந்து காரில் அழைத்துச் சென்று சுருக்கமாக சூப்பர் மார்க்கெட் உட்பட ஊரைச் சுற்றிக் காட்டிவிட்டு சில பொருட்களை வாங்கிக் கொடுத்து அன்றும் வேறொரு இந்திய உணவகத்தில் சாப்பாடு. அதற்கு அடுத்த நாள் என் பிறந்தநாள், எனவே அன்றும் அவருடைய செலவில் வெளியில் உணவு. இரவு ஒன்பது மணிக்கும் சூரியஒளி பிரகாசமாக இருக்க ராத்திரி ஆகிவிட்ட உணர்வே வராமல் மனம் பரபரப்பாக இருந்தது.

விடுதி அறையில் நேரம் போகாமல் ஜன்னல் வழியே ஊரை வேடிக்கை பார்த்தபடி வீட்டு ஞாபகங்களை ஓடவிட்டுக்கொண்டே, அம்மா கட்டிக் கொடுத்துவிட்ட சீடை, கைமுறுக்கு, தேன்குழல், மிக்சர், தேங்காய் பர்பி, மைசூர்பாகு (நெய் உறைந்து குறுனை குறுனையாக மேலே இருந்தது), அப்பாவும் அண்ணாவும் ‘வச்சுக்கோடா.. இருக்கட்டும்..’ என்று ஆர்ய பவன், அகர்வால் ஸ்வீட்ஸ், டெல்லிவாலா, ஸ்ரீ க்ருஷ்ணா, லெக்ஷ்மி விலாஸ் என்று மதுரையின் பல்வேறு கடைகளிலும் வாங்கி நிரப்பியிருந்த திண்பண்டங்களைக் கொறித்தேன். ‘வச்சு, கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடு’ என்ற அம்மாவின் வார்த்தைகள் மிக்சர் பொட்டலத்தில் முதல்கை வைத்தபோதே மறந்து போய்விட்டது. கடைசித் தூளை உள்ளங்கையில் ட்டி அண்ணாந்து வாயில் கொட்டிய பின், கையைத் தட்டிவிட்டு குளிர்ந்த தண்ணீர் குடித்தால் வயிறு நிரம்பி, மனம் நிறைந்து, ‘என்ன உலகம் இது, சும்மா திண்ணு தூங்கி.. போதும் எதுவும் வேணாம்’ என்று கொஞ்சம் தத்துவம் கொட்டாவியுடன் கலந்து வழிய சாதித்துவிட்ட திருப்தியுடன் தூங்கலாம். தூங்கினேன். ஒருவாரம் ஸ்வீட் ஸ்டாலில் வாழ்ந்தது போல் இருந்தது.

ஆசிரியர் பிரட், ஜாம், வெண்ணை, டீ பைகள், மின்சார கெட்டில் எல்லாம் கொடுத்திருந்தார். காலை ஒரு பிரட்டில் வெண்ணையும் சிவப்பு ஜாமும் பரப்பி இன்னொரு பிரட்டை மேலே வைத்து சாப்பிட, ரெண்டுவாய்க்கு ஒரு தரம் ஏர்ல்க்ரே டீ ஆவி நளினமாக ஆட சூடாக, மணக்க குடித்துவிட்டு கூட்டமே இல்லாத டிராமில் ஏறி பல்கலைக்கு செல்லுதல்... எல்லாம் ஜோராக இருந்தது. ‘ஃபாரினில்’ இருக்கிற உணர்வைத் தந்தது. நாளாவது நாள் இனிப்பு ஜாம் முகத்தில் அடிப்பதுபோல அசிங்கமாக ரத்தச்சிவப்பாக, பொருத்தமில்லாமல் குளிர்ந்த வெண்ணை வழவழவென்று, பிரட் பொதுக்பொதுக்கென்று... அப்புறம் கரகரப்பான பிஸ்கட்டுக்கு மாறினேன். அது இரண்டாவது நாளே மெண்ணியைப் பிடித்தது. அடுத்து ‘இதுக்கு ஒன்னுமே சாப்பிடாம போகலாம்’ என்ற விவேகத்தை அடைந்தேன். மத்தியானம் பசி வயிற்றுக்குள் இருந்து கடப்பாரையால் குத்தியது. எதுவோ இழந்தது போல் மனசெல்லாம் ஒரு மந்தம்.

பத்துநாள் ஆனபிறகு தான் தெரிந்தது, அரிசிச் சோறே சாப்பிடவில்லை என்கிற ‘பகீர்!’ உண்மை. அப்போது தான் சோறு வேண்டுமென்றால் சமைக்கவேண்டும் என்ற இன்னொரு ‘பகீர்!’ உண்மையையும் கண்டுபிடித்தேன். ஒரு பாத்திரத்தில் ஆறு கப் தண்ணீரை ஊற்றி கொதிக்கவைத்து, அம்மா ‘எதுக்கும் இருக்கட்டும்’ என்று கட்டிவைத்திருந்த அரிசியை ரெண்டு கப் சேர்த்தேன். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த பாத்திரம் சிலநிமிடங்களில் துலாபாரம் படத்தைப் பார்த்த பாட்டி போல பொங்கிப் பொங்கி அழுதது. வாயால் நுரையை ஊதியும், கரண்டியால் கிண்டிவிட்டும் ஆற்றுப்படுத்தினேன். ஒருகட்டத்தில் வெடித்துக் கதறியது. படத்தின் களைமாக்ஸ். பதறினேன். என்னால் அதன் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அழுது வடிந்து அடுப்பெல்லாம் வெந்த சோறு கொட்டி தீய்ந்து கருகிய வாடை. அது பொது சமையலறை. ‘ஐயையோ’ என பாத்திரத்தை இறக்கிவைக்க கையால் எடுத்தேன். ஊரில் என் அம்மாவிற்கு கேட்டிருக்கும் நான் போட்ட அலறல், ‘அம்மா...’ என்றபடியே சூடு பொறுக்கமாட்டாமல் பாத்திரத்தைக் கீழே போட்டேன். பாத்திரத்தில் ஒரு கைப்பிடிக்கும் குறைவாக சாதம் பாதிகூழாக மிஞ்சியிருந்த்து. அள்காட்டி விரலும் கட்டைவிரலும் பழுத்திருந்தது. நீரில் விரலை நெடுநேரம் வைத்துக் கொண்டே கீழே சிதறியிருந்த சோற்றைப் பார்த்தேன். வெள்ளைப் பற்கள் தெரிய சிரித்துக் கொண்டிருந்தது. அன்று அழுதுகொண்டே அந்த சமையலறை முழுவதையும் சுத்தம் செய்தேன். மிஞ்சியிருந்த சாதத்தை உப்புப் போட்டு கரைத்து அம்மா என் திட்டையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் எனக்குத் தெரியாமல் அடைத்து வைத்திருந்த நார்த்தங்காயுடன் சேர்த்து குடித்தேன். விரல் எரிச்சல், உடல் எல்லாம் வலி, பசி எல்லாமாக அம்மாவின் நினைவை மலையில் இருந்து பாறையை உருட்டிவிடுவது போல ஒன்றோடொன்றாக பல பழைய விஷயங்களையும் சேர்த்து தள்ளிக் கொண்டு வந்தது. படுக்கையில் தூக்கம் வராமல், காரணமே இல்லாமல் இந்த நாட்டை வெறுத்தேன். சபித்துக் கொண்டு அழுதேன். அழ அழ பசி அதிகமானது. நள்ளிரவில் ஃபிரிட்ஜில் ஜாம் பாட்டிலைத் தேடி எடுத்து, காலியாயிருந்த பாட்டிலில் விரல் விட்டு வழித்து நக்கிவிட்டு தூங்கினேன்.

என்னால் ‘ஒரே கட்டாக’ நிறையச் சாப்பிட முடியாது, ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ‘வக்கனையாகச்’ சாப்பிடப் பிடிக்கும். வீட்டில் நடக்கும் விசேஷங்களில் என் அம்மாவிற்கு நான் தான் உணவைச் சுவைத்து விமர்சனம் செய்யும் விற்பன்னன். இரண்டு கூட்டு, இரண்டு கறி, வடை, பாயசம், பச்சடி உட்பட குறைந்தது பதினைந்து பதார்த்தங்களாவது ஒற்றையாளாய் அம்மா சமைப்பாள், சிலசமயம் உதவிக்கு தெரிந்தவர்கள் யாராவது. விருந்தினர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு, தாம்பூலம் கொடுத்து வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்துவிட்டு அப்பா, அண்ணனெல்லாம் மதியத் தூக்கத்திற்கு போகும் போதே இரண்டறை மூன்று மணி ஆகிவிடும். அதற்கு மேல் புகை ஓய்ந்த, தகிக்கும் சமையலறையில், எண்ணெய்ப் பிசுபிசுப்பில், ஒரு காலை மடக்கி ஒரு காலை நீட்டி அமர்ந்து வியர்வை வழிய சிறிய தட்டில் கொஞ்சமாக சாதமும், ரசமும் மட்டும் போட்டுக்கொண்டு சாப்பிடும் அம்மாவிற்கு தெண்ணையோலை விசிறியால் விசிறிவிடுவேன். ஒருநிமிடம் கூட ஆகியிருக்காது, ‘கைவலிக்கும், போதும்பா’ என்று சொல்லி நிறுத்திவிடுவாள். தெருவிலும், சொந்தக்காரர்களுக்கு மத்தியிலும் அம்மாவின் கைப்பக்குவம் பிரசித்தம். வாசனையையும், சாப்பிட்டவர்கள் முகக்குறிப்பையும், அளவையும் வைத்தே அம்மாவுக்குத் தெரிந்துவிடும் ஒவ்வொன்றும் எப்படி இருந்தது என்று. ஆனாலும் ஒவ்வொரு பதார்த்தத்தையும் எப்படி இருந்தது என்று என்னிடம் கேட்பாள். அம்மாவை சீண்டுவதற்கென்றே, "சர்க்கரைப் பொங்கல்ல துளி பச்சைக் கற்பூரம் ஜாஸ்தி, பருப்பு வடைக்கு மாவை அரைக்கும் போது ஒன்னுரெண்டா அரைச்சிருக்கனும், ரொம்ப நைஸா அரைச்சுட்டே.. மொறுமொறுப்பு இல்ல, ரசத்துல ஒரு உப்பு கம்மி, பெருங்காயமும் ஒரு கிள்ளு குறைவு.. அதனால வாசனையே கொஞ்சம் குறைஞ்சு போச்சு" என்று ஏதாவது சொல்வேன். சிரித்துக்கொண்டே “நாளைக்கு உம்பொண்டாட்டி கிட்ட இப்படியே சொல்லு, அடுத்த வேளை சோத்துக்கு தட்டெடுத்துண்டு போகனும்” என்றபடியே எழுந்துபோய் விடுவாள். சமையல், வீடு, ஊர், அம்மா, ருசி, பசி ஒன்றுடன் ஒன்றாக நினைவுகள் பிணைந்து வந்து நெஞ்சைக் கவ்வும். ஓய்ந்துபோய் கவனத்தைத் திருப்ப கடினமான எதையாவது எடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பிப்பேன். தோற்றுப் போய் நாக்கில் எச்சில் ஊற பருப்புப் பாயசத்திலோ, அடை அவியலிலோ வந்து மனம் முட்டிக் கொண்டு நிற்கும். ஏக்கத்துடன் நாட்கள் போகும்.

ஆரம்பத்தில் நான்கு மாதம் வரை என்னிடம் மடிக்கணினி கிடையாது. வெளியில் இருந்து தான் வீட்டிற்குப் பேச முடியும். செலவு அதிகம். அம்மா அதிகம் கேட்கமுடியாமல், தொண்டைஅடைக்க ‘முடியலைன்னா வந்துடுப்பா’ என்றாள். அப்பா ஃபோனை பிடுங்கி ‘படிக்கிற வழியப்பார்றா, சமையல் எல்லாம் தன்னால வரும்’ என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார்.

கணக்காக தண்ணீர் ஊற்றி சாதம் வைக்கும் கலையில் மெல்ல தேர்ச்சி அடைந்திருந்தேன். தயிர்சாதமும் நார்த்தங்காயுமே என் அறிவின், ஆற்றலின் ரகசியம் என நம்பிவந்தேன். அது ஒருநாளும் திகட்டும் உணவாக மாறாது என்ற என் பிரியமான கோட்பாட்டைச் சொந்த அனுபவத் தரவுகளின் தர்க்கத்தின் அடிப்படையில் கொள்கை ரீதியிலான மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியதாகியது. அம்மாவிடம் சில சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பச் சொன்னேன், ஒருமாதம் கழித்து ஒரு கடிதம் வந்தது, எனக்கு இங்கு வந்த முதல் கடிதம். உள்ளே அப்பா ஆங்கிலத்தில். அறிவுரைகளும், என்னை தனித்த மனிதனாக வளர்த்துகொள்ள வேண்டிய தேவைகளையும், ஆய்வில் நான் சாதித்து பெருமை தேடித் தரவேண்டிய கடமையையும், இன்னபிறவும். அம்மா வாழ்க்கையில் எனக்கு எழுதிய முதல் கடிதம் அது தான். நேரடியாக வீட்டில் பேசும் தமிழில், பழைய பாணி கையெழுத்தில், மேலே நடுவில் பிள்ளையார் சுழி கீழே ஸ்ரீராமஜெயம், இடது ஓரத்தில் ‘க்ஷேமம்’ வலது ஒரத்தில் தேதி. சமையல் செய்து சுவாமிக்கு நைவேத்யம் செய்து நன்றாகப் சாப்பிட்டு உடம்பைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளச்சொல்லி, அநேக ஆசீர்வாதங்களுடன் முடித்திருந்தார். தாளின் பின்பக்கம் ‘வெறுமன இருக்கே’ என்று சில புள்ளிவைத்த கோலங்கள் வரைந்திருந்தார். மறுபடியும் அழுகை. இவ்வளவு இலகுவாக நெகிழக்கூடியவனா நான் என்பதை அறிந்துகொள்ள வைத்தது அம்மாவின் கையெழுத்து.

அம்மாவின் குறிப்புகள் பெரும்பாலும் இப்படி ஆரம்பிக்கும், “பூச்சி இல்லாத கத்திரிக்காயா பாத்து வாங்கு. நன்னா அலம்பிட்டு சின்னச்சின்ன துண்டா நறுக்கிக்கோ. அடுப்புல இலுப்பச் சட்டியில கொஞ்சம் எண்ணை விட்டுண்டு...” என ஆரம்பித்து போகப்போக ‘”தேங்காய பூப்போல துருவி கொஞ்சமா வதக்கிண்டு, எல்லாத்தையும் மிக்ஸியில போட்டு நன்னா வெழுமூனா அரைச்சு எடுத்துண்டு...” என்று சிக்கலாகும். என்னிடம் தேங்காய் துருவி, மிக்ஸி உட்பட எதுவும் கிடையாது. தவிர அவ்வளவு பாத்திரமும் இருக்காது. சமைக்கிறேனோ இல்லையோ அதைப் படிக்கும் போது அம்மாவின் அருகாமையும், கிராமத்து வீட்டின் ஓட்டுக்கூரை போட்ட சமையல் அறையும், அங்கிருக்கும் அம்மாவின் அன்னபூரனி படமும், சமையல் மனமும் எல்லாம் துல்லியமாக நினைவுக்கு வரும். அவியல் சாப்பிட வேண்டுமென்றால் அம்மாவின் அவியல் குறிப்பை எடுத்துப் படித்துப் பார்ப்பேன், அப்படியே ஒவ்வொரு நாளும் தயிர் சாதத்துடன், அம்மாவின் குறிப்பில் பாகற்காய் பிட்லை, கத்திரிக்காய் கொத்சு, வாழைப்பூ பருப்பு உசிலி கறி எல்லாம் படித்துச் சாப்பிட்டுக் கொள்வேன். (இங்கே வாழைப்பூ கிடைக்கும் என்கிற என் அம்மாவின் நம்பிக்கையைத் தனியாகப் பாராட்ட வேண்டும். ஒரு வியட்நாமிய மார்கெட்டில் அதையும் பார்த்தேன்).

வேலை செய்துகொண்டிருக்கும் போது திடீரென்று சம்பந்தமே இல்லாமல், வெங்கலப்பானையில் செய்யும் அரிசி உப்புமா நினைவுக்கு வருவது எப்படி என்று வி.எஸ் ராமச்சந்திரனைத் தான் கேட்க வேண்டும். மூளையில் அரிசி உப்புமாவுக்கான நியூரானும், வைரஸ் என்ற சொல்லிற்கு பொருள் தரும் ஒரு நியூரானும் நரம்புமண்டலத்தின் விரைவுப்பாதைகளின் ஏதோ ஒரு குறுக்கு முனையில் முட்டிக்கொள்கிறதோ என்னவோ. பூரிமசாலின் இளம் மஞ்சள் பரப்பில் சிவந்த கேரட் துண்டுகளும், பச்சைமிளகாயும் வண்ணப்பொட்டுக்களாகத் தெரிய, பச்சைக் கறிவேப்பிலையின் வாசம் கலந்து வரும். அடக்க முடியாமல் கூகிளில் போய் “south Indian breakfast” என்றெல்லாம் தேடி படங்களைப் பார்ப்பேன். ஏதேதோ உயர்தரசைவ ஹோட்டல்கள், பெரிய எவர்சில்வர் தட்டில் வட்டமாக வாழையிலையை நறுக்கிப் போட்டு நடுவில் பிரவுனாகவும், வட்டவட்டமாக விரவி வரும் வெளியில் பொன்நிறமாகவும் இருக்கும் முறுகல் தோசைகளை குழல் போலச் சுருட்டி தட்டில் நீட்டுவாக்கில் வைத்து, வெள்ளைவெளேரென்று நான்கு இடிகளும், நல்ல குழிவான கரண்டியில் எடுத்துப் போடப்பட்ட, முழு மிளகுகளும், முந்திரிப்பருப்புகளும் துருத்திக்கொண்டு தெரியும் குழைவான வெண்பொங்கல் பந்துபோல உருண்டை வடிவமாக இருக்க, இஞ்சியும், பச்சை மிளகாயும் நாசூக்காகத் வெளித்தெரிய உப்பிய உளுந்தவடைகள் இரண்டும், சிறிய கப்களில் சிவப்பு, வெள்ளை, பச்சை என்று தேசிய ஒருமைப்பாட்டுச் சட்னி வகைகளுடன், கொஞ்சம் பெரிய கப்பில் சின்னவெங்காயம் மிதக்க எண்ணெய்த் திவலைகளுடன் இருக்கும் சாம்பாரும், டபரா செட்டில் பக்கத்திலேயே ஆவிபறக்க நல்ல அடர் நிறத்தில் இருக்கும் ஃபில்டர் காபியும் மென்பொருள் கொண்டு மெருகேற்றப்பட்ட அழகழகான படங்கள் காணல் உணவாக கண் முன் தெரியும். கண்கொட்டாமல் இட்லி சாம்பாரில் ஆரம்பித்து காபி வரை ஒவ்வொன்றையாக வரிசைக் கிரமமாக நிதானமாகப் பார்த்து முடிக்கும் போது ஒரு ‘விர்ச்சுவல் ஃபீஸ்ட்’ சாப்பிட்ட திருப்தி இருக்கும். இப்படியே “south Indian lunch” “masal dosa” “puri masal” எல்லாம் இணையத்தில் சாப்பிடலாம். என்ன கற்பனையும், அதில் ஒன்றிவிடும் மனமும் இருக்க வேண்டும். கல்யாணமாகி இந்தியாவில் வேலை பார்க்கும் ஒரு நண்பனிடம் சந்தோஷமாக என் கண்டுபிடிப்பைச் சொன்னபோது, “அடக்கமுடியாம போர்ன் சைட்டைப் பாக்கற மாதிரி... என்னடா இது??” என்று சத்தம்போட்டு சிரித்தான். ரசனையற்றவன். உணவில் நுண்ரசனை இல்லாதவர்களை இனிமேல் நட்பாக வைத்துக்கொள்ளக் கூடாது என்று முடிவுகட்டினேன். (நடுவில் ஒருமுறை இணையத் தேடலில் இட்லிவடை தளம் வந்து கடுப்பேற்றியதும் நினைவுக்கு வருகிறது. இருந்தாலும் அதையும் படிக்க ஆரம்பித்தேன்.)


ஊரில் இருக்கும் போது ஹோட்டல்களுக்கு நண்பர்களுடன் சென்றால் யாராவது, “’லச்சா பரந்தா, கராஹி பனீர், தால் தடுக்கா” என்று வட இந்திய உனவுவகை பெயர்களாக வாயைத் திறந்தால் அதை “வட இந்திய உணவு மேட்டிமை மனோபாவம், இந்தி மொழித்திணிப்பு உள்குத்து’ என்று எதையாவது கடக்குமுடக்கு என்று சொல்லி அடக்கிவிடுவேன். முதல் காரணம், ‘முருகனுக்கு மிஞ்சி தெய்வமில்லை, முறுகல் தோசைக்கு மிஞ்சி உணவு இல்லை’ என்கிற என் தீவிர மனச்சாய்வு, இரண்டாவதும் முக்கியமானதும் – எனக்கு ஹிந்தி தெரியாததால் வட இந்திய உணவுப் பெயர்கள் என்ன ஏதென்று புரியாது, சர்வரைக் கேட்கவும் கூச்சம். இங்கே வந்தால், ‘ஹ்லேப், ததார்ஸ்கா ஒமாச்கா, ப்ராம்பொராக், ஸெலனினோவி குலாஷ்’ என்று உணவுப் பெயர்களெல்லாம் ரஷ்ய இலக்கிய எழுத்தாளர்கள் பெயராக ஒலித்ததால் ‘என்ன இருந்தாலும் ஹிந்தி நம்ம நாட்டு மொழிதானே’ என்று சமரசம் செய்து கொண்டுவிட்டேன். தவிர  இங்கே இந்திய உணவகம் என்றால் அது வட இந்திய உணவகம் தான். தென்னிந்திய உணவுகளே கிடைக்காது. மசால் தோசை, சட்னி என்று வாரத்தில் ஒருநாள் சில இடங்களில் ஒன்று செய்வார்கள். ஒரு தீவிர தோசை வாசகன், அந்தப் பிரதிகளைக் கையால் தொடக்கூட மாட்டான்.

“இப்பதான் சுடச்சுட நல்ல காரமான அடையும், அதுமேல நெய்விட்டு, தொட்டுக்க வெல்லமும் சாப்பிட்டேன். காரம் அடங்குறதுக்குள்ள ஒரு காபி சாப்ட்டா.. அடடா... சொர்க்கம் தெரியுமா சொர்க்கம்... அது இது தான்” என்று விவரிக்கும் நண்பர்களும், ஆன்லைன் சேட்டில் வந்து “தயிர் சாதமா பண்ணப்போற?? சாதத்தைக் குழைவா வடிச்சு, கொதிக்க கொதிக்க இறக்கிவச்சவுடனேயே  அதுல கொஞ்சம் பசு வெண்ணைய வழிச்சுப்போட்டு, நன்னா கெட்டியா எருமைத் தயிரை தளும்ப ஊத்தி, இஞ்சி, மாங்காத் துண்டு, பச்சைமிளகாய் கடுகு உளுத்தம்பருப்பு தாளிச்சு, ரெண்டு கறிவேப்பிலையும், கொஞ்சம் கொத்தமல்லித் தழையும் அப்படியே மேலோட்டமா போட்டு உப்புப் போட்டு கிளறி மூடிவச்சுட்டு, அந்த ஆவிமணத்தோட எடுத்து போட்டு ஆவக்கா ஊறுகாயோட சாப்டனும். இல்லாட்டா சாப்பிடவே கூடாது. வேஸ்ட் “ என்று ரெசிப்பி தரும் சுகிருத்துக்களும், விதவிதமாகச் சமைத்தும், ஓட்டல்களில் போய் சாப்பிடுவதற்கு முன் கர்ம சிரத்தையாக போட்டோ எடுத்து கையோடு ஃபேஸ்புக்கில் போட்டு ‘யம்மி...டேஸ்ட்டி..ஆவ்சம்’ என்றெல்லாம் மேலதிக விவரணை செய்யும் நண்பர்களும் தாங்கள் செய்வது பஞ்சமா பாதகத்தில் ஒன்று என்று அறிவதில்லை. “செரி, நம்ம பயதான..போட்டும்!” என்று மன்னிக்கிறேன், ஒவ்வொருமுறையும். அதைவிடவும் கொடுமை, இது எதையுமே புரிந்துகொள்ளாமல், “படிக்கிற காலத்துல சாப்பாட்டுல உப்பு இருக்கா இல்லையாங்கறது கூட தெரியக்கூடாது, கவனம் படிப்புமேல மட்டும் தான் இருக்கனும். இப்படி தீனி தீனின்னு அலையக்கூடாது. இப்படித்தான் ஒரு முனிவரோட குருகுலத்துல ஒரு சிஷ்யன்...” என்றூ நீதிக்கதை சொல்லும் தத்துவ முத்துக்களை நான் புறக்கணிக்கிறேன்.

                             

வெவ்வேறு ருசியுள்ள உணவுகள் ஆனாலும், நாக்கில் சில நொடிகள் தங்கியிருந்து விட்டு குடலுக்குள் போய் எல்லாம் ஒன்றான இரண்டற்றதாக ஆகப்போகும் பொருட்கள் மனிதனை எவ்வளவு நுண்ணுணர்வுள்ள பலவீனமானவனாக்குகின்றன என்பதையும் அனுபவத்தால் கற்றுக்கொண்டேன். கனவுகள் கருப்பு வெள்ளையில் தான் இருக்கும், மிகச்சில நிமிடக் கனவுகள் கூட மிக நீண்டதாகத் தோன்றும்... இப்படியாக கனவுகளின் பொதுஇயல்பு பற்றி பல உண்மைகள் உண்டு. மிகமிக அரிதாகவே கனவில் ருசி, மணம் போன்றவை தெரியும். பெரும்பாலானபேர்களுக்கு அவ்வாறான அனுபவமே இருக்காது. எனக்கு அந்த அபூர்வமான கனவும் வாய்த்தது. அதுவும் சாப்பாட்டோடு தொடர்புடையது தான். கத்திரிக்காய் பிட்லை செய்வதற்கு முன் கடலைப்பருப்பை கொஞ்சம் எண்ணெய் விட்டு வறுப்பார்கள். ஒருவீட்டில் சரியான பக்குவத்தில் வறுக்கும் போது எழும் அந்த வாசனை தெருவையே நிறைக்கும். கனவில் கடலைப் பருப்பு வறுக்கும் வாசனை மிகத் துல்லியமாக ஒரு முறை முகர்ந்திருக்கிறேன். தேங்காய்ப்பூரணக் கொழக்கட்டை -வெல்லமும், தேங்காயும், வெந்த அரிசி மாவுடன் சேர்ந்து வாயில் கரைவதாக வந்த கனவும், அந்தச் சுவையை பிரமிக்கும்படி மிக யதார்த்தமாக உணர்ந்து வாயில் நீர் ஊற எழுந்து ஏமாந்திருக்கிறேன். ஊருக்கு விடுமுறையில் வருவதைப் பற்றிய திட்டமிடல்கள் தொடங்கியவுடன், இம்முறை என்னவெல்லாம் சாப்பிடவேண்டும் என்ற பட்டியலும் தயாராகும். ஒருமுறை ஊருக்குப் போய்விட்டு ஒருமாதம் கழித்து திரும்பிவர விமானம் ஏறிவிட்டேன். விமானம் காற்றை உந்தி மதுரை மண்ணை விட்டு மேலெழுகிறது, ‘ஐயோ விரும்பியவற்றில் ஒன்றைக் கூட சாப்பிடவில்லையே... எல்லாம் போச்சே.. இனி ஒருவருஷம் ஆகுமே” என்று நெஞ்சுபடபடக்க கதறினேன். அக்குளில் சூடாக வியர்த்து, அடிவயிறு கொதித்து குழைவாக, நெஞ்சுத் துடிப்பு காதில் கேட்க விழித்தேன். கனவு. நான் கண்டதிலேயே இரண்டாவது கொடூரமான  - உக்கிரக் கனவு இதுதான். ‘மாட்டேன், என் லீவு நாட்களை வீணாகக் கழிக்க மாட்டேன். விதவிதமாகத் திண்பேன். காரடையான் நோம்புக் கொழுக்கட்டையிலிருந்து, கார்த்திகை அப்பம் வரை... நான் இல்லாமல் வீட்டில் கொண்டாடிய ஒருவருடத்து பண்டிகை விசேஷ உணவுகள் எல்லாவற்றையும் செய்து தரச் சொல்லி திண்பேன். இது சத்தியம்.’ என்று வீரசபதமிட்ட பின்னரே நிம்மதியாக உறங்க முடிந்தது.

மடிக்கணினி வாங்கி இணையத்தில் புழங்க ஆரம்பித்ததும், சுஜாதா கதைகளைப் படித்து, ‘வாழ்ந்தால் ஸ்ரீரங்கம், சாப்பிட்டால் ஐயங்கார் புளியோதரை’ என்றிருந்த ஒரு சுஜாதா பக்த நண்பன் அதே ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீயின் mykitchenpitch என்ற தளத்தை சிபாரிசு செய்தான். கூடவே, “பின்நவீனத்துவ உப்புமா செய்றது எப்டின்னு அதுல ரெசிபி இருக்கும். படி, முடிஞ்சா செய்யி..” என்று ஒரு வஞ்சகமான வாழ்த்தும். உண்மையில் இங்கே தனித்த வாழ்க்கையில் நான் தினமும் தவறாமல் படிக்கும் இரண்டு தளங்கள் இரண்டு ‘ஜெ’ க்களுடையது. ஒன்று ஜெயமோகன், இன்னொன்று ஜெயஸ்ரீ. இரண்டும் ஒவ்வொரு வகையில் என்னை நிரப்புகின்றன. பொதுவாகச் சொன்னால் நான் “ஜெ” இன் வாசகன். என்ன ஒன்று ஜெமோவுக்கு எழுதுவது போல ஜெயஸ்ரீக்கு ‘அன்புள்ள ஜெ, பொரிவிளங்கா உருண்டையின் குறியீட்டு அர்த்தத்தை பொருள் விளங்கா உருண்டை என்று விளக்கியிருந்த விதம்...’ என்று ஆரம்பித்து கடிதம் எழுதவில்லை. அவ்வளவுதான். செக் குடியரசிலிருந்து ஜெயஸ்ரீயின் தளத்திற்கு வந்த ஹிட்டுக்கள் முழுவதும் என்னுடையதாகத்தான் இருக்கும்.


அப்படியே சமையல் கலையில் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்த போது இன்னொரு நண்பன் மூலமாக யூட்யூபில் ஸ்ரீரங்கம் ராது என்னும் மாமியின் சமையல் செயல்முறை (கூடவே அவர் கணவரின் ‘ஆமாப்பா.. தக்காளிய நன்னா ‘செவப்பா’ வதக்கிக்கோ’ என்பது போன்ற உபகுறிப்புக்கள்) அப்புறம் வட இந்திய சமையல்களுக்கு,  “நமஸ்தே. வெல்கம் டூ மஞ்சுளாஸ் கிட்சன். மை நேம் இஸ் மஞ்சுளா. டுடே வீ ஆர் கோவிங் டூ ப்ரிபேர் எ இஸ்பெசல் ஐட்டம்...” என ஆரம்பிக்கும் மஞ்சுளா ஆண்ட்டி என்று தகவல் மூலங்கள் வளர்ந்து வந்தது. நன்றாகச் சமைப்பதாக ஒரு பிரமை தோன்ற அரம்பித்ததும் பரீட்சித்துப் பார்க்க, உயிரியல் ஆய்வுமாணவனின் குரூர புத்தியுடன் பரிசோதனை எலிகளைத் தேடினேன். அதற்கும் ஆள் கிடைத்தார்கள். வெங்காயத்தை வதக்கி, உப்பும் மிளகாய்ப்பொடியும் கொட்டிவிட்டு ஆனியன் ஃப்ரை என்று சமாளிக்கும் ஒரு ஆள் சிக்கினார். முதல் சோதனையாக வெண்பொங்கலும் சாம்பாரும் செய்து பார்த்தேன். பரிசோதிக்கப்பட்ட ‘சப்ஜெக்ட்’ எந்த தீயவிளைவும் உண்டாகாமல் ஆரோக்கியமாக இருந்தது, கூடவே ‘இன்னும் கொஞ்சம்’ என்று கேட்டு வாங்கி சாப்பிட்டது மகிழ்ச்சியைத் தந்தது. அவருடைய வியப்பை தெரிவிக்கும் வார்த்தைகளில் அதி உயர்வானது ‘பிரம்மாண்டம்’. என்ன பிரச்சனை என்றால் எல்லாவற்றிற்கும் அதே வார்த்தையைச் சொல்லித்தான் பாராட்டுவார். ‘சார், பிண்ணிட்டீங்க. பொங்கல் பிரம்மாண்டம் போங்க. சாம்பார் அதவிட பிரம்மாண்டம். என்ன ஒன்னு கூட வடை இருந்தா இன்னும் பிரம்மாண்டமா இருந்திருக்கும்’. எனக்கு வந்த கடுப்பில் “இவன் மேல் ஒரு நாள் மஞ்சுளா ஆண்ட்டியின் ‘கஸ்டா கச்சோரி’ யை பிரயோகித்துப் பார்க்கவேண்டும்” என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் பார்க்கும் இந்திய நண்பர்களிடம் எல்லாம் “சார், வெண்பொங்கல் பிரம்மாண்டமா செய்வார், சார் காப்பி போட்டா பிரம்மண்டமா இருக்கும்” என்று சொல்லி என் கொ.ப.செ வாக செயல்பட்டதால் மன்னித்துவிட்டேன்.

அடுத்து கொஞ்சம் தைரியமாக ஒரு செக் நண்பனை சாப்பிட அழைத்தேன். பரிசோதனைகளுக்கு வெள்ளை எலிகள் இன்னும் உகந்தவை. கையில் ஒரு பியர் கேனுடன் வந்து பாசுமதி அரிசி சாதத்தையும், சாம்பாரையும் ஒரு பிடி பிடித்தான். கூடவே ஊறுகாயும். குடிக்க பியர். வெகுவாகச் சிலாகித்துவிட்டுப் போனான். ‘பயல் நடிக்கிறான். அந்தப் பக்கம் போய் புலம்புவான்’ என்று எதிர்பார்த்தால், அடுத்த வாரமும் ‘இன்னைக்கு என்ன சமையல், சாப்பிடலாமா?’ என்று வந்துவிட்டான். ஆச்சர்யம். மசாலாவும், காரமும் பிடிக்காதவனைக் கூட என் கைப்பக்குவம் வசப்படுத்தி விட்டது. சாம்பாரை விட உலகில் என்ன சிறந்த உணவு இருக்க முடியும்? சாப்பிட்டு முடித்துவிட்டு, போன வாரம் என் காரமான சாம்பாரைச் சாப்பிட்டுவிட்டு மறுநாள் வயிறு கலங்கி ‘காரியங்கள் எல்லாம் சுளுவாக நல்லபடியாக முடிந்தது’ என்ற தகவலைச் சொல்லி நன்றியும் சொன்னான். ‘அடப்பாவி, நான் கஷ்டப்பட்டு சமைக்கிறது, உனக்கு கான்ஸ்டிபேஷனுக்கு மருந்தா?’ என்று சொல்லி துரத்திவிட்டேன். பாத்திரமறிந்து பிச்சை இட வேண்டும் இனிமேல்.


பிறர் சமையல் நமக்கு எப்போதும் நன்றாக இருக்கும் என்பது புதியவிஷயமில்லை, ஆனாலும் என்னைவிட நன்றாகச் சமைப்பவர் இருக்கமுடியுமா என்ற ஆள்மனதின் தீராத கேள்வி என்னுள் இருந்து அலைக்கழித்துக்கொண்டு இருந்தது (இலக்கிய ஹேங்ஓவர், மன்னிக்கவும்). பக்கத்து மாணவர் விடுதிக்கு புதிதாகக் ‘குடிவந்த’ ஒரு தமிழ்நாட்டு மாணவரைப் பார்த்தேன். பழக்கம் கூடி ஒருநாள் சாப்பிட அழைத்தேன். ‘பாஸ் உங்க பொங்கல் இங்க பயங்கர ஃபேமஸ் போல. ஒருத்தரு சொன்னாரு”. நண்பர் பிரம்மாண்டம் ஏற்கனவே என பிரம்மாண்டமான பொங்கலைப் பற்றி பிரம்மாண்டமாகச் சொல்லியிருந்திருக்கிறார். ‘கெளப்பிரலாம் பாஸ்.. வாங்க' என்று சொல்லிவிட்டேன். சாப்பிட்டுவிட்டு ‘பரவால்லங்க.. பாஸ். சாப்டலாம், நல்லா இருக்கு’ என்று இலக்கிய வாசகர்கள் கதையை விமர்சிப்பது மாதிரி பட்டும்படாமலும் சொன்னார். 'நம்ம வெண்பொங்கலே இவரிடம் வேகவில்லை.. சரி ஆள் பெரிய சமையல்காரராக இருப்பார் போல’ என்று நினைத்துக் கொண்டேன். “நாளைக்கு நம்ம ரூம்ல சமையல் பாஸ், ஒருமணிக்கு வந்துருங்க” என்று சொல்லிவிட்டார். மறுநாள் பன்னிரெண்டே முக்காலுக்கு ஃபேஸ்புக்கில் மெஸேஜ். “பாஸ் வாங்க, செம ரகளையா இருக்கு சமையல்”. “தோ..” என்று பறந்தோடினேன். புண்ணகையுடன் வரவேற்றார். பெரிய வெங்காயத்தை நறுக்கி, தக்காளியுடன் வதக்கி, உப்பு, மஞ்சள் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள், மல்லித்தூள் மற்றும் ஊரில் இருந்து கொண்டு வந்திருந்த எல்லா தூளும், மிளகாய்த் தூளுக்கு சிறப்பு இடஒதுக்கீட்டுடனும் கொட்டி வைத்திருந்தார். ரத்தச் சிவப்பில் நெருப்புக் குழம்பாக தகதகத்தது. “தக்காளிக் குழம்பு பாஸ். செம ஸ்பைஸி அண்ட் ஹாட். வெளுத்துக் கட்டுங்க” என்றார். அவரும் ஆர்வமாகச் சோற்றில் குழைத்து பூசினார். மறுநாள் நாள் அதிகாலை முதல் பிற்போக்குவாதி ஆனேன். உடலின் நீர்சத்து திரும்பக் கிடைக்க இரண்டு நாள் ஆகியிருக்கும். அடுத்த வாரமே மீண்டும், “பாஸ் தக்காளிக் குழம்பு..” என்று ஃபோன் செய்தார், “ஹலோ மெட்ரோல போய்க்கிட்டு இருக்கேங்க பாஸ்.. சரியா கேட்கல.. ஹலோ..”

கொஞ்சம் கொஞ்சமாக அம்மாவுடன் தொலைபேசினால் "இன்னைக்கு என்னம்மா சமையல்?" என்று நான் கேட்பதும், அம்மா சொல்லிவிட்டு அதன் செயல்முறை பற்றி விளக்கிவிட்டு, "நீ என்ன பண்ணின?" என்று என்னைக் கேட்பதும், வாயில் வந்த பேரை வைத்து ஏதாவது ஒரு உணவைச் சொன்னதும், "எப்படி பண்ணின?" என்று அம்மா கேட்பதும் வழக்கமானது. சமயம் என்பது மனதைப் பக்குவடுத்துவது, சமையல் என்பது உணவைப் பக்குவப்படுத்துவது என்று எங்கோ படித்த ஞாபகம். சமையல் செய்வதும் கூட நம்மைப் பக்குவப்படுத்துகிறது போல. உணவைக் குறைசொல்வதை பெரிதும் குறைத்துவிட்டேன். ஒரு தெலுங்கு நண்பன் இருக்கிறான். தொட்டால் பொன்னாகும் வரம் பெற்ற மிதாஸ் போல, அவன் கைபட்டால் எதுவும் மிகருசியான உணவாகும். வெறுமனே பிரட்டை பிய்த்துப் போட்டு கையில் கிடைத்த காய்கறிகளை வதக்கி உப்பு தூவி இறக்கி வைத்தால் அட்டகாசமான பிரட் உப்புமா. தெரிந்த பெண் இருந்தால் இவனுக்குக் கட்டிவைக்க வேண்டும். ஒரு நல்ல காரியம் செய்த புண்ணியம் நிச்சயம். மிகப்பனிவாக நிறையப் பரிமாறி சாப்பிட வைப்பான். ஆனாலும் ஒருநாளுக்கு இவ்வளவு தான் என்று வயிறு ஒத்துழைக்க மறுப்பதால் கழுத்துவரை மட்டுமே சாப்பிட முடியும். ஆனாலும் “அது நேத்திக்கு, இன்னைக்கு என்ன?” என்று புத்தம்புது பசியுடன் “கொண்டா.. கொண்டா” என நாக்கு தீயாய் துடிக்க, வயிறு உறுமி எக்காளமிடத் தொடங்கும் போதெல்லாம் வளைக்கை நீள சாதத்துடன் அம்மா கண்முன் வருகிறாள். அம்மா சொல்லித்தந்த இந்தப்பாடலின் வழியாக ஔவையாரும்...
  
  ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
    இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் -ஒருநாளும்

    என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே

    உன்னோடு வாழ்தல் அரிது.


இன்னும் ஒருமாதம் தான். ஊருக்கு வருகிறேன். ஏர் இந்தியா விமானத்தில் விமானப்பணிப்பெண் ஆண்ட்டி கொண்டுவரும் “வெஜ் மீல்”லில் ஆரம்பிக்கிறது என் விடுமுறை.

எடுத்த சபதம் முடிப்பேன் :-) 

-பிரகாஷ் சங்கரன்.