Thursday, August 16, 2012

பகத்சிங்கின் மரணம் - மறைக்கப்பட்ட உண்மைகள்


இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு, நாட்டின் விடுதலைக்காக தங்கள் வாழ்வையும், இளமையையும், அதன் இன்பங்களையும், ஏன் உயிரையும்கூடத் தியாகம் செய்த அதன் பலிதானிகளின் ரத்தத்தால் எழுதப்பட்டது. சொந்த சகோதரர்கள் கூண்டுக்கிளிகளாய் அடிமை வாழ்வின் வாசலில் விட்டுஎறியப்படும் துணுக்கு உலகியலின் இன்பங்களுள் மூழ்கியிருக்கையில், வாழும் ஒவ்வொரு நொடியும் துன்பங்களை மட்டுமே எதிர்கொண்டாலும் நாட்டுநலனை மட்டுமே சிந்தித்திருந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுள் பகத்சிங் இந்தியாவின் லட்சிய இளைஞர் உருவம்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தில் 1907 செப்டம்பர் மாதம் 13ம் நாள் பிறந்த பகத்சிங், காந்தீயவாதியான லாலா லஜ்பதி ராய் துவக்கிய லாஹூர் தேசியக் கல்லூரியில் (National College, Lahore) படித்தவர். இளம்வயதில் காந்தியின் அஹிம்சைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் பங்குபெற்று, அந்நிய பொருட்கள் பகிஷ்கரிப்பு, அந்நியத் துணிகளை பொதுவெளியில் இட்டு கொளுத்துவது என்று அஹிம்சைப் போராட்டங்களில் முழுமூச்சுடன் ஈடுபட்டவர்.
1922ஆம் வருடம் சௌரி சௌரா போராட்டத்தில் அறவழியில் போராடிய அப்பாவி கிராம மக்களை ஆங்கிலேய காவல்படை கொன்றதை எதிர்த்து அஹிம்சையைக் கைவிட்டு போராட்டக்காரர்கள் ஆங்கிலேயப் படையுடன் வன்முறையில் ஈடுபட்டதைப் பார்த்து அஹிம்சை வழிமுறைகளின் மீது நம்பிக்கை இழந்தார். அவர் நேரடி வன்முறைப் போராட்டத்தில் இறங்க முக்கியக் காரணமாக அமைந்தது அஹிம்சைவாதியான லாலா லஜபதி ராய் வெள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட நிகழ்வு.
bhagat_singhs_execution_lahore_tribune_front_page

1928ஆம் வருடம் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து அஹிம்சை வழியில் போராடிய லாலா லஜபதி ராயைக் லத்தியால் அடித்துக்கொன்ற ஸ்காட் என்னும் பிரிட்டிஷ் காவலதிகாரியைப் பழிவாங்க திட்டமிட்டனர் பகத்சிங்கும் நண்பர்களும். அடையாளக் குழப்பத்தால் இன்னொரு அதிகாரியான ஜான் சாண்டர்ஸ் கொல்லப்பட்டார். பகத் சிங்கும் நண்பர்களும் போலீஸின் பிடியின் சிக்காமல் சாகசமாகத் தப்பினர். பின்னர் ஆங்கிலேய அரசின் மத்திய அவையில் வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் பகத்சிங் கைது செய்யப்பட்டார்.
1935 மார்ச் 24ஆம் தேதி காலை 8 மணிக்கு என்று முடிவு செய்யப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை கடைசி நேரத்தில் மாற்றி பதினொன்னரை மணி நேரம் முன்பாகவே 23ஆம் தேதி மாலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். அவர் தூக்கில் இடப்பட்டதனால் இறந்தார் என்று பள்ளிக்கூட வரலாற்றுப் புத்தகங்களில் அச்சிட்டிருப்பதையே பெரும்பாலான இந்தியர்கள் நம்பிகொண்டிருக்கின்றனர்.
2005இல் Some Hidden Facts: Martyrdom of Shaheed Bhagat Singh என்னும் புத்தகம், பிரிட்டிஷ் உளவாளியாக இருந்த ஒரு இந்தியரின் குறிப்புகளிலிருந்து எடுத்து அவரது தத்து மகனான குல்வந்த் சிங் கூனர் மற்றும் அவரது சக எழுத்தாளர் ஜி.எஸ். சிந்தராவால் மேற்கொண்டு பிரிட்டிஷ் ஆவனங்களைச் சோதித்து எழுதி இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. அது தரும் தகவல்கள் அதிர்ச்சி தரக்கூடிய, இந்திய தேசபக்தர்கள் ஒருபோதும் மன்னிக்கவிரும்பாத பிரிட்டீஷ் கொடூரங்களை வெளிக்கொண்டு வந்தது.
பிரிட்டிஷ் அதிகாரிகளின் உதவியுடன் ‘ஆபரேஷன் ட்ரோஜான் ஹார்ஸ்’ என்னும் ரகசியத் திட்டம் வகுத்து சாண்டர்ஸின் உறவினர்கள் தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டனர் என்று அந்நூலில் விளக்கப்பட்டிருக்கிறது. பகத்சிங்கும் அவரது நண்பர்கள் ராஜகுரு, சுகதேவ் ஆகியோரும் கழுத்து மட்டும் முறிக்கப்படும் வரை தூக்கிலடப்பட்டு அரைமயக்கத்தில் இருந்தவர்களை இறந்துவிட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டது.
இரவோடு இரவாக லாஹூர் கண்டொன்மெண்டிற்கு உயிர் பிரியாமல் அரைமயக்கத்தில் இருந்த பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவரையும் தூக்கிச்சென்றனர். அங்கே திட்டமிட்டபடி தயாராக இருந்த சாண்டர்ஸின் உறவினர்கள் தங்கள் ஆத்திரம் தீரும் வரை துப்பாக்கியால் மூவரையும் குறீப்பாக பகத் சிங்கைச் உடலைச் சல்லடையாக்கிக் கொன்றனர்.
உடனடியாக இரவிலேயே லாஹூரில் இருந்து 6கிமீ தொலைவில் கட்சா ரோடில் பியாஸ் நதி சட்லெஜ் நதியுடன் கலக்கும் இடத்திற்கு அருகில் உடல்களை அடையாளம் தெரியாதவாறு எரியூட்டி சாம்பலாக்கி அழித்தனர்.
மக்களைத் திசை திருப்புவதற்காக இரண்டு இந்திய கூலியாட்களை அனுப்பி ‘சட்லெஜின் மேற்குக் கரையில் ஹுசைனிவாலா என்னும் இடத்தில் ஏதோ பிணம் எரிக்கப்படும் பெரும் நெருப்பைப் பார்த்ததாக’ பொய்த் தகவலைப் பரப்பினர். இதை நம்பிய பொதுமக்களும், பகத் சிங்கின் சகோதரி அமர் கௌரும் ஓடிச்சென்று பாதி எரிந்துகிடந்த சில உடற்பாகங்களையும் எலும்புகளையும் அழுதுகொண்டே சேகரித்து ரவி நதியில் இறுதிச் சடங்கை முறைப்படி செய்வதற்காக கொண்டு சென்றனர். ஏராளமான பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலியுடனும், சூளுரைகளுடனும் அஸ்தி நதியில் கரைக்கப்பட்டது.
கொடுமை என்னவென்றால் அது உண்மையில் பகத்சிங்கின் உடல் அல்ல. அதுவும் ஆங்கிலேயர்களால் போலியாக பகத்சிங்கைப் போல உயரம் உள்ள யாரோ ஒருவரின் உடலை வேண்டுமென்றே அரைகுறையாக எரித்து மக்களை ஏமாற்றுவதற்காகத் தந்திரமாகச் செய்யப்பட்டது.
ஏற்கனவே மியன்வாலி சிறைச்சாலையில் பிற ஐரோப்பியச் சிறைகைதிகளுக்கு இணையாக இந்தியக் கைதிகளும் கவுரவமாக நடத்தப்பட வேண்டும் என்று தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதன் மூலமாகவும், சாண்டர்ஸ் கொலை வழக்கில் தானே நீதிமன்றத்தில் வாதாடிய போது அந்த வழக்காடலயே சுதந்திரப் போராட்டத்திற்கான ஒரு சந்தர்பமாகச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டு எழுச்சியுடன் அவர் முன்வைத்த வாதங்கள் பத்திரிக்கையில் வெளியானதன் மூலமாகவும் இளைஞர்களின் புரட்சி வீரனாக புகழ்பெற்றிருந்தார். எனவே பகத்சிங்கை பட்டப்பகலில் திருட்டுத்தனமாக சுட்டுக்கொல்ல முடியாது, விஷயம் கசிந்து வெளித்தெரிந்துவிட்டால் மக்களின் கொந்தளிப்பைச் சமாளிக்க முடியாது என்பதற்காகவே அவசர அவசரமாக தூக்கிலடப்படும் நேரத்தை முன்னதாகவே மாற்றி இரவில் தூக்கிலிட்டனர். பகத்சிங் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தபோது வெறும் இருபத்தி மூன்று வயது தான் ஆகியிருந்தது. இந்த உண்மைத் தகவல்கள் பாடநூல்களில் இடம் பெறவேண்டும். சுதந்திரநாள் என்பது சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை என்ற அளவில் தேசிய உணர்ச்சிகள் வற்றிப் போயிருக்கும் சமூகத்தின் இளைய தலைமுறையை அது சுருக்கென்று குத்தி யோசிக்க வைக்கும்.
ஒரே ஒரு ஆங்கிலேய காவல் அதிகாரியின் மரணத்திற்கு ஐந்து வருடங்கள் காத்திருந்து குரூரமாகப் பழிவாங்க ஆங்கிலேயரின் சொந்தங்கள் துடித்ததென்றால், ஒட்டுமொத்த நாட்டையே அடிமையாக்கி கோடானகோடிப்பேரை ஈவிரக்கமின்றி கொன்ற ஆங்கிலேய காலனியாதிக்க வெறியர்களைப் பழிவாங்க இந்தமண்ணின் சகோதரர்கள் தொடர்ந்து ஆயுதப்போராட்டம் நடத்த முடிவெடுத்ததில் என்ன தவறு?
ஆனாலும் இத்தனையையும் சகித்துத்தான் ‘இன்னா செய்தாரையும் ஒறுத்து அவர் நாண’ வைத்த அஹிம்சை தரிசனம் மகாத்மா காந்தியின் கணிந்த பாரதீய மனதில் ஊற்றெடுத்து ‘இன்னொரு கன்னத்தை காட்டும்படி’ புத்தகத்தில் மட்டும் எழுதிவைத்திருந்த உலகிற்கு ஆயுதத்தைவிட ஆன்மீகத்திற்கும், அஹிம்சைக்கும் வல்லமை அதிகம் என்பதை மெய்ப்பித்தது.

-பிரகாஷ் சங்கரன்

நன்றி. சொல்வனம் (இதழ் 74ல் வெளியானது).http://solvanam.com/?p=21541

No comments:

Post a Comment

உங்கள் எண்ணங்கள், விமர்சனங்களைப் பகிர்ந்துகொள்ள...